header photo

Wednesday, May 23, 2012

”நில்”


பழக்கமே இல்லாத இந்தப்
பந்தயத்தில் நானுமிருக்கிறேன்
 
பறக்கும் புழுதி கண் மறைக்க
சொடுக் என்றால் 
ஓட ஆரம்பித்து விடுகிறேன் 

பதினேழோ பதினெட்டோ 
ஒரு இலக்கம் முதுகிலாடுகிறது

செய்வதறியாது 
நடுநடுவில் நிதானிக்கிறேன் 
இப்போதெல்லாம் 

இந்த மைதானம் எனக்கானதல்ல
எனினும் 
இன்றும் கூட 
அங்குதான் நின்றுகொண்டிருக்கிறேன்

முதுகிலாடும் இந்த இலக்கத்தை
முக்கால வரையறையற்று 
இல்லாதொழிக்க வழி
ஒன்றிருக்கிறது 

இனி எழுந்தே இருக்கப்போவதில்லையென
மண்ணைக் கெட்டியாகக் கவ்விக் கொள்ளலாம்

ஒரு கால் தூக்கி 
மெதுவே
முதலாவது முழங்கால் மடித்து.. 

Thursday, May 17, 2012

பேரன்புடைய மூத்த வீரர் மற்றும் ஜெயமோகன் அவர்கட்கு..

||ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்
இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.||

http://www.jeyamohan.in/?p=27320

__________________________________________



இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அதிலும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரியாத விடயம் என்று ஒன்று இந்த உலகத்தில் உள்ளதா என்பது பற்றி எனக்கு கிஞ்சித்தளவு சந்தேகம் கூட இல்லை. முட்டாளுக்கு எல்லாம் தெரியுமென்று முட்டாள்கள் சிலர் சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்கள் முட்டாள்களென்றும் எங்கள் ஜெயமோகனுக்குத் தெரியும். 



(கற்பு என்கிற கருமாந்திர வார்த்தையை அழி ரப்பர் வைத்து நானே அழிக்கிறேன், கற்பழிப்பு, நானும் ராணுவம்தான், நானும் ராணுவம்தான்)

நிற்க,

பாலியல் வன்முறை என்பது ஒரு போர்த் தந்திரம் என்பது எல்லாம் தெரிந்த ஜெயமோகனுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. தெரியாதிருப்பது வேறு, தெரிந்தும் தெரியாதது போலிருப்பது வேறு. அல்லது அவர் ராணுவத்தின் பால், அவர் தேசியத்தின் பால் கொண்ட பற்றாத காதல் அல்லது அசையாத நம்பிக்கை கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதிலும் நம்பிக்கை வேறு, கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு என்பதும் கண்டிப்பாக எல்லாம் தெரிந்த பேரறிவாளர் ஜெயமோகனுக்குத் தெரியும். 

உலகத்தில் பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை இருந்ததா என்று கேட்டால், ரஷ்ய, அமெரிக்க, சீன, ஸ்பானிய, அல்பேனிய, ரோம, கிரேக்க , இதர, இதர, இதர வரலாறுகளை, காம, சோம, கோவ்ஸ்கி, இதர எலுமிச்சயோவிச், க்ரீன்விச், ப்ளூவிச் ஆகிய பெயர்கள் படைத்த உலக இலக்கியத்தை எல்லாம் ஒரு சிட்டிகை கூடக் கரைத்துக் குடித்திருக்காத எனக்கே “இல்லை, பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை என்பது இருந்திருக்கச் சந்தர்ப்பமில்லை” என்றே தோன்றுகிறது. 



ஜெயமோகன் பாஷையில் சொல்வதானால், நண்பர்களே (மிக நேர்மையான வார்த்தைப் பிரயோகம்), அன்புள்ள மூத்த அரும்பெரும் தியாகப் பெருமக்களே நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. பாலியல் வன்முறையென்பது ஒரு புருஷன் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு ஒரு பெண்ணைப் புணர்வது மட்டுமில்லை. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் முலைகளை இறுகத் தடவி சோதனை நடத்தினாலும் அது பாலியல் வன்முறைதான். ஒரு ஆண் இன்னொரு ஆணின் ஆடைகளைக் களைந்து விட்டு சுவர்ப் புறமாக நிறுத்தி வைத்திருப்பதும் பாலியல் வன்முறைதான். உளவியல் ரீதியான மிகக் கொடுமையான வன்முறை. 

