header photo

Friday, November 19, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் அஞ்சு...

பூச்செடி ஒன்றின் தண்டின் வளர்ச்சியில் ஆங்காங்கே தோன்றும் முட்கள் போன்று..  எண்ண ஓட்டத்தில் முட்டி மோதும் சொற்களை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை... தண்டின் முள்ளைத் தோன்றத் தோன்றச் சிராய்த்துக் கொண்டிருந்தால்... அந்தச் செடியின் சுயம் என்னவாகும்..?!... பூவின் ஆதாரம் என்னவாகும்..?! 

தளுக்கும்.. பாசாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை...  அவசியப்படவுமில்லை... 

என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... 

___________________________

நான் இங்கு பேசிக் கொண்டிருப்பது குறிப்பிட்ட ஒரு விடயம் மட்டுமல்ல... பொதுவான மனித உணர்வுகள் சம்மந்தப் பட்டது.... சுற்றிச் சுற்றி வரும் விடயங்களைப் பார்த்துத் துணுக்குறாது... கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்க முடிந்தால்... அதுதான் மனித இனத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம்.. 

பேச ஆரம்பித்த பின்... இதைப் பேசலாமா... இதை விடலாமா என்று யோசிக்க முடியாது... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.... 

சில விஷயங்கள் பேசினால்... திருமணம்... சேர்ந்து வாழ்தல் எல்லாம் மிக மிக அற்பமாக... மிக மிகச் சாதாராணமான விடயமாகத் தோன்றலாம்... 

இல்லை... இல்லை... இது தப்பு... இது தப்பு... இது தப்பு...  நாங்கள் யோசிக்கவே மாட்டோம்.. கண்ணைத் திறக்க மாட்டோம்... காதைத் திறக்க மாட்டோம்... இப்படி ஒரு சொல்லை உச்சரிப்பதே பாவம்... வைகுண்டம் தூரம்.. கைலாசம் நாசம்..  என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள்... தயவு செய்து போய்... உங்கள் வலைமனையிலோ... அல்லது சுற்றாடலிலோ... உங்கள் சேவையைத் தொடரவும்... 

ஆமாம்... இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்னு தோன்றினா... ஆரோக்கியமா பேச முடியும்னா... அவங்க இங்க பேசுங்க...  
_____________________

சிலபல மனிதர்களின் மனப்போக்கை நினைத்தால்... கஞ்சி தண்ணியை வாயில் வைக்க முடியவில்லை... நம் கலாச்சாரம்.. நம் பண்பாடு... நல்ல குடும்பத்தில பிறந்தேன்... நல்ல அம்மா அப்பாவிடம் வளர்ந்தேன் என்றெல்லாம் ஏன் பீற்றிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை... அப்படிச் சொல்லிக் கொண்டே... அவர்களின் மனம் வெளிப்படுத்தும் வக்கிரம்... வார்த்தைகளில் வடிக்கத் தகுந்ததன்று... இதொன்றும் யாருக்கும் பெருமையான விடயமென்று எனக்குத் தோன்றவில்லை... 

தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.. என்ற ஒரு விடயத்தைக் கூறிச் சவர்க்காரம் விற்பதற்கு..  சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... தேகம் பளபளப்படையும்... ஆயுள் நீடிக்கும்... ஐஸ்வர்யம் கூடுமென்றெல்லாம் போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?! 

விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... அல்லது அவளிடம் படுத்து எழும்புபவன்... ஆண் ஆணுடனும்.. பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழ்வதை ஆதரித்தால்... அந்தந்தப் பாலுக்கு ஏற்றவாறு நீயும் அவ்வாறே... திருநங்கைகளுக்கு ஆதரவெனில் நீயும் திருநங்கை... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)

