header photo

Thursday, July 29, 2010

பதிவுலகை(கில்) அளந்த மேதை மீ...

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


கலகலப்ரியா.. (ஸ்ஸ்ஸபா ஆரம்பத்ல ஈஸியான கேள்வியா கேக்கறாய்ங்கப்பு..)
 
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?


ஆமாம்.. இல்லை... ஹரஹரப்ரியாவ தப்பா டைப்பிட்டேன்னு சொன்னா நம்பவா போறீங்க... 


3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.


ஐய்யயோ... இது என்ன மஹாவிஷ்ணு உலகை அளந்த லெவலுக்கு கேக்கறீங்க... நான் கம்ப்யூட்டர்ல கால் எல்லாம் வைக்கறதில்ல.. 

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒசாமாவ ரெட் ஹாண்டட்டா புடிக்கறப்போ சி.என்.என்.ல ப்ரேக்கிங் நியூஸ் போடற இடைவேளைல வெளம்பரம் போடலாமின்னு யோசித்தேன்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?


ஆமா... ஆமா... வினை விதச்சா விளைவு என்ன... அதேதான்... வினை... 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என்னது... சம்பாதிக்.....அடங்..  இத இப்பதான் சொல்றதாங் கொக்கமக்கா.... ஒண்ணர வருஷம் வேஸ்ட் பண்ணீட்டன் போலருக்கே.. 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?


அதெல்லாம் எண்ணுறதில்ல... எண்ணினா கண்ணு படும் கண்ணூன்னு ஆத்தா சொல்லி இருக்கு... 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?


கோபமா.. எனக்கா... ச்சே ச்சே... அதிகமாக் கோபப்படற பொம்பள உருப்பட்டதா சரித்திரமே இல்லைன்னு ரஜினி சாரே சொன்னதுக்கப்புறம் கோபம்ன்னா கிலோ என்ன விலைன்னுதான் கேப்பேன்... 

பொறாமையா.. ஆமாம்... நான் பாட்டுக்கு கேம் ஆடிக்கிட்டிருக்கேன்... இவங்க எல்லாம் டெய்லி போஸ்ட் போடறாங்களே... நறநறநறன்னு பல்ல செல்லமா கடிச்சிருக்கேன்... ஹிஹி... 

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..


வேற யாரு.. நாந்தேன்... ஒவ்வொரு வாட்டியும் போஸ்ட் போட்டு தோள்ல தட்டி... பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சொல்லிப்பேன்... 

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ம்ம்... நேத்து முடி வெட்டினேன்... நெக்ஸ்ட் வீக் டென்டிஸ்ட் கிட்ட போகனும்... நாலு கடவாய்ப் பல்லும் பிடுங்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் (என்னோடதுதான்..)... ஏ டி எம் ல ஃப்ளாக்ஸ் பார்த்தா... ஃபீட்ஜிட் ட்ராஃபிக்ன்னு ஆர்வமா பார்த்துட்டிருக்கேன்... அமௌண்ட் எவ்ளோன்னு கொடுத்துட்டு... ஜஸ்ட் 100 விசிட்டர்ஸ் டுடேன்னு நினைச்சுக்கறேன்...  மீதி அப்புறம் அப்டேட் பண்றேனே.. 


இத் தொடரைத் தொடர நான் அழைக்கும் ஆட்கள்...

பராக் ஒபாமா 
ஒஸாமா பின் லேடன்
ரணில் விக்ரமசிங்க
கனிபல் கடாஃபி 
ஸ்பான்ஜ் பாப் (ஓ சாரி... ஆட்கள் மட்டுமா..)

முகிலனின் பிதற்றல்கள் பதிவருக்கு நன்றி... (அவங்க ஸ்டைல்ல இப்டித்தான் சொல்லுவாய்ங்க..)
_______________________________________________________________

Tuesday, July 27, 2010

பிசின் - அறி

கறிக்குதவா.. 
மாம்பிஞ்சில் 
வழிந்தோடும் பிசின் 
தோல் பட்டால் 
அவிஞ்சு போகும் 
”கையைக் கழுவு”
பதறியபடி - உடன் 
கை பிடித்துத் 
தேய்த்துக் கழுவும்
அம்மா சொன்னதுதான்
வழி காட்டுகிறது 
அவள் இருக்காளே 
சக்களத்தி 
என்று ஆரம்பிக்கும் 
எக்கள முனைப்புகளை
அண்ட விடாது... 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

Thursday, July 22, 2010

”மேனி சிலிர்க்குதடீ.. மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால்...”

