header photo

Tuesday, October 27, 2009

அவ்வ்வ்வ்வ்வ்... மக்களே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப வருஷங்களுக்கப்புறம்.. :P

Monday, October 26, 2009

ஞானும்.. பின்னே ஞானும்.. நடுவே ஞானமும்..

அமெரிக்க நாட்டவன்..
அந்தமான்..
எகிப்து..
ஐரோப்பா..
அறிமுகங்களிடையே..

யார் நீ..
இதயத்தின்..
ஆழத்திலிருந்து..
அடையாளப் படுத்திச் சொல்..
என்றார்கள்..

சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்..

நீ காயப் பட்டிருக்கிறாய்..
நாட்டைத் தவிர்க்கிறாய்..

இல்லை...
என்ன இல்லை எனக்கு..
ஐரோப்பாவின் அழகு தேசம்..
எனை அங்கீகரித்திருக்கிறது..

பிரஜா உரிமை..
அடையாள அட்டை..
கடவுச் சீட்டு..
இங்கே பிறந்தாயா..
மற்றவர் தடுமாறும்..
மொழித் திறன்...

ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..

என்...
தந்தையும் தாயும்..
மகிழ்ந்து குலவிய..
மண்..
நான் பிறந்த மண்..
தவழ்ந்த மண்..
தழும்பேறி..
அடையாளம்..
அற்றிருக்கையில்..

என்..
உடன் பிறப்பின்..
எஞ்சிய எலும்புகள்..
சிதைந்து..
சுண்ணாம்புப்..
பாறையாகி...
அதுவும்..
உதிர்க்கப்பட்டு..
அதை வைத்தே..
துருப்பிடித்திருக்கும்..
தூண்களுக்கு...
வெள்ளை பூசி...

ஓ.. !
மறந்து விட்டேன்..
சில...
நேரங்களில் நீவிரும்..
நியாயம் பேசுகிறீர்..
ஆம்.. நான்..
காயப் பட்டிருக்கிறேன்..
தயவு செய்து..
மன்னிக்கவும்..

வெண் சுண்ணாம்பு..
நானென்று..
என்னை நான்..
அடையாளம் காட்ட..
என்னால் இயலாது..
சுட்ட மண்..
ஒட்டாது...

என்..
தோற்றம்..
நிகழ்ந்து விட்டது..
வசிப்பிடம்..
பதிவு செய்யப்பட்டது..
மறைவு..
நிச்சயிக்கப்பட்டது..
நீறாக்கும் இடம் கூட..
ஆனால் அஃதை..
அறிந்து கொள்ளும்..
ஆற்றல் எனக்கில்லை..

நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..

___/\___

Saturday, October 24, 2009

போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே...


Part 1
Part 2
Part 3



தடையற்ற பேச்சு.. தடையற்ற எழுத்து.. தடையற்ற சிரிப்பு.. ஓடி விளையாடு பாப்பா.. என்று ஓய்ந்திருக்காத காலம்.. எங்கும் எதிலும்.. சுதந்திரக் காற்று.. தமிழனைத் தமிழன் ஆண்ட காலம்.. பொற்காலம்.. பருவ வயதில்.. பாட்டி சேலை போர்த்த வேண்டிய தேவை இல்லாதிருந்த காலம்.. பட்டாம் பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்த காலம்.. அந்தக் கால கட்டத்தில் என் பருவகாலமும் அகப்பட்டது.. வசந்த காலம்.. நம் மூதாதையர் முற்றிலும் பாவம் செய்து விடவில்லை.. அவ்வப்போது புண்ணியமும் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்த காலம்.. ஆனால்... ஒரே... ஒரு தடை மட்டும்.. அது..

பொருளாதாரத் தடை.. ஷாம்பூவிற்குப் பதில்.. சிகைக்காய்.. அதுவும் போய் மாங்காய்... சீசன் இல்லையெனில்.. சோறு ஆக்கி வடிக்கும் கஞ்சி.. சில பல வீடுகளில்.. அதுவே பிரதான உணவு.. ஆடுகளும்.. மாடுகளும்.. மனிதர்களைப் போட்டியாகப் பார்த்த காலம்.. உப்புக்கு பேர் போனது நம் ஊர்.. சவர்க்காரம் செய்ய வக்கில்லையா நமக்கு.. ஆசிரியர்களும்.. துணை வேந்தர்களும்.. மேடை மேடையாக முழங்கிய காலம்.. ஏன் முடியாது.. ரோஷத்துடன்.. அடுத்த நாளே.. நாற்றமா.. துர்நாற்றமா.. பிரித்தறிய முடியாத வாசனையில்.. லிக்விட் சோப்..

