header photo

Wednesday, August 25, 2010

பச்சை நிறத்திலோர் ஆண்டி..

கண்ணாற் கண்டேன் நான் 
கோண் முதுகுடை மண்ணிற ஓணான்
நாணி அச்சம் கொண்டுறையும் 
தூணின் வண்ணமும் அவ்வண்ணம்..

பொன்வண்டின் நிறமதென்றார் சிலர்
எட்டிப் பார்த்தேன் குட்டிச்சுவரொன்று 
நட்ட வைத்து நின்று கொண்டிருந்தது
ஏரிக்கரை ஒதுங்கும் அழுக்கேறிய பாசிநிறம்

முழு இரவொன்றின் வெளிச்சத்தில்
பழுப்பேறிய சுவற்றில் வால் நீட்டி
பாசிப் படர்வில் தலை நீட்டியிருந்தது
பாதி அது மீதி இது என்ன இது..?

பார்வையைக் கூர்மையாக்கினேன்
ஒரு கண் பாவை வலத்திசை வெறித்தது
மற்றொன்றிடறி இடம் சென்றது
நாக்கு நீண்டு சுருண்டு ஒட்டிக் கொண்டது..

தொற்றுமிடமேற்று நிறமணிந்த இது..
தும்பிக்கு நீளும் நாக்கைக் காக்கைக்கஞ்சி
அண்ணத்தில் ஒட்டிவைத்திருக்கும் இது
கேலிக்கும் அவ்வப்போ வேலிக்கும் சாட்சியாகுமிது
ஒரு வேளை ஓணான் இல்லையோ...

______________________________________________

Saturday, August 21, 2010

பீட்ரூட்டும் ராஜபக்ஸேவும்.. கொக்கத்தடியும்..




புரட்சி செய்வது இப்படியா(ஆ)..? பாகம் ஒன்று(அய்யாங்... டொய்ங்-
ற்கு எதிர்ச்சொல் தெரியாதவர்களா நீங்கள்..)



______________________________________________________________________
(நான்)- (என்னை அடைப்புக்குள் அடக்கியிருக்கிறேன்.. அவையடக்கம்... நான் என்று ஆரம்பிப்பது ஆணவத்தைக் குறிக்கும்... என்பதால்..)இத்துப் போன சவரக்கத்தியைக் கையில் எடுப்பதா (உங்க ஆத்தா சத்தியமா சவரம் செய்வதற்கல்ல), முனை மழுங்கிய மொக்கைக் கத்தியைக் கையில் எடுப்பதா என்பதை என் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்!!!!!!!! 

இன்று.. ஆம் இன்று.. (சனிக்கிழமை).. “அது சரி” என்னும் அராஜகப் பதிவர் என்னை இரண்டும் கெட்டான் நிலமைக்குத் தள்ளியிருக்கிறார். சவரக்கத்தியா? மொக்கைக்கத்தியா? எதை எடுப்பது? குழப்பம்.. ஒரே குழப்பம்... (ஆங்கிலத்தில் இதைக் கான்பீஈஈசன் என்று குறிப்பிடுகிறார்கள்..) குழப்பத்தில்தான் பெரும்பாலும் புரட்சி வெடிக்கிறது(இல்லை... அவசரப்பட வேண்டாம்.. குழப்பத்தைக் கொதித்த விளக்கெண்ணெயென்றும், புரட்சியைக் கடுகு என்றும் தவறாக எடை போட வேண்டாம்.. அதுக்கு வருவோம் நிதானமாக..) 

சரி.. எதை எடுத்தாலென்ன அறுவைதான் குறிக்கோள்... அப்படியென்று நினைத்தாலும்.. , ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும்.. இல்லை வேண்டாம்.. இதற்கெல்லாம் பிரபல பதிவர்கள் பக்கத்தில் போட்டிருக்கும் படத்தைப் பிரதியெடுத்து இங்கு ஒட்டுவதற்கு எனக்கு நேரமில்லை... ஆதலால்... ம்ம்...ஆ.. இதுதான் சரி.. பெருவிரலையும்.. (இதுக்கே இவ்வளவு குழப்பமென்றால் புரட்சி வெடிக்காது என்ன செய்யும்..) நீட்டிக் கண்ணை மூடிக்கொண்டு ஒரு விரலைத் தொடு என்று கேட்பதற்குக் கூட நாதியற்ற நான் (இந்த இடத்தில் நான் வந்தால், அதுக்கு ஆணவமில்லை) லியோனி, பாப்பையாவை,....யாவை எல்லாம் அழைத்துப் பட்டிமன்றம் நடத்த மட்டும் எப்படி முடியும்..