”தலை வலிக்கும் வேதா... சுவர்ல தலைய முட்டாதம்மா... செல்லமே... வேதா இங்க பாரு.. அப்பா சொல்றது கேக்கல?... வேதா... வேணாம் வேதா... வேதா.. வேதா...”

சுவற்றில் சாய்ந்திருந்த வேதாவுக்கு ஆறு வயதாகி நாலு நாட்கள் முடிந்து விட்டிருந்தது... ஏதோ ஒரு பாட்டை வாய்க்குள் முணுமுணுத்தபடி... அதன் தாளத்திற்கு ஏற்றவாறு தலையைச் சுவற்றில் முட்டிக் கொண்டிருந்தாள்... கண்கள் யன்னலை வெறித்துக் கொண்டிருந்தன...

அவளின் அப்பா ஜானகிராமன் கெஞ்சி... அதட்டி.. செல்லம் கொஞ்சிக் கூப்பிட்ட எந்த வேதாவும் அவள் காதுக்கு எட்டவில்லை... அல்லது காதை எட்டியது... மூளைக்கு எட்டவில்லை...

ஜானகிராமனுக்கு அதொன்றும் புதிதாக இல்லை... எப்படியாவது அன்பையும், ஆதங்கத்தையும் குழைத்த அந்தக் குரல் வேதாவின் காதுகளுக்குள் புகுந்து அவளை எட்டிவிடும் என்று தெரியும்... ஆரம்பத்தில் திரும்பியே பார்க்காதவள்.. இப்பொழுதெல்லாம் இருபது தடவை கூப்பிட்டால் ஒரு தடவை திரும்பிப் பார்த்து விடுகிறாள்...

சைக்கிள் வாங்கிவிட்ட மனசு காருக்கு ஆசைப்படுவது போல்... திரும்பிப் பார்த்துட்டா... ஒரு தடவை சிரித்தால் தேவலாம் என்று இதயம் ஏங்கிப் போகையிலேயே... அவள் தலை திரும்பி விடுகிறது... மிக மிக அருமையாகச் சிரிக்கக் கூடச் செய்கிறாள்... மிக மிக வசீகரமாக...

”... வேதா... எவ்ளோ நேரம் கூப்டறேன்... அடி போடனும்... ஏய்... வேதா... டேய்... வேதா...”

ஜானகியின் ஏறி, இறங்கிக், குழைந்த குரலிலிருந்த அதே தீவிரம் அவன் மனைவி ரீனாவின் கண்களிலிருந்தது... ’பார்த்துடு வேதா’... என்று மனம் அலறியது... கண்ணின் கடைகளில் இதோ வந்துடுவேன் என்று கண்ணீர் மிரட்டிக் கொண்டிருந்தது...

அறையின் மூலையில் போடப் பட்டிருந்த மேசையில் சற்று நேரம் முன்னர் வரைக்கும் ஜானகியும்... ரீனாவும் சொன்னதைக் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த pedagogue மற்றும் தெரபிஸ்ட் மாயா நீல் எழுதுவதை நிறுத்தி விட்டு.. மூவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்... கண்களில் தளும்பிய நீரை அவர்கள் அறியாது காகிதக் கைக்குட்டை வைத்து அழுத்தி ஒற்றிக் கொண்டிருந்தாள்...

ஜானகிக்குத் திடீரென்று மாயா இருந்தது கவனம் வந்தது... சங்கடத்துடன் திரும்பி... ”ஸாரி மிஸ் நீல்... இப்போல்லாம் கூப்ட்டா திரும்பிப் பார்ப்பா... இன்னைக்கு ஏதோ மூட் சரியில்ல அவளுக்கு”... சொன்னபடியே திரும்பி... ”வேதாக்குட்டி... வேதா”... என்று ஆரம்பித்தான்...

”நைட் சரியா தூங்கல அவ”... ஜானகி விட்டதிலிருந்து ரீனா தொடர்ந்தாள்..

