நெற்கதிர்கள் சிதைந்தன..
மரச் செடிகள் சாய்ந்தன..
வேலிகள் சிராய்ந்தன...
நாய்களின் குரைப்பு அலறலானது..
பரமுவின் கைகள் பரபரவென்று இயங்கிக் கொண்டிருந்தன. நீளமான பச்சைப் புகையிலைகளை நான்கைந்தாகச் சேர்த்து அளவுக்கு மீறின துரிதத்துடன் சீராகக் கீறி வைத்த பனையோலைக் கீற்றுக்கள் கொண்டு சரக் சரக்கென்று முடிச்சுப் போட்டார். சாதாரணமாகப் பேதியான குழந்தையைத் தூக்குவது போல் சற்றுத் தள்ளிப் பிடித்து ஆனால் கவனத்துடனேயே கொண்டு செல்லும் பரமு அன்றைக்கு ஏனோ அவற்றை வாரிச்சுருட்டி அள்ளி எடுத்துக் கொண்டு குடிலை நோக்கி விரைந்தார்.
விரும்பியோ விரும்பாமலோ..
எரிந்து சாம்பலாக முன்..
புகையிலையும் புகை பிடிக்கும்..
மேலும் கீழும் தட்டையாக இருக்கும் பானை போன்ற, தடித்த களிமண் சுவர் சூழ்ந்த புகைக்குடிலினுள் ஒரு ஆள் நுழையும் அளவிற்கு வாசல் இருக்கும். அதன் உட் கூரையில் வரிசையாகத் தடிகளை அடுக்கி, ஓலைக் கீற்றினாற் கட்டிய புகையிலைகளைத் தொங்க விட்டு, அடியில் நன்கு காய்ந்த தேங்காய் நார்கள் மற்றும் பனங்கொட்டைகளை சீராக அடுக்கித் தீ மூட்டுவர். குடிலை ஓலைப் பாய் கொண்டு மூடி, கீழே மிகமிகச் சிறிய இடைவெளி விட்டு, அதனூடு ஒரு தடியைச் செலுத்தித் தட்டித் தட்டி சுவாலை எழும்பாது தணல் மட்டும் இருக்கும்படி பார்த்துக்கொள்வர். பரமு கண்ணும் கருத்துமாகக் குடில் முன்னால் அமர்ந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.
அன்று குடிலின் முன் மூன்றிலொரு பாகம் வரைக்கும் புகையிலைகள் தொங்க விடப்பட்டன. தேங்காய் நார்களும் அவ்விதமே மூன்றிலொரு பாகம் அடுக்கப்பட்டன. தீ மூட்டி, பாய் கொண்டு மூடி, தடியை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்தாகி விட்டது. வியர்வை மடை திறந்து விட்டிருந்தது. தலையில் சுற்றியிருந்த துண்டை எடுத்து முகத்துடன், கழுத்து, கை எல்லாம் சேர்த்துத் துடைத்துப் பிழிந்து உதறி மீண்டும் தலையில் சுற்றிக் கொண்டார்.
தகரத்தினாலான வாயிற்கதவு மடமடத்த சத்தம் பயங்கரமாக இருந்தது. பரமுவின் நாய் குரைத்து ஓய்ந்து வீட்டின் பின்னால் ஓடியது. வாயிற்பக்கமிருந்த வாழைகளும், வாழைக்கன்றுகளும் சாய்ந்தன. பரமுவுக்கு ஓவென்று அலற வேண்டும் போலிருந்தது. கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது. தடியைப் போட்டுவிட்டு, கால்கள் துவளத் துவள மெதுவாக எழுந்து நின்றார். தலையிலிருந்த துண்டெடுத்து கண்ணுடன் முகத்தையும் அழுந்தத் துடைத்து தோளில்ப் போடக் கூடத் திராணியற்று கையிலேயே இறுகப் பிடித்தபடி அசையாதிருந்தார்.
நீட்டிய துப்பாக்கியுடன் பூட்ஸ் கால்கள் சுற்றி வளைத்து நெருங்கின.
சிங்களவ தன்னுவத?.. எங்கே அவர்கள்?
பரமு ஊமையாகி இருந்தார்.. வெறித்துப் பார்த்தார்.. கண்களில் கண்ணீர் பளபளத்தது..
எங்கே? ஒருவன் எகிறி முன்னால் வந்தான்..
தலைவன் போலிருந்தவன் பரமுவை உற்றுப் பார்த்தான்.. கண்கள் என்ன சொன்னதோ.. பாய்ந்தவனை இடக்கை உயர்த்தி மறித்தான்.. போகலாம் என்று சைகை செய்தான்..
பரமு அசையாதிருந்தார்... அடி வயிற்றில் எதுவோ திரண்டு உருண்டது.. பாயைப் பார்த்தார்... தீச்சுவாலையொன்று தெரிந்தது.. பதறிப்போய் துண்டையெறிந்து தடியைப் பற்றி சரக்கென்று நுழைத்து, தட் தட் என்று தட்டி அணைத்தார். திரும்பிப் பார்த்தார்.. கூப்பிடு தூரத்தில் சிப்பாய்கள் ஊர்ந்து சென்று கொண்டிருந்த காட்சி திகிலூட்டியது. தலைகள் மறையும் வரை நெருப்பின் மேல் நிற்பது போல் நின்று கொண்டிருந்தார். மறைந்ததும் தலை தெறிக்க ஓடி இரண்டு வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்தார். பாயை அகற்றி நெருப்பு மேல் தண்ணீர் ஊற்றினார். தலை நுழைத்து இருமினார். குற்றியுரும் குறையுயிருமாகக் கிடந்த இரண்டு ஜீவன்கள் மெதுவாக அசைந்தன. பரமு பின்வாங்கித் தொப்பென்று நிலத்திலமர்ந்து விக்கி விக்கி அழ ஆரம்பித்தார். இதயம் மிகவும் இலேசாகிப் பறப்பது போன்றிருந்தது.
புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடாம்.. அதுவும் காத்தது ஈருயிரை.. அல்லது ஓருயிரை ஈருடலை..?
(அந்த இருவர் ஆண்டன் பாலசிங்கமும் அவரின் துணைவி அடேல் பாலசிங்கமும்..! என்னுடைய சிறுமிப் பருவத்தில், இராணுவச் சுற்றி வளைப்பு ஒன்றின் போது இவர்கள் இவ்வாறு தப்பித்துக் கொண்டனர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மற்றவையெல்லாம் நடப்பை வைத்துப் புனையப்பட்டவையே!)