header photo

Sunday, July 15, 2012

தூறல்

ஓயாது தட்டிக் கொண்டே இருந்தது

சாளரம் திறந்து
”என்ன?” 
செல்லமாக அதட்டினேன்

முகத்தில் ”உப்”பென்று ஊதிவிட்டு 
சற்று விலகிச் சென்று
வெறுமனே 
பார்த்துக் கொண்டிருந்தது


குவளையிலிருந்த தேநீராக
மெல்லக் 
காலியாகிக் கொண்டிருந்தது
வலி 

மெது மெதுவே
எனக்குள் இறங்கிக் கொண்டிருந்தது
இதம் சொல்லிக் கொண்டிருந்த 
என் மழை 

தனி


சற்றுப் பொறுங்கள்
ஏன் இத்தனை கத்திகள்
அறுவை இதற்கு அவசியமற்றது

ஈரூற்றுக் குருதி
பெருமடங்கு வலி 
இருக்கட்டும்

தாயும் சேயும் நலம் என்பது
ஈருடல்களுக்கானது

நீண்டு கொண்டே செல்லும்
இப் பிரசவம்
நிகழ்ந்துதான் ஆக வேண்டும்

ஒற்றையாக

Sunday, June 10, 2012

துளிக் குறிப்பு...


கைகூடும் தருணம் விதியின் பால் இருந்த போதிலும்
மரணத்தின் வாயிலைத் தட்டிப் பார்க்க முடியும்

தெரிந்தும் கூட அதைச் செய்வதில்லை 
தடுத்து நிற்கும் உணர்வுக்கு 
பயம் என்று காரணப்பெயர் சூட்டியாகிறது
உண்மையில் அந்த உணர்வின் பெயருமே தெரிவதில்லை

பரவசமான ஒரு உணர்வு
மின்சாரம் பாய்வது போன்றிருக்கலாம்
ஸ்தம்பித்திருப்பதில் பேதலித்து 
உணர்வே அற்றது போலாகி விடுகிறது

மீட்டெடுப்பு முயற்சியாக 
அதனருகில் செல்லாது 
உடனிருக்கும் மரணத்தைப் போல
அதைச் சுற்றிக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது

ஒரு வார்த்தையின் விளிம்பில்
வந்து விழும் ஒரு எழுத்தை மட்டும்
தொட்டுப் பார்க்கவும் அஞ்சி
அதைச் சுற்றிச் சுற்றிப் பயணிப்பது போல் 

அழகான அந்த நொடிகளை எங்கோ
ஆழமாகப் புதைத்து வைத்து
அறையின் சிலை முன்
மலர்க் கோலம் வரைவது போல் 

விரிவது விடுத்துக் கூம்பும் இந்த
மனமொட்டில் பட்டுத் தெறிக்கும்
இது ஒரு துளி மரணம்.. 

Wednesday, May 23, 2012

”நில்”


பழக்கமே இல்லாத இந்தப்
பந்தயத்தில் நானுமிருக்கிறேன்
 
பறக்கும் புழுதி கண் மறைக்க
சொடுக் என்றால் 
ஓட ஆரம்பித்து விடுகிறேன் 

பதினேழோ பதினெட்டோ 
ஒரு இலக்கம் முதுகிலாடுகிறது

செய்வதறியாது 
நடுநடுவில் நிதானிக்கிறேன் 
இப்போதெல்லாம் 

இந்த மைதானம் எனக்கானதல்ல
எனினும் 
இன்றும் கூட 
அங்குதான் நின்றுகொண்டிருக்கிறேன்

முதுகிலாடும் இந்த இலக்கத்தை
முக்கால வரையறையற்று 
இல்லாதொழிக்க வழி
ஒன்றிருக்கிறது 

இனி எழுந்தே இருக்கப்போவதில்லையென
மண்ணைக் கெட்டியாகக் கவ்விக் கொள்ளலாம்

ஒரு கால் தூக்கி 
மெதுவே
முதலாவது முழங்கால் மடித்து.. 