மின்சாரம் போய்.. மின்குமிழ்களில் சிலந்திவலை படர்ந்து.. பெட்ரோமாக்ஸ் போய்.. மண்ணெண்ணெயும் அற்றுப் போய்.. மட்டுப் படுத்தப்பட்ட.. தேங்காய் எண்ணெயில்.. கொஞ்சம் சமைக்க.. கொஞ்சம் தலையில்.. மீதி .. பழைய ஜாம் போத்தலில்.. பாதி வரை தண்ணீர் விட்டு.. உப்புப் போட்டு.. எண்ணெய் மேலே விட்டு.. திரிக்கு ஸ்டாண்ட் வைத்து.. பழைய வேஷ்டி கிழித்து.. திரி செய்து.. இரு துளி எண்ணெயில் விடிய விடிய விளக்கெரித்த காலம்.. தாத்தாவின் ரால்லி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு.. டைனமோவில் இணைப்புக் கொடுத்து.. பெடல் மிதித்து ஆனந்தமாய்.. பாட்டுக் கேட்ட காலம்... இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்..

தமிழறியாத் தரைப்படை.. இல்லாதிருந்த காலம்.. கையாலாகாத்தனமாய் விமானப்படையனுப்பி.. படை படையாகக் குண்டு பொழியப்பட்ட காலம்.. கடற்படையினரால்.. கண்மூடித்தனமாய்.. எறிகணைகள் எறியப்பட்ட காலம்.. தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்..





ஸ்போர்ட்ஸ்
மீட்டிங்.. எல்லாரும் கலந்துக்கணும்.. வேட்டையாடும்.. அக்காஸ்... டிமிக்கி கொடுத்து.. ஓடி ஒளிய உதவும்.. மாடிப் படிகள்.. தேவாரம்.. திருவாசகம்.. திருப்புகழ்... "வான்முகில் வழாது பெய்க... மலிவளஞ் சுரக்க மன்னன்.. கோன்முறையரசு செய்க.. குறைவிலா துயிர்கள் வாழ்க" (ஹஹா..) பாடிய.. ஆஸெம்ப்ளி மேடை.. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று.. இதயத்தில் கை வைத்து.. மண்டையைப் போட்ட அதே மேடை..

மோட்டார்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து.. உள்ளங்கை சிவக்க.. கயிறு பிடித்து.. கிணற்றில் தண்ணீர் இறைத்து.. குளித்து.. லிக்விட் சோப்பு போட்டுத் தோய்த்த வெண்ணிற யூனிஃபார்ம் அணிந்து.. டை கட்டி.. இரு ஜடை போட்டு.. கருஞ்சாந்தணிந்து.. பள்ளிப்பையுடன்.. லஞ்ச் பாக்ஸ் எடுத்து.. வீதி வரை வந்து அம்மா கொடுக்கும் வாட்டர் கேன் சகிதம்..

மாடிக் கட்டிடங்களுடன்.. நிழல்பரப்பிய மரங்களுடன்.. கான்டீனுடன்.. அதே .. ஆஸெம்ப்ளி மேடையும் சேர்ந்து.. சிதைக்கப்பட்டு.. தரை மட்டமாகி.. கற்குவியல்களாகி.. இடுகாடாகி.. இரு வாரம் ஆகவில்லை.. அதையும் தாண்டி.. அதையும் கடந்து.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து.. படித்து.. படித்து.. ஓடி.. ஆடி.. விளையாடி..

யாரை நம்பி நாம் பிறந்தோம்.. போங்கடா போங்க.. என்று நெஞ்சு நிமிர்த்தி.. தமிழனின் விதிமுறைகளை அடி பிசகாது பின்பற்றி.. சைக்கிளில் சமாந்திரமாக வந்து.. தமிழச்சிப் போலீஸிடம் மாட்டி.. பத்து ரூபா அபராதம் கட்டி.. படு பாவிங்க என்று திட்டி.. சிரித்துக் கடந்து.. புயலுடன் கூடிய.. இடி மழை.. அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி..

(தொடரும்.. )


Thursday, October 22, 2009

கூட்டுக் களியினிலே..