பதின்ம வயதில் நான் படித்த சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி (கற்பனைக் கதையொன்றுமல்ல..) ஏற்படுத்திய வெட்டுக்காயம்... மிக ஆழமாக.. இன்னும் ரணமாக அப்படியே இருக்கிறது... சுயம்புவின் சுயம் வெளிப்பட முடியாது... சுற்றிச் சுற்றியிறுக்கும் சமூகம்... கட்டுப்பாடு..  சுயம்புவை உணர்ந்தும்.. ஊர் உலகத்திற்கு மறைத்து... விழுங்கி விழுங்கி... சுயம்புவான "அவளை"... சுயம்புவிலுள்ள கொஞ்சமே கொஞ்சமான "அவனுக்குள்" உயிருடன் சமாதி கட்டிப் புதைக்கும் பெற்றவள்... பொறுத்துப் பொறுத்து... முடியாது... முடியாதென்று அலறியபடி சுயத்தைத் தேடி... ஓடி... திருநங்கைகளின் கூட்டத்தில் சேர்ந்து... தானாகி... மேகலாவாகிப் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் வரை... அதன் பின்னர் கூட எத்தனை எத்தனையோ சித்திரவதைகள் காத்திருப்பினும்... அதற்கு முன்னர் அவள்... அந்தத் திருநங்கை அனுபவிக்கும் வேதனையை... கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் புண்ணியவான்கள் ஒரு பாதி நாள் அனுபவிக்க முடியுமா... உமக்கு மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அருகதை இருக்கிறதா..?! 

காதல் என்றால்... கண்ணே மணியே... கண்ணாளனே... என்னை விட்டுப் போய் விட்டாய்... இருக்க முடியவில்லை... படுக்க முடியவில்லையென்று அலறுவதல்ல... அந்த அலறலில் எங்கோ ஒரு இடுக்கில் சிறு துளி காதல் இருக்கலாம்... 

அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...  மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்.. 

தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து... 

Annie Proulx இன் Brokeback Mountain.. (இதுவும் கற்பனையல்ல..) படித்தால்.. இரு ஆண்களுக்கிடையில் தோன்றும் காதலும்... சமூகத்தில் அதை வெளிப்படுத்த முடியாத அவலமும்... அவர்களின் முடிவும்... அய்யோ என்று அலறச் செய்யும்... அவர்களின் இயலாமை எம்மையும் தொற்றிக் கொண்டு... உருகி உருகி அழ வைக்கும்... 

நல்ல புள்ளைகளுக்கு அது மிக மிக அருவெறுப்பாகத் தோன்றலாம்... அதே நல்ல புள்ளைகள்... ஏதோ ஒரு படத்தில்.. யாராவது முன்னணித் தமிழ்க் கதாநாயகன்.. நாயகியிடம் உன்னிலுள்ள ஆணைக் கொஞ்சம்... என்னிலுள்ள பெண்ணைக் கொஞ்சம்.. என்று பாடினால்... அதைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாது... விசில் அடித்தபடி... கலாச்சாரக் காவலர்களுக்குப் பயந்து தலையைக் கழுத்தில் புதைத்தபடி செல்லும் பெண்ணைச் சுற்றி வரலாம்... 

அசோகர் மரம் நட்டார் அறிந்தோம்... கண்ணப்பநாயனார் மாமிசம் படைத்தார் அறிகிறோம்... புத்தர் ஞானம் பெற்றார் அறிவோம்..  X குரோமோசோம்... Y குரோமோசோம்... ஹரி ஓம்..  என்று எல்லாவற்றையும் கலந்து மனப்பாடம் செய்வார்கள்... ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது... அவர்கள் மனங்களின் கஷ்டம் தெரியாது... அதற்கு அவர்கள் அந்த நிலையில் இருந்தால்த்தான் புரிந்து கொள்வார்களாம்... 

(இதற்கும் யாராவது விழுந்தடிச்சு ஓடி வரலாம்... அப்போ இது சரிங்கிறியா... அப்போ இது தப்புங்கிறியா... ஒரு ஹோமோ... இன்னொரு பையனை ரேப் செய்தான்... அவன் தூக்கு மாட்டிச் செத்தான்... தெரியுமா உனக்கு... அப்டிம்பாங்க...)

அய்யா... அம்மா.. நீங்க புத்திசாலிதான்...  நீங்க சொல்றது சரிதான்..  ஒரு அல்சேஷன் அல்சேஷனைக் கடித்தாலும்... அல்சேஷன்... பொமரேனியனைக் கடித்தாலும்... பொமரேனியன் பூனையைக் கடித்தாலும்... அது வன்முறைதான்... நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்... 

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை... 

ஆனால்.. அவங்களுக்கு அப்படி வாழத்தான் விருப்பம்... மேற் கூறிய ஏதோ ஒரு முறையில்.. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழப் பிடித்திருக்கிறதென்று.. பரஸ்பரம் யாரோ ஒரு துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்... அல்லது தனியே இருக்கிறார்கள்... 

அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ... 

தெரியவில்லையென்றால்.. நானே சொல்கிறேனே... அதுவும்... வன்முறைதான்... வன்புணர்வுக்காகக் கையையும் காலையும் கட்டிப் போடும் மூர்க்கத்தனம்தான்.... உயிருடன் தொங்க விட்டு... சுற்றவரத் தீயிட்டுக் கூடிக் கும்மாளமிட்டுப்.. பறை முழங்கி... மனித மாமிசம் உண்ணும்... காட்டு மிறாண்டித்தனம்தான்..... 

இதை உண்மையில்லையென்று சொல்பவன்... அதே மனித மாமிசத் தசையை ஏதோ ஒரு விதத்தில் பதப்படுத்தி உண்ணும்.. மிக மிக நாகரீகமானவன்தான்.. 

வளர்ப்பு முறை சரியில்லையென்று அலறும் புண்ணியாத்மாக்களுக்கு... வளர்ப்பு என்பது... முடிகிறதோ இல்லையோ... இவளைப் புணர்... இவனைச் சேர்... அழுகிச் சோர்.. செத்துப் போ... என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல... 

(இதைச் சொல்லும்போது... நான் இங்கு பாடம் நடத்துவதாகச் சில அறிவுஜீவிகள் கெக்கலித்தது கவனம் வருகிறது... எனக்குத் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... அதே எண்ண ஓட்டத்தில் சிந்திக்க முடிபவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்... மற்றவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலையல்ல..) 

அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)

அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்... 

அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்களெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது.. 

தான் திருடி பிறரை நம்பாள்... என்பது போல்... எதைப் பார்த்தாலும் பயம்.. யாரைப் பார்த்தாலும் பயம்...  (அட நான் பாம்பு... பல்லி பத்திச் சொல்லலைங்க...).. நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்... பக்கத்து வீட்டில் சமைத்து வந்தால் அதில் செய்வினை இருக்கும் என்பது போன்ற பயம்... நான் இதை ஆதரித்தால்.. என்னுடைய மகனும்... அதயே செய்வான்... என்னுடைய மகளும் அதயே செய்வாள்... என்பது போன்ற... தேவையே இல்லாத பயம்... 

ஏன் என்றால்... மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான்.. எம்முடைய தேவையை நாம் முடிவு செய்கிறோம்.. அப்படிப் பழகி வைத்திருக்கிறோம்... பழக்கி வைத்திருக்கிறோம்... தன்னைத் தானே பார்த்து... எனக்கு இது தேவையா... ஏற்புடையதா... இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. 

மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்... அந்த சமூகம் என்ன சாதித்து விட முடியும்... உனக்கு என்ன முடிகிறது என்று பார்... நீ எதைச் செய்தால் அது பூரணமாக மிளிரும் என்று பார் என்று யாரும் கற்றுக் கொடுப்பதாகக் காணோம்... 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறோம்... அவரவர் வாழ்க்கை உட்பட... வாழ்க்கை என்பது வாழப்படாமலே புதைக்கப்படுகிறது... அப்படி என்கிற உண்மையையும் புதைத்துக்கொண்டு... போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வதில்த்தான் எத்தனை எத்தனை (தற்)பெருமைகள்.... 

(இதுக்கு மேலயும் சொல்லுவேன்...)

39 ஊக்கம்::

vasu balaji said...

/தளுக்கும்.. பாஷாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை... /

அதற்கு அவசியமும் இல்லை.

/நல்ல குடும்பத்தில பிறந்தேன்... /

கொடுமை என்னன்னா இதுக்கு சொசைட்டியோட சர்டிஃபிகேட் இருக்கணும். சரி யாரு சொசைட்டின்னு கேட்டா அக்கம் பக்கம் இருக்கிறவங்க. அவங்களுக்கு அதுக்கு தகுதியிருக்கான்னா அத நீ கேக்கப்படாது. :))

vasu balaji said...

/போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?! //

எனக்கென்னமோ மார்க்கட்ல பேரு நிக்கணும்னே செய்யிற வேலையிது. என் வீட்டு கடைக்கால் வீக், சுவர் இத்து கெடக்கு, நீ பாட்டுக்கு தும்மி வைக்காத, இருமினா என் வீட்டில சுண்ணாம்பு உதிருதுங்கற பயம். நீ எக்கேடு கெட்டுப் போ. என்னோட அடித்தளம், என்னுடைய சுவர் ஸ்ட்ராங்னு ஏன் சொல்ல முடியலை. ஒன்னு எல்லாராலையும் கட்டிக்காக்கப்படுற ஒன்னு எதுக்கு அலறணும்?