Thursday, May 17, 2012

பேரன்புடைய மூத்த வீரர் மற்றும் ஜெயமோகன் அவர்கட்கு..

||ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ராணுவமோ இந்திய அரசோ எதிர்கொள்ளவே இல்லை. ஆனால் அவர்கள் தாங்களே மிகையாக நாடகத்தனமாகப் பேசி அவற்றை சாயம்வெளுக்கச்செய்தனர்
இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான எதிர்விளைவு என்பது உண்மையிலேயே தமிழர்களுக்குப் பேரழிவு வந்து அதைத் தமிழ் ஊடகங்கள் உலகம் முன் கூவிச்சொன்னபோது அதையும் வழக்கமான மிகை, பொய்ப்பிரச்சாரம் என்றே அனைவரும் எடுத்துக்கொண்டார்கள் என்பதே

இந்திய அமைதிப்படைக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உக்கிரமான பொய்ப்பிரச்சாரம் பற்றிய கசப்புதான் பின்னர் பேரழிவின் கடைசிக்கணங்களில் இந்தியா தலையிடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது அதை ராணுவமோ இந்திய ஊடகமோ பொதுமக்களோ ஆதரிக்காமலானதற்குக் காரணம். வரலாற்றின் கசப்பான பழிவாங்கல்.||

http://www.jeyamohan.in/?p=27320

__________________________________________



இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு எல்லா விஷயமும் தெரிந்திருப்பது குறித்து எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அதிலும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குத் தெரியாத விடயம் என்று ஒன்று இந்த உலகத்தில் உள்ளதா என்பது பற்றி எனக்கு கிஞ்சித்தளவு சந்தேகம் கூட இல்லை. முட்டாளுக்கு எல்லாம் தெரியுமென்று முட்டாள்கள் சிலர் சொல்கிறார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். அவர்கள் முட்டாள்களென்றும் எங்கள் ஜெயமோகனுக்குத் தெரியும். 



(கற்பு என்கிற கருமாந்திர வார்த்தையை அழி ரப்பர் வைத்து நானே அழிக்கிறேன், கற்பழிப்பு, நானும் ராணுவம்தான், நானும் ராணுவம்தான்)

நிற்க,

பாலியல் வன்முறை என்பது ஒரு போர்த் தந்திரம் என்பது எல்லாம் தெரிந்த ஜெயமோகனுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பே இல்லை. தெரியாதிருப்பது வேறு, தெரிந்தும் தெரியாதது போலிருப்பது வேறு. அல்லது அவர் ராணுவத்தின் பால், அவர் தேசியத்தின் பால் கொண்ட பற்றாத காதல் அல்லது அசையாத நம்பிக்கை கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். இதிலும் நம்பிக்கை வேறு, கண்மூடித்தனமான நம்பிக்கை வேறு என்பதும் கண்டிப்பாக எல்லாம் தெரிந்த பேரறிவாளர் ஜெயமோகனுக்குத் தெரியும். 

உலகத்தில் பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை இருந்ததா என்று கேட்டால், ரஷ்ய, அமெரிக்க, சீன, ஸ்பானிய, அல்பேனிய, ரோம, கிரேக்க , இதர, இதர, இதர வரலாறுகளை, காம, சோம, கோவ்ஸ்கி, இதர எலுமிச்சயோவிச், க்ரீன்விச், ப்ளூவிச் ஆகிய பெயர்கள் படைத்த உலக இலக்கியத்தை எல்லாம் ஒரு சிட்டிகை கூடக் கரைத்துக் குடித்திருக்காத எனக்கே “இல்லை, பாலியல் வன்முறையில்லாத ராணுவ நடவடிக்கை என்பது இருந்திருக்கச் சந்தர்ப்பமில்லை” என்றே தோன்றுகிறது. 



ஜெயமோகன் பாஷையில் சொல்வதானால், நண்பர்களே (மிக நேர்மையான வார்த்தைப் பிரயோகம்), அன்புள்ள மூத்த அரும்பெரும் தியாகப் பெருமக்களே நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை. பாலியல் வன்முறையென்பது ஒரு புருஷன் ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு ஒரு பெண்ணைப் புணர்வது மட்டுமில்லை. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் முலைகளை இறுகத் தடவி சோதனை நடத்தினாலும் அது பாலியல் வன்முறைதான். ஒரு ஆண் இன்னொரு ஆணின் ஆடைகளைக் களைந்து விட்டு சுவர்ப் புறமாக நிறுத்தி வைத்திருப்பதும் பாலியல் வன்முறைதான். உளவியல் ரீதியான மிகக் கொடுமையான வன்முறை. 

