header photo

Monday, August 31, 2009

விகடகவி(தை)...

குட் போயீ ஜூட் வந்திச்சு...சின்னதா ஒரு சந்தோஷமுங்க.. (என்ன பண்றது ஆப்பீசு ஆரம்பிச்சிடுத்து.. இப்டித்தான் இடுகைய நகர்த்தி ஆவணும்.. ) உங்களுக்கு சமர்ப்பிச்ச அதே கவிதை.. :D





















Sunday, August 30, 2009

நம்ம ஆப்பீசில நானு குப்பை கொட்ட ஆரம்பிச்சு ஒரு வருசத்துக்கு மேல ஆச்சுங்க.. இந்த பாலிவுட் புண்ணியத்தில அங்க போன உடனேயே ஒரு பிரண்டு கிடைச்சா. இங்கன இருக்கிற டிவி காரனுங்க.. ப்ரோக்ராம் கிடைக்காம ஷாருக்கான் நடிச்சு பாழா/பழசா போன படங்கள எல்லாம் போட ஆரம்பிச்சதோட வினை.. இவ பொழுது போகாம அதெல்லாம் பார்த்து, மெஸ்மெரைஸ் ஆகி பாலிவுட் பைத்யம் ஆகி இருந்தா.

நான் சுடிதார் போட்டுக்கிறப்பல்லாம் பாலிவுட்ல வர்ற மாதிரியே இருக்காடின்னு அவ உருகி போறது கொஞ்சம் ஓவர்ன்னா.. அவள் நம்ம ஐஸு அம்முனி நடிச்ச 'pride and prejudice' பார்த்து.. அவா உன்னை மாதிரியே இருக்கான்னு சொன்னது ரொம்ப ரொம்ப ஓவர்ங்க.. முதல்ல பெருமைப் பட்டுக்கிறதா இல்ல தலைல அடிச்சுக்கிறதான்னு தடுமாறி.. கடைசில வடிவேலு 'என்னை நல்லவன்னு சொல்லிட்டாங்கையா'ன்னு அழுத மாதிரி ரொம்ப பீல் பண்ணி பெருமைப் பட்டுக்கிட்டேன். (ஹிஹி நீங்க உணர்ச்சி வசப்படுறது தெரியுது.. கண்ட்ரோல் ப்ளீஸ்...)

இந்த வாட்டி விடுமுறைக்கு வழக்கமா போற 'british airways' (ஒரு வாட்டி போயிருக்கேன்.. 'வழக்கமா' எல்லாம் பந்தா.. கண்டுக்காதீங்க) டாட்டா சொல்லிட்டு, சீப்பா இருக்கேன்னு 'qatar airways' புக் பண்ணி கிளம்பி.. 'zurich' ஏர்போர்ட்-ல காத்துக் கிடந்தா, இவ கிட்ட இருந்து sms. பிளேனில ஏறி உக்காந்ததும் மிஸ்ட் கால் கொடு, நான் பேசணுமுன்னு. எனக்கு புல்லரிச்சு போச்சிங்க.. இப்டியுமா ஒரு பாவி மவ பாசத்த பொழிவான்னு.. கண்ணை துடைச்சிக்கிட்டு.. ப்ளேன்-ல ஏறி உக்காந்ததும் அவளுக்கு மிஸ்ட் கால் கொடுத்துட்டு சுத்தியும்முத்தியும் பார்க்கறேன்.

முன்னூறு பேரு இருக்க வேண்டிய இடத்ல.. முப்பது பேரு அங்கொண்ணும், இங்கொண்ணுமா உக்காந்திருக்காங்க. ஆஹா வசதியா இருக்கேன்னு நிமிர்ந்து உட்கார்றப்போ, செல் போன் மறக்காம கூப்டுச்சு.. திரும்பவும் கண்ணை துடைக்க அவகாசம் இல்லாம.. போன் எடுத்து.. 'ஹல்லோ க்ளோடியா' சொல்லுன்னா. "வாவ் .. ப்ளேன் உள்ள உக்காந்திருக்கியா? எல்லாரும் பாலிவுட் மாதிரி டிரஸ் போட்டிருக்காங்களா"ன்னு கேட்டா பாருங்க ஒரு கேள்வி, எனக்கு செல் போன தூக்கி ரெண்டு சீட் தள்ளி உக்காந்து நியூஸ் பேப்பர் புரட்டிக் கொண்டிருந்த சொட்டைல அடிக்கணும் போல ஒரு வெறித்தனமான கோவம் வந்திச்சு பாருங்க.. அத சொல்ல வார்த்தையே இல்லைங்க.

