header photo

Friday, November 27, 2009

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12


இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...

கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...

ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!

தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!

எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?

உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?

திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!

உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!

(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)


(தொடரும்..)

Tuesday, November 24, 2009

சமுதாய விளக்குமாறுகள்...

பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சிலரால் எதிர்மறையான கோணத்தில் விமர்சிக்கப்படும் பல 'அதி நவீன' சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நான் 'பிறந்து வளர்ந்த' பின்னணியிலிருந்து வந்த 'நம்மவர்'களிடம் நிமிட நேரம் பேசுவது கூட எனக்கு மிகச் சிரமமாக இருக்கிறது.

நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள். செயற்கைத்தனமான, நடை, உடை, பாவனைகளுக்கு மட்டும் 'மாடர்ன்' என்ற வார்த்தையைப் பொருத்துகிறார்கள். இங்கு நான் அணியும் மிகச் சாதாரண ஜீன்ஸ், ஷர்ட்டுக்கும், மாடர்ன் என்ற வார்த்தைக்கும் எனக்கு எந்த சம்மந்தமும் தெரியவில்லை.

ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல). வேலை நிமித்தம் சந்திக்கும் தமிழ் உள்ளங்களிடம் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்குவதும், ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும், மற்ற எந்த நாட்டவர் எனிலும் கை குலுக்குவதும் என்னுடைய வழக்கம்.

எப்போதாவது வீதியில் எதிர்ப்படும்போது, தொலைவிலிருந்தபடியே கையை நீட்டிக் கொண்டு வந்து கட்டிக் கொள்ளும் ஜேர்மன் ஆசானும், கல்லூரியை முடித்துக் கொண்ட கடைசி நாளில் 'give me your cheek' என்று கன்னத்துடன் கன்னம் வைத்து விடைபெற்றுக் கொண்ட ஆங்கில ஆசானும் விதிவிலக்கு. விகல்பத்திற்கு வழியேதுமில்லை.

சொல்ல வந்த விடயம் விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன். 'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி, 'யாரென்றாலும் வாஞ்சையுடன் அணைத்து முத்தமிட்டுக் கொ(ல்லு)ள்ளும் ஒரு அம்மையார், அலுவலக நேரத்தில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஹல்லோ சொல்ல முதல் வந்த வார்த்தை "do you knw, what has that BIT** done?"

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாது.. திகைத்து ஏன் இந்த வார்த்தை... யார்? என்ன?

ஒரு பதினெட்டு வயது இளம்பெண்ணின் பெயர் சொல்லி... அவள் 'வெள்ளைக்காரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்... இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன.

அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து, ஒரு மாதம் ஹனி மூன் செல்லும் ஜோடிக்கும், நம்மவர்களின் பெயர், வயது, ஜாதி சொல்லித் தேடிக் கொள்ளும் ஜோடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஒரு மாதம் ஹனிமூன் சென்ற ஜோடி, சரி வரவில்லை என்று டாட்டா காண்பித்து சுமுகமாகப் பிரிந்து சென்று விடலாம். ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? 'ஆயிரம் காலத்துப் ..........பயிர்' (நல்லா கண்டு பிடிக்கிறாங்கடா) என்று பெயர் சொல்லி... பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்".

(இந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..=)))


________________________________________________________________

எடுத்தியம்பியமைக்கு நன்றி நேசமித்ரன்...
எனது சப்பைக்கட்டு விளக்கமாக இத யூஸ் பண்ணிக்கறேன்... =))

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)//


நன்றி நேசமித்ரன்... ரொம்ப வாஸ்தவம்... எனக்கே அப்டித்தான் இருந்தது... இருக்கு... புத்தகமாகவோ... தொடர் இடுகையாகவோ போட வேண்டியது... எங்கயோ ஆரம்பித்து... சட்டுன்னு எங்கயோ முடிக்கிறப்போ... இந்த உணர்வு தவிர்க்க முடியாதது... பூச்சுக்களற்ற விமர்சனங்கள் என்னால் நேசிக்கப்படுகின்றன.. ரொம்ப நன்றி..!


Sunday, November 22, 2009

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?



இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)

பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.

சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. ஐயோ அவர நான் கண்ணால கூட பார்த்ததில்லீங்க... (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..)... ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். அந்தாளோட 'நச்' விமர்சனங்கள் அட்டகாசம். ஜேசுதாஸ் போல பெரிய பெரிய பாடகர்கள் எல்லாம் அவரு கச்சேரிக்கு வர்றாருன்னா வயித்தப் புடிச்சுக்கிட்டு ஓடுவாங்களாம். சுதா ரகுநாதன் சங்கீதத்த கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணுவாராம். ரொம்ப தில்லான ஆளு...!

