header photo

Tuesday, December 29, 2009

அவலமெய்திக் கவலையின்றி..
















தாரை தாரையான 
சாரைகளின் குவியலில்
சிரட்டை ஏந்தி நின்றது
சிறுநீர் வரண்டுவிட்ட
சின்னஞ்சிறிய சிட்டொன்று..

பிணங்கள் புதைந்திருந்த
மலையளவு உமிமேட்டில்
தவழ்ந்தமுங்கி - அரிசிக்
குறுணி பொறுக்கிக் கொண்டிருந்தது
தாய்ப்பறவை..

இரைப்பை புடைத்திருந்த
கழுகின் கழுத்துள்ளிருந்து
விழுந்த முள்ளொன்று
செங்குத்தாய் சிரம் விழுந்ததில்
சுருண்டது சிட்டு சிரட்டையுள் ..

கற்குறுணி கூடக் கிடைக்காத
தாய்ப்பறவையின் முன்
சிரட்டை நீக்கி வீசப்பட்டது சிட்டு..
சிறகொடிந்து சிதைந்து துடியாய்
துடித்தது தாய்ப்பறவை..

பருந்து தாண்டிப் பறந்து
சிறகிருந்துமிழந்து
சதா கண்களில்
குருதி சிந்த விட்டபடி
ஊர்க்குருவியான நான்...!
_______________________________________

Monday, December 28, 2009

'கலகல' மீள் - பதிவு..

எப்பவோ பேமஸ் ஆகியும்.. (ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா) இன்னும் ஒரு மீள் பதிவு கூடப் போடலையே நானுன்னு நினைக்கும்போது... எனக்கே முடியல... அவ்வ்வ்வ்..! எதுனா இருக்கா அப்டின்னு பார்த்தாக்க ஒண்ணுமே உருப்படியா காணோம்.. அவ்வ்வ்வ்..! இப்போதான் தெரியுது நம்ம லட்சணம்... ம்க்கும்..! ஆனாலும் விட்டுடுவோமாக்கும்..! இதோ எந்த ஒரு மாற்றமும் இல்லாத ஒரு மீள் பதிவு..! (மாத்த டயம் லேதுப்பா.... அப்பாலிக்க வந்து பேசிக்கறேன்.. வர்ட்டா... ஜூட்டு..)

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நான், என் வீட்டில் கருமமே கண்ணாக பள்ளிக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். என்னுடைய அம்மா என்னைப் போக விடாது தடுப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பக்கத்து வீட்டில் சாவு வீடு, நீ பள்ளிக்குப் போறது சரியில்லை என்பது அவர்கள் வாதம். அவங்க இன்னும் சாகவே இல்லை, செத்தாலும் நான் என்ன பண்ணப் போகிறேன் என்பது என் விவாதம்.

"ஏண்டி ஒரு நாள் போகலைன்னா என்ன ஆய்டும்?"

"எனக்கு ஆங்கிலப் பரீட்ச இருக்கு"

"நல்லா இருக்குடி, உன் அண்ணா ஆங்கிலப் பாடம்னாலே பள்ளிக்கு போக மாட்டேன்னு அடம் பிடிப்பான், நீ பரீட்சைக்கு போகணும்னு அடம் பிடிக்கறா"

"நான் போகணும்"

"போறதில்லடி, சொல்லிண்டே இருக்கேன்ல"

இவ்வாறு நீண்டு கொண்டே போன விவாதத்தில், அம்மாவின் அதட்டல் வென்றது. என்னையும் இழுத்துக் கொண்டு அந்தம்மாவைப் பார்க்கச் சென்றார்கள். உர்ர்ர்ர் என்று மூஞ்சியை ஒரு முழத்திற்கு வைத்துக் கொண்டு நானும் இழுபட்டுக் கொண்டு போனேன்.