பிள்ளையார் கோயில்.. நிழல் பரப்பும் அரசமரம்.. திராட்சைத் தோப்புகள்.. வயல்வெளிகள்.. தோட்டங்கள்.. பசுமையினூடே கரு நாகமாய்.. தார் வீதிகள்.. வீதியுடன் முட்டி.. முச்சந்தி.. அடையாளமாய் ஆலமரம்.. எதிரே ஒரு பென்ச் போட்ட உணவகம்.. பக்கத்தில் போஸ்ட் ஆஃபீஸ்.. ஃபார்மஸி.. மளிகைக் கடை.. சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை.. அதற்கும் ஒரு எதிர்க் கடை.. அதையொட்டி நெருப்புத் துண்டுகள் அடங்கிய ஒரே ஒரு இஸ்திரிப் பெட்டியை மட்டுமே நம்பிய சலவைக் கடை.. கொள்ளி அருகிலேயே உண்டென்று படபடத்து காற்றிலாடும் கிடுகினாலான சுவர்கள்..

வடக்கே நீளும் பிரதான வீதி.. அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.. தூணில் அழகியதாய் நல்மாடம்.. மாளிகை.. கேணி.. தென்னைமரம்.. கீற்று.. இளநீர்.. முத்துச் சுடர் போல நிலவொளி.. குயிலோசை.. தென்றல்... தவிர.. வாழை... மா.. பலா.. மல்லிகை.. செம்பருத்தி.. வெண்டை.. கத்தரி.. அரைக்கீரை.. முளைக்கீரை.. அருகம்புல்லுடன்.. கோரைப்புல்லும்.. குரோட்டன்ஸ்.. மற்றும் சில புதர்களும்.. நல்ல பாம்புடன்.. சாரைப் பாம்பும்.. கீரியும்.. பூனையும்.. நன்றி நவில நாய்கள் பலவும்.. கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்..

வாத்தியார்.. வைத்தியர்.. வக்கீல்.. வெட்டி ஆஃபீஸர்.. வேறுபாடின்றி.. காலைக் கருக்கலில்.. மாலை மயக்கத்தில்.. தோட்டத்தில் பணி புரிவோர்.. வீக்கென்ட்.. ஸ்ட்ரெஸ்.. பிரஷர்.. டிப்ரெஷன்.. டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்..

அதிகாலை ஐந்து மணி டியூஷன்.. எட்டிலிருந்து இரண்டு வரை பாடசாலை.. மூன்றிலிருந்து ஆறரை வரை டியூஷன்.. ஹோம் வொர்க் பண்ணும் பொழுதோ, கை கால் கழுவும் பொழுதோ.. காலையில் வாரிய முடியை சரி செய்யும் பொழுதோ.. தூங்கி விழும் பொழுதோ.. தூங்கும் பொழுதோ.. அரை வயிறேனும் என்று அரற்றியபடி அம்மாவின் கையால் ஊட்டப்படும் பால் மற்றும் சாதம்..

தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்... மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..

தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.. நிற்க.. கணக்கில் நூறு.. வகுப்பில் முதல்.. மூஞ்சி பளிச்.. எதுவும் வேண்டாம்.. முடி ஒரு இன்ச் வளர்ந்து விட்டது.. வாரா வாரம் காரணம் சொல்லி.. திருஷ்டி கழிக்கும் அம்மா..

எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏன் என்று நினைத்த நாள் ஒன்று....

தாத்தா வீட்டின் கேட் அருகே.. அழகாய்ப் படர்ந்த முல்லைக் கொடி.. வீதியில் நடப்பவை என் கண்ணுக்குத் தெரியும்.. என்னை வீதிக்குத் தெரியாத ஒரு ஒன் வே செட் அப்..

யானை வரும் பின்னே.. மணி ஓசையாய்.. குரல்கள்.. கோஷங்கள்.. சாரை சாரையாய்.. பெண்கள்.. ஆண்கள்.. குமரிகள்.. கிழவிகள்.. கத்தியபடியே.. மடியிலிருந்த சில்லறை வாரி தெருவில் இறைத்த பெண்மணி.. அதை மிதித்தும்.. தாண்டியும் சென்ற ஏழை.. பாழை.. நடுத்தர வர்க்கம்.. ஏன்..?

பள்ளித் தலத்தில்.. படத்தில் கண்டவை.. மனதில் பதியாது.. மணியைப் பார்த்து.. பாய்ந்து ஓடி.. படித்து.. படித்து.. படித்து.... பள்ளித் தோழிகளிருவர் காணாது போய்.. படையில் சேர்ந்ததும்.. வாத்தியார் மகன் அந்தர்த்யானம் ஆகித் தமிழ் ஆர்மியில் சேர்ந்ததும்... பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?

(தொடரும்..)

