header photo

Tuesday, October 26, 2010

புன்னகை எதற்கு...

ஏழு வருடங்கள் முன் என் தலை மேல் கன்னம் பதித்து விம்மிய என் தாத்தன் இன்றில்லை. தேங்காய்ப்பூவுடன் மசித்த கீரைக்கு நான் ஏங்கிக் கொண்டிருந்த போது "அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை. இவற்றில் எவற்றுக்கும் வழியற்று அவசரமாக நீங்கி விட்ட அப்பாவும், பாட்டியும் இல்லை. 


கதிர் இலங்கை செல்கிறேன் என்றபோது எனக்குப் பேச்சு வரவில்லை. அங்கே யார் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூடப் பிடிக்காது மனம் அழுத்தியது. நேற்று கதிரின் இடுகையைப் படித்தபோது, ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது. 

பார்த்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு சிரிப்பானை விட்டு வந்தேன். ஏழு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், டெம்ப்ளேட் கூட இல்லை, ஒரு சிரிப்பான் மட்டுமா என்ற கேள்வியுடன் கதிர் வந்த போது, மீண்டும் கரித்தது. 

படித்து முடிக்க முடியவில்லை, பிறகு சொல்கிறேன் என்று விட்டுப் பேசாதிருந்தேன். "நானெல்லாம் அங்கே சென்று என்ன கிழித்து விட்டேன், இப்படி ஒரு இடுகை, அதற்கு நாலு பின்னூட்டம்.. ஒரு சக மனிதனா என்ன செய்ய முடிந்தது..".. என்று அங்கலாய்த்தார். "உணர்விருக்கே... அது போதும்" என்றேன். 

இன்று புதுவை சிவா என்ற பதிவர் என்னுடைய சிரிப்பானைக் குறிப்பிட்டு, அலட்சியப் புன்னகையென்று அடிக்கோடிட்டிருந்தார். 

உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அவசியம் ஏதுமில்லை. அரசியல், ஆராய்ச்சி எல்லாம் தாண்டி சீமான், தாமரை போன்றவர்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அளித்த ஆறுதலை யாரும் எப்பவும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.   

வேறு நாட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் இருந்தும், அடிபட்ட புறாக்களாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து விட வேண்டுமென்று ஓடிச் சென்ற அந்த உணர்வுக்கு வந்தனம். 
_______________________________________

Thursday, October 21, 2010

அசி..

விடாதழைத்த 
வாசல் மணியை நிராகரித்தேன்.. 
சற்றுத் தாமதித்து 
சாளரம் தட்டியது 
செவி மடித்து
தலையணை அடைத்தேன் 
தட்டாது கதவுடைத்து 
உட்புகுந்தது.. 
அசைத்துப் பார்த்தது 
அச்சத்தில் அலறினேன்
யாரது..  
காற்றில் கை நீட்டித் துழாவினேன்
கொக்கின் நிறமேனும்  
சொப்பனத்தில் காணா நீ..  
என்னைத் தொடுவாயோ
எள்ளியதை எட்டி 
எளிதாகக் கிள்ளினேன் 
நகைப்பெதற்கு.. 
உனக்கும்தான் கண்ணில்லை..
குருடு குருடறியாதோ... 
தத் த்வம் அசி.. 

_____________________________

Sunday, October 10, 2010

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லையே... ஸோ...

மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 

நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)

அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 

அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம். 

அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.


||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||

இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.  செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது. 

அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. 

||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||

அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை.  அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். 

அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள்.  சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும். 

ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்.. 

||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||

இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம். 

||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||

இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை.. 

||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||

||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||

ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன். 

இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம். 

உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)

நிற்க... 

அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?! 

இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!! 

||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||

அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம். 

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது. 

யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். 

அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..! 

தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..! 
_________________________________________________________

தொடர்புடைய சுட்டிகள்: 

(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன். 

இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது. 

ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?! 

சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)

__________________________________________________________


Thursday, October 7, 2010

கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்கு போனா...

மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு மக்கா... புரட்சி செஞ்சு ரொம்ப ரொம்ப நாளாச்சு.... சரி இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்துடுவோம்...

முதல்ல நிவிஸ் படிங்க மக்கா....  (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)



போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...


நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________

கையப் பரபரன்னு தேய்ச்சுக்கிட்டு யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.