பேரன்புக்கும், பெரு மரியாதைக்கும் பாத்திரமான ஜெயமோகன் சொன்ன ஒரு கூற்று உண்மையிலும் உண்மை. அதாவது பொய்ப் பிரச்சாரம். ஆம்! இது சத்தியம்! பேரன்பு மிக்க மூத்த குடிகளே பாலியல் வன்முறை எவ்வாறு ஒரு இராணுவ நடவடிக்கைக்குப் பக்கபலமாகிறதோ, அதேபோல் ஒரு கொள்கை ரீதியாக (அது சரியா, தவறா என்று விவாதிக்க நான் வரவில்லை, இப்பொழுது இந்த விடயம் மட்டும்) போராடுபவர்களுக்கு மிகைப்படுத்தப்பட பிரச்சாரம் ஒரு ஆயுதமாகிறது. காதலிலும், யுத்தத்திலும் எல்லாம் நியாயப்படுத்தப்பட முடியுமென்றால், பாலியல் வன்முறையை நீ நியாயப்படுத்து, மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நான் நியாயப்படுத்துகிறேன். பாலியல் வன்முறையே நடக்கவில்லை, எல்லாரும் “சாமியோ ஐய்யப்பா” என்றபடி வலம் வந்து கொண்டிருந்தார்கள். மக்களுக்கு திருநீறும், நாமமுமிட்டு ஆன்மீகத் தொண்டு செய்தார்கள் போன்றதான பிரச்சாரம் எதற்கோ? எதிர்ப் பொய்ப் பிரச்சாரப் பண்பாடா? பண்புள்ள மூத்த வீர தியாகச் செம்மல்களே நீங்கள் ஒவ்வொருவரும் இப்படியாகத்தான் இருக்கிறீர்களென்று நான் சொல்ல வரவில்லை, ஆனால் மந்தையில் இரண்டாடு இப்படியாக இருந்தது என்பதை ஒத்துக் கொள்வதற்கு உங்களுக்குத் தேவை ஒன்றிருக்கிறது... YES, CHECK YOUR BALLS. 



தமிழ் சினிமாவில் ஏராளமான மிகைப்படுத்தல் உண்டு. பெண்களைக் கட்டிப் போட்டு வார்த்தையாலும், உடலாலும் பாலியல் வன்முறை செய்வது, காட்சி வேண்டுமானால் நாடகத்தன்மையாக இருக்கலாம், மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம், ஆனால் பேரன்பாளர்களே அதிலிருக்கும் உளவியல் தந்திரம் பொய்யல்ல. இந்த விதமான தாக்குதல் மூலம் எதிராளியை இரு வேறு விதமாகப் பலவீனப்படுத்தலாம். ஒன்று சோர்ந்து போகச் செய்யலாம் அல்லது நரம்பு புடைக்க உணர்ச்சிவசப்படச் செய்யலாம். இந்த உளவியலைத் தெரிந்து வைத்திருக்காத பால்குடி மறக்காத இராணுவத்தினர் இருக்கலாம். ஞாமறியோம் ஜெயபரமே. 

காற்பந்தாட்டத்தில் பெனால்ட்டி கிடைக்காத வண்ணம், பந்தை உதைப்பதுபோல் முட்டியைப் பெயர்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது காற்பந்தாட்டப் பயிற்சியாளரின் மாபெரும் கடமைகளில் ஒன்று போலவே, இராணுவப் பயிற்சியாளர்களுக்கும் சில பயிற்சிகள் உண்டென்பதை மறுக்க முடியாது (ஏன் முடியாது, எல்லாம் தெரிந்தவர்கள் மறுக்கலாம், SHUT THE FUCK UP, என்னைச் சொன்னேன்). 



இந்திய ராணுவம் நம் ஊரில் இருந்த போது நான் சிறுமி. எதுவும் புரியாத வயது. ஆனாலும் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. இராணுவம் ரோந்து வரும்போதெல்லாம் பெண்கள் சேலையைச் சுற்றோ சுற்றென்று சுற்றி கழுத்து வரை போர்த்தியிருப்பார்கள். இது மிகையான பிரச்சாரத்தின் காரணத்தினாலேயே கூட இருக்கலாம். இந்த இடத்திலும் இந்த மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை நியாயப்படுத்த எனக்கு இன்னொரு சந்தர்ப்பம். இதனால்தான் மக்கள் விழிப்புடன் இருந்தார்கள். இராணுவம் வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குள் இருக்காது பிள்ளை குட்டி, கிழடு கட்டைகளுடன் வீட்டிற்கு வெளியில் வந்து கும்பலாக நின்று கொண்டிருப்பார்கள். பண்பாளர்கள் கூட்டத்தில் வைத்து ஒரு பெண்ணை வற்புறுத்த யோசிக்கத்தானே செய்வார்கள். உளவியல். 