Tuesday, October 20, 2009

கடல் யோகி...

சாதாரண விட்டத்தில்..
பாதியே கொண்ட..
மூக்குத் துவாரம் வழியே..
உட்கொண்ட பிராணவாயு..
நுரையீரலில்..
சொற்ப அளவிலேயே..
சேமிக்கப் பட்டிருக்க..

சமுத்திரத்தின்..
ஆழம் அறியாது..
கால் விட்டு..
முன்னேற்பாடு ஏதுமற்று..
சுழி ஓட ஆரம்பித்து..

முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..
குறிக்கோள் ஏதுமின்றி..
நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துழாவி..

பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..

அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..

நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..

தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது..

ஆழ் கடலின்..
மணல் மேட்டில்..
இராட்சத நிழற்குடை..
அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..

நாளத்தின் குருதி..
நாடியை நாட..
இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது..

படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..

::::::::::...
:::::::::::::::::....
::::::::::::::::::::.....

Sunday, October 18, 2009

வடிவேலு vs. வெடிவாலு..

காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!

ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.

வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?

வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹிஹி..

வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?

வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..

வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...

வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?

வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..

வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...

வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..

வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..

வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?

வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..

வடிவேலு: அப்போ பட்டாசு...?

வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...

வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..

வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..

வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹி..

வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..

வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..

வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..

வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..

வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?

வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..

வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..

வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "

வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..

வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..

வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..

வெடிவாலு: "மேல"..

வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...

வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..

வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..

வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..

வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..

வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..

வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..

வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..

வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."

வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..

வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....

வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...

வெடிவாலு: அண்ணே..

ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...

வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..

பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..


______

Saturday, October 17, 2009

தீபவழி..

இந்து மா சமுத்திர குமாரி..
அக்கினி தேவனின்..
கோபக் குழம்புகளால்..
அதிர்ந்த போது..
ஆழிப் பேரலை..
சுனாமி என்ற..
பெயர் தாங்கி..
பூமித் தாயின்..
புத்திரங்களை..
இலட்சங்களில்..
இரை கொண்டது..

தை பிறந்தால்..
வழி பிறக்குமென..
மார்கழியை..
விரட்டுவதில்..
முனைந்திருந்த..
மாந்தர்கள்..
மலைத்திருந்தது..
அரைத் திங்களுமல்ல..

ஆங்கில நாள் காட்டியில்..
வருடம் புதிதாய்ப் பிறந்ததும்..
நம்மவர்க்கு..
வழியும் பிறந்தது..
விதி வலியதென்று..
விரக்தியை விரட்டி..
வெங்காய வெடி வாங்கி..
வெடித்து அழுது மகிழ்ந்து..
வேறென்ன செய்ய..?

குரங்குப் பிடியா..
குளிக்காம முழுகாம..
குப்புறக் கிடந்து..
குமுறியழுது..
கண்ட பயனென்ன..?

நரக அசுரன்..
சொர்க்கம் சென்றதோ..
தேவர் மகன்..
அவதரித்ததோ..
இருளைத் தள்ளி..
ஒளியை ஏற்றி..
உள்ளும் புறமும்..
அசுத்தம் நீக்கி..
மாசற்ற மணிச்சுடராய்..
சிரித்து மகிழக் காரணம்..
எதுவானால் என்ன..?

சிரிப்பதா என்று..
அடிக்க விழைதல்..
அரக்கத்தனத்தின்..
உச்சமில்லையா..?

தமிழ் அழுவதை..
வேடிக்கை பார்க்கும்..
வதை குலத்தை..
வாட வைத்து...
வலியதோர்..
விதி செய்வோம்..

இன்றைக்கு...
ஒரு நாளேனும்..
இருளகற்றி..
ஒளியேற்றி..
இன்னல் களைந்து..
இன்பமாய் வாழ..

என்..
இனிய..
தீபாவளி நல் வாழ்த்துகள்..!



___/\___


Tuesday, October 13, 2009

தமிழே.. அமுதே.. என் உறவே..

தமிழன்னையை நெஞ்சில் வைத்துப் போற்றும் தமிழுறவுகளுக்கு இது சமர்ப்பணம்..