அவரு “ஆடி வெள்ளி”ன்னு ஒரு படம் எடுத்தாராமே... அதில ஒரு நாகப்பாம்பு நடிச்சுதே... அதுக்குப் பல்லே இல்லையாம்... அது எப்டி பல்லே இல்லாத பாம்பை நடிக்க வைக்கலாம்..?! பாம்புக்கான தகுதியே அந்தப் பல்லிலதானேய்யா இருக்கு...  அந்தப் பாம்புக்கு என்ன பேருன்னு எனக்குத் தெரியல.. (எங்கைய்யா நான் படம் பார்த்தாதானே.. இந்த எளவெல்லாம் தெரியறதுக்கு... போராடவே நேரம் பத்தல..) பேரு.. நாகராணியா இருக்கலாம்..  ஒரு வாட்டி ஏதோ நடந்தது நடந்து போச்சு... அப்போ நாம மிளகுப் பொங்கல் கொஞ்சம் அதிகமா சாப்ட்டு அசந்து தூங்கிட்டோம்..  ஸோ போனாப் போறதுன்னு விட்டுடலாம்... ஆனா இனிமே “போடி கள்ளி”ன்னு ஏதாவது படம் கிடம் எடுக்கிறப்போ... நாகராணி அம்மாவ நடிகையாப் போட்டா உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்...  நல்லா கோல்கேட் அட்-ல வர்ற மாதிரி.. பளிச்சுன்னு பல்லுள்ள பாம்பா பார்த்துப் போடனும்.... சும்மா பொட்டுன்னு ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்... ம்க்கும்.. எங்க இருக்கிறது... சாவனும்யா... பாம்புன்னா படம் எடுத்தா மட்டும் போதுமாய்யா..... நீங்களும்தான் எடுக்கறீங்க படம்... அதுக்காக நீங்க பாம்பா நடிச்சிட முடியுமா.... படமாய்யா எடுக்கிறீங்க படம்...

__________________________
அப்புறம்... சங்கர் சார ஒரு புடி புடிக்கலாம்...

என்னையா டைரக்டரு நீரு... சப்பான் நாட்ல தடுக்கி விழுந்தா ரோபோன்னு இருக்கிறப்போ.... வேலை மெனக்கெட்டு போயும் போயும் ஒரு மனுஷனுக்கு மேக்-அப் போட்டு ரோபோன்னு சொல்லி இருக்கீரே... யாரை அய்யா ஏமாத்துறீங்க.... நம்ம மூஞ்சில கேனன்னு எழுதி ஒட்டி இருக்கா என்ன... அட வீணாப் போனவைங்களே.... ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா... அறிவு வேணாம்... புடிங்கைய்யா கொடிய... தூக்குங்கைய்யா ரசினிய...

___________________________
நெக்ஸ்ட் யாருப்பா...

யோவ் மணி... எங்க ஒளியறீரு... முன்னாடி வாரும்யா.... அறிவிருக்காய்யா உமக்கு... இல்ல தெரியாம கேக்கறேன் அறிவிருக்காய்யா.... ஐசுவர்யா ராய் யாருய்யா..?! அபிசேக்கு பொஞ்சாதிதானே.... என்னா தெனாவெட்டுய்யா உமக்கு... தமிழ்ப் படத்தில அந்தம்மாவ எவனோ பிருத்வியோ... பருத்துவியோ அவனுக்கு பொண்டாட்டின்னு நடிக்க வச்சீரு...  அத விட மோசமா.... ஹிந்திப் படத்தில... அபிசேக்க ராவணனாக்கி... விக்ரம ஐசுவரியாக்கு ஆம்படையான் ஆக்கினீரே... மன்னிக்கவே முடியாதுய்யா.... விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்...

___________________________
அப்புறம்.... ஆ... எல்லாரும் வரிசை கட்டி வர்றாய்ங்களே.... என்னங்கையா இது... எங்க பார்த்தாலும் இதே எழவாப் போச்சு... யோ... எல்லாரும் நல்லாக் கேட்டுக்கிடுங்க... இனிமே... ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது.... அந்தப் படத்தில அவன் அவனாவேதான் நடிக்கனும்... அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...

சுமங்கலிய விதவையா... விதவைய சுமங்கலியா.... நல்லவன கெட்டவனா.. கெட்டவன நல்லவனா... பொறுக்கிய புறம்போக்கா... புறம்போக்க பொறுக்கியா... பல்லிய ஆமையா... ஆமைய பல்லியா... எல்லாம் நடிக்க வச்சீங்க கையக் கால உடைச்சி அடுப்பில வச்சிடுவோம்....

அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்... ராமரு வேஷம் ராமர்தான் போடனும்.... லெட்சுமணன் வேடம் லெட்சுமணந்தேன் போடனும்... யேசு யேசுவாதான் இருக்கனும்...

நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...
___________________________

Sunday, October 3, 2010

இந்த மரத்திலென்பார்... அந்தக் குளத்திலென்பார்...



புலம்பிட்டே வந்து... இடைல நிறுத்திட்டேன்... என்ன எழுதுவது என்று எனக்கே தெரியவில்லை... எழுத ஆரம்பித்தாலே தொண்டை அடைத்துக் கொள்கிறது... எங்கேயோ தொலைந்துவிட்டது போன்ற உணர்வில் திகைப்பு மட்டுமே தோன்றுகிறது.... 

ஆனால்.... மக்கள் புலம்பாதிருக்க விட மாட்டேன் என்கிறார்கள்... 

__________________________________________________________________

ஆக்கபூர்வமா ஒன்னும் செய்ய மாட்டேங்கிறாங்க... புதிய பாதை போடக் கடப்பாறையும்.... கல்லும் மண்ணும்... உருக்கி வச்ச தாரும்...  கோடு போட லெட்சுமணனும் கூட ரெடி.... நிலத்தைத்தான் காணோம்... இப்போ பாதைய காத்தில போடுறதா...ஆகாசத்தில போடுறதான்னு புரியல... நீரில கூடப் போடலாம்... ம்ம்... நிலம்னா ஈஸி...

சரி என்ன பண்ணலாம்... நிலத்தைக் கண்டு புடிப்போம்... எப்டி.... எப்டின்னா... சிலோன சைனால இருந்து கொண்டு வந்து வச்சாங்களா... இந்தியாவில இருந்து துண்டு போட்டு வெட்டி விட்டாங்களா... சைனால இருந்து வந்தா அதில தமிழர்கள் இருந்தாங்களா.... சிங்களவர்கள் இருந்தாங்களா... இம்போர்ட்டட் ஃப்ரம் சைனான்னு எங்கயாவது கல்வெட்டுப் பொறிச்சு வச்சிருக்காங்களா... இங்க இருந்து ஆரம்பிக்கணும்... 

அப்புறம்... நிலம் எப்டி காணாமப் போச்சு.... எங்க போச்சு... திரும்ப சைனாக்கே எடுத்துக் கொண்டு போனாங்களா... இல்ல அமெரிக்காக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டாங்களா.... எப்டிக் கண்டுபுடிக்கிறது... ஈழமக்கள் எல்லாரும் தூங்குறாங்க... அவங்கள எழுப்ப முடியாது... நாமதான் தேடனும்... 

அந்த மண்ணில பிரபாகரன் அப்டின்னு ஒரு ஆள் இருந்தாரு... அவரு எங்க... இருக்காரா இல்லையா... அது கிடக்கட்டு... அப்போ.. அவர் யார் கிட்ட எங்க உக்காந்து காப்பி சாப்பிட்டாரு... என்ன பேசினாருன்னு பார்ப்போம்... எதனால கருணாவுக்கும்... கட்டையில போறவனுக்கும்... கருமாந்திரம் புடிச்சது... ஏன்னா அதும் பிரபாகரன் தப்புதான்... பிரபாகரன் கருணா கழுத்தில நாய்ச்சங்கிலி கட்டி வச்சிருந்திருக்கோணும்.... பண்ணலை... அதனாலதான் இப்டி ஆச்சு... 

ராஜபக்ஸேயைப் பார்ப்போம்... அவன் எங்க இருந்து வந்தான்... நேரா சனிக்கிரகத்தில இருந்து குதிச்சானா... இல்ல ஒரிசாவில இருந்து வந்த சிங்கத்தோட வாரிசா... இல்ல டைனோசர் காலத்திலயே உருவாகிட்டாங்களா... 

இப்டியே பேசிக்கிட்டே இருப்போம்...  குழப்ப வேணாம்... 