வேறொன்றுமில்லை, என்னுடைய உறவு முறை மாமி ஒருத்தி திடீர் என்று நோய் வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் விழுந்து விட்டார். அவரை நான் வாழ்க்கையில் இரண்டே தடவைதான் சந்தித்திருக்கிறேன். காரணம் ஒன்றும் பெரிதாக இல்லை. அவர் மிகவும் தொலைவில், வேறொரு ஊரில் இருந்தமையால் சென்று பார்க்க அவகாசம் இருந்திருக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டதும், அவரைப் படுக்கையுடன் தூக்கிக் கொண்டு வந்து நம்ம ஊரில் அவரின் அருமைப் புதல்வி வீட்டில் வைத்து விட்டார்கள்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த அவர்கள் வீட்டில் கூட்டம் சேர்ந்து விட்டது. இப்பவோ, எப்பவோ என்று இழுத்துக் கொண்டிருந்த அந்தம்மா எப்போ உயிரை விடுவார்கள் என்று கடிகாரத்தைப் பார்த்தபடி குடும்பத் தலைவர்களும், தலைவிகளும் பொறுமையற்று உலவிக் கொண்டிருந்தார்கள். நெருங்கிய உறவினர்கள், குழந்தைகள் மாற்றி மாற்றி ஒரு திரவத்தை அவர் வாயில் ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

நான் அங்கே கிடைத்த ஒரு ஒற்றைத் தூணில் என்னைச் சாய்த்துக் கொண்டு சோகத்தில் ஆழ்ந்திருந்தேன். என்னைத் தவிர எல்லாரும் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்த சம்பவம், இறுதியில் நிகழ்ந்தே விட்டது. மற்றவர்களின் பொறுமையை மேலும் சோதிக்க விரும்பாது அந்தம்மா அதன் உயிரை நிறுத்தி விட்டிருந்தது. ஒரு தடவைக்குப் பத்துத் தடவை உறுதிப் படுத்திக் கொண்ட மக்கள், அப்பாடா என்று குரல் எடுத்து அழ ஆரம்பித்தார்கள்.

யாரோ திதி பார்த்துக் குறித்து வைத்துக் கொள்வதற்காக யாரிடமோ நேரம் கேட்டார்கள். மணி பத்தரை என்றது ஒரு பெருசு. அவ்வளவு நேரமும் எனக்கும் இதுக்கும் எந்த வித சம்மந்தமுமில்லை என்று தூணில் சாய்ந்து கொண்டிருந்த நான் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். பரீட்சை முடிந்து அரை மணி நேரம் ஆகி விட்டிருக்கும். ஐயோஓஓஓ என்று வெடித்து அழ ஆரம்பித்தேன்.

"என்னதான் இருந்தாலும் மாமி என்ற பாசம் இருக்குமில்ல, பாவம் குழந்தை" அம்மா யாரிடமோ அழுகைக்கிடையே அவர்கள் பொண்ணைப் பற்றிப் பெருமையாகப் பீற்றிக் கொண்டிருந்தார்கள்..! என்னுடைய அழுகை இன்னும் வலுக்க ஆரம்பித்தது.. !!!

அவ்வ்வ்வ்.... (இது ஒரு சின்ன மாற்றத்திற்காக...;))

__________

Tuesday, December 22, 2009

இன்றிங்கிப்போ...



















 வெண்பனியின் முன்னிரவில்
மரக்கூடுவிட்டகன்று
கதகதப்பானதொரு குடிசையின்
திறந்திருக்கும் கதவிடுக்கினிடை
பருந்தொன்றமர்ந்து  பறந்த
அதிர்வின் கிளையுதிர்வில்
செதுக்கிய சிறு கூட்டுவாசம்
பின்னிரவின் ஊதக்காற்றில்
கதவடைபடுவது தெரியாமலே
புறவிறகுகளில் சிரமழுந்தி
இகமோ பரமோ யாமறியோம்...!
 _____________________________________

Thursday, December 17, 2009

வல்லமை தாராயோ...

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12

Part 13


மறதி என்பது வரம்.. அதுவே மிகப் பெரிய சாபம்!  எதைத் தின்றால் பித்தம் தெளியுமென்று வீதி வீதியாக அலைந்தது பல பிறவிகளுக்கு முன்பு போன்ற மாயத் தோற்றம். ஒன்றன் பின் ஒன்றாக எல்லாம் நடந்து முடிந்து விட்டது... முடிந்தே விட்டதா..?!