பத்துப் பரப்பு..
பாக்கு நீரிணையில்..
சேறுகளிடையே..
சுற்றிச் சுற்றி..
பட்டும் படாமலும்..
படர்ந்து கொண்டிருந்த..
தொப்புள்க்கொடி..
என் கண்களுக்குப்..
புலப்படவே இல்லை..
புத்த தேசத்துப்..
பெருமகனார் பேருதவி..
நீரிணை தாண்டி..
சமுத்திரம் தாண்டி..
கண்டம் கடந்தோம்..
சலிக்காது சளைக்காது..
தொடர்ந்தே வந்த..
என் தொப்புள்க்கொடி..
நீந்தி நீண்டு..
நீரிலிருந்து தலையை நீட்டி..
வாசுகிப் பாம்பையே விஞ்சி..
விசாலமாய் நின்று..
வெறித்திருந்த விழிகளில்..
வியப்பை விதைத்தது..

பாலும் வேண்டாம்..
கடலும் வேண்டாம்..
மலையும் வேண்டாம்..
மத்தும் வேண்டாம்..
தேவரும் வேண்டாம்..
அசுரரும் வேண்டாம்..
பாம்பும் வேண்டாம்..
நஞ்சும் வேண்டாம்..
என் பாட்டனும்..
முப்பாட்டனும்..
முன்பே கடைந்து வைத்த..
அமுதம் என் தமிழ்..
சேர்ந்து சுவைத்திட..
தமிழே.. என்..
தமிழுறவே போதும்..!

பெருமையுடன்
ப்ரியா..

___/\___

Monday, October 12, 2009

சமுதாயப் புழுக்கள்..

சமுதாயப் பூச்சுக்கேற்ப..
வண்ணமணிந்துறங்கும்..
பச்சோந்திகள்..

பட்டாம் பூச்சியின்..
இயற்கை வண்ணம்..
உறுத்துவதாக..
உளறிக் கொண்டிருக்கும்..
உலக்கைக் கொழுந்துகள்..

நயம் செய்வதாகச் சொல்லி..
சுயம் என்பதைக் கெடுத்து..
நலத்தைக் கடையில் வைத்து..
சுயநலத்தைச் சிரமேற்கொண்டு..
பொதுநலம் பேசித் திரியும்..
போதகர்களின் பேதகத்தால்..

வண்ணத்துப் பூச்சிகள் பல..
நிறத்தை உதிர்க்க முடிவெடுத்து..
சிறகிழந்து கம்பளிப் பூச்சிகளாய்..
மயிருமிழந்து புழுக்களாய்...
நெளிந்து கொண்டிருப்பது..
சமுதாயச் சிறப்பென்றும்..
சிறகுடனிருப்பது சீர்கேடென்றும்..

இன்னும் பற்பல சொற்கள்..
தோண்டிக் கொண்டிருக்கிறார்கள்..
புழுக்களைப் புதைத்து..
போன்சாய்ச் செடிகளுக்கு..
உரமிடலாமென்ற..
உயரிய நோக்குடன்.. !

___

Sunday, October 11, 2009

திக்குத் தெரியாத காட்டில் ஈ தேடி இளைத்தேன்..

ஆபீஈஸ்ல ஈ விரட்ட ட்ரை பண்ணி.. கடைசில ஈ என்னை விரட்டி வீட்டுக்கு வந்து உக்காந்து ஒரு ஈ .. ச்சே.. காப்பிஈ சாப்டலாம்னு பார்த்தா போன் டிரீஈங் டிரீஈங்-னு ரீங்காரிக்குது. இதுக்கு ஈயே ஓட்டி இருக்கலாம்னு சலிச்சுக்கிட்டு போன் எடுத்து.. யா ப்ரியா அப்டின்னா.. எதிர்ல.. ஒரு அம்முனி ஜெர்மன்ல பதட்டமா பேசுதுங்க.

போன்ல அசால்டா ஹல்லோ சொல்லி எதிர்ல திடீர்னு டமில் தவிர்ந்த வேற பாஷை கேட்டிச்சின்னா நாம உஷாராகி ஃபுல் அட்டென்சன்ல பேசுவோம்ல.

சொல்லுங்கம்முனி..

நான் மனோதத்துவ நிபுணிஈ.. இங்க ஒரு பிரச்சன.. ஹெல்ப் பண்ண முடியுமா ப்ளீஈஸ்..

சொல்லுங்க.. என்ன..?

இல்ல ஒரு டமில் ஃபமிலீஈ.. (என் காதில ப்ரூஸ் லீஈ ன்னு கேக்குது).. கொஞ்சம் பிரச்சன.. நேர வர முடியுமா ப்ளீஸ்..

(கராத்தே தெரியலைனாலும் கைய மடக்கிக்கிட்டு..) எப்போ.. இப்போவா?