மாயாவுக்குப் புரிந்தது... மூழ்கிக் கொண்டிருப்பவன் துரும்பையும் பற்றுவான்... அவர்களின் நம்பிக்கை ஒளி அது... ஆறு வயதுக் குழந்தை அறுபது தடவை கூப்பிட்டு ஒரு தடவை திரும்பிப் பார்க்கிறாள் என்பதில் உண்டாகும் ஆனந்தக் கண்ணீர் எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்...

அறுபது மில்லியன் டாலர் பெறுமதியான தொலைந்து போன சரக்குத் திரும்பிக் கிடைத்து விட்டாலும்... இந்தச் சந்தோஷத்தை யாரும் அனுபவித்திருக்க முடியாதென்றே தோன்றுகிறது... எது சந்தோஷம்... எது துக்கம்... இதை எப்படி அளவிடுவது... ஒவ்வொருவரின் சந்தோஷமும், துக்கமும் தனித் தனி மனிதர்களுக்கிடையில் எந்த அளவுக்கு வேறுபடுகிறது... மடு... மலை.. வித்தியாசம் எல்லாம் ஒன்றுமே இல்லை...

”பார்க்கிறா பாருங்க... பார்க்கிறா... மிஸ் நீல்... ஸீ... திரும்பிப் பார்த்துட்டா”... ஜானகியின் உற்சாகமான குரல் மாயாவை அடைந்து அவள் வேதாவைத் திரும்பிப் பார்ப்பதற்குள்... வேதா திரும்பவும் யன்னலை வெறிக்க ஆரம்பித்திருந்தாள்....

ஜானகிக்கு ஏமாற்றம் ஒரு பக்கம்... இயலாமை ஒரு பக்கமாகத் திரும்பி... ”வேதா” என்று கூப்பிட்டு முடிப்பதற்குள்... வேதா சட்டெனத் திரும்பினாள்...

கார்முகிலில் மறைந்திருந்த வானவில் சட்டெனத் தோன்றியது போல்... ஜானகி, ரீனா தம்பதியினரின் அகமும் புறமும் ஒரு சேர மலர்ந்து முகம் பிரகாசமானது... இரண்டு பேரும் கண்ணைத் துடைத்துக் கொண்டு மாயாவைப் பார்த்தார்கள்.... மாயாவிற்கும் அவர்களின் சந்தோஷம் தொற்றிக் கொள்ள... முகம் முழுக்க மகிழ்ச்சியுடன்... வேதாவைப் பார்த்து... ”ஹாய் வேதா”... என்று கையாட்டிப் புன்னகைத்தாள்...

வேதா எழுந்து போய்... டி.வி.யின் பொத்தானை அழுத்தினாள்... டி.வி. ஸ்டாண்டின் மேல் கால் வைத்து எம்பி டி.வி.யில் பிடித்துப் பக்கத்திலிருந்த கப்போர்ட்டின் மேல் நடப்பது போல் சர்வ சாதாரணமாகத் தொற்றினாள்...

”ஐய்யய்யோ... விழப்போற வேதா...” ஜானகி பதறினான்...

”அவளுக்குப் பயமே இல்ல மிஸ் நீல்... இப்டித்தான் எங்க வேணா ஏறுவா.. இறங்குவா”... ரீனாவின் குரலில் பயத்தை மீறிய ஒரு பெருமை இருந்தது...

”ஆமாம்... சரிதான்..”.. மாயா தலையைப் பலமாக அசைத்தாள்... அவளுக்கு வேதாவைத் தெரியும்... ஜானகி, ரீனாவை விடச் சற்று அதிகமாகவே தெரியும் என்று சொன்னால் மிகையாகாது...

மூன்று வருடங்களுக்கு முன் மாயா வேலை செய்யும் பள்ளியின் தலைவர் வேதாவை அவளிடம் அறிமுகம் செய்தபோது சொன்ன ”ஆட்டிஸம்” என்ற வார்த்தையை அவளால் நம்ப முடியவில்லை...

இந்தக் குழந்தைக்கா “ஆட்டிஸம்”...?! அதன் முகத்தில் அறிவு ஜொலித்ததோ இல்லையோ... ஏதோ ஒரு அமைதியும்... தேஜஸும் தெரிந்தது... இப்படி ஒரு குறை இருக்கிறதென்று யாராவது சத்தியம் செய்திருந்தாலும் நம்புவது சிரமம்...