”பெக்கர்ஸ் காண்ட் பி சூஸ்ர்ஸ்” (என் தாய்த்தமிழுக்கு நன்றி..).. என்று சும்மாவா சொன்னார்கள்.. போகட்டும்...  


ஈழத்தில்... ஆட்டுக்கும், மாட்டுக்கும் (சமயத்தில் மனிதனுக்கும்) உயரமான மரத்திலிருந்து இலை பறித்துக் கொடுப்பதற்குக் கொக்கத்தடி என்ற ஒரு உபகரணத்தை உபயோகிப்பார்கள். ஆம்.. அது ஒரு சாதனை.. பழந்தமிழனின் கண்டுபிடிப்புகளில் வரலாற்று முக்கியமான உபகரணமது... பயன்படுத்தும் தருணமிது.. நீளமான தடியின் முனையில், சத்துவம் (இந்தச் சொல் சமத்துவத்திலிருந்து வந்ததா, அல்லது வேத ஆகமங்களிலிருந்து வந்ததா என்று நான் இன்று வரை ஆராய்ச்சி செய்யவில்லை) என்றழைக்கப்படும் ஒரு கத்தியைக் கட்டி... அறுப்பார்கள்... (இலையை..).. அதை வைத்து வெங்காயம் அரிவது சற்றுச் சிரமம்தான்.. ஆனால் கழுத்தை அறுக்கலாமென்று ஆணித்தரமாகத் தோன்றியதால்.. கால் விலை கொடுத்து (இங்கிருந்து அங்கு தொலைபேசியதைத்தான்.. “கால் விலை”யெனக் குறிப்பிட்டேன்..) அதை வருவித்து விட்டேன்.. 

ஆனால் தோழர்களே (மை டியர் ஃப்ரண்ட்ஸ்.. என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்)... இதையும் தீர்மானித்தது நானல்ல... எல்லாம் அவன் செயல் என்று சொல்வார்கள் ஆன்மீகவாதிகள்... எனக்கு இங்கும் இரண்டும் கெட்ட நிலைதான்.. ஆன்மீகவாதியுமல்ல.. நாத்திகையும் அல்ல... (என்ன கொடுமை இது... எழுதும் நேரத்தில்.. உறைக்கும் உண்மைகளை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை.. ஒப்புக்கொள்ளாதிருக்கவும் முடியவில்லை..).. ம்ம்.. கலகலப்ரியா... வளவளா.. கொழகொழா என்று பேசிச் சொல்ல வந்ததை மறந்துவிடும் உன் அறணைத்தனம் என்று சாகும்... வெய்ட்.. ஆம்... இருந்தாலும்.. எல்லாம் அவன் செயல்தான்... புரட்சி செய்கிறேனென்று செய்முறை கொடுத்த அது சரியின்.. அடாவடிச் செயல்தான் காரணம்...  

முன்னுரை சற்று நீண்டு விட்டது... ஆனாலும் அரசியல்வாதிகள் போன்று.. என்னுரையைச் சுருக்கமாக முடித்துக் கொள்(ல்)கிறேன் என்று செல்வதில் எனக்கு உடன்பாடில்லை.. விடயத்திற்குச் செல்வோம்.. அல்லது வருவோம்.. (அதே, ஸேம், இரண்டும் கெட்ட, குழப்பம் மற்றும் கான்பீசன்..)..

