header photo

Saturday, January 28, 2012

எத்தனின் ஒன்றன்பால்

புலர்வதற்கு முன்னரே
சுற்றிச் சுற்றி வந்தென்னை
எழுப்பிவிட்டுவிட்டுத் 
தூங்கிக் கொண்டிருக்கிறது
என் கவிதை

அதன் காதைத் திருக நீளும்
என் கரங்கள் பின்வாங்குகின்றன

எத்தனை அழகாகத் தூங்குகிறது அது
ஆவி பறக்கும் ஏக்கப் பெருமூச்சைக் கூட
பஞ்சு பொதிந்த நாய்க்குட்டியின் சுவாசம்போல்
எத்தனை நாசூக்காக வெளியேற்றுகிறது 

போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் தோள்களில்
உள்ளே கதறிக் கொண்டிருக்கும் அந்தக் காதல் 
எத்தனை அமைதியாகச் சாய்ந்திருக்கிறது

காதலை அணைத்திருக்கும் அதன் கைகளில் 
கதகதப்பான போர்வையுடன் போர்வையாகி
நேற்றுப் பிறந்த குழந்தை போல்
எத்தனை ரம்யமாகச் சுருட்டிக் கொண்டிருக்கிறது காமம்

நான் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாத பாவனையில்
திறக்கத் துடிக்கும் கண்களை சாத்விக தோரணையாக்கி
எத்தனை ஆழமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது அது 

Friday, January 27, 2012

தோற்ற மயக்கம்


தலையசைத்து
பின்னொரு நாள் 
பார்க்காதது போன்று
அதன் பின்
மீண்டும் புன்னகைத்துக்
கடந்து கொண்டே இருக்கிறார்கள் 
எந்தக் காலத்திலும் 
எங்களுக்கிடையில் 
எதுவுமில்லை