அம்மா செத்து ஒரு வருஷமாச்சு.... ஒரு பாட்டம் உக்காந்து புலம்புவோம்னு புலம்பினா.... ஜனங்க உலக அளவுக்குக் குழம்பிப் போறாங்க.... நாளைக்கு பிரபா பிறந்த நாளுக்கு இன்னொரு மூச்செடுத்து அழுதா... கோர்ட் கேஸுன்னு போனாலும் போவாங்க... அதெல்லாம் பண்ணப்டாது.... பிரபாகரன எங்க ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு தேட டார்ச் லைட் எடுத்துக்கிட்டு கிளம்பலாம்லன்னு தாலி அறுப்பாங்க... அவரின் ஒன்று விட்ட அக்கா... தங்க மகனே என்று புலம்பினால்.... பிரபாவைத் தங்க மகன் என்று சொல்வதன் மூலம்... மறைமுகமாக அவரைத் தாக்குவதாக அவருக்கே காது குத்தலாம்... 

என்ன எழவு.... எல்லாரும் எல்லாம் புடுங்கலாம்.... அங்க பாரு... இந்தோனேசியால ஒரு செம்மறி ஆடு அதோட குட்டிய சிங்கமா வளர்த்திருக்கு.... பிறந்த உடனயே ஆட்டுக் குட்டியத் தூக்கிக் குரங்குக் கூட்டத்தில கொடுத்துட்டுது... அதனால அது சிங்கமா வளர்ந்திருக்கு.... மத்தவங்க எல்லாம் ஆடாட்டம் ஆட்டை வளர்த்தா இந்த நாடு உருப்படுமா... அப்டின்னு புரட்சி செய்யலாம்... 

உன் கிட்ட ஒரு குட்டி இருக்கே... அத குரங்குக் கூட்டத்தில ஒப்படைக்கலயேன்னு கேட்டா.... அது என் கங்காருக்குட்டின்னு மடிக்குள்ள இடுக்கிக்கலாம்....

நிதர்சனம்... அப்டின்னு ஒரு எளவு இருக்கா இல்லையா.....

ஈழத்தில பிறந்தவங்க எல்லாருக்கும் பிரம்மை புடிச்சிருக்குன்னு சொன்னா... யாராவது இல்லைன்னு சொல்லப்போறியளா.... நான் சொல்றேன்... நான் இன்னும் அந்தப் பயங்கரக் கனவில இருந்து மீளலை.... எப்போல்லாம் பிரபாகரன நினைக்கறேனோ.... கதவைத் தாழ்ப்பா போட்டு விசும்பி விசும்பி அழுவேன்... எப்போ ஒரு குழந்தை தட்டை ஏந்திக்கிட்டு சோத்துக்கு வரிசைல நிக்கிற காட்சி வருதோ.... அப்பவும் அழுவேன்... தாய் மடில குழந்தையும்... குழந்தை மடில தாயும் மாறி மாறிச் செத்துக் கிடக்கிற காட்சி வர்றப்போ அழுவேன்.... 

ஆமாம்... நானும் தினமும் கஞ்சி குடிக்கிறேன்... உடுக்கிற உடுப்பு தோய்ச்சு, உலர்த்தி, அயர்ன் பண்ணித்தான் போட்டுக்கிறேன்... ராவணன் படம் பார்த்து விமர்சனம் எழுதுறேன்... வேற எதுவும் பிடுங்கலைதான்... 

இப்போதான் இடி விழுந்து எல்லாம் பிரம்மை பிடிச்சு இருக்காங்க... அவங்கள எல்லாம் அடி அடின்னு அடிச்சு... ஓடிப்போய் இடி எப்டி வந்திச்சுன்னு பாரு... ஆகாசத்தில இருந்து வந்திச்சா... நிலத்தில இருந்து வந்திச்சா... இனிமே இடி விழாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு பாரு.... ஆகாசத்த புரட்டிப் போடலாமான்னு பாரு.... நிலத்த ஆகாசத்தில வைக்கலாமான்னு பாரு.... 

என்ன பேசிக்கிட்டிருக்காங்க மக்கள்...

அயலூரானுக்கு ஆத்தோரம் பயம்... உள்ளூரானுக்கு மரத்தடில பயம்... 

___________________________________

அம்மா... என்னம்மா சொல்றாங்க... என்னம்மா நடக்குது அங்க...?! தெரியலடாம்மா.... இங்க ரூபவாஹினில காட்டிக்கொண்டே இருக்கிறாங்கள்... அந்தப் பிள்ளைய சாக்கொண்டு போட்டாங்களாம்.... படம் படமா போட்டுக் காட்டுறாங்கள்... இங்க எல்லாம் வெடிச்சுக் கொண்டாடுறாங்கள்.... எங்களயும் கொண்டாடச் சொல்லி வற்புறுத்துறாங்கள்.... 