குடுகுடுப்பை said...

மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்...

//
இஞ்சினியரிங் சேந்ததுக்கு அப்புறம் மேத்ஸ்ல பூஜ்யம் எடுத்த என்னால் யாருக்காவது லாபம் உண்டா என்று எண்ணிப்பார்க்கிறேன்.

vasu balaji said...

//விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)//

:)). அது பயத்துனால வர முதல் ரியாக்‌ஷன். எடுத்ததும் அடிச்சிட்டா வாயத்தொறக்கமாட்டான்னு ஒரு குருட்டு வீச்சு.

//தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து... //

இது அதிஉன்னதமான ஒரு சூழல். இப்படி ஒரு சின்ன வட்டம் உருவாகிட்டாலே அலை அலையா பரவி லோகம் அதும்பாட்டுக்கு சுகமா சந்தோஷமா இருக்கும். ஆனா அவல் கிடைக்காது மெல்ல.

vasu balaji said...

//அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் என்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)//

க்ளாஸ்.

//இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. //

அல்லது அப்படி நடித்து நல்லபெயர் எடுத்துக் கொண்டு உறங்கமுடியாமல் தவிப்பதையும் சொல்ல வேண்டும்.

ஆழமா, விஸ்தாரமா போகுது. மடை போடாம அதும்போக்குல தொடரும்மா. நல்லதொரு விவாதக் களம். நிறைய புரிதலுக்கு வழி வகுக்கும். எல்லா புண்ணாக்குக்கும் மேலான ஒரு அறிவுஜீவிங்கன்னு எள்ளல் வரலாம் பரவாயில்லை. நாமளும் கத்துகிட்டுதான் இருக்கோம்னு நமக்குத் தெரியும்தானே. நன்றி.

VR said...

....// தளுக்கும்.. பாஷாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை... அவசியப்படவுமில்லை... என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... ..//

வணக்கம் பிரியா....... உங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்து வருகிரேன். ஒத்த கருத்துக்களை ஓங்கி ஒலிக்க கேட்கும்போது மனதுக்கு மிக்க இதமாக இருக்கிறது... நன்றிகள் பல.... பாசாங்கு இல்லாத உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு.....

vasu balaji said...

/இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்... /

இதுலதான் மொத்தமும் அடங்கியிருக்குன்னு நினைக்கிறேன். இதுவே ஒரு பெரிய விவாதக்களம்.

அது சரி(18185106603874041862) said...

//
நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்...

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை...
//

சில இடங்களில் சிலருக்கு இது தான் கலாச்சாரம்.

அது சரி(18185106603874041862) said...

//
நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்...

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை...
//

சில இடங்களில் சிலருக்கு இது தான் கலாச்சாரம்.

அது சரி(18185106603874041862) said...

//

அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்ளெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது..
//

மீண்டும் அது தான். அது எங்க தாய்மண்ணின் கலாச்சாரம் (நான் சொல்லலை. யார்னா சொல்லுவாங்க)

அது சரி(18185106603874041862) said...

//

அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ...
//

இது சிலர் உண்மையான கேள்விகளுடன் பேசுகிறார்கள். ஆனால், பல உயிரிகள் கலாச்சார முகமூடி மாட்டி வக்கிரத்தை கொட்டிக் கொண்டிருக்கின்றன.

அது சரி(18185106603874041862) said...

//

அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்...
//

இது தான். இந்த சாதாரண விஷயம் தான் பலருக்கு புரிவதில்லை. அதெப்படி அவங்க வாழ்க்கையை வாழலாம், சமூகம் என்னாகிறது என்று கிளம்பி விடுகிறார்கள்...தன் வாழ்க்கையை தான் வாழக்கூட உரிமை இல்லாத சமூகமும் கலாச்சாரமும் நாடும் இருந்தென்ன மண்ணோடு மண்ணாக நாசமாய் போனால் என்ன?

அது சரி(18185106603874041862) said...

//
(இதுக்கு மேலயும் சொல்லுவேன்
//

waiting....

Thekkikattan|தெகா said...