புரட்சி உருளைக்கிழங்கு வடிவிலிருக்குமென்று திருக்கை (இல்லை இது கடல்வாழ் உயிரினமல்ல.. அது சரி அவர்களின் திருக்கரம்..) மலர்ந்திருக்கிறார்... வால்மீகி... அடச்சை இது வேற... ஐ மீன்.. என்கிறார் “அது சரி”.. அதைச் செந்நிறமென்று வேறு எழுதித் தொலைத்திருக்கிறார்.. பின்விளைவுகள் பற்றிச் சற்றேனும் சிந்தித்திருப்பாரானால்.. ம்ம்... முடியாதது பற்றியெல்லாம் என்ன பேச்சு வேண்டியிருக்கிறது.. கரண்டியிலிருந்தால்த்தானே சட்டியில் வருமென்பார்கள்.. (இதொன்றும் கான்பீசன் அல்ல.. கரண்டியிலிருப்பதைச் சட்டியிலிடுவதைச் சொன்னேன்.. மாற்றி யோசியுங்கள்.. மை டியர் ஃப்ரண்ட்ஸ்..).. 

ம்ம்... என்னவாயிற்று இப்போ..?

இன்றைக்கு பீட்ரூட் பச்சடி செய்யலாமென்று கடைக்குப் போனால்... பீட்ரூட் என்றிருந்த பெயர்ப்பலகையில்.. புரட்சி என்று கொட்டை கொட்டையாக ஜேர்மன் மொழியில் எழுதி வைத்திருக்கிறார்கள்.. அங்கு பீட்ரூட்டைக் காணவில்லை... சீண்டுவாரற்ற... நான் மட்டும் சீண்டும் பீட்ரூட்.. காணாமற் போனதன் அதிசயம் கண்டு வியந்து நின்றது ஓரிரு நிமிடங்கள்தான்.. பீட்ரூட் வாங்க யாரும் கியூவில் நிற்கவும் காணோம்... பக்கத்தில் கையுறை மாட்டி அழுகிப்போன உருளைக்கிழங்கைப் பொறுக்கிக் கொண்டிருந்த விற்பனையாளரிடம்... எங்கே பீட்ரூட் என்று கேட்டால்... அவருக்குத் தமிழ் தெரியாது என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்... அப்போ புரட்சி என்று கேள்வி போலிழுத்தால்... ஆ.. ஐ காட் இட் நவ்... என்று தமிழில் சொல்லிவிட்டு.. புரட்சி எப்போ வேண்டுமானாலும் வெடிக்குமென்றார்கள்... பூனையைக் கூட மடியில் கட்டிக் கொண்டிருக்கலாம்... இதை எப்படியென்று மண்டைக் குடைச்சலாகி விட்டது... செய்தி எப்படிக் காட்டுத்தீ போல் பரவுகிறது பாருங்கள்.. காலையில் பெயர்ப்பலகை மாற்றிக் கொண்டிருக்கும்போதே... கழுத்தில் சிவப்புத் துண்டு போட்ட ஒருவர்.. ”ஆய் போவன்” என்று மிரட்டியபடி கழுத்தைச் சுரண்டுகிறார்.. உலகத்தில் சிவப்பாக இருக்கும் எல்லாவற்றையும் அவர்தான் குத்தகை எடுத்திருக்கிறாராம்... வெடிக்கும் என்பது ஆடிஷனல்.. (தமிழ்த்தாய்....) நன்மையென்றார்... கையோடு கொடுத்தனுப்பி விட்டேன் என்கிறார்... 

அங்கேயே புரட்சி வெடித்திருக்கும்... ஆனால் பாருங்கள்.. அதற்கு முதலில் புரட்சி வேண்டும்... புரட்சியே இல்லாது புரட்சியை வெடிக்க வைப்பது எப்படியென்று யோசிப்பது கேனத்தனம்... அதனால்.. முதலில் புரட்சியை உருவாக்க வேண்டும்.. புரட்சியை உருவாக்குவதைத்தான் புரட்சி செய்வது என்கிறார்கள்... அதுக்குத் தலைக்கறிக்குச் செய்யும் மசாலாவை (இதுவும்.. செய்முறை உதவி... ஒரு எதிரி..).. புரட்சியில் புரட்டி... மீண்டும் புரட்சியை வைத்தே புரட்சி செய்கிறாராம்... அரிசியிலிருந்து... சோறு செய்வதைப் போலவா இது.. செத்த பாம்பை மீண்டும் சாக-அடிப்பது போலல்லவா இருக்கிறது... 