பாலியல் வன்முறையை நேரடிக் காட்சியாகப் பார்த்தால் மட்டுமே நம்புவேன் என்கிறவர்களுக்கு சுவாமி நித்தியானந்தா போன்றவர்கள் கடவுளைக் காண்பிப்பது போல் ஏதாவது அருள் பாலித்தால் உண்டு. நானும் ஊரிலிருந்த போது மற்றவர்களின் வாய்ப் பிரச்சாரத்தின் மூலமாகவே இந்தக் கொடுமையை அறிந்திருக்கிறேன். 

ஜெயமோகன் கட்டுரையில் ஒரு பெரும் பண்பாளர் “கட்டு”ரை ஒன்றை அனுப்பியிருக்கிறார். >>>> 

|| ஒருமுறை நான் பாயிண்ட் பெட்ரோ மையத்துக்குச் சென்றபோது எல்.டி.டி.இ யின் ஒரு செய்தித் தொடர்பாளர் என்னிடம் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் அங்கே இருப்பதாகச் சொன்னார். ஆகவே நான் அந்தப்பெண்ணைப் போய்ப் பார்த்தேன். தமிழ் ஊடகவியலாளர்களின் முன்னால் அந்தப்பெண்ணை விசாரித்தேன். அந்தப்பெண்மணிக்கு எண்பது வயதிருக்கும். அவர் மிகுந்த அமைதியுடன் இருப்பதாகவே தோன்றியது. இந்திய அமைதிப்படையின் முகாம் ஊழியர்கள் அவரை நன்றாகவே கவனித்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்|| 

என்பதாகச் சொல்கிறது அந்தக் கதை இல்லை கட்டுரை. இல்லை, தெரியாமல் கேட்கிறேன் “எல்.டி.டி.இ என்ன கேனைங்களா?” பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு எண்பது வயது மூதாட்டிதானா கிடைக்க வேண்டும். அது பிரச்சாரத்திற்கு எந்த விதத்தில் வலு ஊட்டுமென்று அறியாமலா அத்தனை காலம் அந்தப் போரை அவ்வளவு திறமையாக எடுத்துச் சென்றார்கள்? பேரறிவாளர்களின் எதிர்ப் பிரச்சாரம் இத்தனை கேவலமாக, கீழ்த்தரமாகவா பல்லை இளிக்க வேண்டும். 

போகட்டும் நான் ஒரு பிரச்சாரம் செய்கிறேன் பாருங்கள்: 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடொன்றில் (பிரச்சாரத்திற்கு எதற்கு விளக்கமெல்லாம்) ஒரு வழக்கு வந்தது. உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு ஈழத்துப் பெண் அவர். உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு நடைப்பிணம் போலிருந்தார். இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசினார். அவருக்கு இங்கு வதிவிடம் கிடைப்பது பற்றிய வழக்கல்ல அது. அவருக்கு நிரந்தர வதிவிடம் கிடைத்திருந்தது. அவரின் அந்த நிலமைக்கு என்ன காரணம் என்று ஆராயப்பட்டது. அவர் பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவர் பள்ளிக்குள் இந்திய இராணுவம் நுழைந்தது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். சில பெண்கள் முடக்கப்பட்டார்கள். பள்ளியின் இரண்டாவது மாடியில் ஒரு வகுப்பறையில் நாலைந்து பண்பாளர்கள் அவரிற்கு ”ஆன்மீக போதனை” செய்திருக்கிறார்கள். இன்றும் கூட அவரின் செயல்கள் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. உண்மைதான்! இராணுவ ஆன்மீகவாதிகள், அவர்களின் உடற் தேவைக்காக அவரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அந்தப் பெண் அப்போது ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு ஊடகவியலாளராகத் தன்னுடைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். அதற்கு அவருக்குக் கிடைத்த சிரமபரிகாரம்தான் அது! 

