header photo

Thursday, July 30, 2009

ஆடி அடங்கும் போதினிலே..

அட ஒண்ணுமில்ல.. ஆடி மாசம் பத்தித்தான்.. நீங்க வேற!

ஆடித் தள்ளுபடி அப்படிங்கிற ஒரு விடயம் இருக்கிறது தெரியும், அது என்னவென்று எனக்குத் தெரிய வாய்ப்புக் கிடைத்தது இந்த வருடம்தான்.

ஒன்றரை வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு சென்ற பொழுது ஐந்து வாரங்கள் வைத்தியசாலை வளாகத்திலேயே கரைந்து போனது. மீதி இரண்டு வாரங்கள், தினமும் இரு தடவை ஓடி ஓடித் தியானம் கற்றுக் கொடுத்தார்கள். இதனால் கல்கி ஐயா போன்றவர்கள் எழுத்திலும், என் எண்ண ஓட்டத்திலும் பார்த்த பல இடங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தும் சென்று பார்க்கத் தவறி விட்டேனே என்ற ஆதங்கம் அரித்துக் கொண்டே இருந்தது.

அதனால் இம்முறை விடுமுறையை முறையாகச் செலவிடுதல் வேண்டும் என்று நினைத்தாலும் எதையும் திட்டமிட முடியவில்லை. கோலம் போட்டாலும் கோல மாவுடன் கோலமிடும் இடத்தில் உட்கார்ந்ததன் பிற்பாடு சிந்திக்காமலேயே கோலமிடுவதுதான் என்னுடைய வழக்கம். திட்டமிட்டுச் செயற்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாலோ, அல்லது திட்டமிடாது செயல்படுவதில் பல சுவாரஸ்யங்கள் இருப்பதாலோ தெரியவில்லை, இரண்டாவது வழியே வசதியாக இருக்கிறது.

இவ்வாறு திட்டமிடாது சென்று பார்த்து, பிரமித்து, வியந்து, ரசித்த இடங்கள் தவிர, ஒழுங்காகத் திட்டமிடாததால் பாதி நாள் புகையிரதத்திலேயே கழிந்து விட்டது. சென்னையில் செலவிடக் கிடைத்தது ஓரிரு நாட்களே.

இவ்வாறு இரு தடவை நெடிய விடுமுறையில் வந்து ரங்கநாதன் தெரு பார்க்கவில்லை என்று சொன்னால், சின்னக் குழந்தை கூடக் கையும் காலும் அடித்துக் கொண்டு சிரிக்கும் என்று நக்கலடித்த நண்பரின் வார்த்தையில் சுரணை வந்து, அதையும் பார்க்கலாம் என்று அவரின் மனைவி, மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினோம்.

எந்தக் கடை என ஒருத்தரை ஒருத்தர் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டு, அதையும் திட்டமிடாமலே இங்கே, இங்கே என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொரு கடையாக சன அலைகளின் உதவியுடன் மிகவும் நிதானமாக நீந்த ஆரம்பித்தோம். நண்பரின் மகள் நான் அச் சமுத்திரத்தில் தொலைந்து போய் விடக் கூடாது என என் கையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டிருந்தாள். அத்திரளில் மிகவும், இயல்பாகவும், லாவகமாகவும் உரசக் கற்றுக் கொண்டவர்களின் முயற்சியைக் கண்ணாலேயே துப்பி முறியடித்து, அன்னை போன்று இந்தப்பக்கம் வந்துடு, அந்தப் பக்கம் வந்துடு என்று என்னை அழைத்துச் சென்றதை அவளறியாமலேயே ரசித்துச் சிரித்தேன்.

