பூச்செடி ஒன்றின் தண்டின் வளர்ச்சியில் ஆங்காங்கே தோன்றும் முட்கள் போன்று.. எண்ண ஓட்டத்தில் முட்டி மோதும் சொற்களை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை... தண்டின் முள்ளைத் தோன்றத் தோன்றச் சிராய்த்துக் கொண்டிருந்தால்... அந்தச் செடியின் சுயம் என்னவாகும்..?!... பூவின் ஆதாரம் என்னவாகும்..?!
தளுக்கும்.. பாசாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை... அவசியப்படவுமில்லை...
என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்....
___________________________
நான் இங்கு பேசிக் கொண்டிருப்பது குறிப்பிட்ட ஒரு விடயம் மட்டுமல்ல... பொதுவான மனித உணர்வுகள் சம்மந்தப் பட்டது.... சுற்றிச் சுற்றி வரும் விடயங்களைப் பார்த்துத் துணுக்குறாது... கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்க முடிந்தால்... அதுதான் மனித இனத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம்..
பேச ஆரம்பித்த பின்... இதைப் பேசலாமா... இதை விடலாமா என்று யோசிக்க முடியாது... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு....
சில விஷயங்கள் பேசினால்... திருமணம்... சேர்ந்து வாழ்தல் எல்லாம் மிக மிக அற்பமாக... மிக மிகச் சாதாராணமான விடயமாகத் தோன்றலாம்...
இல்லை... இல்லை... இது தப்பு... இது தப்பு... இது தப்பு... நாங்கள் யோசிக்கவே மாட்டோம்.. கண்ணைத் திறக்க மாட்டோம்... காதைத் திறக்க மாட்டோம்... இப்படி ஒரு சொல்லை உச்சரிப்பதே பாவம்... வைகுண்டம் தூரம்.. கைலாசம் நாசம்.. என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள்... தயவு செய்து போய்... உங்கள் வலைமனையிலோ... அல்லது சுற்றாடலிலோ... உங்கள் சேவையைத் தொடரவும்...
ஆமாம்... இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்னு தோன்றினா... ஆரோக்கியமா பேச முடியும்னா... அவங்க இங்க பேசுங்க...
_____________________
சிலபல மனிதர்களின் மனப்போக்கை நினைத்தால்... கஞ்சி தண்ணியை வாயில் வைக்க முடியவில்லை... நம் கலாச்சாரம்.. நம் பண்பாடு... நல்ல குடும்பத்தில பிறந்தேன்... நல்ல அம்மா அப்பாவிடம் வளர்ந்தேன் என்றெல்லாம் ஏன் பீற்றிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை... அப்படிச் சொல்லிக் கொண்டே... அவர்களின் மனம் வெளிப்படுத்தும் வக்கிரம்... வார்த்தைகளில் வடிக்கத் தகுந்ததன்று... இதொன்றும் யாருக்கும் பெருமையான விடயமென்று எனக்குத் தோன்றவில்லை...
தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.. என்ற ஒரு விடயத்தைக் கூறிச் சவர்க்காரம் விற்பதற்கு.. சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... தேகம் பளபளப்படையும்... ஆயுள் நீடிக்கும்... ஐஸ்வர்யம் கூடுமென்றெல்லாம் போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?!
விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... அல்லது அவளிடம் படுத்து எழும்புபவன்... ஆண் ஆணுடனும்.. பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழ்வதை ஆதரித்தால்... அந்தந்தப் பாலுக்கு ஏற்றவாறு நீயும் அவ்வாறே... திருநங்கைகளுக்கு ஆதரவெனில் நீயும் திருநங்கை... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)
பதின்ம வயதில் நான் படித்த சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி (கற்பனைக் கதையொன்றுமல்ல..) ஏற்படுத்திய வெட்டுக்காயம்... மிக ஆழமாக.. இன்னும் ரணமாக அப்படியே இருக்கிறது... சுயம்புவின் சுயம் வெளிப்பட முடியாது... சுற்றிச் சுற்றியிறுக்கும் சமூகம்... கட்டுப்பாடு.. சுயம்புவை உணர்ந்தும்.. ஊர் உலகத்திற்கு மறைத்து... விழுங்கி விழுங்கி... சுயம்புவான "அவளை"... சுயம்புவிலுள்ள கொஞ்சமே கொஞ்சமான "அவனுக்குள்" உயிருடன் சமாதி கட்டிப் புதைக்கும் பெற்றவள்... பொறுத்துப் பொறுத்து... முடியாது... முடியாதென்று அலறியபடி சுயத்தைத் தேடி... ஓடி... திருநங்கைகளின் கூட்டத்தில் சேர்ந்து... தானாகி... மேகலாவாகிப் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் வரை... அதன் பின்னர் கூட எத்தனை எத்தனையோ சித்திரவதைகள் காத்திருப்பினும்... அதற்கு முன்னர் அவள்... அந்தத் திருநங்கை அனுபவிக்கும் வேதனையை... கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் புண்ணியவான்கள் ஒரு பாதி நாள் அனுபவிக்க முடியுமா... உமக்கு மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அருகதை இருக்கிறதா..?!
காதல் என்றால்... கண்ணே மணியே... கண்ணாளனே... என்னை விட்டுப் போய் விட்டாய்... இருக்க முடியவில்லை... படுக்க முடியவில்லையென்று அலறுவதல்ல... அந்த அலறலில் எங்கோ ஒரு இடுக்கில் சிறு துளி காதல் இருக்கலாம்...
அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி... மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்..
தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து...
Annie Proulx இன் Brokeback Mountain.. (இதுவும் கற்பனையல்ல..) படித்தால்.. இரு ஆண்களுக்கிடையில் தோன்றும் காதலும்... சமூகத்தில் அதை வெளிப்படுத்த முடியாத அவலமும்... அவர்களின் முடிவும்... அய்யோ என்று அலறச் செய்யும்... அவர்களின் இயலாமை எம்மையும் தொற்றிக் கொண்டு... உருகி உருகி அழ வைக்கும்...
நல்ல புள்ளைகளுக்கு அது மிக மிக அருவெறுப்பாகத் தோன்றலாம்... அதே நல்ல புள்ளைகள்... ஏதோ ஒரு படத்தில்.. யாராவது முன்னணித் தமிழ்க் கதாநாயகன்.. நாயகியிடம் உன்னிலுள்ள ஆணைக் கொஞ்சம்... என்னிலுள்ள பெண்ணைக் கொஞ்சம்.. என்று பாடினால்... அதைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாது... விசில் அடித்தபடி... கலாச்சாரக் காவலர்களுக்குப் பயந்து தலையைக் கழுத்தில் புதைத்தபடி செல்லும் பெண்ணைச் சுற்றி வரலாம்...
அசோகர் மரம் நட்டார் அறிந்தோம்... கண்ணப்பநாயனார் மாமிசம் படைத்தார் அறிகிறோம்... புத்தர் ஞானம் பெற்றார் அறிவோம்.. X குரோமோசோம்... Y குரோமோசோம்... ஹரி ஓம்.. என்று எல்லாவற்றையும் கலந்து மனப்பாடம் செய்வார்கள்... ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது... அவர்கள் மனங்களின் கஷ்டம் தெரியாது... அதற்கு அவர்கள் அந்த நிலையில் இருந்தால்த்தான் புரிந்து கொள்வார்களாம்...
(இதற்கும் யாராவது விழுந்தடிச்சு ஓடி வரலாம்... அப்போ இது சரிங்கிறியா... அப்போ இது தப்புங்கிறியா... ஒரு ஹோமோ... இன்னொரு பையனை ரேப் செய்தான்... அவன் தூக்கு மாட்டிச் செத்தான்... தெரியுமா உனக்கு... அப்டிம்பாங்க...)