இந்த வழக்கில் மொழி ரீதியான உதவிக்கு நான் அங்கிருந்தேன். அவராக இருந்து என் வாயால் அவர் வாக்குமூலத்தைச் சொல்லிக் கொண்டிருந்தேன். மொழிபெயர்க்கும்போது மொழியை மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளையும் வாங்கி, ஏறத்தாழ அப்படியே அடுத்தவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டி இருக்கிறது. இவ்வாறான தருணங்களில் அதற்கான தேவை சற்று அதிகமாகவே இருக்கிறது. வெளியில் வரும்போது நான் நடைப்பிணமாகி இருந்தேன். பிற்பாடு எனக்கு ஒரு மாத்திற்கு மூன்று மணி நேர உளவியல் ஆலோசனை, மூன்று மணி நேர தொழில் ரீதியான மேற்பார்வை ஆலோசனை தேவைப்பட்டது. இன்னும் கூட என்னாலேயே இதை ஜீரணிக்க முடியாதிருக்கும் பட்சத்தில், அன்பர்களே, பேரறிவாளர்களே பாதிக்கப்பட்டவர்களின் நிலமையைக் கொஞ்சம் உங்கள் மாபெரும் இலக்கியக் கற்பனாசக்தியில் கொண்டுவந்து பாருங்கள். 

செம்மறித் தோல் போர்த்திய நரிகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்துவிடுவது உங்கள் கடமையாக இருக்கலாம். ஆனால் குதறப்பட்டிருக்கும் வெள்ளாடுகளுக்கு இதற்கு மேலும் இப்படியாக இன்னொரு உ ளவியல் ரீதியான அநியாயம் ஏற்படுவதை என்னால் அனுமதிக்க முடியவில்லை. MORONS ARE JUST MORONS, YOU BET GOD DAMNIT!!!

Monday, May 14, 2012

பிறகென்ன

பாட்டியின் அடுக்களையில்
இதே எலிகளை 
அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்

யன்னலோரம் உரசிச் செல்லும்
காக்கைச் சிறகின் சிறு காற்றில்
அலை மோதும் இவை

ஆழிப் பேரலையில்
என்ன செய்யும் பாவம் 

கரையிலிருந்து ஒரு இரைச்சல்
அந்தோ என்றபடி வருகிறது

இந்த எலிகள் 
ச்சே.. பாட்டி வீட்டு எலிகளா இவை
இருக்கவே இருக்காது 
அவை போலிருக்கலாம்

ஆசுவாசப்படும்போதுதான் கவனித்தேன்
அந்த அந்தோ
இந்த எலிகளுக்கானதல்ல

அது வந்த வீச்சில் 
கடலில் குதித்து 
கீழ் நோக்கிச் செல்கிறது 

சமுத்திரத்தின் அடியில் 
அது இன்னும் 
கப்பலாகவே இருக்கிறது  

கரைதொடும் அலைகள்
செவியில்லா வெளியைக்
கேட்டுக் கேட்டுத் திரும்புகின்றன


அவையா சுமந்தன இதை?

Wednesday, April 4, 2012

வானிலை


உன்னை 
புனிதர் புடை சூழ்ந்திருந்தது 
திடுதிப்பென்று 
பண்டோராக் கிரகத்தில் சஞ்சரித்திருக்கிறாய்

இன்னும் சற்று நொடிகளில்
பலத்த சில்லறைத் தட்டுப்பாடு வரும்
அச்சோ என்று மழை பெய்யும் 
நடு வீதியில் நனைந்து கொண்டிருப்பாய் 

அசரீரிக்குச் சொந்தமானவர்கள் 
முன்னிலை படர்க்கை இடத்து 
முக்காலமும் அறிந்திருக்கிறார்கள்

காற்பெருவிரல் நுனி வரை தன்னுணர்வுடன்
பூமியில் நடந்து கொண்டிருந்தேன்

இந்த நொடி தவிர 
காலம் பற்றிய ப்ரக்ஞை எதுவுமில்லை 

தன்மை தவிர
எனக்கு 
வேறொன்றும் வேண்டா 

Thursday, March 22, 2012

காலடியில்


சாலையைத் தொலைத்துவிட்டு 
அந்த மண்சாலையின் திருப்பத்தில்
எதிர்ப்பட்டு 
இணைந்து நடந்தோம்
எங்கே என்ற கேள்வி எதிரில் வந்தது
தலையசைத்துக் கடந்தோம் 
சாலைகள் பரிச்சயமாகத் தோன்றின
எப்படி என்ற கேள்வி சேர்ந்து கொண்டது
தொலைத்திருந்தது சாலை அல்ல 
இப்படியாகத்தான் நம்மைக் கண்டெடுத்தோம்
எப்படிக்கு விடைகொடுத்துத் திரும்பினோம்
மீண்டும் ஒரு சாலை ஆரம்பித்திருந்தது 