மிகச் செறிவான கட்டுரை! அனுபவித்து படித்தேன்.

முதலில் உள்ளுணர்வில் இருந்து உரையாடுவது என்றால் என்ன என்பதனை ஒரு முறை அனுபவித்து விட்டால் அதன் ஆழம் அறியமுடியும். அப்படியாக வெளி வருவதும் மேலோட்டமாக வாசித்துக் கொண்டே செல்ல முடியாது. அதற்கு அடிப்படையான பயிற்சி வேண்டும்... இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம், ப்ரியா!

//ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது...//

வார்த்தைகளில் தொங்கிக் கொண்டிருந்தல் புறவயமாக ‘நீ ஆம்பளப் பையன் அழக் கூடாது’ போன்று; அது எந்தளவிற்கு உண்மை என்பதிலிருந்து மீண்டு வந்து தன்னுடைய உணர்வை வெளிப்படுத்துவதில் எந்த தவறுமில்லை என்று உணர்வதற்கே பல பேருக்கு நிறைய வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். அப்படியாக இருக்கையில் இது போன்ற பல கட்டமைப்புகளை உடைத்துக் கொண்டு தான் தானாக இருக்க மிக்க உழைப்பும், தன் சார்ந்த அக்கறையும் போட வேண்டும்.

சோ, இங்கே பேசப்பட்டுக் கொண்டிருப்பது ‘self-realization' சார்ந்த விசயங்கள், அந்தக் கருவை பெறவே மிக்க உழைப்பு தேவை. அந்த பொறுமையும், பொறுப்பும் இங்கு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

நீங்க கொடுத்திட்டே இருங்க, தேடிப் பெற எத்தனிப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

குட் ஒன்.. திருநங்கை விஷயம் புரிவதற்கு பதின்மம் தாண்ட வேண்டியிருந்தது.. இது வரை புரிந்து கொண்டது இது தான்.. they should be counselled.. should be told about the risks of gender transformation.. should be let to choose the gender they want.. and should be let to live their ife..

"அவனுக்கும் அவளுக்கும் இடையே" என்று தலைப்பிட்டு (மட்டும் :) ) வைத்திருக்கிறேன்.. இப்போதைக்கு எழுத மாட்டேன் என்பது மட்டும் நிதர்சனம் :)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

It should have been "life" in the previous comment..

Unknown said...

"என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... "
வேற வழியில்லீங்கோ. பொருத்தருள்வோம்.

முழுசும் படிக்கல. பாதி தூரம் போறதுக்குள்ளேயே
"சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... "

ப்ரியா. என்னாது. கலாசாரம்னு இப்பிடிஎல்லாமா!

இருங்க. முழுசும் படிக்கறதுக்குள்ள தலை சுத்தும் போல இருக்கே. ஆனாலும் படிப்போம்.

வைடிஸ் ... (புதுசா வானம்பாடி ஐயா கிட்ட கத்துகிட்டது)

Unknown said...

"அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி... மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்.. "

-அருமைங்க.

Unknown said...

"மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... "

கிடைக்குதோ இல்லையோ, கொஞ்சம் மனசால நினைக்க விடுங்க. பிள்ளைங்களே பெற்றோருக்கு புரிய வைச்சுருவாங்க.

Unknown said...

Priya,

அடிச்சு தூள் கிளப்புறீங்க. கிளப்புங்க. சப்போர்ட் உண்டு.

எல்லோரும் சுதந்திரமா வாழணும்னு சொல்ற நீங்க, மாற்று கருத்து உள்ளவங்களயும் சுதந்திரமா விடுங்க. அவங்க ரேஞ்சுக்கு நீங்க கீழ் இறங்கி திட்ட ஆரம்பிச்சா,

....... ம்ம்ம்ம்

என்னாத்த சொல்றது.

பிரபாகர் said...

//அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்...//

சகோதரி... சத்தியமான வார்த்தைகள். படிக்கப் படிக்க நிறைய விளங்குகிறது.

இது பற்றியெல்லாம் விமர்சனங்களை விரசமாய் வெளிப்படுத்துவர்கள், அவர்களின் மனதில் உள்ளதைத்தான் சொல்லுகிறார்கள்.

கள்ளியிடமிருந்து காப்பிக்கு பாலையா எதிர்பார்க்கமுடியுயும்? அதில் வருவது குழந்தைக்கு தேவையான வேறு ஒரு பால்... விட்டுத்தள்ளுங்கள்.