உடலின் ஒவ்வொரு பாகத்திலும் காயமேற்று, ஆத்மாவை மட்டும் இதயத்திற்கும் மனதுக்கும் இடையில் எங்கேயோ பிடித்து வைத்து குற்றுயிரும் குறையுயிருமாக அகால மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த தாய்க்கு அறுவைச் சிகிச்சை பலனளிக்கலாம் என்று நம்பியிருந்து, தெருத்தெருவாக இறங்கிப் பிச்சை கேட்டு, மாரடித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து, உருண்டு புரண்டு, உண்ணாதிருந்து, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிப் பற்ற வைத்து, செத்தும் எதுவும் பலனளிக்கவில்லை.

மகா மகா மருத்துவர்கள் என்று அறியப்பட்டவர்கள் எல்லாம் கையை விரித்தார்கள். பாவம் வைத்தியம் மருத்துவருக்கே பலனளிக்காத போது அவர்கள் என்ன பண்ண முடியும். மறைமுகமாகவோ, நேரிடையாகவோ கிடைத்த பிராணவாயுவை அவ்வண்ணமே பிடுங்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் பல நன்மைகள் இருக்கும்போது எந்த மட மண்ணாங்கட்டியாவது வேறு யோசிக்க முடியுமா. சொந்தப் பிள்ளைகளே தப்பித் தவறிப் பிழைத்துக் கொண்டால் என்று கையில் விஷமேந்தி தாயாராக நின்று கொண்டிருக்கையில், வெளிநாட்டு மருத்துவர்கள்  என்ன செய்து விட முடியும்.

ஆனால்  நொந்து போய், தலையில் கை வைத்து அமர்ந்து விட்டவர்களும், அறிந்தும் அறியாதது போன்று,  அறியும் விருப்பமற்று அல்லது அறியாமையால் சாவு வீட்டில் பல்லாங்குழி ஆடிக் கொண்டிருந்தவர்களும் தாயின் உயிருக்காகக் கடைசிவரை போராடியவர்களுக்குச் சற்றே அனுசரணையாக இருந்திருக்க முடிந்திருப்பின்... செயற்கைச் சுவாசத்திலாவது உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்திருக்கலாம்.

இரவு, பகல் படித்த அதே செய்தித்தாளை நிமிடத்திற்கு நிமிடம் புரட்டிப் புரட்டிப் பார்த்து, தமிழ் சினிமாவில் மஞ்சளுடுத்தி, மஞ்சள் நீரைத் தலையில் கொட்டி, முடி விரித்துதறி, கைகளில் வேப்பிலை ஏந்தி, உதறி, உடுக்கை அடித்து, கிடுகிடுவென்று ஆடி முடித்தவுடன்  மரணப் படுக்கையிலிருப்பவர் நிமிர்ந்து உட்காருவது போல், அதிசயம் ஏதாவது நிகழ்ந்து செய்தி மாறி இருக்காதா என்று கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துச் சலித்து, அழுது ஓய்ந்து போன நாட்களில்...

இணையத்தில் கூடி ஒப்பாரி வைத்த கூட்டத்திடை, ஒரு கூட்டம் எவனுக்கோ பல்லு முளைத்ததுக்கு யாருக்கோ பாலபிஷேகம் செய்தார்கள். எப்பவோ எதுக்காகவோ செத்துப் போனவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி எனக்குப் பூச்செண்டு அனுப்பினார்கள். ஒரு வேளை, ஒரு கவளம் சோறு விழுங்க முடியாதிருந்த நேரத்தில், இணையத்தில் சாக்லட், வெண்ணெய், கேக், கோக் என்று அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கூடப் பிறந்தவர்களை அறுவடை செய்து கொண்டிருந்த போது, இணையத்தில் பண்ணைத் தோட்டம் ஆரம்பித்து, ஆள் ஆளுக்கு கழுதையும், எருமையும், வாத்தும், முட்டையும் பரிமாறிக் கொண்டிருந்தார்கள், இருக்கிறார்கள்.

இவர்களுக்கிடையில் நான் வித்தியாசமாக நிஜக் கழுதை வாங்கி மேய்த்து, சில பன்றிகளை உதைக்க வைக்க வேண்டுமென்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். இப்படி வித்யாசமாக யோசித்துக் கொண்டிருப்பதைத் தவிர என்னாலும் வேறு ஒன்றும் கிழிக்க முடியாது என்பது எனக்கும் நன்றாகவே தெரியும்...!