அய்யா... அம்மா.. நீங்க புத்திசாலிதான்... நீங்க சொல்றது சரிதான்.. ஒரு அல்சேஷன் அல்சேஷனைக் கடித்தாலும்... அல்சேஷன்... பொமரேனியனைக் கடித்தாலும்... பொமரேனியன் பூனையைக் கடித்தாலும்... அது வன்முறைதான்... நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்...
ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை...
ஆனால்.. அவங்களுக்கு அப்படி வாழத்தான் விருப்பம்... மேற் கூறிய ஏதோ ஒரு முறையில்.. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழப் பிடித்திருக்கிறதென்று.. பரஸ்பரம் யாரோ ஒரு துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்... அல்லது தனியே இருக்கிறார்கள்...
அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ...
தெரியவில்லையென்றால்.. நானே சொல்கிறேனே... அதுவும்... வன்முறைதான்... வன்புணர்வுக்காகக் கையையும் காலையும் கட்டிப் போடும் மூர்க்கத்தனம்தான்.... உயிருடன் தொங்க விட்டு... சுற்றவரத் தீயிட்டுக் கூடிக் கும்மாளமிட்டுப்.. பறை முழங்கி... மனித மாமிசம் உண்ணும்... காட்டு மிறாண்டித்தனம்தான்.....
இதை உண்மையில்லையென்று சொல்பவன்... அதே மனித மாமிசத் தசையை ஏதோ ஒரு விதத்தில் பதப்படுத்தி உண்ணும்.. மிக மிக நாகரீகமானவன்தான்..
வளர்ப்பு முறை சரியில்லையென்று அலறும் புண்ணியாத்மாக்களுக்கு... வளர்ப்பு என்பது... முடிகிறதோ இல்லையோ... இவளைப் புணர்... இவனைச் சேர்... அழுகிச் சோர்.. செத்துப் போ... என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல...
(இதைச் சொல்லும்போது... நான் இங்கு பாடம் நடத்துவதாகச் சில அறிவுஜீவிகள் கெக்கலித்தது கவனம் வருகிறது... எனக்குத் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... அதே எண்ண ஓட்டத்தில் சிந்திக்க முடிபவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்... மற்றவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலையல்ல..)
அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)
அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்...
அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்களெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது..
தான் திருடி பிறரை நம்பாள்... என்பது போல்... எதைப் பார்த்தாலும் பயம்.. யாரைப் பார்த்தாலும் பயம்... (அட நான் பாம்பு... பல்லி பத்திச் சொல்லலைங்க...).. நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்... பக்கத்து வீட்டில் சமைத்து வந்தால் அதில் செய்வினை இருக்கும் என்பது போன்ற பயம்... நான் இதை ஆதரித்தால்.. என்னுடைய மகனும்... அதயே செய்வான்... என்னுடைய மகளும் அதயே செய்வாள்... என்பது போன்ற... தேவையே இல்லாத பயம்...
ஏன் என்றால்... மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான்.. எம்முடைய தேவையை நாம் முடிவு செய்கிறோம்.. அப்படிப் பழகி வைத்திருக்கிறோம்... பழக்கி வைத்திருக்கிறோம்... தன்னைத் தானே பார்த்து... எனக்கு இது தேவையா... ஏற்புடையதா... இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்..
மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்... அந்த சமூகம் என்ன சாதித்து விட முடியும்... உனக்கு என்ன முடிகிறது என்று பார்... நீ எதைச் செய்தால் அது பூரணமாக மிளிரும் என்று பார் என்று யாரும் கற்றுக் கொடுப்பதாகக் காணோம்...
எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறோம்... அவரவர் வாழ்க்கை உட்பட... வாழ்க்கை என்பது வாழப்படாமலே புதைக்கப்படுகிறது... அப்படி என்கிற உண்மையையும் புதைத்துக்கொண்டு... போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வதில்த்தான் எத்தனை எத்தனை (தற்)பெருமைகள்....
(இதுக்கு மேலயும் சொல்லுவேன்...)