header photo
Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Sunday, September 20, 2009

ஞானும் பேனாவும்.. பின்னே நீவிரும்..

எழுத வந்த வரலாற்றுத் தொடருக்கு என்னை அழைத்த முரளிகுமாருக்கு நன்றி. இதில ரெண்டு விஷயம் இருக்குங்க. ஒண்ணு இன்னைக்கு என்ன எழுதுறதுன்னு மண்டையைப் பிச்சுக்க வேண்டாம். மத்தது.. என்னைப் பற்றி நானே சொல்லலை, கேட்டாங்க சொல்றேன்னு அலட்டிக்கலாம்.. ஹிஹி.


வாய்த்துடுக்கும்.. வாசிப்பும்.. அதே போல் வார்த்தைகளை வரிகளில் வடிப்பதும்.. மிகவும் சின்னஞ் சிறு வயதிலிருந்தே கை வந்த கலை எனக்கு. இது யாருக்காவது பிடிக்காதிருந்திருக்கலாம்.. ஆனால் பல பேருக்கு பிடித்திருந்தது.

ஒரு பிசாசை ஊக்குவிக்கிறோம் என்று தெரியாமலே இழுத்து வைத்து பேச்சுக் கொடுப்பார்கள். வீட்டில் மட்டும் "கொஞ்ச நேரம் பேசாமல் இருக்கியாடி" என்று கெஞ்சுவார்கள்..! நான் இரக்கப்பட்டு இரண்டு வீடு தள்ளிப் போய் கும்மி அடித்து விட்டு வந்தால், எங்க தொலைஞ்சா? 'சனியன் இருந்தாலும் தொல்லை.. இல்லைன்னாலும் வீடு வெறிச்சோன்னு இருக்கு' என்று அலுத்துக் கொள்வார்கள். பெருசுகள் சூழ்ந்த வீட்டில்.. ஒரேயொரு குட்டிப் பிசாசாக இருந்ததன் விளைவு இது.

கல்கியையும், சுஜாதாவையும் அப்பவே படித்து விட்டு, மணிமேகலையின் அட்சய பாத்திரம் பற்றி சுஜாதா பாணியில் எழுதியது எனக்கே அதிகப் பிரசங்கித் தனமாகத் தோன்றிய போது, "மிகவும் நன்று" என்ற தமிழாசிரியையின் பின்னூட்டம் கண்டு மிதக்க ஆரம்பித்து விட்டேன்.

"என்னய்யா பொன்னையாவின் மகன் சின்னையாவிற்கு.. உன்னையா சின்னையாவின் மகன் பொன்னையா எழுதிக் கொள்வது யாதெனில்" போன்ற கடித ஆரம்பங்கள் எல்லாம் குப்பையாகி பல காலங்கள் ஆகி விட்டன.. புதிதாகச் சிந்தியுங்கள்.. தினமும் எதையாவது எழுதுங்கள்.. சில மாதங்கள் கழித்து எடுத்துப் படித்துப் பாருங்கள்.. மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று சொல்லிக் கொடுத்த ஆங்கில ஆசிரியர் "ஐயா கந்தையா" அவர்கள் எனது இன்னொரு வழி காட்டி.

பள்ளியில்.. சிறுகதைப் போட்டி வந்த போது.. "நீ எழுதுடி".. "yes you can" என்று ஊக்குவித்து.. எழுத வைத்த என்னுடைய பள்ளித் தோழிகளும்.. அந்தக் கதை, போட்டியில் இரண்டாம் இடம் என்று தெரிய வந்த போது ஏற்பட்ட சின்னச் சந்தோஷமும் நினைவுப் பெட்டகத்தின் நிரந்தர சொத்துக்கள்.

அந்த அந்தக் கால கட்டத்தில்.. என்னுடைய 'சின்னச்சின்ன சிந்தனைத் துளிகளில்' சொன்னது போன்று.. கவிதையாகக் கிறுக்கி வைத்தது.. என்னுடைய பரிணாம வளர்ச்சியை நானே பார்க்க உதவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு. இப்படி எல்லாம் இருந்திருக்கிறேன், சிந்தித்திருக்கிறேன்.. என்று அந்தப் படைப்புகள் என்னைப் பார்த்து சிறிதாகச் சிரிப்பதும், இப்பொழுதெல்லாம் எனக்கு நானே நிறைய முரண்படுகிறேன் என்று நான் அவற்றைப் பார்த்துப் புன்னகைப்பதும் தொடர் கதை.

எழுத்து பெரும்பாலானவர்களைப் போல் எனக்கும் உணர்ச்சிகளின் ஒரு வடிகால். தலை எழுத்தே என்று அதைப் படித்து, பாராட்டி (வேற வழி) ஊக்குவிக்கும் நண்பர்கள் எனது வீட்டில் பெரியவர்கள் செய்த அதே தப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் பொழுது போக்காக ஒன்றிரண்டு இடுகைகள் தெளித்த காலம் ஒன்றுண்டு. இங்கே இடுகை எழுத ஆரம்பித்த வரலாறு வேறு. மற்றவர்களின் அங்கீகாரம் கிடைக்காது.. ஆனால் 'ஈழவர்களின்' (தமிழரின்) அங்கீகாரம் பெற்றிருந்த/பெற்ற 'ஈழம்', அல்லது ஈழவர் தவிர்ந்த மற்றவர்களின் அங்கீகாரம் பெற்ற இன்றைய 'ஐக்கிய இலங்கையில்' நடந்த, நடந்து கொண்டிருக்கும் கொடுமையை சகிக்காது, பிரம்மை பிடித்திருந்த நாட்களில், சகஜ நிலையைப் பிடிவாதமாக்கி, ஆரம்பித்த "ஈழப்ரியா", ஒப்பாரி வைத்தே நாட்கள் ஓடி விடுமோ எனப் பயந்து, "கலகலப்ரியாவாக" மாற எடுத்த முயற்சியே இது.

வரலாறு தொடரும்.. (ச்சோ.. நில்லுங்க.. ஏன் ஓடுறீங்க..இப்போ..?)

வானம்பாடி, கதிர், ராகவாச்சார்யா, ஜோதி , வசந்து , துபாய் ராஜா , கோபி மற்றும் அனைத்து உள்ளங்களின் கதைகளும் வரலாறாக என்னுடைய ஆசீர்வாதங்கள்.. தொடரட்டும் உங்கள் பணி..

___/\___