Tuesday, March 13, 2012

என் இனியா


மீதுருகும் அன்னையாகி
அடி வயிற்றில் 
இடுக்கிக் கொள்கிறேன் 
நொடி அயர்வில் நழுவிச் சென்று
குதித்தோடி விளையாடுகிறது
துயிலும் பாவனையில்
சதா விழித்துக் கொண்டிருக்கும்
என் குழந்தைத்தனம்

Saturday, February 25, 2012

தீ

எதிலும் பட்டுவிடாது 
எரிமலைக் குழம்பருகில்
தழலிரும்பாக 
நடந்து கொண்டிருந்தேன்

அணு அணுவாக
அவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்

Friday, February 24, 2012

ச்ச்சும்மா... ரீஃப்ரெஷிங்கு...


குருடன் யானை பார்த்த கதையாட்டம்... நம்மாளுங்க லிவிங் டுகெதர் அப்டிங்கிற யானைய... அதோட வால் நுனில தொங்கிக்கிட்டிருக்கிற முடியப் புடிச்சுப் பார்த்தே முடிவு பண்ணிடுறாங்க...

இதில வேற ஊர்ல நாலு கழுதை வட்டை போட்டு... பின்னங்காலால உதைச்சுக்கிட்டே போகுது... இதுதான் வெளிநாட்டு யானை அப்டிங்கிறாங்க..  இப்போ லிவிங் டுகெதர்ன்னா என்னன்னு பாடம் எடுக்கணும்னா... நிறையப் பேட்டி எல்லாம் எடுத்து... மேற்கோள் எல்லாம் காட்டி எழுதணும் போலருக்கு... அப்டி எழுதிட்டாலும் விளங்கிட்டாலும்... சக மனுஷன புரிஞ்சுக்கிறதில நம்மள மிஞ்ச யாருமே கிடையாது போங்க... 

எதுக்கெடுத்தாலும் சொல்லி வச்சிடுவாய்ங்க... பெரிய பெரிய எழுத்தாளருங்க.. கொள்கைவியாதியாளர் எல்லாம்... அமெரிக்கா மோகம்... ஐரோப்பா மோகம்... அப்டின்னு... இந்த மோகம்ன்னு ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு இவனுங்க படுத்துற பாடு இருக்கே...முடியல... என்னடா சொல்றீங்கன்னு கொஞ்சமாவது யாராவது சொந்தமா திங்க் பண்றானான்னா... ஊஹூம்.. 

நம்மாளுங்க இருக்கானுங்க பாருங்க... மத்தவங்களப் பாராட்டி ஒரு வார்த்த சொல்றதுன்னா நாக்கு சுளுக்கிக் கழுத்துக்குப் பின் பக்கமாப் போய் ஒளிஞ்சுக்கும்...... உள்ளுக்குள்ள புழுங்கி வெந்து செத்து... அதச் சமாளிக்கிறதுக்கு மத்தவங்கள மட்டம் தட்டி ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கணும்... ஓ... அவனா... அந்தக் காலத்தில அவன் பாட்டன் என்ன பண்ணான் தெரியுமா...?!அவன் அப்பனோட மாமனோட மச்சினியோட தங்கச்சி பையன் இருக்கானே... அவன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு ஏதோ சொல்லிக்கிட்டே போவாங்க... இதெல்லாம் ஏன் சொல்றன்னு கேக்க நாதி இருக்காது... 

ஊர்ல ஒருத்தன் உழைச்சுச் சம்பாதிச்சு பங்களா.. கார்ன்னு செட்டில் ஆனான்னு வைங்க... அவனப் பார்க்கறப்போல்லாம்... இளக்காரமாப் பார்த்து... இவன் என்ன ஜாதி தெரியுமா... இவன் அப்பன் என்ன பண்ணான் தெரியுமான்னு... ஆரம்பிச்சு... ஹூம்ன்னு வயித்தெரிச்சலத் தீர்த்துக்கும்.. 