இப்போல்லாம் சுதா ரகுநாதன் பேட்டி கொடுக்கிறப்போ "சுப்புடு மாமா...".. "சுப்புடு மாமா"... என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டினது அவங்கதான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறாங்க. சுப்புடுவும் படிப்படியா சுதா ரகுநாதனோட ரசிகராகி ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்துட்டுதான் போனாரு.

இவரோட விமர்சனம் படிக்கிறவங்க வாய சப்புக்கொட்டிக்கிட்டே படிக்கலாம்... என்னா கிண்டலு... என்னா நக்கலு... ஆனா விமர்சனத்துக்கு ஆளானவங்க பாடு மகா திண்டாட்டம். ஆனாலும் பாருங்கோ ஆரோக்யமான விமர்சனம் மிகவும் அவசியம். விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)

நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க. ஒரு ஆபீஸ்ல பாஸ் வந்து.. இங்க பாரு இதில ஒரு தப்பு நடந்து போச்சுன்னா... 'ஓ ஐ ஆம் வெரி சாரி... ஐ ஷால் பி மோர் கேர்ஃபுல்' அப்டின்னு ஈஸியா எடுத்துக்கிட்டு கவனமா இருக்கிறவங்க எத்தன பேரு..? (ஐரோப்பா போன்ற மேலைத்தேய நாடுகளில் இது சர்வ சாதாரணம்..) ஆனா நாம வானம் வசப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை... உணர்ச்சிவசப்படுவதில் பிரியப்படுகிறோம். ஆரோக்யமான விவாதங்கள் கூட வைப்பதில்லை. என்னய்யா பண்ணிட்டான்னு கேட்டா போதும்.. 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.

இதனால் யாருக்கும் எதுவும் ஆகப் போறதில்லை. தற்பாதுகாப்பு இதற்கு அவஸ்யமில்லை. ஆரோக்யமான விமர்சனங்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆரோக்யமாக விவாதிக்கப்பட வேண்டியவை. வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.. (ரொம்பத்தான் ஓவரா போய்க்கிட்டிருக்கேனோ...)

'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '

நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா... நெசம்மாவே அப்டித்தானா அப்டின்னு எனக்கு ரொம்ப மண்டைக் குடைச்சலுங்க....! அதான் மாடரேஷன் போட்டிருக்கேன்ல... ரொம்ப ஓவர்னா சைலண்டா விம் போட்டு கழுவிடலாம்...

இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தலைப்புக்கு விடை: சத்தியமா நான் இல்லை...

_____

Sunday, November 15, 2009

நட்புக் காலத்தில் நானும்...




ஆச்சு முக்கால் வருஷம்... அட வேற ஒண்ணுமில்லீங்க.. இடுகை எழுத வந்து முக்கால் வருஷம் ஆச்சு.. ஹிஹி..

நம்ம இடுகைய.. நம்ம பர்மிஷன் இல்லாம விகடனுக்கு அனுப்பற வானம்பாடிய வச்சுதான்.. வடிவேலு படத்துக்கு... இம்சை அரசன்னு பேரு வச்சிருப்பாங்கன்னு தோணுது... அவங்கள வச்சுதான் என்னோட இந்த இடுகை... ம்ம்.. நூறாவது இடுகை...

யூத்ஃபுல் விகடன்ல உன்னோட இடுகை வந்திருக்கு... இடுகைல போடு...

'ம்ம்.. ஓகே... '

ரெண்டு நாள் கழித்து... திரும்ப வந்திருக்கு.. இடுகைல போடு...

'பார்க்கலாம்...'

மூணு நாள் கழித்து... விகடன் முகப்பில வந்திருக்கு... இடுகைல போடு...

'ஆ..! ஆள விடுங்க சார்... என்னால முடியாது..!'

'ஏன் உனக்கு இதில என்ன கஷ்டம்?'.. எப்பொழுதெல்லாம் விகடனில் வெளியிடப்படுகிறதோ... அப்பொழுதெல்லாம்.. கன அக்கறையா வந்து... பின்னூட்டத்ல 'வாழ்த்துக்கள் ப்ரியா... விகடன் முகப்பில உன்னோட கவிதை..' ... ஸ்ஸ்ஸப்பா முடியல... (ராகவன் சார் கோச்சுக்குவார்... எவ்ளோ அக்கறையா பண்ணா இப்டியான்னு... =))..