புரட்சி என்பதன் அடிப்படைப் பொருளையே மாற்றி... என் பீட்ரூட் பச்சடியைக் கிச்சடி செய்த அது சரி பெயரை... இன்றிலிருந்து... இது பிழை... என்று உரத்துக் கூறுங்கள்... இது புரட்சி அல்ல... புரட்சிக்கான ஆரம்பம்... புரட்சி விதை வாங்குவதற்கு உண்டியல் குலுக்குவது போன்றது இது... 

(பீட்ரூட்... சாரி.. புரட்சி தொடரும்..)

______________________________________________________________

Tuesday, August 17, 2010

கனவின் தொடர்ச்சியாக..

கரும்பாறை சுற்றிச்
சலசலக்கும் ஆற்றுநீரோரம்
கந்தக நிறத்திலொரு காகிதம்
ஏந்தி நின்று கொண்டிருக்கிறேன் 
அம்மாச்சி ஒருத்தி கைபிடித்திழுக்கிறாள் 
குளிக்கலாம் வாவென.. 
ஓ.. இங்கேயே என்றியம்பியபடி 
தண்ணீர்க் கரையில் குனிந்து கை நனைக்கிறேன்
எங்கிருந்தோ இன்னொரு அம்மாச்சி வருகிறாள்
அரை அடி ஆழம் கூட இல்லை 
சேறுதான் வருமென நொடிக்கிறாள் 
சற்றுத் தள்ளி ஒரு குன்றைக் காட்டி
அப்போ அங்கே என்கிறேன்.. என் பயம் எனக்கு..
அழுக்கெல்லாம் அடித்துக் கொண்டு
அங்குதான் வந்து சேரும்... நீ வா...
கை நீட்டி அழைத்துச் சென்றது 
அருவி விழும் மலைச்சரிவு.. 
அருகருகில் இருக்கை போலிருந்த பாறைகள் மீது
அஃகேன நிலையிலமர்ந்து 
ஆனந்த நீராடிக் கொண்டிருக்கிறோம்
கைக்கெட்டிய தூரத்தில் கந்தகக் காகிதம் 
சற்றும் நனையாது சலனமற்றிருக்கிறது 
மலைப் பாறையை வெறித்த அம்மாச்சி 
என்னை நேரே பார்த்து வா போகலாம்
என்றபடி சட்டென எழுந்து நடக்கிறாள்..
கடைக்கண்ணில் மற்ற அம்மாச்சியின் 
கடைக்கண் மலைப்பாறைகளை 
நோக்குவது தெரிகிறது.. 
அங்கு பார்க்கும் துணிவற்று 
தன்னிச்சையாய் காகிதம் பற்றி
முகத்திற்குக் கடிவாளமிட்டு முதலாமவள் 
முதுகை வெறித்தபடி தொடர்கிறேன்.. 
மற்றவள் என்னைத் தொடர்ந்தபடி 
முதலாமவளைக் கேட்கிறாள் 
வெள்ளை வரிகளற்ற யானையா அது?
அவள் தலையை மட்டுமசைத்துவிட்டு
விடுவிடென்று நடக்கிறாள் பாறையிடுக்குவழி..
யானைக்கு வரிகளா என்ற எனது ஆறாவது அறிவின் 
வினாவை வாய்க்குள் அடக்குகிறேன் 
அவர்களின் குறியீடு குறிப்பது எதுவானாலும் 
உவப்பானதொன்றல்ல என்று புரிகிறது..  
கண் விழித்து கந்தகக் காகிதத்தைத் தேடுகிறேன்
காணவில்லை.. யானை எப்படி அங்கே.. 
எதுவும் புரிவதாய்க் காணோம்.. 
அதனாலென்ன.. 
எழுதியே ஆக வேண்டுமிதை...
___________________________________________
(மீண்டும் ஒரு சொதப்பல்... ஆனா எனக்கு எழுதியே ஆக வேண்டி இருந்தது... மன்னிக்க..!)