இல்லையின்னா... ஹூம்.. அந்தக் காலத்தில என்னோட பாட்டன் முப்பாட்டன் எப்டி இருந்தான் தெரியுமா... அப்போ உன்னோட தாத்தன் எல்லாம் என்னோட தாத்தன் கிட்ட பிச்சை எடுத்துக்கிட்டிருந்தான்னு ஜம்பமாப் பீத்திக்கிட்டே பிச்சை எடுத்துக்கிட்டிருப்பாங்க.. 

அதயேதான் வெளிநாட்டுக் காரங்களுக்கும் பண்றது... அவன் எங்கயோ போயிட்டிருக்கான்... அதப் பார்த்து மெச்சிக்க ஒரு வார்த்த இல்ல... ஆனா... நம்மளப் போல உண்டுமா... நாறப்பயலுவன்னு ஏதோ தெரிஞ்ச கணக்குக்கு அள்ளி விட்டுக்கிறது...

இங்கன பஸ்ஸில யாரும் யாரயும் உரசவும் காணோம்.. உரசிட்டான்னு யாரும் கூச்சல் போடவும் காணோம்... செருப்பக் கழத்தி அடிக்கவும் காணோம்... பஸ்ஸ நேர போலீஸ்ஸ்டேஷனுக்கு விடுங்கடான்னு சவுண்ட் விடவும் காணோம்... 

காலேஜ் போற பொண்ணை யாரும் ஈவ் டீஸிங் பண்ணவும் காணோம்... அந்தப் பையன கொண்டு போய் ஜெயில்ல போட்டு மிதிச்சு... அவன் வாழ்க்கையப் பிடுங்கவும் காணோம்...

கண்மணி அன்போடு காதலன் நான்னு... உருகி... உருக்கிட்டு... நான் வேற ஜாதியாம்... எனக்குப் புட்டிப்பால் கொடுத்த அம்மா இப்போதான் ஜாதிப்பால் கொடுத்தாங்க... நானு ஒன்னும் தெரியாத பாப்பா அப்டின்னு யாரும் சொல்லக் காணோம்.. 

ஆனாலும் நம்ம மக்கள் ஆக்ரோஷமாக் கேக்குறாங்க... அவங்க கலாச்சாரம் எல்லாம் நாம கத்துக்கிடணுமாவாம்...

(விதிவிலக்கும்... நல்லது கெட்டதும்... அவங்க கிட்டயும் இருக்கு... ஆனா அந்த 0.001% பிடிச்சு வச்சுக்கிட்டு உதாரணம் காட்டாதீங்கய்யா புண்ணியவான்ஸ்..)

இன்னொண்ணு சொல்றாய்ங்க வெளிநாட்டில எல்லாம் மனநல மருத்துவமனை ஜாஸ்தி ஆயிடிச்சாம்... ஏன்னா மக்கள் எல்லாரும் லூசாட்டம் அலைறாங்களாம்... இத யாரோ ஒருத்தரு சொன்னா... மக்கள் என்னமா கை தட்டுறாங்க தெரியுமா... அமெரிக்காவில ஒரு வயசுக் குழந்தை கூட இங்கிலீசு பேசுதுப்பான்னு சொன்னாக் கை தட்டுற ரேஞ்சுக்கு... 

இங்க மனுஷன்... மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்துட்டு... முடியல... ரொம்ப ஜாஸ்தின்னா... ஓடிப் போய்... இப்டிக் கஷ்டமா இருக்குதுபா... என்ன பண்ண சொல்லுன்னு கேக்கறதுக்கும்... ஒரு குழந்தை இறந்து போச்சுன்னா... மனசு ஒடிஞ்சு செத்துப் போகாம போய்ச் சொல்லி அழுறதுக்கும்... வீட்டில பிக்கல் பிடுங்கல் ஜாஸ்தி ஆயிடிச்சின்னா அதப் பகிர்ந்துக்கிறதுக்கும் கூட... மனநல வைத்தியர் கிட்டதான் போறாங்க... ரொம்பச் சர்வ சாதாரணமாப் போறாங்க... சக மனுஷனப் புரிஞ்சுக்கிற பக்குவம் இருக்கிறதால போறாங்க.. நம்மாளுங்கதான் சைக்கியாரிஸ்ட்னு பேரு கேட்டாலே அலர்றாங்க... 