ஹிஹி.. ஆமாம் ப்ளீஸ்.. சாரிஈ.. இட்ஸ் அன் எமெர்ஜென்சிஈ..

ஹ்ம்ம்.. உங்க அட்ரஸ்? ............ ஓகே.. ஆம் ஆன் த வே..

தாங்க் யூ.. தாங்க் யூ.. இட்ஸ் வெரி நைஸ் ஆஃப் யூ..

ஹிஹி.. நோ ப்ராப்ளம்..

காப்பீஈ மேக்கர சோகமா பார்த்து.. ஒரு கைல ஹான்ட்பாக் எடுத்துக்கிட்டு.. மத்த கைல ஷூ எடுத்து கால்ல மாட்டிக்கிட்டு.. கார் கீஈய வாயால கவ்விக்கிட்டு கார் வரைக்கும் தத்தி தத்தி ஷூ மாட்டி முடிச்சு.. கார கிளப்பி.. டிராபிக் ஜாம்ல அவிஞ்சு அங்க போனா..

ஒரு அம்முனி வாசல்லையே கைய பிசைஞ்சுக்கிட்டு நிக்குது.. என்னிய பார்த்ததும் ஈஈன்னு இருக்கிற பல்லு ஃபுல்லா காண்பிச்சு சந்தோஷமா சிரிக்குது... அட அட.. காப்பியாவது ஈயாவது.. இந்த ஈஈ டானிக் போதும்..

பதிலுக்கு ஒரே ஒரு ஈய திருப்பி.. அறிமுகம் பண்ணிக்கிட்டு.. இன்னா மாட்டருன்னா.. கிட்ட கிட்ட அழுதுடிச்சி அந்தம்முனி..

மெதுவா கைய குலுக்குற சாக்கில ஆறுதலா கைய தட்டிக் கொடுத்து.. என்னங்கம்முனின்னு இதமா கேட்டா..

இல்ல.. ஒரு டமில் ஃபாமிலீஈ.. அஞ்சு மணிக்கு வச்ச அப்பாயின்ட்மென்ட்.. இப்போ ஆறு மணி ஆச்சு.. இன்னும் வரலை.. எனக்கு ஆறரைக்கு அடுத்த அப்பாயின்ட்மென்ட் இருக்கு.. இவங்க இப்போ போன் பண்ணி.. அட்ரஸ் தெரியாம கிழக்கால வர்றதுக்கு மேற்கால போய்ட்டாங்களாம்.. அவங்களுக்கு புரிய வைக்கிறதும் கஷ்டமா இருக்கு.. நான் போன்ல அப்டி இப்புடின்னு கொஞ்சம் கோபமா பேசிப்புட்டேன்.. தப்பா.. அப்டின்னு அழுவுது..

(அட ச்சை.. சப்ப மாட்டரு.. இதுக்கு போய்.. ஒரு காப்பிய மிஸ் பண்ண வச்சுட்டியளே அவ்வ்வ்வ்வ்வ்.. ச்சே நானும் அழலாமா..) ச்சே ச்சே.. நீங்க வேறைங்கம்முனி.. நம்மாளுங்களுக்கு இதெல்லாம் உறைக்காது.. நீங்க திட்டினதெல்லாம் திட்டே இல்லிங்கம்முனி.. நம்ம ஊர்ல சூப்பரா திட்டுவாங்கம்முனி.. பார்த்துக்கலாம் உக்காருங்க..

ஈஈ.. தாங்க் யூ.. டீஈ.. காப்பீஈ..?

ஹிஹி.. டீஈ ப்ளீஸ்... (இது போடுற கஷ்டத்திலதானே காப்பீஈ மேக்கர நாடினோம்.. நம்ம இஷ்டக் கடவுள் முருகன் எப்டி எல்லாம் நமக்கு ஹெல்ப் பண்றாரு.. தாங்க்ஸ்பா..)

சரியா டீஈ.. சாப்ட்டு முடிக்கவும் பெல் அடிக்கவும் சரியா இருந்திச்சு.. (இதில நம்மாளுங்க ரொம்ப கரீஈட்டா இருப்பாய்ங்க..)

மணிச் சத்தத்தில.. முத்தாக இருந்த அம்முனியின் மூஞ்சி சிவந்து ரூபியாகி ஜொலித்தது... மெய்யாலுமே திட்டலாம்கிறியா அப்டின்னு இன்னொரு வாட்டி உறுதிப்படுத்தி.. நான் திட்டுறத நீ அப்டியே உன்னோட பாஷைல திட்டணும் செரியான்னு.. கேட்டுக்கொண்டு.. கதவைத் திறந்தது..