”ஹாய் வேதா.... நான் மாயா”... என்று நீட்டிய அவள் கரங்கள் நடுங்கியது... வேதா வெறித்து எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள்...

லாவகமாக அந்தரத்தில் தொங்கிக் கப்போர்ட்டில் நடக்கும் வேதாவுக்கு... நிலத்தில் உட்கார, படுக்க வைக்க அவள் செய்த பிரயத்தனங்கள் எத்தனை... நிலத்தில் படுக்க வைத்து அழுத்திப் பிடித்து... நிலம் பாதுகாப்பானதென்று அவளுக்குப் புரிய வைக்க எத்தனை மாதங்கள் பிடித்தன...

இன்று சுவற்றில் சாய்ந்து தலையை அடித்துக் கொண்டிருக்கும் வேதாவுக்கு... சுவற்றை உணர வைக்க எத்தனை நாட்கள் எடுத்தன...

சாதாரணமான குழந்தைகளின் கையில் பென்சிலைக் கொடுத்து அதன் கையைப் பிடித்து ‘அ’ எழுதுவதை அநேகமாக எல்லாரும் செய்திருப்பார்கள்... ஓரிரு நாட்கள்... அதன் சிரமம் தெரிந்திருக்கும்...

மாயா வேதாவுடன் இன்னொரு வேதாவாகி.... அவளுடன் உடம்போடு உடம்பாக ஒட்டியபடியே... அவளின் கைக்குள் வேதாவின் கையை அடக்கி... பற்தூரிகை எடுத்து... பற்பசைக் குழாயின் மூடி திருகி... பற்பசை பிதுக்கி... வேதாவின் வாய்க்குள் நுழைப்பதிலிருந்து... தண்ணீர் பிடித்து முகம் கழுவுவது வரை...

சீப்புப் பிடித்துத் தலை சீவுவதிலிருந்து... கத்தி பிடித்துக் காரட் சீவுவது வரை...

சட்டை மாட்டி... செருப்பு மாட்டிக் கழற்றுவது வரை... நாள் முழுவதும்... வேதாவுக்குத் தேவையான அனைத்தையும் வேதாவின் கைகளை வைத்து வேதாவாகி அவளே செய்து கொண்டிருக்கிறாள்... மூன்று வருடங்களாக...

வேதாவின் ஒரு மில்லிமீட்டர் கண்ணசைவையும்... கையசைவையும் கண்டு பிடித்து... ’க்ரேட் இம்ப்ரூவ்மெண்ட்’ என்று ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறாள்...

அவளுக்குப் புரியும்... வேதாவின் ஒவ்வொரு அசைவையும் அவளைப் பெற்றவர்கள் எப்படி உணர்ந்து கொண்டிருப்பார்களென்று...

டி.வி.யில் ’சுட்டும் விழிச்சுடரே... சுட்டும் விழிச்சுடரே...’ பாட்டின் மெட்டுக்குக் கதாநாயகனும், நாயகியும் ஆடிக் கொண்டிருந்தார்கள்...

வேதா திரையின் மிக மிக அருகில் நின்றபடி... பாட்டின் வரிகளைக் ஹம் செய்து கொண்டிருந்தாள்... திடீரென்று பொத்தானை அழுத்தி டி.வி.யை நிறுத்தினாள்... பாடலை அச்சுப் பிசகாது ஹம் செய்தபடி பக்கத்திலிருந்த சோஃபாவில் தாவி உட்கார்ந்து... பின் தலையை தாளம் தப்பாது சோஃபாவில் அடிக்க ஆரம்பித்தாள்...

“கேக்குற எல்லாப் பாட்டும் சுருதி சுத்தமா ஹம் பண்ணுவா..”.. ரீனாவின் முகத்தில் வாட்ஸ் கணக்கில் ஒளியிருந்தது...

மாயா... ஆமோதிப்பாய்க் கண்களை மலர்த்தினாள்... “ஆமாம்... வேதாக்கு பாட்டுன்னா ரொம்ப இஷ்டம்... ரொம்ப டாலண்ட்டட்..” என்றாள் பெருமையாக.. அவளின் மூக்குச் சிவந்திருந்தது... குனிந்து குறிப்பேட்டைப் பார்த்தாள்... ”பசிச்சா என்ன செய்வா..?”

