header photo

Saturday, October 17, 2009

தீபவழி..

இந்து மா சமுத்திர குமாரி..
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..

தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..

ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?

குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?

நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?

சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?

தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..

இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!



___/\___


Tuesday, October 13, 2009

தமிழே.. அமுதே.. என் உறவே..

தமிழன்னையை நெஞ்சில் வைத்துப் போற்றும் தமிழுறவுகளுக்கு இது சமர்ப்பணம்..


பத்துப் பரப்பு..
பாக்கு நீரிணையில்..
சேறுகளிடையே..
சுற்றிச் சுற்றி..
பட்டும் படாமலும்..
படர்ந்து கொண்டிருந்த..
தொப்புள்க்கொடி..
என் கண்களுக்குப்..
புலப்படவே இல்லை..
புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி..
நீரிணை தாண்டி..
சமுத்திரம் தாண்டி..
கண்டம் கடந்தோம்..
சலிக்காது சளைக்காது..
தொடர்ந்தே வந்த..
என் தொப்புள்க்கொடி..
நீந்தி நீண்டு..
நீரிலிருந்து தலையை நீட்டி..
வாசுகிப் பாம்பையே விஞ்சி..
விசாலமாய் நின்று..
வெறித்திருந்த விழிகளில்..
வியப்பை விதைத்தது..

பாலும் வேண்டாம்..
கடலும் வேண்டாம்..
மலையும் வேண்டாம்..
மத்தும் வேண்டாம்..
தேவரும் வேண்டாம்..
அசுரரும் வேண்டாம்..
பாம்பும் வேண்டாம்..
நஞ்சும் வேண்டாம்..
என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!

பெருமையுடன்
ப்ரியா..

___/\___