அந்த மூஞ்சிங்கள பார்த்ததும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது.. கைல எம்ப்டியா இருந்த டீஈ கப் தூக்கி சாப்டுற மாதிரி சிரிப்ப மறைச்சு.. சமாளிச்சுக்கிட்டு பார்த்தா.. அந்த மூஞ்சிங்க என் மூஞ்சிய அங்க எதிர் பார்க்காததால விதிர்விதிர்த்து போய் நிக்குதுங்க..

வேற ஒண்ணுமில்லீங்க.. செரியா ரெண்டு நாள் முன்னாடி.. ஒரு மீட்டிங்ல.. இதே மாதிரி ஒரு மணி நேரத்துக்கு மேல லேட்டா வந்து.. அட்ரஸ் மாறிப் போயிட்டோம்னு சொன்ன அதே மூஞ்சிங்க.. அவங்க நேரம்.. அங்கயும் நான்தான் குடுமி பிரிக்க போயிருந்தேன்.. ( அட.. குடுமி பிடி சண்டைன்னா.. விளக்கி/விலக்கி விடுறதுதானுங்கோ.. இவங்கள எல்லாம் திருத்த போயீ முடியுற காரியமா ஸ்ஸ்ஸப்பா..)

இந்த அம்முனி அவங்களுக்கு என்னிய அறிமுகப் படுத்த.. அவங்க ஈஈஈன்னு.. எனக்கு கும்பிடு போட.. அப்போதான் பார்க்கறாப்ல ஹல்லோ சொல்லி உள்ளார கூப்பிட்டு.. ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி திட்டி.. (அதுதானுங்க.. அந்தம்முனியும்.. நானும்.. மாத்தி மாத்தி கிட்டத்தட்ட ஒரே மாதிரித் திட்டி..) அனுப்பிச்சு.. அம்முனிட தாங்க்ஸ் அண்ட் ஈஈ.. வாங்கிக்கிட்டு திரும்பி வர்றப்போ.. சிடி ப்ளேயர்ல சஞ்சய் சுப்ரமணியம் "திக்குத் தெரியாத காட்டில்.. தேடி தேடி......ஈஈ இளைத்தேன்" (அட இங்கயும் நம்ம பாரதி..) பாடிக் கொண்டிருந்தது கோ-இன்சியா தெரியலீங்க.

(சில பேரு நான் தமிழினத் துரோகின்னு நினைக்கிறதுக்கும் இப்படியான நிகழ்வுகள் வழி வகுத்ததுண்டு.. அதுவும் எப்போவாவது சொல்லுவோமில்ல..)

.....

Sunday, October 4, 2009

பன்மையில் ஒருமை காண்பதென்பது..?

ஒருமைப்பாடு, நல்லிணக்கம், ஒன்றிணைதல், Integration, Assimilation போன்ற சொற்கள் யுத்த பூமிகளிலும், அமைதிப் பூங்காவிலும், அங்கெங்கினாதபடி எங்கும் அடிக்கடி கையாளப் படுகின்றன. இதில் மத நல்லிணக்கம், இன நல்லிணக்கம், சமூக ஒருமைப்பாடு, சமாந்திர ஒருமைப்பாடு (horizontal), பக்கவாட்டு ஒருமைப்பாடு (lateral), செங்குத்து ஒருமைப்பாடு (vertical), உள்குத்து, வெளிக்குத்து போன்ற வார்த்தைகள் மக்களின் வாய்களுக்குள் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

சமூக மற்றும் நாட்டு நலனில் அக்கறை கொண்டவர்கள் சொந்த நாட்டிலோ.. வெளிநாட்டிலோ.. வாழ்ந்து வரும் வெவ்வேறு இனத்தவரிடையே அவர்களது கலாச்சாரம், பண்பாடு, மதம், இத்யா(ஜா)தி, இத்யாதி பற்றிய பரஸ்பர புரிதலுக்கு, கருத்துப் பரிமாற்றம் மற்றும் இணைந்து வாழ்தல் அவசியம் என்று கழுதைகளாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இன்றோ, நாளையோ கருத்து பேதம் மற்றும் தவறான புரிதலினால் இன்னொரு இனமோ, மொழியோ அழிந்து போகலாம் என்ற தீர்க்க தரிசனத்தால் விளைந்த எச்சரிக்கை மனப்பான்மையுடன் கூடிய பய உணர்வே இதற்குக் காரணம்.