”நேரா கிச்சனுக்கு வருவா... என்னோட சட்டையப் பிடிச்சு இழுப்பா...” ரீனா சிரித்தாள்...

“வாவ்..” என்றாள் மாயா... “என் கிட்டயும் அதேதான்.. மூன்று மாசத்துக்கு முன்னாடி.. இப்டி செய்யத் தெரியாது அவளுக்கு... இது எவ்ளோ பெரிய முன்னேற்றம் தெரியுமா..?.. ம்ம்... என்ன எல்லாம் விரும்பிச் சாப்டுவா... தானே கைல எடுத்துப்பாளா... நீங்க ஹெல்ப் பண்ணனுமா..?”...

வேதா... ’லாலாலா லல்லல்லா’... என்ற தொனியில் குரலை உயர்த்தினாள்...

மூன்று பேரும் பேசுவதை நிறுத்தி.. அவளிடம் திரும்பினார்கள்..

வேதா.. கழுத்தை ஒரு பக்கம் லேசாகச் சரித்து... இமைகளைச் சுருக்கி... அறையின் மேல் மூலையை வெறித்தாள்.. பார்வையை அகற்றாது... ஒரு புள்ளியிற் பொருத்திச் சுருதி கூட்டி... பின் தலையை சோஃபாவில் பலமாக அடித்து முன்னும் பின்னுமாக அசைந்து ஊஞ்சல் போல் ஆடினாள்...

ஜானகி அருகிலிருந்த சுவற்றில் சாய்ந்து அதில் தலையைப் பலமாக மோதினான்...

வேதாவைக் கவனித்துக் கொண்டிருந்த ரீனாவும்... மாயாவும்.. திடுக்கிட்டு அவனிடம் பாய்ந்தார்கள்...

“ஐய்யோ என்னங்க இது.. நிறுத்துங்க..” ரீனா திகைத்துப் போய், கதறி, விம்மி, வெடித்தாள்...

மாயா ஜானகியை நெருங்கி அவன் தோளில் ஆதரவாகக் கை வைத்து அழுத்தி.. “மிஸ்டர் ஜானகிராமன்.. காம் டவுன்..” என்று ஆசுவாசப் படுத்தினாள்...

ஜானகியின் தோள்கள் தளர்ந்தன... தலையை சுவற்றுடன் அழுத்தியபடி வேதா வெறித்திருந்த மூலையை வெறித்தான்... அந்தப் புள்ளியைத் தேடினான்...

”எனக்குப் பார்க்கணும் மிஸ் நீல்... அவ உலகம் என்னன்னு பார்க்கணும்... அது எப்டி இருக்கும்னு பார்க்கணும்... அவ எங்க உலகம் பார்க்கலன்னா... பார்க்க முடியலன்னா போகட்டும்... நாம அவ உலகத்தையாவது பார்க்கலாமா மிஸ் நீல்..” .. சுவற்றுடன் இறுகியபடி, குலுங்கினான்...

மாயாவின் கண்களிலிருந்த கண்ணீர் மடைதிறந்து கொட்டிக் கொண்டிருந்தது...

Monday, July 19, 2010

அகம் போன போக்கில்...

ஃபண்டாஸ்டிக்கோ... ர்ரொமாண்டிக்கோ... ப்யூட்டிஃபுல்... வுண்டர்ஸ்ஷோஉன்... வெனிஸ் நகரக் கால்வாயில் மிதந்து கொண்டிருந்த கொண்டோலாக்கள் பேசிய மொழிகளினூடு நித்யாவின் குரல் அமிழ்ந்து மெதுவாக ஒலித்தது... 


”நான் காசிக்குப் போலாம்னு இருக்கேன் சார்..”.. செல்ஃபோனை.. இடது காதுக்கு மாற்றினாள்... 


”ம்ம்... வேணாம்... யூ காண்ட் ஸ்டாண்ட் இட்...”

நேப்பியர் பாலத்தில் கூவ நதியின் நாற்றத்திற்கு இயல்பாக்கம் அடைந்திருந்த நாசியில் கை வைத்து கண்ணாடியைச் சரி செய்தவாறே நடந்து கொண்டிருந்தார் வெங்கட்ரமணி.... 

