header photo

Thursday, September 10, 2009

பயங்கரமான இருள் எங்கும் கவ்விக் கொண்டிருந்தது. வானத்தில் உள்ள நீர் முழுவதும் அந்த ஒரே இரவில் கொட்டுவதைப் போல், மழை தாரை தரையாகப் பெய்தது. பயங்கரமான கோர உருவங்களுடன் பலவிதமான குறளிகளும், பூதப் பிசாசுகளும் குதித்துக் கூத்தாடின. இவ்வளவு கோரத்தைக் கண்டும் விக்ரமாதித்தன் கலங்காமல் போய்க் கொண்டிருந்தான்.

வெள்ளக் காட்டின் வழியே செல்லும் அவன் கால்களைப் பாம்புகள் சுற்றிக் கொண்டிருந்தன. மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே அவைகளை உதறித் தள்ளி விட்டு நடந்தான் வீராதி வீரன். நீண்ட தூரம் நடந்து குறிப்பிட்ட அந்த மயானத்தை அடைந்தான். குறளிகளும், பிசாசுகளும் மனிதர்களைப் பிடித்து வந்து அவர்களின் வயிற்றைக் கிழித்து, ரத்தத்தை உறிஞ்சி எக்காளமிட்டன. துஷ்ட மிருகங்கள் நாற்புறமும் திரிந்தன.

இவற்றையெல்லாம் லட்சியம் செய்யாது விக்ரமாதித்தன் நேராக முருங்க மரத்தை அடைந்தான். நாலா பக்கங்களிலும் பிடி பிடி, கொல்லு என்று பிசாசுகள் அலறிக் கொண்டிருந்தன. அவற்றை எல்லாம் அலட்சியம் செய்து பக்கத்தில் நெருங்கிப் பார்த்தான். பிணமொன்று தலை கீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது.

சரசர என்று மரத்தில் ஏறி கயிறை அறுத்து பிணத்தை தோளின் மீது போட்டுக் கொண்டு நடந்தான். பிணத்தினுள் புகுந்திருந்த வேதாளம் லக்கலக்க என்று சிரித்தது.

0 ஊக்கம்::