header photo

Sunday, October 4, 2009

பன்மையில் ஒருமை காண்பதென்பது..?

ஒருமைப்பாடு, நல்லிணக்கம், ஒன்றிணைதல், Integration, Assimilation போன்ற சொற்கள் யுத்த பூமிகளிலும், அமைதிப் பூங்காவிலும், அங்கெங்கினாதபடி எங்கும் அடிக்கடி கையாளப் படுகின்றன. இதில் மத நல்லிணக்கம், இன நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாந்திர ஒருமைப்பாடு (horizontal), பக்கவாட்டு ஒருமைப்பாடு (lateral), செங்குத்து ஒருமைப்பாடு (vertical), உள்குத்து, வெளிக்குத்து போன்ற வார்த்தைகள் மக்களின் வாய்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக மற்றும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் சொந்த நாட்டிலோ.. வெளிநாட்டிலோ.. வாழ்ந்து வரும் வெவ்வேறு இனத்தவரிடையே அவர்களது கலாச்சாரம், பண்பாடு, மதம், இத்யா(ஜா)தி, இத்யாதி பற்றிய பரஸ்பர புரிதலுக்கு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் இணைந்து வாழ்தல் அவசியம் என்று கழுதைகளாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, நாளையோ கருத்து பேதம் மற்றும் தவறான புரிதலினால் இன்னொரு இனமோ, மொழியோ அழிந்து போகலாம் என்ற தீர்க்க தரிசனத்தால் விளைந்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் கூடிய பய உணர்வே இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில், அந்த நாட்டு மொழியை ஒழுங்காகக் கற்காதிருப்பதே முதற் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் (!). ஒரே மொழியைப் பேசுபவர்கள் இணைந்து வாழ்கிறார்களா என்றால் யாரிடமும் பதில் இல்லை. மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகமேயன்றி, முழுமையான கருத்துப் பரிமாற்றமாகாது. மொழி மட்டுமே காரணம் என்று கொண்டால் ஆகக் குறைந்தது தமிழ்ப் பதிவுலகம் சொர்க்கமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்.

இது சம்மந்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் ஒரு அம்மையார் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறுகுறிப்பை மின்திரையில் காண்பித்து, தயவுசெய்து இதைப் படியுங்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த மொழி தெரிந்த ஒருவர் கூட அங்கிருக்காததால் சட்டென்று எல்லாரும் உரத்துச் சிரித்து, அந்த அம்மையார் சிரிக்காதிருப்பதைப் பார்த்து, மௌனித்து அதையே பதிலாக்கினார்கள். மொழி தெரியாத நாட்டில் குப்பை கொட்டுவது என்பது இப்படித்தான் இருக்கும்.

ஒரே மொழியைப் பேசுபவர்களிடத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு வேறு வகை. கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, அடுத்த நாள் தங்களுக்குத் தாங்களே சமாதி கட்டிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடலாம். ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.

இரண்டு வார்த்தையில் மொத்தமும் முடிந்து தனித் தனியே, போட்டி போட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றிச் சுவர் (maze) எழுப்பிக் கொள்வார்கள். இறுதியில் தனியே நாலு சுவருக்குள் அடைபட்டு, வெளியேறும் வழி தெரியாது விழித்து உள்ளேயே சமாதி ஆவார்கள்.

சுவர் எழுப்ப முன்னர் சற்று நிதானிப்பது என்பதும், எழுப்பிய சுவற்றைச் சுரண்டி உதிர்ப்பது என்பதும், "நான்" என்னும் இரண்டெழுத்து ஆணவத்தில் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

மற்றவை உங்கள் விவாதத்திற்கு விட்டு விடுகிறேன்..

“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” -
Friedrich Nietzsche

___

Saturday, October 3, 2009

பூச்சியும்.. கண்ணாமூச்சியும்..

குகையின்..
கும்மிருட்டில்..
குத்துவிளக்கொன்று..
ஒளிர்ந்து கொண்டிருந்தது..
ஆந்தை ஒன்று..
இரவு பகல் அறியாது..
எந்நேரமும்..
விழித்திருந்தது..
சீரற்று அவ்வப்போ அலறியது..
குகைப்பாறை அதிர்ந்தது..
விளக்குச் சுவாலை அசைந்தது..
ஒரு மின்மினிப் பூச்சியும்..
நெய் விளக்கொன்றும்..
அதனுடன் சேர்ந்து..
சில விட்டில் பூச்சிகளும்..
சற்று எட்டிப் பார்த்தன..
விட்டில் பூச்சிகள்..
விளக்குகளில் விழாது தப்பி..
ஆந்தைக்கிரையாயின..
நெய்யும் விளக்கும்..
நிமிடங்களில் கரைந்தன..
குத்து விளக்கு..
அசையாதிருந்தது..
ஆந்தையின் கண்..
மின்மினியை சுற்றியது..
சுவர்களில் முட்டி மோதி..
குகையை வட்டமிட்ட மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!


......