Tuesday, August 10, 2010

இப்படியெல்லாம் எழுதக் கூடாதா என்ன....?

ஆசியாவிலிருந்து 
ஐரோப்பாவிற்கு 
என்னை நாடு கடத்தியபோது
ருவாண்டாவில் 
இனப்படுகொலை
மில்லியனுக்கு
சில ஆயிரங்கள் குறைவான
எண்ணிக்கையிலிருந்தது... 

எரிபொருள் நிமித்தம் 
அபுதாபியில் விமானம் 
தரை தொட்டபோது 
ருவாண்டாவின் கணக்கு
மில்லியன் தாண்டியிருந்தது.. 

நெதர்லாந்தின்
மின்சாரப் படிக்கட்டில் 
விழுந்த போது நீட்டப்பட்ட  
கொழுத்த கையின் மேல்
மும்பாய் மீது பறந்தபடி
முதல் முறையாக 
நான் குடித்த கறுப்புக் காப்பியை
எட்டாவது தடவையாக 
வாந்தி எடுத்துக் கொண்டிருந்தேன்... 

சென்ற வருடம் பேருந்தொன்றின் 
முன் சக்கரத்திற்கு நாலு அடி முன்னால்
நடுவீதியில் கால் நீட்டிப் படுத்திருந்தபோது 
என் தலைமாட்டில் கால் உதைத்து 
உலகமே கண்ணைத் திறந்து கொள்.. 
இலங்கையில் இனப்படுகொலை 
இலட்சத்தை எட்டிவிட்டதென்றார்கள்
எழுந்து உட்கார்ந்து உதைத்த கால் மேல் 
ஒன்பதாவது தடவையாக வாந்தியெடுத்தேன்.. 

பக்கத்து வீட்டில் எட்டு ஆமைகள் 
செல்லப்பிராணிகள்
டாண்டிலயன் பூ இல்லையென்றால் 
உணவு இறங்காதாம்.. 
காட்டுக்கு நடையா நடந்த வழியில்  
ருவாண்டாவில் இனத்தைத் தொலைத்த
கிளியொன்று மொழி பழகிக் கொண்டிருந்தது 
அது உரைத்தது புரிய ஆரம்பித்தபோது
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமான
என் பயண இடைவெளியில் தீர்ந்துபோன
ஆப்பிரிக்கக் கணக்குகளின் பெறுபேறு
கிட்டத்தட்டப் பூஜ்ய நிலையிலிருந்தது... 

ஆஸ்திரேலியா விடு அமெரிக்கா 
என்றதற்கு கிளி மூச்சு விடாது சிரித்தது..
சனியன் ஆமை கொஞ்ச வருஷம் முன்னால்
பக்கத்து வீட்டில் குடி வந்திருக்கலாம்
உலகமே கை கட்டி வேடிக்கை பார்த்தது தெரியாது
எட்டும் ஒன்பதுமாக மொத்தம் பதினேழு தடவை 
வாந்தி எடுத்துத் தொலைத்திருக்கிறேன்

_______________________________________________________

Tuesday, August 3, 2010

சிதறலுக்கு முன்...

வானவில் நிறத்தில் 
ஆங்காங்கு மிதக்கும் 
குமிழிகளின் கூட்டத்தினிடை.. 
கிருத திரேதா துவாபர - தீர்ந்து
கலியுகம் பெருமூச்செறிகிறது











அடர்சூழ் காற்றின் 
அழுத்தம் துளைத்து
ஈலியத்தின் ஒரு கூறாகி 
மிதத்தித் தள்ளுகிறேன்
குண்டுச் சட்டி போன்ற 
நுரைக் குமிழியொன்றை

மைக்ரோ வினாடியொன்று
யுகமாகியும்.. 
வளிமண்டலம் தாண்டிய 
வெற்றிடத்தில் இருப்பிருப்பதான
நம்பிக்கை நீங்குவதாயில்லை.. 
__________________________________________