வெளிநாடுகளில், அந்த நாட்டு மொழியை ஒழுங்காகக் கற்காதிருப்பதே முதற் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள் (!). ஒரே மொழியைப் பேசுபவர்கள் இணைந்து வாழ்கிறார்களா என்றால் யாரிடமும் பதில் இல்லை. மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகமேயன்றி, முழுமையான கருத்துப் பரிமாற்றமாகாது. மொழி மட்டுமே காரணம் என்று கொண்டால் ஆகக் குறைந்தது தமிழ்ப் பதிவுலகம் சொர்க்கமாக இருந்து கொண்டிருக்க வேண்டும்.

இது சம்மந்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் ஒரு அம்மையார் ஆர்மேனிய மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறுகுறிப்பை மின்திரையில் காண்பித்து, தயவுசெய்து இதைப் படியுங்கள் என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, கைகளைப் பின்னால் கோர்த்துக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள்.

அந்த மொழி தெரிந்த ஒருவர் கூட அங்கிருக்காததால் சட்டென்று எல்லாரும் உரத்துச் சிரித்து, அந்த அம்மையார் சிரிக்காதிருப்பதைப் பார்த்து, மௌனித்து அதையே பதிலாக்கினார்கள். மொழி தெரியாத நாட்டில் குப்பை கொட்டுவது என்பது இப்படித்தான் இருக்கும்.

ஒரே மொழியைப் பேசுபவர்களிடத்தில் உண்டாகும் கருத்து வேறுபாடு வேறு வகை. கருத்து வேறுபாடு இல்லையெனில் ஒரே நாளில் எல்லாரும் சலிப்படைந்து, அடுத்த நாள் தங்களுக்குத் தாங்களே சமாதி கட்டிக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்து விடலாம். ஆனால் என் கருத்துப்படியே மற்றவர்களும், மற்றவர்கள் கருத்துப்படி நானும் நடக்க வேண்டுமென்பதில்தான் சிக்கல் உருவாகிறது.

இரண்டு வார்த்தையில் மொத்தமும் முடிந்து தனித் தனியே, போட்டி போட்டுக் கொண்டு சுற்றிச் சுற்றிச் சுவர் (maze) எழுப்பிக் கொள்வார்கள். இறுதியில் தனியே நாலு சுவருக்குள் அடைபட்டு, வெளியேறும் வழி தெரியாது விழித்து உள்ளேயே சமாதி ஆவார்கள்.

சுவர் எழுப்ப முன்னர் சற்று நிதானிப்பது என்பதும், எழுப்பிய சுவற்றைச் சுரண்டி உதிர்ப்பது என்பதும், "நான்" என்னும் இரண்டெழுத்து ஆணவத்தில் நடைமுறைச் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆணவம் என்பது மற்றவர்களுக்கே சொந்தம் என்று ஆணவத்துடன் சொல்லிக் கொண்டிருப்பது நமக்கு மிகவும் வசதியாக இருக்கிறது.

மற்றவை உங்கள் விவாதத்திற்கு விட்டு விடுகிறேன்..

“You have your way. I have my way. As for the right way, the correct way, and the only way, it does not exist.” -
Friedrich Nietzsche

___

Saturday, October 3, 2009

பூச்சியும்.. கண்ணாமூச்சியும்..

குகையின்..
கும்மிருட்டில்..
குத்துவிளக்கொன்று..
ஒளிர்ந்து கொண்டிருந்தது..
ஆந்தை ஒன்று..
இரவு பகல் அறியாது..
எந்நேரமும்..
விழித்திருந்தது..
சீரற்று அவ்வப்போ அலறியது..
குகைப்பாறை அதிர்ந்தது..
விளக்குச் சுவாலை அசைந்தது..
ஒரு மின்மினிப் பூச்சியும்..
நெய் விளக்கொன்றும்..
அதனுடன் சேர்ந்து..
சில விட்டில் பூச்சிகளும்..
சற்று எட்டிப் பார்த்தன..
விட்டில் பூச்சிகள்..
விளக்குகளில் விழாது தப்பி..
ஆந்தைக்கிரையாயின..
நெய்யும் விளக்கும்..
நிமிடங்களில் கரைந்தன..
குத்து விளக்கு..
அசையாதிருந்தது..
ஆந்தையின் கண்..
மின்மினியை சுற்றியது..
சுவர்களில் முட்டி மோதி..
குகையை வட்டமிட்ட மின்மினி..
ஆந்தைக்கு பூச்சி காட்டிக் கொண்டிருந்தது..!


......