பின்னாடி சீட்ல உக்காந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்த ஒரு சப்ப மூக்குப்பயல (த்தோ.. கிண்டல் பண்றதுக்காக இல்லைங்க.. ஒரு ஐடெண்டிபிகேசனுக்குத்தான்) புறக்கணிச்சு, இல்லைடிம்மா அப்டி எதுவும் இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்கணுமா இல்லையா? வாட்? அவங்க வித்யாசமா இல்லையா? அப்டின்னு கேக்கறாங்க. அப்டித்தாண்டி இருக்காங்க.. சப்பை மூக்கு.. கோண வாயின்னா சொல்ல முடியும்.. ச்சே ச்சே அப்டி எல்லாம் இல்லை.. நான் உனக்கு அப்புறம் மெசேஜ் அனுப்பறேன்னு சொல்லிட்டு போன உடனேயே சுவிட்ச் ஆப் பண்ணி பாக்கெட்-ல போட்டுட்டேனுங்க.

(அறுவை ஜாஸ்தி ஆய்டுத்து.. இதுக்கு வரவேற்ப பார்த்து மேற்கொண்டு எழுதலாமான்னு யோசிக்கலாம்..)

Saturday, August 29, 2009

மண்ணிழந்து...

வேரறுந்த மரங்கள் நாம்..
















வேடர்கள் வேங்கைகளை..
வேட்டையாடி வென்றனராம்..
வேலினிற்கோ வில்லினிற்கோ..
வேறுபாடு தெரியலையாம்..

அம்புக்கு அது பற்றி..
அறிந்து கொள வழியேதாம்..
அக்கு வேறாய் ஆணி வேறாய்..
அங்கங்கே கிடக்கின்றோம்..

வேந்தர்கள் வெஞ்சினத்தால்..
வேரறுத்த மரங்கள் நாம்..
விடியலின் முன் பொழுதில்..
வானரங்கள் வசை பாடும்..

குதித்தோடி விளையாடி..
குந்தியிருந்து பேன் பார்த்து..
குதூகலித்த நாள் போச்சு..
குய்யோ.. முறையோ என்று..

ஐயோ போச்சென்று..
அரசரவை ஒன்று கூடி..
குறைப்பட்டு முடிவெடுப்பர்..
குரங்குகளின் குடியிருப்பு..

வீடு கட்ட மரமெல்லாம்..
கட்டைகளாய் அடுக்கி வைத்து..
அடுக்கடுக்காய் மரவீடு..
காடு வீடாய் மாறிவிடும்..

வேரிழந்த மண்..
மண்ணுக்குள் மண்ணாக..
மரமிழந்த வேர்..
மண்ணுடன் மண்ணாக..!

____________________

அன்புக் காணிக்கை..!

அன்பு..

நீர் இருந்தும்..
நான் அற்றிருந்த..
ஒற்றைத் திங்களில்..
இறந்து கிடந்து..
உற்றிருந்த வாரத்தில்..

சட்டென்று துளிர்த்து..
பூத்துக் குலுங்கி..
ஆர்ப்பரித்தாடிய..

ஒற்றை ரோஜாச் செடி.
உணர்த்தியது..

அவசர உலகிலும்..
அன்பின் அவசியம்.. !
____________________________
நட்பு..

பரபரப்பான ஒரு காலையில்..
இரயில் வரக் காத்திருந்தோம்..

எங்கேயோ தொலைந்து..
பொங்கல் இட்லியுடன் திரும்பி..
கொஞ்சமாய் சாப்டு என்று..
கெஞ்சிக் கொண்டிருந்தாய்..

பழியாய் காவல் கிடந்து..
பாரம் சுமந்து வந்த பாட்டன்..
பாப்பா படிக்க..
வெளியூர் போகுதா..
என்று கேட்டு வைக்க..
அவசர அவசரமா..
இல்லையென்று தலை ஆட்டி..
குறுஞ்சிரிப்புடன்..
பார்த்துக் கொண்டிருந்த என்னை..
திரும்பி முறைத்ததில்..
தெரிந்தது..
உன் நட்பின் ஆழமும்..
தந்தையுமானவனின்..
நிரந்தர அன்பும்..!

____________________________

நேற்று உழவன் இட்ட பின்னூட்டத்தைப் பார்த்ததும், "என்ன சொல்லுதீக" என்று மனசில் கேட்டுக் கொண்டு விழித்தேன். அப்புறம், ஆமாம்ல யூத்.. விகடன்.. என்று எங்கயோ screen shot பார்த்திருக்கிறேனே என்று கவனம் வந்தது.

