கரும்பாறை சுற்றிச்
சலசலக்கும் ஆற்றுநீரோரம்
கந்தக நிறத்திலொரு காகிதம்
ஏந்தி நின்று கொண்டிருக்கிறேன்
அம்மாச்சி ஒருத்தி கைபிடித்திழுக்கிறாள்
குளிக்கலாம் வாவென..
ஓ.. இங்கேயே என்றியம்பியபடி
தண்ணீர்க் கரையில் குனிந்து கை நனைக்கிறேன்
எங்கிருந்தோ இன்னொரு அம்மாச்சி வருகிறாள்
அரை அடி ஆழம் கூட இல்லை
சேறுதான் வருமென நொடிக்கிறாள்
சற்றுத் தள்ளி ஒரு குன்றைக் காட்டி
அப்போ அங்கே என்கிறேன்.. என் பயம் எனக்கு..
அழுக்கெல்லாம் அடித்துக் கொண்டு
அங்குதான் வந்து சேரும்... நீ வா...
கை நீட்டி அழைத்துச் சென்றது
அருவி விழும் மலைச்சரிவு..
அருகருகில் இருக்கை போலிருந்த பாறைகள் மீது
அஃகேன நிலையிலமர்ந்து
ஆனந்த நீராடிக் கொண்டிருக்கிறோம்
கைக்கெட்டிய தூரத்தில் கந்தகக் காகிதம்
சற்றும் நனையாது சலனமற்றிருக்கிறது
மலைப் பாறையை வெறித்த அம்மாச்சி
என்னை நேரே பார்த்து வா போகலாம்
என்றபடி சட்டென எழுந்து நடக்கிறாள்..
கடைக்கண்ணில் மற்ற அம்மாச்சியின்
கடைக்கண் மலைப்பாறைகளை
நோக்குவது தெரிகிறது..
அங்கு பார்க்கும் துணிவற்று
தன்னிச்சையாய் காகிதம் பற்றி
முகத்திற்குக் கடிவாளமிட்டு முதலாமவள்
முதுகை வெறித்தபடி தொடர்கிறேன்..
மற்றவள் என்னைத் தொடர்ந்தபடி
முதலாமவளைக் கேட்கிறாள்
வெள்ளை வரிகளற்ற யானையா அது?
அவள் தலையை மட்டுமசைத்துவிட்டு
விடுவிடென்று நடக்கிறாள் பாறையிடுக்குவழி..
யானைக்கு வரிகளா என்ற எனது ஆறாவது அறிவின்
வினாவை வாய்க்குள் அடக்குகிறேன்
அவர்களின் குறியீடு குறிப்பது எதுவானாலும்
உவப்பானதொன்றல்ல என்று புரிகிறது..
கண் விழித்து கந்தகக் காகிதத்தைத் தேடுகிறேன்
காணவில்லை.. யானை எப்படி அங்கே..
எதுவும் புரிவதாய்க் காணோம்..
அதனாலென்ன..
எழுதியே ஆக வேண்டுமிதை...
___________________________________________
(மீண்டும் ஒரு சொதப்பல்... ஆனா எனக்கு எழுதியே ஆக வேண்டி இருந்தது... மன்னிக்க..!)