நாம் எந்தத் தளத்திற்குப் போவது என்பதையும் கூட்டமே முடிவு செய்தது. வேண்டாம் வீட்டுக்குப் போய் விடலாம் என்பதையும் அதுவே முடிவு செய்தது. மிகவும் மும்முரமாக அக்கூட்டத்தைத் தள்ளிக் கொண்டு நீச்சலடித்துச் சென்று கொண்டிருந்த நண்பரும், அவரின் அடிச்சுவட்டை அச்சுப் பிசகாது பிடித்து நீந்திச் சென்ற அவர் மனைவியும் எங்களை விடப் பத்து அடிகள் முன்னாலிருந்தார்கள். நாம் பல அடிகள் பின் தங்கி விட்டோம் என்பதைத் திடீரென்று உணர்ந்தவர்களாக, பக்கத்திலிருந்த கண்ணாடி மேசையை ஆதாரமாகப் பற்றிக் கொண்டு எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பத்து அடியை நாம் அடைவதற்குப் பத்து நிமிடங்கள் பிடித்தன. அவர்களை அடைந்து, அப்பாடா என்று மூச்சு வாங்கி, நண்பரின் மகள் காதருகில் குனிந்து, இதைத்தான் "ஆடித்தள்ளுபடி" என்று சொல்லுறாங்களா? என்று கேட்டேன்.
____________________________________________________________________

Wednesday, July 29, 2009

இது ஜோதிக்கு..

ஏவ்வ்வ்வ்வ்வ்.. ஒண்ணுமில்ல விருந்து முடிஞ்சுது.. ஏப்பம் விட்டேன்.. அம்புட்டுதேன்..! விடிய காலைல எங்கூட்டை நோக்கி பறக்கோணும்.. எஞ்சோலிய பார்க்க முன்ன இந்த சோதிக்கு ஒரு பெரிய நன்றிக் கடன் பட்டிருக்கிறனுங்க. அந்தக் கடன் சன்மத்துக்கு தீர்க்க முடியாதுன்னு தெரியுமுங்க. ஆனாலும் நன்றியாவது சொல்லணுமா இல்லீங்களா.  

அதாவது வந்துங்க.. இந்த சுத்துப் பட்டிக் கிராமத்தில இருக்கிற.. சமீந்தாருங்க, பண்ணையாருங்க, நாட்டாமைங்க மத்த பெரிய பெரிய ஆளுங்க மத்தில நம்மள ஒரு மனுசியா நினைச்சு வந்து.. நாம வெத்தில மென்னு துப்பினாப்போல எதையோ.. மனசில தோணுறத.. குல தெய்வம் கிட்ட சொல்லுற மாதிரி இங்கன போட்டு வச்சாக்க.. அத படிச்சு.. அதுக்கு பின்னூட்டம் போடுறதே பெரிய விஷயம்.. அதில ஓட்டு எல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.. இதில விருது வேற கொடுக்கிறதுன்னா.. சத்யமா ரொம்ப ரொம்ப ரொம்பப் பெரிய மனசு வேணுமுங்க..  

இந்தச் சோதிய விட்டாக்க இந்த விருத வேற யாராவது எனக்குக் கொடுத்திருப்பாங்களான்னு தோணலீங்க.. நம்மள அப்ப அப்ப இப்டி கை தூக்கி விடுறதுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியலீங்க.. வேற வழி இல்ல.. எல்லாரும் சொல்றாப்போலதான் சொல்லி ஆவோணும்.. .. நன்றி.. நன்றி.. நன்றி...! 

:-( <-- span="">
_________________________________________________________________________

Wednesday, July 22, 2009

தண்டோரா..

சரி.. பக்கத்துக்கு ஊர் ராணியம்மா கூப்ட்டிருக்காக.. ஒரு நடை போயீ என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு வந்துடுதேன்..! முடிஞ்சா அங்க இருந்து கடுதாசி போடுதேன்..! முடியலீன்னாக்க மாசக் கடைசில வந்து பார்த்துக்கிடுதேன்... அட கடன் கிடன் வாங்க இல்ல.. சொக நலம் விசாரிக்கதேன்.. அம்புட்டுதேன்.. அப்ப வாறன்..!!!

__________________________/\_________________________________

Monday, July 20, 2009

உயிரில் இட்ட தீ.. !!!

சுமார் ஒரு இலட்சம் புத்தகக் குழந்தைகளை சாம்பலாக்கி பாரிய அளவிலான படுகொலையை (massacre) அப்பவே ஒரு தடவை அரங்கேற்றி முடித்து விட்டார்கள். யாருக்கும் கண் திறப்பதாக இல்லை!