பைத்தியம்னா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு... சட்டையைக் கிழிச்சுக்கிட்டு இளிக்கறதயும்... அய்யோ ஆள விடுங்கடான்னு மத்த நார்மல்ன்னு சொல்லிக்கிட்டிருக்கிற லூசுங்க கவுண்டமணி ரேஞ்சுக்குப் பாய்ஞ்சுக்கிட்டு ஓடறதயுமே மனக்கண்ணில வச்சுக்கிட்டிருக்கிற... அறிவாளிங்களால அதுக்கு மேல என்ன பண்ண முடியும்.. 

அட மனநல மருத்துவமனை மட்டுமாங்க இருக்கு இங்க..?! எங்க போனாலும் கை கால் முடியாம... சக்கர நாற்காலில இருக்கிறவங்களுக்கு... பார்க்கிங்க்ல அவங்களுக்கு வசதியா பார்க்கிங்க் இருக்கு.... பஸ்ல அவங்க ஏறி இறங்க வசதியா படிக்கு மேல சறுக்குற வழி இருக்கு... அத பஸ்ஸ விட்டு இறங்கி வந்து இழுத்து விடுற ட்ரைவர்... மனுஷன் இருக்கான்... ஹாஸ்பிட்டல்ல இருந்து... ரெஸ்ட்டாரண்ட் வரைக்கும்... அவங்களுக்கு டாய்லெட் இருக்கு... முக்கியமான இடங்கள்ல எல்லாம்... அவங்க ஏறி இறங்க வசதியா நிறைய வசதி இருக்கு... 

ஏன் அதுக்கும் சொல்றதுதானே..?! அங்க ஊனமுற்றவர்களுக்கான கக்கூஸ் ஜாஸ்தியா இருக்குய்யா.... அங்க இருக்கிறவங்க எல்லாம் ஊனமுற்றவங்கன்னு..?! 

திருநங்கைன்னு ஒரு சமுதாயத்தையே உருவாக்கி... அவங்களுக்குப் பஸ்ல கூட இடம் கொடுக்காத நாதாரிங்க.... அவங்க எங்க டாய்லெட் போவாங்கன்னு அத காமெடி பண்ணிச் சிரிக்கிற பேமானிங்க.... ஊனமுற்றவங்கள வச்சுக் காமெடி பண்ணிச் சிரிக்கிற புறம்போக்குங்க.... மத்தவன் நாட்டில ஆஸ்பத்திரி ஜாஸ்தியா இருக்கு... அதனால அவங்க எல்லாம் நோயாளிங்கன்னு பேசற எளவாளிங்க... 

இல்ல... தெரியாமத்தான் கேக்கறேன்... இப்டிப் பேசறவங்க எல்லாம் கலாச்சாரத்தக் காப்பாத்திக்கிற ஒழுக்க சீஈஈலைகள்.... பண்பட்ட பரதேசிகள்... எல்லாம் இருக்கட்டு... இவங்களுக்கு மனுஷங்கன்னு சொல்லறதுக்குத் தகுதி இருக்கா..?!... 


Tuesday, February 14, 2012

எல்லைக்கு அப்பால்

மண்ணினுள் சுழியோடுவதொன்றும்
பெரிய வித்தையல்ல 

இதைச் சொன்னால்
நீங்கள் நம்பப் போவதில்லை

கடவுளரை 
உங்களின் பால் எடை மற்றும் உயரத்தை வைத்து
அளவிடுவது போல் 

தண்ணீரை வைத்துக்கொண்டு
கண்களால் மண்ணைக் குடைகிறீர்கள் 


அவசரப்பட்டு உங்களை - நான்
குற்றம் சாட்டுவதாக எண்ணிக் கொள்கிறீர்கள்

இதைக் கூட என் முன் தீர்மானமாகவே
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் 

நான் மீனுருவில் இருப்பதை
நீங்கள் நன்றாகவே அறிந்திருந்தாலும் 

மண்ணின் அனுபவத்தை வைத்து
தண்ணீரைத் துழாவிக் கொண்டிருக்கிறாய்
என்று விரலை என் நோக்கி நீட்டிக் கொண்டிருக்கிறீர்கள்