header photo
Showing posts with label கவிதையல்ல என்றும் கொள்ளலாம். Show all posts
Showing posts with label கவிதையல்ல என்றும் கொள்ளலாம். Show all posts

Tuesday, August 10, 2010

இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....?

ஆசியாவிலிருந்து 
ஐரோப்பாவிற்கு 
என்னை நாடு கடத்தியபோது
ருவாண்டாவில் 
இனப்படுகொலை
மில்லியனுக்கு
சில ஆயிரங்கள் குறைவான
எண்ணிக்கையிலிருந்தது... 

எரிபொருள் நிமித்தம் 
அபுதாபியில் விமானம் 
தரை தொட்டபோது 
ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.. 

நெதர்லாந்தின்
மின்சாரப் படிக்கட்டில் 
விழுந்த போது நீட்டப்பட்ட  
கொழுத்த கையின் மேல்
மும்பாய் மீது பறந்தபடி
முதல் முறையாக 
நான் குடித்த கறுப்புக் காப்பியை
எட்டாவது தடவையாக 
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன்... 

சென்ற வருடம் பேருந்தொன்றின் 
முன் சக்கரத்திற்கு நாலு அடி முன்னால்
நடுவீதியில் கால் நீட்டிப் படுத்திருந்தபோது 
என் தலைமாட்டில் கால் உதைத்து 
உலகமே கண்ணைத் திறந்து கொள்.. 
இலங்கையில் இனப்படுகொலை 
இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்
எழுந்து உட்கார்ந்து உதைத்த கால் மேல் 
ஒன்பதாவது தடவையாக வாந்தியெடுத்தேன்.. 

பக்கத்து வீட்டில் எட்டு ஆமைகள் 
செல்லப்பிராணிகள்
டாண்டிலயன் பூ இல்லையென்றால் 
உணவு இறங்காதாம்.. 
காட்டுக்கு நடையா நடந்த வழியில்  
ருவாண்டாவில் இனத்தைத் தொலைத்த
கிளியொன்று மொழி பழகிக் கொண்டிருந்தது 
அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது... 

ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா 
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை 
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்

_______________________________________________________

Saturday, October 17, 2009

தீபவழி..

இந்து மா சமுத்திர குமாரி..
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..

தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..

ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?

குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?

நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?

சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?

தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..

இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!



___/\___