அடி வயிற்றிலிருந்து கிளம்பும் நெருப்புக் கோளங்கள், உருண்டு மேலெழுந்து நெஞ்சைப் பிசைந்துருக்கி, தொண்டை வழியாகக் கேவலாகவும், கண் வழியாக இரத்தக் கண்ணீராகவும்...!!! இந்த நெருப்புக்கு பதில் கிடைக்காமலா போய்விடும்?





இப் பதிவைப் பார்த்த நம்மவரின் அடி வயிற்றிலிருந்து ஐயோஓ என்று அடக்க முடியாது கிளம்பும் ஓலம், வடிகாலின்றி சுருண்டு விழுந்து அடி வயிற்றிலேயே திரும்ப அடங்கும் அனுபவம் உணர்ந்தவர்களுக்கு தெரியும் அதன் உக்கிரம்!
):___________________________/\___________________________:(

Saturday, July 18, 2009

தேவகானம்..



என்னத்த சொல்றது.. வயதுக்கு மீறிய பக்குவம்! அருமையான குரல் அதுக்கும் மேல அந்தப் பாவம்.. ரொம்பவும் தேர்ந்தெடுத்து ஒரு சில சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த என்னை "சிங்காரி சரக்கு நல்ல சரக்கு" என்ற பாடலை திரும்பத் திரும்பக் கேட்க வைத்த பெருமை இவனுக்குண்டு.

நீங்களும் கேட்டு ரசித்திருப்பீங்க. இன்னொரு தடவை கேட்க கசக்குமா என்ன.. :D

Wednesday, July 1, 2009

அகம் பிரம்மாஸ்மி

இப்போல்லாம் மனிதர்களுக்கு என்ன வியாதி எப்போ வருமென்று சொல்ல முடியவில்லை. என்னுடைய வழிகாட்டியாகவும், நண்பியாகவும் இருந்த அலுவலகத் தோழி சரியாக ஒரு வருடத்திற்கு முன் திடீரென்று தொலைந்து போனாள். எப்பொழுதும் அவள் உதட்டில் உறைந்திருக்கும் மாறாப் புன்னகை அவள்பால் அனைவரையும் ஈர்த்திருந்தது. தடுப்பூசி போடப் போன இடத்தில், இதயம் கிழிந்திருந்ததைக் கண்டு பிடித்தார்கள், அந்தக் கண்டுபிடிப்பின் சில மணித் துளிகளிலேயே கத்தியின்றி, இரத்தமின்றி அவள் உயிர் கரைந்து விட்டது.


இப்போ பன்னிக் காய்ச்சல் என்று ஒன்று மனிதனைப் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. எல்லா வியாதியை விடவும் பயம் என்ற வியாதி ரொம்பக் கொடுமையானது. தெனாலி என்ற ஒரு திரைப்படத்தில் கமல் சொன்ன பயங்கள் தவிர்ந்த சொல்லாத நிறையப் பயங்களுக்கும் சொந்தக்காரி நான். ஆனால் மரணபயம் என்பது ஏனோ என்னிடத்தில் இல்லை. மரணம் வரும் வழி பற்றிய அந்தச் சில வினாடிகளோ, சில வருடங்களோ அதற்குத் தயாராகும் காலகட்டம்தான் பயமளிக்கும் விடயம். இந்த விடயத்தில் எனது நண்பி புண்ணியாத்மா. என்னுடைய தாத்தாவின் மரணமும் இவ்வாறு ஒரு சில வினாடிகளில் சம்பவித்த ஒன்றே!


இதை எழுத ஆரம்பித்து இரு பத்திகள் முடிக்கு முன்பாகவே நான் , எனது என்று பத்துத் தடவைக்கு மேல் சொல்லி விட்டேன். இந்த நான் என்பது என்ன? எனது உடலா? மனதா? இரண்டும் இல்லை என்று வேத, உபநிடதங்கள் சொல்கின்றன. இதில் யாருக்கு என்ன மாற்றுக் கருத்து இருப்பினும், எனக்கு எந்த வித மாற்று எண்ணமும் இல்லை. இதை ஏன் சொல்றேன்னா நான் என்ற அது அப்படியேதான் இருக்கிறது. பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆட்படும் மனதும், அதன் மூலம் உடலும் , உடலின் உபாதைகள் மூலம் மனதும் மாறி மாறி வியாதியின் பிடியில் அல்லாடிக் கொண்டிருக்கிறது.