பேரன்புக்கும், பெரு மரியாதைக்கும் பாத்திரமான ஜெயமோகன் சொன்ன ஒரு கூற்று உண்மையிலும் உண்மை. அதாவது பொய்ப் பிரச்சாரம். ஆம்! இது சத்தியம்! பேரன்பு மிக்க மூத்த குடிகளே பாலியல் வன்முறை எவ்வாறு ஒரு இராணுவ நடவடிக்கைக்குப் பக்கபலமாகிறதோ, அதேபோல் ஒரு கொள்கை ரீதியாக (அது சரியா, தவறா என்று விவாதிக்க நான் வரவில்லை, இப்பொழுது இந்த விடயம் மட்டும்) போராடுபவர்களுக்கு மிகைப்படுத்தப்பட பிரச்சாரம் ஒரு ஆயுதமாகிறது. காதலிலும், யுத்தத்திலும் எல்லாம் நியாயப்படுத்தப்பட முடியுமென்றால், பாலியல் வன்முறையை நீ நியாயப்படுத்து, மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நான் நியாயப்படுத்துகிறேன். பாலியல் வன்முறையே நடக்கவில்லை, எல்லாரும் “சாமியோ ஐய்யப்பா” என்றபடி வலம் வந்து கொண்டிருந்தார்கள். மக்களுக்கு திருநீறும், நாமமுமிட்டு ஆன்மீகத் தொண்டு செய்தார்கள் போன்றதான பிரச்சாரம் எதற்கோ? எதிர்ப் பொய்ப் பிரச்சாரப் பண்பாடா? பண்புள்ள மூத்த வீர தியாகச் செம்மல்களே நீங்கள் ஒவ்வொருவரும் இப்படியாகத்தான் இருக்கிறீர்களென்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் மந்தையில் இரண்டாடு இப்படியாக இருந்தது என்பதை ஒத்துக் கொள்வதற்கு உங்களுக்குத் தேவை ஒன்றிருக்கிறது... YES, CHECK YOUR BALLS. 



தமிழ் சினிமாவில் ஏராளமான மிகைப்படுத்தல் உண்டு. பெண்களைக் கட்டிப் போட்டு வார்த்தையாலும், உடலாலும் பாலியல் வன்முறை செய்வது, காட்சி வேண்டுமானால் நாடகத்தன்மையாக இருக்கலாம், மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பேரன்பாளர்களே அதிலிருக்கும் உளவியல் தந்திரம் பொய்யல்ல. இந்த விதமான தாக்குதல் மூலம் எதிராளியை இரு வேறு விதமாகப் பலவீனப்படுத்தலாம். ஒன்று சோர்ந்து போகச் செய்யலாம் அல்லது நரம்பு புடைக்க உணர்ச்சிவசப்படச் செய்யலாம். இந்த உளவியலைத் தெரிந்து வைத்திருக்காத பால்குடி மறக்காத இராணுவத்தினர் இருக்கலாம். ஞாமறியோம் ஜெயபரமே. 

காற்பந்தாட்டத்தில் பெனால்ட்டி கிடைக்காத வண்ணம், பந்தை உதைப்பதுபோல் முட்டியைப் பெயர்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது காற்பந்தாட்டப் பயிற்சியாளரின் மாபெரும் கடமைகளில் ஒன்று போலவே, இராணுவப் பயிற்சியாளர்களுக்கும் சில பயிற்சிகள் உண்டென்பதை மறுக்க முடியாது (ஏன் முடியாது, எல்லாம் தெரிந்தவர்கள் மறுக்கலாம், SHUT THE FUCK UP, என்னைச் சொன்னேன்). 



இந்திய ராணுவம் நம் ஊரில் இருந்த போது நான் சிறுமி. எதுவும் புரியாத வயது. ஆனாலும் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. இராணுவம் ரோந்து வரும்போதெல்லாம் பெண்கள் சேலையைச் சுற்றோ சுற்றென்று சுற்றி கழுத்து வரை போர்த்தியிருப்பார்கள். இது மிகையான பிரச்சாரத்தின் காரணத்தினாலேயே கூட இருக்கலாம். இந்த இடத்திலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நியாயப்படுத்த எனக்கு இன்னொரு சந்தர்ப்பம். இதனால்தான் மக்கள் விழிப்புடன் இருந்தார்கள். இராணுவம் வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குள் இருக்காது பிள்ளை குட்டி, கிழடு கட்டைகளுடன் வீட்டிற்கு வெளியில் வந்து கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். பண்பாளர்கள் கூட்டத்தில் வைத்து ஒரு பெண்ணை வற்புறுத்த யோசிக்கத்தானே செய்வார்கள். உளவியல். 



பாலியல் வன்முறையை நேரடிக் காட்சியாகப் பார்த்தால் மட்டுமே நம்புவேன் என்கிறவர்களுக்கு சுவாமி நித்தியானந்தா போன்றவர்கள் கடவுளைக் காண்பிப்பது போல் ஏதாவது அருள் பாலித்தால் உண்டு. நானும் ஊரிலிருந்த போது மற்றவர்களின் வாய்ப் பிரச்சாரத்தின் மூலமாகவே இந்தக் கொடுமையை அறிந்திருக்கிறேன். 