வி.ஆர் சொன்னதுபோல் இன்னும் அதீத ஆர்வமாய் அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன்...

அருமையான, அழுத்தமான தகவல்கள்...

பிரபாகர்...

NILAMUKILAN said...

திரு நங்கைகளுக்கோ..ஒரேபால் இனக்கவர்ச்சி கொண்டவர்களுக்கோ..அவர்களது வாழ்கையை வாழ உரிமை இருக்கிறது. அவர்களை வெறுப்புடன் பார்ப்பது கண்டிக்கத்தக்க செயலே. அவரவர்களை அவரவர்கள் சேவித்துக் கொள்வதும் அவரவர்களை அவரவர்கள் வெறுத்துக் கொள்வதும் அவர்களது உரிமை. அடுத்தவனை பற்றி பேச அவர்களுக்கு அருகதைகள் இல்லை. நல்ல சிந்தனை. ஆனால் இடையில் அவர்கள் அப்படி பேச கேட்டேன்.. இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்ற அடைமொழிகள் இல்லாமல்.. உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக பதியுங்கள். நல்ல விவாதங்கள் வளரட்டும். நல்ல பதிவு.

ரோகிணிசிவா said...

asathal priya , i lack words to praise you ,waiting to read the rest

என்னது நானு யாரா? said...

சுயபுத்தி உள்ளவர்கள் யாருடைய விமர்சனத்தையும் பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அந்த சுயபுத்தி வருவதற்காக நிறைய சிந்திக்க வேண்டும், படிக்க வேண்டும், புதிய புதிய அனுபவங்களை தேடி பிடித்து அனுபவிக்க வேண்டும். அப்போது தான் மனம் விரிவடையும்.

நகரங்களில் நீங்கள் சொல்லும் விஷயங்கள் மௌன புரட்சியாக நடந்துக்கொண்டே தானே இருக்கின்றன. கிராமங்களிலும் மாறுதல்கள் சிறுக சிறுக தலைத்தூக்கி வருகிறது. அதனால் கட்டுக்கள் எல்லாம் சிறுக சிறுக மறையத்தான் போகிறது. அதனை யாரும் தடுத்திட முடியாது.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. இது எப்போதும் சத்தியம்.

suneel krishnan said...

கலாச்சாரம் -அந்த அந்த காலத்திற்கு ,மனிதன் வசதியாக வாழ உருவாக்கிய நியதி ,எல்லா அமைப்பை போல் இங்கும் வலியவன் வாழவும் ,மற்றவன் சாகவும் வழிவகை செய்கிறது ,கலாசாரத்தை தாண்டி வரும் சிந்தனைகளை கிரகித்து கொள்ள சற்று பக்குவம் வேண்டும் .என்னை நான் சோதிக்க இதுவும் ஒரு களம் .தொடர்ந்து எழுதுங்கள் ,முந்தைய பகுதிகளை நான் வாசிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .உங்கள் மொழி ரௌதிரமாக இருந்தாலும் ,அதன் பின்னால் இருக்கும் உணர்வு நிஜமானது .

Unknown said...

லேட்டா வந்தா இதுதான் பிரச்சனை. நாம போட நினைக்கிற பின்னூட்டமெல்லாம் ஏற்கனவே யாராவது போட்டுட்டுப் போயிடுறாங்க.

எனிவே, வெயிட்டிங் ஃபார் த ரெஸ்ட்.

கலகலப்ரியா said...

@வானம்பாடிகள்

நன்றி சார்..

|| என் வீட்டு கடைக்கால் வீக், சுவர் இத்து கெடக்கு, நீ பாட்டுக்கு தும்மி வைக்காத, இருமினா என் வீட்டில சுண்ணாம்பு உதிருதுங்கற பயம். நீ எக்கேடு கெட்டுப் போ. என்னோட அடித்தளம், என்னுடைய சுவர் ஸ்ட்ராங்னு ஏன் சொல்ல முடியலை. ஒன்னு எல்லாராலையும் கட்டிக்காக்கப்படுற ஒன்னு எதுக்கு அலறணும்?||

என்ன சொல்ல வர்றீங்க... பில்டிங்கு ஸ்ட்ராங்கு..பேஸ்மெண்ட் வீக்குன்னா...?!