சார்... விகடன்ல இருந்து கவிதை கேட்டு எழுதி இருக்காங்க.. மின்னிதழ் வெளியிட போறாங்களாம்...

வாவ்.. வெரி குட்... எழுது எழுது..

பார்க்கலாம்...

எழுதினியா... எழுதினியா... எழுதினியா... எழுதினியா...

இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல... இல்ல....

நாளைக்குள்ள அனுப்பணுமே... இன்னிக்கு எழுது... ப்ளீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்..

பார்க்கலாம்...

எழுதி அனுப்பிச்சதும்... எங்க மின்னிதழ் காணோம்... எப்போ வருது.. எங்க காணோம்... எப்போ வருது... எப்போ வருது...

தெரியாது சார்... தெரியாது.... தெரியாஆஆது....!

அன்று காலையில்... விகடன் எனக்கு மெயில் அனுப்ப முன்னாடி... மின்னிதழ் வந்துடுத்து... உன்னோட கவிதை வந்திருக்கு... அழகா இருக்கு... காங்கிராட்ஸ்...

சரி பார்க்கறேன்.. தாங்க்ஸ் சார்...

இன்னைக்கு... ஒரு இடுகை போடு.. நூறாவது இடுகை...

'சார்... இதுக்காக எல்லாம் இடுகை போட முடியாது.. ஏதாவது தோணிச்சுன்னா பார்க்கலாம்..'..

ஏன்... இதுக்கு என்ன கஷ்டம்... ஒரு இடுகை போடு...

ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்...

ரெண்டு மணி நேரம் கழித்து.. 'என்ன இடுகை போடுறியா..?'...

ஐயோ இல்ல சார்...

அப்போ என்ன பண்ணுறா..

ஒண்ணுமில்ல சார்...

ஸ்டார்ட்டிங் ட்ரபிள்... ஆரம்பிச்சான்னா எழுதிடுவா... ஒரு இடுகை போடு...

ம்ம்.. பார்க்கலாம் சார்...

மூணு மணி நேரம் கழிச்சு... நான் நூறு இடுகைக்கும்.. நூத்தி இருபத்தைஞ்சு ஃபலோவர்ஸ்க்கும் சேர்த்து விஷ் பண்ணலாம்னு நினைச்சேன்... இப்போ பாரு.. நூத்தி இருபத்தியாறு பேரு ஆய்ட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்... இடுகை போடு...

இது பப்ளிஷ் பண்ண ரெண்டு நிமிஷம் முன்னாடி.. 'இடுகை போட்டுட்டியா..?'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்...

_________________________________

இன்று போல் நாளை இருப்பதில்லை...
உன் பேரப்பிள்ளைகளுடன் நீயும்..
என் பிள்ளைகளுடன் நானும்...
இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...
திசையிலும் வரையப்படவில்லை...
பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது..
இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?!

_________________________________

இந்த இடுகையில் என்னுடன் எப்பவும் ஒட்டிக் கொண்டே இருக்கும்... என் ஆத்ம ஸ்நேகம்.. என்னுடைய டெடியையும் அறிமுகப்படுத்தலாம்... டெடி வச்சிருக்கா... குழந்தையா... இல்ல லூஸா (அது எல்லாரும்தானே.. ஹிஹி) என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேணாம்... =))


_________________________________


எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்.. பதிவுலகத்தில் கிடைத்த சொந்தங்கள் மற்றும் நட்புகள் பற்றி... இன்னொரு நாள் விரிவாக எழுத வேண்டும்.. எழுதுவேன்..



___/\___

Saturday, November 14, 2009

தர்மம் பண்ணு தோழா...


அன்றொரு நாள்... அலுவலகத்தின் முன்... துண்டு விரித்து.. Didgeridoo என்னும் இசைக் கருவியை ஒருவன் ஊதிக் கொண்டிருந்தான்... அது வாசிப்பவர்கள் கஷ்டம் ஒரு பக்கம்... கேட்பவர்கள் கஷ்டம் மறு பக்கம்... நன்றாகத்தான் இருந்தது... அருமையான இசையும் கூட.. ஆனாலும்.. அந்த ஒரு மணி நேர மதிய இடைவேளையில்.. அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...





