புலர்வதற்கு முன்னரே
சுற்றிச் சுற்றி வந்தென்னை
எழுப்பிவிட்டுவிட்டுத்
தூங்கிக் கொண்டிருக்கிறது
என் கவிதை
அதன் காதைத் திருக நீளும்
என் கரங்கள் பின்வாங்குகின்றன
எத்தனை அழகாகத் தூங்குகிறது அது
ஆவி பறக்கும் ஏக்கப் பெருமூச்சைக் கூட
பஞ்சு பொதிந்த நாய்க்குட்டியின் சுவாசம்போல்
எத்தனை நாசூக்காக வெளியேற்றுகிறது
போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்க்கும் தோள்களில்
உள்ளே கதறிக் கொண்டிருக்கும் அந்தக் காதல்
எத்தனை அமைதியாகச் சாய்ந்திருக்கிறது
காதலை அணைத்திருக்கும் அதன் கைகளில்
கதகதப்பான போர்வையுடன் போர்வையாகி
நேற்றுப் பிறந்த குழந்தை போல்
எத்தனை ரம்யமாகச் சுருட்டிக் கொண்டிருக்கிறது காமம்
நான் பார்த்துக் கொண்டிருப்பதை அறியாத பாவனையில்
திறக்கத் துடிக்கும் கண்களை சாத்விக தோரணையாக்கி
எத்தனை ஆழமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறது அது