”வெல்... ஐ வாண்ட் டு ஸ்டே தேர்...”

”கிழிஞ்சது போ...”

மனம் விசித்திரம்... வாழ்க்கையின் பாதி நாள் ஐரோப்பாவில் கழிந்திருக்கிறது... சுத்தம்.. அழகு... நேர்த்தி இவைக்கெல்லாம் உடலும், மனதும் பழக்கப்பட்டிருக்கிறது... அடிக்கடி விரும்பும் தனிமையும், அமைதியும் வாய்த்திருக்கிறது... எல்லாம் மிக நன்றாக ஆனால் மிக மிக மேலோட்டமாக இருக்கிறது.. எதுவும் ஒட்ட மறுக்கிறது.. 

திருவிழாவில் தொலைந்த குழந்தை... பஞ்சு மிட்டாயை நீட்டினாலும்.. பார்பி பொம்மையை நீட்டினாலும்.. தட்டி விட்டுக் கண் மூடி..  அம்மா... அம்மா என்று வீறிடுவதைப் போல்... மனதிற்கு அண்மையானவற்றையே அது தேடிக் கொண்டிருக்கிறது.. 

"காசி தெரியுமா உனக்கு..? கங்கையைப் பார்த்தா வயிறு எரியும்..”.. வெங்கட்ரமணியின் குரல் எங்கேயோ கேட்டது.. 

..காசி... ஏதோ ஒரு டாக்குமெண்டரி எப்பவோ பார்த்த நினைவிருக்கிறது... ’நான் கடவுளில்’ பார்த்த காட்சிகள்... மூடிக் கட்டிய பிரேதங்கள்... அடுக்கி மூட்டிய சிதைகள்... உயிருடனும்... உயிரற்றும் உடல் சுமக்கும் கங்கை... அங்கே என்ன இருக்கிறது..? 

”தெரியல சார்... போய்ப் பார்த்தா தெரியலாம்..”

நிஜமாகவே தெரியவில்லை.. சட்டென ஒரு நினைப்புத் தோன்றி.. சில மணி நேரங்களில் வேரூன்றி.. விருட்சமாக மற்ற எல்லாவற்றையும் மறைத்தபடி நின்று கொண்டிருக்கிறது... இதுவும் மாய மான் மாதிரி.. இதோ கொண்டோலாவின் அருகில் தோன்றும் நீர் வட்டம் மாதிரிக் கலைந்து காணாது போய் விடுமா..? நிச்சயமாகத் தெரியவில்லை... 

கொண்டோலாவில் நித்யா பக்கத்தில் ஜென்ம சாபல்யம் அடைந்து விட்ட தோரணையில் உட்கார்ந்திருந்த ரோஸ் கடைக்கண்ணில் தெரிந்தாள்... 

வெனிஸின் கோட்டை மண்டபத் தூபிகளுக்கிடையில் மிதந்தபடி... ’ஓ மை காட் நித்யா...  எய்ண்ட் இட் வொண்டர்ஃபுல்..? ஐ திங்க் ஐ வாஸ் ஹியர் இன் மை லாஸ்ட் பர்த்... டோண்ட் யூ ஃபீல் த ஸேம்..?’... அவள் கேட்டது நினைவு வந்தது... 

’.. இட் ரியலி இஸ் மார்வலஸ் ரோஸ்..’  கட்டட அமைப்புகளும்... அதன் பிரமாண்டமும் பிரமிக்கச் செய்தது உண்மைதான்... ஆனால்  போன பிறவியில் இங்கிருந்தது போன்ற எந்த நினைப்பும் வரவில்லை... சிவகாமியின் சபதத்தில் சிவகாமி நடனம் ஆடியபோது சேர்ந்தாடிய மனமும்... எங்கோ ஏதோ ஒரு சோழன் போருக்குப் புறப்பட்டால் வெற்றி வேல்.. வீரவேல் என்று புறப்படும் உள்ளும்.. உணர்வும்... எழுத்துகளில் மட்டுமே தெரியும் கோட்டை மதில்களில் ஒட்டி உறவாடும் உயிரும்... இங்கில்லை...  