ஜெயமோகன் கட்டுரையில் ஒரு பெரும் பண்பாளர் “கட்டு”ரை ஒன்றை அனுப்பியிருக்கிறார். >>>> 

|| ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார். ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்|| 

என்பதாகச் சொல்கிறது அந்தக் கதை இல்லை கட்டுரை. இல்லை, தெரியாமல் கேட்கிறேன் “எல்.டி.டி.இ என்ன கேனைங்களா?” பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு எண்பது வயது மூதாட்டிதானா கிடைக்க வேண்டும். அது பிரச்சாரத்திற்கு எந்த விதத்தில் வலு ஊட்டுமென்று அறியாமலா அத்தனை காலம் அந்தப் போரை அவ்வளவு திறமையாக எடுத்துச் சென்றார்கள்? பேரறிவாளர்களின் எதிர்ப் பிரச்சாரம் இத்தனை கேவலமாக, கீழ்த்தரமாகவா பல்லை இளிக்க வேண்டும். 

போகட்டும் நான் ஒரு பிரச்சாரம் செய்கிறேன் பாருங்கள்: 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் (பிரச்சாரத்திற்கு எதற்கு விளக்கமெல்லாம்) ஒரு வழக்கு வந்தது. உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்துப் பெண் அவர். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு நடைப்பிணம் போலிருந்தார். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசினார். அவருக்கு இங்கு வதிவிடம் கிடைப்பது பற்றிய வழக்கல்ல அது. அவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்திருந்தது. அவரின் அந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டது. அவர் பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பள்ளிக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். சில பெண்கள் முடக்கப்பட்டார்கள். பள்ளியின் இரண்டாவது மாடியில் ஒரு வகுப்பறையில் நாலைந்து பண்பாளர்கள் அவரிற்கு ”ஆன்மீக போதனை” செய்திருக்கிறார்கள். இன்றும் கூட அவரின் செயல்கள் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. உண்மைதான்! இராணுவ ஆன்மீகவாதிகள், அவர்களின் உடற் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்தப் பெண் அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளராகத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த சிரமபரிகாரம்தான் அது! 

இந்த வழக்கில் மொழி ரீதியான உதவிக்கு நான் அங்கிருந்தேன். அவராக இருந்து என் வாயால் அவர் வாக்குமூலத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மொழிபெயர்க்கும்போது மொழியை மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் வாங்கி, ஏறத்தாழ அப்படியே அடுத்தவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான தருணங்களில் அதற்கான தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. வெளியில் வரும்போது நான் நடைப்பிணமாகி இருந்தேன். பிற்பாடு எனக்கு ஒரு மாத்திற்கு மூன்று மணி நேர உளவியல் ஆலோசனை, மூன்று மணி நேர தொழில் ரீதியான மேற்பார்வை ஆலோசனை தேவைப்பட்டது. இன்னும் கூட என்னாலேயே இதை ஜீரணிக்க முடியாதிருக்கும் பட்சத்தில், அன்பர்களே, பேரறிவாளர்களே பாதிக்கப்பட்டவர்களின் நிலமையைக் கொஞ்சம் உங்கள் மாபெரும் இலக்கியக் கற்பனாசக்தியில் கொண்டுவந்து பாருங்கள். 

செம்மறித் தோல் போர்த்திய நரிகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்துவிடுவது உங்கள் கடமையாக இருக்கலாம். ஆனால் குதறப்பட்டிருக்கும் வெள்ளாடுகளுக்கு இதற்கு மேலும் இப்படியாக இன்னொரு உ ளவியல் ரீதியான அநியாயம் ஏற்படுவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. MORONS ARE JUST MORONS, YOU BET GOD DAMNIT!!!

Monday, May 14, 2012

பிறகென்ன

பாட்டியின் அடுக்களையில்
இதே எலிகளை 
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்

யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை

ஆழிப் பேரலையில்
என்ன செய்யும் பாவம் 

கரையிலிருந்து ஒரு இரைச்சல்
அந்தோ என்றபடி வருகிறது

இந்த எலிகள் 
ச்சே.. பாட்டி வீட்டு எலிகளா இவை
இருக்கவே இருக்காது 
அவை போலிருக்கலாம்

ஆசுவாசப்படும்போதுதான் கவனித்தேன்
அந்த அந்தோ
இந்த எலிகளுக்கானதல்ல

அது வந்த வீச்சில் 
கடலில் குதித்து 
கீழ் நோக்கிச் செல்கிறது 

சமுத்திரத்தின் அடியில் 
அது இன்னும் 
கப்பலாகவே இருக்கிறது  

கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன


அவையா சுமந்தன இதை?