இன்றைய உலகில் வியாதியே இல்லாத மனிதர்கள் எங்கயாவது இருப்பார்களா தெரியவில்லை. சுத்தமான காற்றைச் சுவாசித்துக் கொண்டு, அமைதியாகத் தூங்கி, அதிகாலையில் எழுந்து, அளவாக உண்டு, அவன் கடன் செய்து கொண்டிருக்கும் கிராமத்து மனிதர் யாராவது அவ்வாறிருக்க வாய்ப்புண்டு.


இந்த வியாதி என்னையும் விட்டு வைக்கல. வியாதிகளுக்கு பெயர் வைக்கிற அழகே தனி. இதனாலேயே சினிமாவில் நகைச்சுவை என்ற பேரில் எடுத்து விடப்படும் "ஜிங்காலகடிஜிரிகிடிபோபியா" என்று சொன்னால், இது உண்மையாகவே இருக்கும் வியாதியா என்று ஒரு நொடி தோன்றும். அப்படி ஒரு பெயர் சொல்லி, மண்டை ஓட்டைத் திறந்து மூளை இருக்கா என்று பார்க்க ஆசைப் பட்டாங்க. எங்க நம்ம குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று நான் மறுத்து விட்டேன்.


அவ்வப்போது வந்த வியாதி விஸ்வரூபம் எடுக்காதிருக்கவும், வேறு வியாதி வராதிருக்கப் பாடுபடும் முயற்சியிலும் வைத்திய ஆலோசனை பெறுவதுண்டு. நேற்று தலைமை வைத்தியர் என்னிடம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். உடல், மனம், நரம்பு மண்டலம், மூளை என்று பேசிக் கொண்டிருந்த அவர் நான் என்ற அகம் பற்றிச் சிறிய விளக்கம் கொடுத்தார். "அகம் பிரம்மாஸ்மி", நான் கடவுள் என்பதே அதன் சாராம்சம். நாம் தொடர்ச்சியாக எதைப் பற்றியோ எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஒரு எண்ணத் தொடர்பு அறுந்து, இன்னொன்றாக இந்தச் செயல்த் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. இப்போ, இங்கே என்கிற நிகழ்காலத்தை மறந்து விட்டு, கடந்த காலம், எதிர் காலம் என்று நம் எண்ண அலைகள் தாவித் தாவிக் குதித்துக் கொண்டிருக்கின்றன. எண்ணத்தை முழுதாகக் கடிவாளமிட்டு, அகத்தை நாம் வெளியிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் சூனிய நிலை சற்றுக் கடினமானது. ஆனால் நம் எண்ண அலைகளைக் கட்டுப் படுத்தும் ஆற்றல் நமக்கு இருக்கிறது. அது ஒரு எல்லைக்குள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், நான் எனப்படும் அகத்தைச் சற்றுக் கவனித்தால் பல தொல்லைகள் அற்றுப் போகும்.


ஜக்கி வாசுதேவ் என்ற மாமேதை நான் நேசிக்கும் ஒரு மனிதம். அதே போன்று வேறு சில எழுத்தாளர்களும் இவரைப் போன்று மனதில் சில பாதச் சுவடுகளை உண்டாக்கியிருக்கிறார்கள். என்னுடைய தலைமை வைத்தியரை இந்த வரிசையில் நேரிலிருந்து போதிக்கும் குருவாகக் கண்டேன்.


ரொம்ப நாளைக்கப்புறம் மனது இலகுவாகி, மனதில் தங்கிவிட்ட சில, பல குப்பைகளில் சில தூர்களை அகற்ற முடிந்தது. இந்த நொடி மனது மிகவும் நெகிழ்ந்திருக்கிறது, அகம் சற்றுத் திருப்தியாக இருக்கிறது. இதை, இங்கே இப்போ முடிச்சுக்கிறேன். எதிர்காலம், நிகழ்காலம் ஆகும்போது பார்க்கலாம்.. =)