என்னம்மா கதை மாதிரிச் சொல்றீங்க... இங்கயும் அப்டித்தான் பேசிக்கிறாங்க... அது எப்டி அவ்ளோ ஈஸியா சொல்றீங்க... 

இல்லடாம்மா... இங்க இந்த ஒரு சானல்தான் வருது... அந்தப் பிள்ளை எங்களுக்காகப் பட்ட பாடு எவ்வளவு.... இங்க எல்லாருக்கும் கவலைதாண்டா.... ஆனா நாங்கள் என்னதான் செய்ய முடியும்... வாய் விட்டு அழக்கூட முடியாதுடா..  ஏதேதோ சொல்லுறாங்கள்... எதை நம்பறது எதை விடுறது ஒண்டும் விளங்கேல்ல.... நீங்கள் ஏதாவது சொன்னாத்தான் எங்களுக்கு நியூஸே தெரியுது... இல்லையெண்டா இவங்கள் சொல்லுறதக் கேட்டுக் கொண்டு... இங்க கிடந்து எமன் எப்ப வருவான் எண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்... வேற என்னத்தையடா சொல்றது.... ஃபோன்ல எதுவும் பேசவும் பயமா இருக்குடாம்மா.... வீட்டில ஒரு குமர்ப்பிள்ளை வேற இருக்குது... 

ஹூம்... சரி வேற சொல்லுங்கோ.... 

________________________________

ஹாய்... தேனு... ஹவ் ஆர் யு டூயிங்.... ஹவ் இஸ் நியூஸிலாண்ட்....?! 

ஓக்கேடி.... இட்ஸ் கோயிங்... 

ஜஃப்னா போயிருந்தால்ல... அங்க எப்டி இருக்குன்னு கேக்கதான் ஃபோன் பண்ணேன்... 

ம்ம்... சனங்கள் எல்லாம் நோர்மலா இருக்கினம்.. அதுகளுக்கு வெடிச்சத்தம் இல்லாம இருக்கிறதே பெரிய விஷயம் மாதிரி.... நிறைய கல்ச்சரல் சேஞ்ச் இருக்கு... 

வவுனியா காம்ப்புக்குப் பேயிருந்தோம்... நமக்கு பிரச்சனை டைம்ல அங்க இருந்து மெடிகல் ஹெல்ப் கூடப் பண்ண முடியலயேன்னு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு.... காம்ப்பில இருக்கிறவங்க கிட்டக் கேட்டா... அவங்கள் இப்ப இருக்கிற நிலமைல... அமைதிதான் தேவை அவங்களுக்கு.... ஒண்டும் வேண்டாம்... நிம்மதியா இருக்க விட்டா போதுமெண்டு அழுகை.... வெளிநாட்டில தமிழ்ச் சனங்கள் குரல் கொடுத்தா அவங்களுக்குதான் அடி விழுது... நாங்கள் பேசாம இருந்தாலே அவங்களுக்குச் செய்யுற நன்மையா அமையும்ன்னு நினைக்கிறாங்க.... ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்காங்க.. 

ம்ம்... புரியுது... பிரபா..?!... நீ என்ன நினைக்கிற... 

எனக்குத் தெரியேல்ல.... அந்தாள எல்லாரும் சேர்ந்து ஏமாத்திப் போட்டாங்கள்... அவர் சரியா ஏமாந்துட்டார் எண்டுதான் நினைக்கிறேன்... அந்தாளத் தனிமைப்படுத்தி தீவாக்கிட்டாங்க... அவருக்கு நிறைய விஷயம் தெரியாமலே போச்சு... எல்லாரயும் நம்பி ஏமாந்துட்டார்... 

தொண்டைகள் அடைத்துக் கொள்ள... மௌனம் மொழியாகிறது... 

______________________

வணக்கம் ப்ரியாக்கா எப்டி இருக்கீங்க... இண்டைக்கு மே 17...  யாழ்ப்பாணத்தில கூட்டுப் பிரார்த்தனைன்னு போயிருந்தோம்... ஆர்மிக்காரங்கள் குவிஞ்சு நிக்கிறாங்கள்... அட்வைஸ் வேற... அதாவது ஒழுங்கா இருங்கோ இல்லைன்னா சுட்டுத் தள்ளிப்போடுவம் எண்டு.... 

_____________________

என்னையா செய்யச் சொல்றீங்க...?!!!!!!!! யார் என்ன செய்ய முடியும்...??!!!!
_____________________



||ஐக்கியநாடுகள் சபையின் முன்றலில் கவனயீர்ப்பு: சுவிஸ் ஈழத் தமிழரவை

அழைப்பு

மரணத்தை வெல்வோம்.