விரிக்கப் பட்டிருந்த துண்டின் முன்.. சில்லறைகள் சிலவற்றுடன் சிறு திருவோடு ஒன்று உட்கார்ந்திருந்தது... துண்டின் ஓரத்தில்.. ஓநாய் சைஸில் ஒரு நாய்.. முன்னங்கால்களை முன்னால் நீட்டி... அதில் தன்னுடைய தாடையைப் புதைத்து... அப்துல் கலாம் கர்நாடக இசைக்கச்சேரியை ரசித்துக் கேட்கும் பாவனையில்... மிகவும் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு.. சர்வ சாதாரணமாகப் படுத்திருந்தது...

அதன் முகத்தையும்.. கண்களையும் உற்றுப் பார்த்தால்... மிகவும் பிரயத்தனப்பட்டு... சகித்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது... அதன் எஜமான் அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று முகத்தை நன்றாக நீட்டி... அந்த வாத்யக் கருவி பக்கத்தில் மறைத்தாற்போல் வைத்துக் கொண்டிருந்தது... பக்கத்தில் வந்த நண்பியிடம்... பாவம் அந்த நாய் என்றேன்...

அந்த அருமையான ஆத்மாவுக்கு...

தோழா...
அதிர்வலைகள்
சகித்துச்
சுகித்தது போலிருந்தாய்
பண்பாடு பேணுவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்
என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!


இதையும் பாருங்க... நான் கதிருக்கு போட்டிருக்கும் பின்னூட்டத்தையும் பாருங்க... அவ்வ்வ்வ்வ்வ்... என்னிய போயீ.. =)
(எனக்கு கலாமும் புடிக்கும்... கர்நாடக சங்கீதமும் புடிக்கும்... ராமவர்மாவும் புடிக்கும்... பாலமுரளிகிருஷ்ணாவும் புடிக்கும்...)



___/\___

Thursday, November 12, 2009

அன்புடன்... விகடன்...

விகடனின்.. முதல் மின்னிதழில்... எனக்கும் ஒரு இடம்... நேற்றைய தினம்... நெகிழ்வாக விடிந்தது... பிரபாகர் அண்ணாவின் இடுகையும்... விகடனின் பக்கமும்... வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்... மற்றைய அனைத்து.. அன்புள்ளங்களின் அன்பும்...

என்னுடைய தொடர் பார்த்து... ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...

நன்றி என்பது வார்த்தை மட்டுமே... இந்த உணர்வை இந்த மூன்று எழுத்துகளில் அடக்க நான் தயாராக இல்லை... 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'..


























நவீன யுகத்தின்
நவ நாகரிகங்களுக்கு
ஈடு கொடுக்க முயன்று
இயந்திரப் பறவையாகி
புயங்கள் கொண்டு
பறக்க எத்தனித்து
குப்புற விழுந்து
காலொடித்துக் கொண்ட நான்..

நொண்டி நொண்டி
நகரங்கள் தாண்டி
நீண்ட பயணத்தின் பின்
மண்வாசனை இன்னும்
கொஞ்சம் மிஞ்சியிருந்த
இரவல் திண்ணையொன்றில்
இளைப்பாறினேன்

துவண்டு விடாதே
தேசம் தொலைத்த
தேவனின் கதியும்
நின்னைப்போல்
நிர்க்கதிதான்
கலைந்து கிடந்த
கேசத்தை வருடிக் கொடுத்த
தென்றல் காதுக்குத் தேனாகி
தேவ கீதம் பாடி...... விட்டுச் சென்றது!

___/\___

Tuesday, November 10, 2009

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே...

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8

பள்ளி விடுமுறையில்.. ஒரு நாள்... மழை விட்டு ஓய்ந்திருக்க... கிடைத்த சிறு வெள்ளத்தில்... காகிதக் கப்பல் விட்டுக் கவுத்துக் கொண்டிருந்தேன்.. கேட் அருகில்... குட்டி போட்ட பூனையாகப் பாட்டி... நொடியில் நெருங்கி... என்ன பாட்டி..? "உஷ் சத்தம் போடாத... அந்த மனுஷன் கண்ணில பட்டுட போறது"... என்ன பாட்டி..?.. "அங்க பாரு".. ஆ... அணில்... இல்லை... அணில் சைஸில் பூனைக் குட்டியேதான்... பாட்டி நிஜமாவே குட்டி போட்டுட்டுதான் சுத்துறாங்களா...?!.. 'எப்படிப் பாட்டி..?!'.. "யாரோ ராவோட ராவா... கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க.." (இப்படிக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் எப்படி இருக்கும் என்று... அவர்களுக்கு இத்தனை நாளில்... பல முறை தெரிந்திருக்கும்... உயிருடன் இருக்கும் பட்சத்தில்..)...