சரி அங்க எப்டி என்னோட இடுகை என்று தாடையைச் சொறிந்து கொண்டிருந்த போது, சுண்டெலி (அதாங்க mouse) தன்னிச்சையாக மின்னஞ்சலுக்கு அழைத்துச் சென்றது. அங்கே விகடன் என்ற சொல் கண்ணில் பட்டதும் சட்டென்று க்ளிக்கினேன். பாலாவாகி, பாமரனாகி, வானம்பாடியாகிப்பறந்து கொண்டிருக்கும் நறுக் கிங் , வேலை மெனக்கெட்டு என்னுடைய அனுமதியின்றி நான் கிறுக்கி வைத்ததை அங்கே அனுப்பி வைத்திருக்கிறார்.

அவர்களும் அவங்க மூஞ்சிக்காக Good Blog பகுதியில் அதைப் பிரசுரித்திருந்தார்கள். அதோட போனா பரவால்ல.. அதை நான் இங்கே தண்டோரா போடணும் என்று, இடுகை மறியல் போராட்டம். ஓவர் அலட்டல் உடம்புக்கு ஆகாதுன்னு தெரிந்தும், நான் தண்டோரா போட்டுட்டேன்.

என்னுடைய எழுத்துக்களை, எழுத்தெழுத்தா விமர்சித்து ஊக்குவிக்கும் வானம்பாடிக்கும், வரி விடாமல் படித்து விமர்சித்து, ஊக்குவித்த மற்றும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்.

சுயநலமற்ற வானம்பாடியின் நட்புக்கு "நட்பை"யும், எந்த வித எதிர்பார்ப்புமின்றி என்னை ஊக்குவிக்கும் அனைவருக்கும் "அன்பை"யும் காணிக்கையாக்குகிறேன்!


_______/\_______

கதிரின்
இடுகைக்கிணங்க என்னாலானது..
http://eezhapriya.blogspot.com/2009/08/blog-post.html

நன்றி
___/\___

Saturday, August 22, 2009

ஹைக்கூ நான்கு.. கவிதை ஒன்று..!

வியாதி ஆகிய மறதி..
வரமாகிய நாளில்..
மறந்து விட்டிருந்தது..!
..................................................
நினைவு என்னும்..
நிழல் மரம்..
நீங்கினால் வரம்..!
..................................................
குழி தோண்டினோம்..
நாவடக்கத்திற்கு நானும்..
நாவு எனக்கும்..!
..................................................
பழைய குப்பையென..
கூட்டிப் பெருக்கி கழித்ததில்..
பிரிவினை..!
..................................................
தீண்டிய தீயை..
தாண்டி ஓடி..
தண்ணீர் மடியில்..
தஞ்சமானேன்..

விக்கிய என்னிடம்..
விண்ணை நோக்கி..
விடைபெற நின்ற..
வித்துயிர் விண்டது..

"பயமெனும் மாயத்தீ..
பருகிய நின் அறிவுத்தீ..
பதறிச் சிதறியதேன்..
பார்வை குறுகியதேன்..

நின்று நிதானி..
நிறைநீரில் நீறு..
நித்திரை செய்ய..
நிமிட நேரமென..! "
..................................................

Sunday, August 16, 2009

முறு(ஹை)க்கூ..

முறுக்கூ...!



குச்சியால் குரங்கை..
விரட்டும் முயற்சியில்..
வறுமையையும்..!
...................................................................
நீயா நானா போட்டி..
முறுக்கு வளைக்கும்..
கண்ணின் கரு வளைக்கும்.. !
...................................................................
மருமக நொடிக்கிறா..
உட்கார்ந்த இடத்தில..
சாப்பாடு உனக்குன்னு.. !
...................................................................
ஓடு தேய உழைப்பாங்க..
கால் நீட்டி உட்கார..
நீட்டி உட்கார்ந்து ஓடா தேயுறா நீ..!
...................................................................
உன் பார்வைக் கோணத்தில்..
கோணல் பார்வை மோனலிசா..
அதள பாதாளத்தில்.. !
...................................................................

Friday, August 14, 2009

சொந்தக் கதை சோகக் கதை...

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!
____________________________________________________________________

Wednesday, August 12, 2009

கொஞ்சம் இந்தியா கொஞ்சம் இங்கிலாந்து..

இந்த விடுமுறையின் சில ஞாபகங்கள் மற்றும் சின்னங்கள்..




























































































___________________________________________________________________