இல்ல உங்க பக்கத்து வீட்டுக்காரங்க பத்தின வயித்தெரிச்சல இங்க கொட்டியாறதா.. =))))

கலகலப்ரியா said...

@குடுகுடுப்பை

எண்ணுங்க எண்ணுங்க... ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லுங்க... நானும் சேர்ந்து எண்ணுறேன்..

கலகலப்ரியா said...

@V R

நன்றி VR.. இப்டிக் கேக்கறப்போ கொஞ்சம் ஆறுதலா இருக்கு...

கலகலப்ரியா said...

@அது சரி(18185106603874041862)

நன்றி அது சரி..

||தன் வாழ்க்கையை தான் வாழக்கூட உரிமை இல்லாத சமூகமும் கலாச்சாரமும் நாடும் இருந்தென்ன மண்ணோடு மண்ணாக நாசமாய் போனால் என்ன?||

நாசமாப் போனா நல்லாத்தான் இருக்கும்... 2012-க்கு வெய்ட்டிங்... நம்பிக்கையோட.

கலகலப்ரியா said...

@Thekkikattan|தெகா

ரொம்ப நன்றி தெகா... ம்ம்..

||சோ, இங்கே பேசப்பட்டுக் கொண்டிருப்பது ‘self-realization' சார்ந்த விசயங்கள், அந்தக் கருவை பெறவே மிக்க உழைப்பு தேவை. அந்த பொறுமையும், பொறுப்பும் இங்கு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?||

பொறுப்பா... ஊஹூம்.. நான் பிடித்த முயலுக்கு காலே இல்லை... நாம் வளர்க்கும் புறாக்களுக்கு சிறகே இல்லை...

கலகலப்ரியா said...

@எல் போர்ட்.. பீ சீரியஸ்..

நன்றி சந்தனா...

:(.. நீங்க கடை போட்டத என் கிட்ட சொல்லவே இல்ல...

கலகலப்ரியா said...

@Sethu

ம்ம்.. நன்றி சேது..

||Priya,

அடிச்சு தூள் கிளப்புறீங்க. கிளப்புங்க. சப்போர்ட் உண்டு.

எல்லோரும் சுதந்திரமா வாழணும்னு சொல்ற நீங்க, மாற்று கருத்து உள்ளவங்களயும் சுதந்திரமா விடுங்க. அவங்க ரேஞ்சுக்கு நீங்க கீழ் இறங்கி திட்ட ஆரம்பிச்சா,

....... ம்ம்ம்ம் ||

மாற்றுக் கருத்து உள்ளவங்க எல்லாம் சுதந்திரமா இருக்கட்டும்.. ஆனா என் கிட்ட வந்து... நீ பண்றது தப்பு... இது பண்ணாத... இது உண்மையில்லன்னு சொல்லிட்டிந்தா.. கஷ்டம் சேது.. என்னோட சுதந்திரத்த யாரும் பறிக்க முடியாதில்ல..

எனக்கு உடன்பாடில்லை... இது இப்டி நடந்தா என்னாகும்னு பேசினா தேவலாம்..

கலகலப்ரியா said...

@பிரபாகர்

ரொம்ப நன்றிண்ணா..

கலகலப்ரியா said...

@நிலா முகிலன்

நன்றி நிலா முகிலன்..

||ஆனால் இடையில் அவர்கள் அப்படி பேச கேட்டேன்.. இவர்கள் இப்படி சொல்கிறார்கள் என்ற அடைமொழிகள் இல்லாமல்.. உங்கள் கருத்துக்களை ஆணித்தரமாக பதியுங்கள். நல்ல விவாதங்கள் வளரட்டும்||

நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம்.. பதிஞ்சுக்கிட்டே இருக்கோம்.. :)

கலகலப்ரியா said...

@ரோகிணிசிவா

தாங்க்யூ ரோகிணி.. :)..

கலகலப்ரியா said...

@என்னது நானு யாரா?

ரொம்ப உறுதியா பேசுறீங்க... நன்றிங்க..

கலகலப்ரியா said...

@dr suneel krishnan

நன்றி dr. suneel..

||கலாசாரத்தை தாண்டி வரும் சிந்தனைகளை கிரகித்து கொள்ள சற்று பக்குவம் வேண்டும்||

ம்ம்... அப்டித்தான் நினைக்கிறேன்.

கலகலப்ரியா said...

@முகிலன்

இதுக்காகவே லேட்டா வர்றதா.. அவ்வ்..