இதற்குக் காரணம் முன்பிறவிப் பயனா.... அல்லது சிறு வயதிலிருந்தே.. படித்தவையும்... கேட்டவையும்... நாமும் நாம் சார்ந்தவையுமென மூளையின் மூலையொன்றில் சேமிக்கப்பட்டிருக்கும் கதைகளா தெரியவில்லை... சில மனிதர்களைப் பார்த்தவுடன் சட்டென ஒரு நெருக்கம் ஏற்படுவதும்.. சிலரைப் பார்த்த உடனேயே ’விலகு’ என்று தோன்றுவதும்... எதனாலென்று தெரியவில்லை... 

மறு முனையில் பேசிக் கொண்டிருக்கும் ரமணியைச் சில வருடங்களுக்கு முன் யாரென்றே தெரியாது... இப்பொழுது முக்கியமோ... இல்லையோ... எதுவானாலும்... “ரமணி சார் கிட்ட சொல்லணும்..” என்று தோன்றி விடுகிறது... ”காசிக்குச் சென்று பார்த்தாலென்ன..” என்று தோன்றிய எண்ணம் உட்பட... 

”அங்க ஏதாவது குடிசை.. கூடாரம் மாதிரி வாடகைக்கு கிடைக்குமா சார்..” இது ஏன் கேட்டாள் என்று அவளுக்கே தெரியவில்லை... மனம் போன போக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறாளா... அல்லது உள்ளுணர்வின் வழி நடத்தலா... இரு விதமாகவும் சொல்லிக் கொள்ளலாம்... 

 “உன்னை என்ன செய்ய..?”  தலையிலடித்துக் கொண்டிருப்பாரா தெரியாது..

“ம்ம்..”

“குடிசை எல்லாம் வாடகைக்குக் கிடைக்காது... ஃப்ளோட்டிங் பாப்யுலேஷன்.. வீடு கிடைக்கலாம்... என்ன இது..?”

செல்ஃபோன் சூடாகிக் காதுமடல் எரிந்தது... எரிச்சலாக இருந்தது... சற்று விலக்கிப் பிடித்துக் கொண்டாள்.. 

நித்யா முகம் சுளித்ததைப் பார்த்து ரோஸ் சிரித்தாள்... 

“விசாரிச்சு வைங்க சார்...  அப்புறம் பேசறேன்.. டேக் கேர்..”

“அது சரி... பை... டேக்..கே...” சொல்லி முடிப்பதற்குள்.. செல்ஃபோனின் சிவப்புப் பொத்தானை அழுத்திக் கைப்பையில் போட்டாள்... 

ரோஸ் ”ம்ம்..?” என்பதைக் கேள்வியாக்கினாள்... 

”ஐ வாண்ட் டு கோ டு ஸம்வேர் ரோஸ்..”.. முடிவே இல்லாத ஒன்றை இவளுக்கு விளம்பியே ஆக வேண்டுமா.. ஒரு வேளை யாருக்காவது சொன்னால்.. முடிவில் உறுதியாக இருக்கலாமென்ற நப்பாசையா... 

”வாட்... வேர்..?”

“ஸம்வேர் இன் ஏசியா... இன் இண்டியா...”

”ஓ.. ஐ வில் மிஸ் யூ தென்..”

நித்யா மூன்று நாள் விடுமுறையில் போனால்... “ஓ காட்... வாட் வில் ஐ டு வித் அவுட் யூ..” என்று அங்கலாய்க்கும் இவளின் நட்பை அவளும் இழக்க நேரும்... எண்ணங்கள் கிளறும்போதே...”யூ காண்ட் மிஸ் வாட் யூ நெவர் ஹேட்..” கவனம் வந்தது... 

அப்போ காசியும்..?.. ”ம்ம்”.... சில முடிவுகள் மிகச் சில நொடியிலேயே எடுக்கப் படுகின்றன.. எப்பவோ படித்த புத்தகத்தின் தலைப்பு நினைவில் வந்தது... “இட் ஒன்லி டேக்ஸ் அ மினிட் டு சேஞ்ச் யுவர் லைஃப்”.. ரோஸைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்... 

”ஐ டூ வில் மிஸ் யூ ரோஸ்..”.. 

(அனைத்தும் புனைவல்ல..)
______________________________________________________________________________