'பாட்டி இத நாம எடுத்துக்கலாமா..?'... "ம்ம்... அந்தப் பக்கம் அந்த மனுஷன் இருக்கார்... இந்தப் பக்கமா... தட்டுமுட்டு சாமான் போட்டு வைக்கிற ரூம்ல கொண்டு போய்டு.. இல்லைனா நாயிங்க கடிச்சுக் குதறிடும்".. 'ஸ்ஸ்ஸ்ஸரி பாட்டி'.. ரகசியமா.. தாத்தா கண்ணில் படாது... பூனைக்குட்டி அங்கு குடியேற்றப்பட்டு... மூன்று வேளை தவறாது பால் ஊற்றப்பட்டு.. கிட்டத் தட்ட... ஐந்து நாட்களுக்கு மேல்... தாத்தாவின் பார்வை படாமல் வளர்க்கப்பட்டது... தெரிய வந்த போது... தாத்தா வாளாவிருந்தது.... ஆச்சரியமாக இருந்தது... (அடுப்பங்கரையில்... எலிப்பொறி வச்சு... பாட்டி உண்ணாவிரதம் இருக்கிறத விட... இவளே பொறி வளர்க்கிறாளே... பேஷ் பேஷ்..என்ற நினைப்போ.. சுப்பு மைன்ட்.. சொல்ல முடியாது..)...

ஆபரேஷன்... லிபரேஷன்... பெயர்வுகள்... வீட்டை விட்டு அசையாத... சுப்பு... லக்ஷ்மி... விட்டு... நன்றியுள்ள நாய்கள் விட்டு... பூனைக்குட்டியும் விட்டு... பூந்தோட்டமும் விட்டு... அம்மா கையில் மூட்டை முடிச்சு... அப்பா கையில் பெட்டி... படுக்கை... ஒன்றா... இரண்டா... எத்தனை மைல்கள்.. நடந்து.. நடந்து... நடந்து.. 'Rabbit proof fence' பார்த்த போது... வலி உணர முடிந்தது... 'அம்மா கால் வலிக்குதும்மா... தூக்குங்க..'... 'அம்மா கைல மூட்ட முடிச்சு... எப்டிம்மா...' .. 'அப்பா தூக்குங்க..'.. 'வாடா...'.. தோள்களில் நானும்... கைகளில்.. பெட்டிகளும்... அப்பாவும்... 'அப்பா பாவம்டா... கொஞ்சம் இறங்கி நடம்மா செல்லம்.. இப்போ வந்துடும்...'... சிணுங்கியபடி... நடந்து... நடந்து... 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'..

அடிப்படை வசதிகள் அற்ற... ஆனால்... மிக மிக அழகிய கிராமம்... தாமரைத் தடாகங்கள்... வானுயர்ந்த தென்னந் தோப்புகள்... காடுகள்... தாமரையையும்... குரங்கையும்... நாவல் மரத்தில் பழத்தையும்... நேரில்ப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நாட்கள்... ஆனால்... அந்த அழகை ரசிக்க முடியாது... தினம் தினம்... நொடிக்கு நொடி... பாட்டி.... தாத்தா... ஜிம்மி... 'டைகர்'..(நாய்க்கு பாட்டி வைத்த பெயர்..).. போலீஸ்...(இதுவும்தான்..).. பூனைக்குட்டி... நினைத்து நினைத்து... அழுது கழிந்த நாட்கள்...

இரு வாரத்தில்... மீண்டும் எச்சரிக்கை... ஒல்லிக் குச்சி அம்மா... எப்படிச் சாதித்தார்கள்... எப்படிப் போனார்கள்... எப்படி வந்தார்கள்... தெரியாது...! திரும்பி வரும்போது... பாட்டியும்... தாத்தாவும்... டைகரும்... சேர்ந்து... "பாட்டி.... தாத்தா..!".. "கடவுளே.. ஜிம்மி பாதி தூரம் வரைக்கும் ஓடி வந்திச்சுடா... டிராக்டர்ல வந்தோம்... முடியாம திரும்பிடுத்து... போலீஸுக்கு வயசாச்சில்ல... அதால முடியல.." ... "பாட்டி... பூனைக்குட்டி..?!"... "அது வீட்டுக்குள்ளதாண்டா..."... கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டார்கள்...

இரு மாதங்களோ... அதற்கு மேலோ... ஆச்சு... போகலாம் என்று செய்தி வந்து... கிளம்பி வந்த போது... கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...

வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில்... தொட்டி விளிம்பில்... பாட்டி ஆசை ஆசையா தேங்காய்த் துருவலும்... சோறும் கலந்து... அணிலுக்கும்.. காக்கா குருவிகளுக்கும் போடும்... மாமரத்தின் கீழிருக்கும்.. மேடையில்... இரத்தக் கறைகள்... கோழியோ... ஆடோ... மாடோ... எதையோ.. .இங்கே வைத்து வெட்டி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்... அவற்றை மட்டுமா...?..

தாத்தா பாட்டி போல்... வீட்டிலிருந்த... எல்லாப் பாட்டிகளும்... அனைத்துத் தாத்தாக்களும்.. ஆர்மி வந்தால்... வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளல் ஆகாதென்று... வாசலில் உட்கார்ந்திருந்து... போதை மருந்தின் உச்சவெறியில் உலவிய... ஆர்மியின்... துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பலியாகி... சொந்த வீட்டு வாசலில்... அநாதைப் பிணங்களாக... கொள்ளி வைக்க ஆள் அற்று... துர்நாற்றம் தாங்காது... எங்கயோ கோயில் கும்பிட்டுக் கொண்டிருந்த... ஒரு தமிழனைப் பிடித்து... அவரவர் வீட்டின்... கொல்லைப் புறங்களை... அவரவர் வீட்டின் தோட்டங்களை... இடுகாடாக்கி... குப்பைகள் போல்... குவித்து... கொள்ளி வைக்கப்பட்டனர்...

மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்... டேய்... அங்கதான் எங்க அப்பாச்சி... அப்பப்பா... எல்லாரையும் எரிச்சாங்க... ஜாக்கிரதை என்று... பாட்டிகளையும்... பாட்டன்களையும் சொந்த வீட்டில்.. இரவல்க் கொள்ளிக்குக் கொடுத்த... பேரன்.. பேர்த்திகள்... பயமுறுத்திக் கொண்டிருந்ததும்... பயந்து கொண்டிருந்ததும்... நடந்தது...

அந்தச் சில நூறு பேர்களில்... பிணங்களுடன்... பிணங்களாகக் கிடந்து.. தப்பியவர்கள்... ஒன்றோ.. இரண்டோ... பாட்டிகளின்... காதில்... கழுத்தில்... கையில் இருந்த நகைகளை... அங்கங்களைத் துண்டித்து... அறுத்துச் சென்ற கணத்தில்... உயிருடன்... அக்குவியலினுட் கிடந்த பாட்டி ஒருவரின் காதும் அறுபட்டதற்கு... இன்னும் நடமாடிக் கொண்டிருக்கும்... அவரும்... அவரின் காதும் சாட்சி...

(வீட்டிற்குள் என்னவோ.. ஏதோ... என்று... பயந்தபடியே... கதவைத் திறந்த போது... புஷ்டியாக வளர்ந்து... நன்றியுடன்... முழு வேகத்துடன்.. (பூனைக்கு நன்றியில்லை என்று யார் சொன்னது..?).. மியாவ் என்று பாய்ந்து வந்து தொற்றிக் கொண்ட பூனையும்... இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருந்த.... போலீஸ்... மற்றும்... ஜிம்மியும்... ஒரு சின்ன ஆறுதல்...)


தொடரும்...

Sunday, November 8, 2009

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...

Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6

இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...

இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...

பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....

டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....

வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...

இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...

கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!

உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..


(தொடரும்...)

Tuesday, November 3, 2009

இது ஒரு தொடர் கதை...



எங்கேடி ப்ரியா? ஏய் வா... நேத்து இடைல விட்ட கதைய சொல்லி முடி... பள்ளி மைதானத்தில்... ஓரமாக இருக்கும் மரநிழலில் இடம் பிடித்து... லஞ்ச் பாக்ஸ் திறந்து வைத்துக் கொண்டு.. வட்டமாக உட்கார்ந்து.. பேசும் கதைகள்... பாடும் பாட்டுக்கள்... (ஓ..! இது வேற ஒரு பதிவில் சொல்லலாம்..=))..)..

மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...

விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...

இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)

இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...

இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..

இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...

வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..

(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )

இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!

இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...

மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!


(யார்அது. .? அப்பாடி தொலைஞ்சான்னு பெருமூச்சு விடுறது.. வருவோம்ல... இருங்கடி..)

___/\___