என்றென்றும் தணியாத விடுதலைத் தாகத்துடன் வாழ்ந்துவரும் எமது பேரன்பிற்கும்
பெருமதிப்பிற்கும் உரிய சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய இன உறவுகள் அனைவருக்கும்
சுவிஸ் ஈழத் தமிழரவையின் விடுதலை வணக்கங்கள்.

மிகப்பெரும் நெருப்பாற்றைக் கடந்து மானுடமே வெட்கித் தலைகுனியும் விதத்தில்
சிங்கள இனவெறி அரசு நடாத்திய இனஅழிப்பின் அழியாத வடுக்களுடன் எமது விடுதலைக்கான
பயணம் களத்திலும் புலத்திலும் நகர்கிறது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு
யூலையை கறுப்பாகவும் மேயை சிவப்பாகவும் மாற்றியுள்ளது.

இத்தகைய மிகப்பெரும் தமிழின அழிப்பின் ஒர்பகுதியை நடாத்திவிட்டு தமிழர்களின்
அறுபது வருடங்களுக்கும் மேலான சுதந்திரத்திற்கான போராட்டத்தை பிழையென உலக
அரங்கில் சித்தரித்து அடக்கி ஒடுக்கி தமிழ் இனத்தை வேரறுப்பதற்கு பாடுபட்டு
வருகிறது.

இப்படி தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் வெந்திருக்க இம்முறை நடாத்தப்படும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கூட்டத்தொடரில் சிறீலங்கா இனவெறி
அரசின் இன அழிப்பு  மற்றும் போர்க்குற்றம்  சார்ந்த எவ்வித விடயமும்
விவாதிக்கப் படாமல் திரு பான் கீ மூன் தலைமையிலான நிர்வாகம் வேண்டுமென்றே
மௌனித்து பக்கசார்பாக நடந்துகொள்வதுடன் உலகெங்கும் வாழும் தமிழினத்தை அவமானப்
படுத்தியுள்ளது.

இத் திட்டமிட்ட சதி நாடகத்தை உலகறியச் செய்வது தமிழர்களாகிய எமது வரலாற்றுக்
கடமை ஆகிறது.

எமது அன்பிற்கினிய மக்களே! சுவிஸ் ஈழத் தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர்
அமைப்பினர் இணைந்து எதிர்வரும் ஆம்... ஆம்... ஆம் திகதிகளில் ஜெனிவா ஐநா
முற்றத்தில் பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கண்டன ஒன்றுகூடலும் கவன
ஈர்ப்புப் போராட்டமும் நடாத்தவுள்ளோம்.

அனைத்து தமிழ்மக்களையும் பொது அமைப்புக்களையும் உணர்வோடு கலந்து கொள்ளுமாறு
சுவிஸ் ஈழத் தமிழரவையினராகிய நாங்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\\\
_____________________________

இதைத்தான்... இருபது வருடங்களுக்கு மேலாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள்....  இதைத்தான் செய்ய முடியும்... 

அல்லது.... நாலஞ்சு பேரைக் கூப்பிட்டு... இலங்கையில் தமிழரின் இன்றைய நிலவரம் என்று சொல்லி உட்கார்ந்து... பாருடியாத்த.... இப்டி ஆகிப்போச்சு.... அங்க அவ இப்டி சொல்றா... இவன் அப்டி சொல்றான்... என்ன கொடுமை... நாம யாருக்கு என்ன செஞ்சோம்ன்னு ஒப்பாரி வைக்கலாம்... 

இப்படி எல்லாம் செய்யறத... சிலர் பதிவிட்டு.... புரட்சி பண்ணலாம்....ம்ம்ம்ம்.......!!!! லண்டனில் பேரணி... சுவிற்சர்லாந்தில் பேரணி...!!!! இப்டி பதிவு போட்டுட்டா... ரொம்பப் புரட்சி செய்து விட்டதாக அர்த்தம்....!!!!!! செய்யுங்க.... நாம பொத்திக்கிட்டு இருக்கோம்.... 

அதே மாதிரி... 

தமிழன கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து அழ விடுங்க....கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து அழட்டும்.... 

பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சதாம்னு... உங்க எழவுக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா... ?!

(இப்டிச் சொன்னாலே.... நான் கருணா கம்பனில காரியதரிசி வேலை பார்க்க போயிட்டேன்னு அர்த்தம்ம்ம்ம்....)

_________________________________________________