ஆனாலும் அம்மா இன்னும் ஆழ்நிலை மயக்கத்திலேயே இருக்கிறாள் என்று ஆழமாக நம்பி அவளின் கிழிந்த சேலையை இறுக்கமாகப் பற்றி, அதன் வாசனையைச் சுவாசித்தபடி நானும்...

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்


(தொடரும்..)

Tuesday, December 15, 2009

கவிதையில் மொக்கை காண்பதென்பது...

ஜடத்தின் உயிரோட்டம்
சிலாகிக்கும் மனம் 
உயிரின் செயற்கைத்தனம்
வெறுக்கும் செயல்
இயற்கைக்கு விரோதம்-ஆம்!


ஞாபகம் தொலைத்த
தொன்மைகள்
இம்மையில் வரலாறு
தன்மையறுத்தவர் இம்மை
மறுமையில் எவ்வாறு...?!


இத்தால் நான் அறியத்தருவது யாதெனில்... அட ஒண்ணுமில்லீங்க...
_________________________________________________________________________


வழிப் போக்கனின்
வாள் காதறுத்த போதும் 
உடையில் தரித்த என் வாள்
அப்படியே இருக்கிறது

வாளாவிருக்கும் வாளால்
வாழையும் நறுக்கலாம்
வாலையும் அறுக்கலாம்
விருந்தினர் வசதி எவ்விதம்...?!


இதனால் அறியப்படும் நீதி  யாதெனில், என்னிடமும் ஒரு வோட்டு இருக்கிறது, அதை நேராகவும், மறையாகவும் பயன்படுத்த என்னால் இயலும்!  (அட  நல்ல புள்ளைக்கு இருந்து எத்தன நாள்தான் புல்லுருவிகளின் அட்டகாசத்தைப் பொறுத்துக்கிறதுங்க. பயங்கரவாதின்னு சொல்லிடுவாங்கன்னு அடக்கி வாசிச்சு குழிக்குள்ள போனதுதான் மிச்சமுங்க) மைனஸ் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவர்கள், குறிப்பெடுத்துக் கொள்ளவும்: உங்கள் பக்கங்களில் ஒரு மைனஸ் விழுந்தால், அது உங்களுக்கான என் பதில் ஓட்டாக இருக்கலாம். >:)
________________________________________________________________________

Monday, December 14, 2009

பிய்ந்து போன டயரி... நைந்து போன நரி..


நாம இப்டியும் மொக்கை போடுவோம்ல... (copy right கேட்பவர்கள் என்னுடன் தனிப்பட்ட முறையில் பேசவும்..)




என்னுடைய அலுவலகத் தோழி பாலிவுட் புண்ணியத்தில் என்னுடைய ரசிகையானது ஒரு கொடுமை. என்னை மாதிரியே கையில் அபிநயம் பிடித்துப் பேசிப் பழகிவிட்டு, அவளையே அவள் மெச்சிக் கொள்வது இன்னொரு கொடுமை. விகடன் மின்னிதழில் வந்த என்னுடைய கவிதையில் ஒரு எழுத்துக் கூடப் புரியா விட்டாலும் அதைக் கவனமாகப் பிரிண்ட் எடுத்து அவள் வரவேற்பறையில் மாட்டி வைத்திருப்பது மகா கொடுமை. என் ஊர் வீட்டு முகப்பின் ஒரு பகுதியை டெஸ்க்டாப்பில் போட்டு வைத்திருப்பது அருமை. அவளை தோழியாகப் பெற்றது எனக்குப் பெருமை.





_____________________________________________________________________________________________



ஸ்விம்மிங் ஞானம் மிக மிகக் குறைவாக இருந்தும் நேற்றைய முன்தினம் அவளுடன் ஸ்விம்மிங் கிளம்பியது என்னுடைய அசட்டுத் துணிச்சல். ஃபைண்டிங் நிமோவில் ஸ்டிங் ரே முதுகில் ஏறிச் சென்ற கடற்குதிரை போல்... அவள் முதுகைப் பற்றியபடி கழுத்தளவு நீரில் நீந்திக் கொண்டிருந்தபோது அனிமேஷன் ஃபிகராக (அஹெம்) மாறிப் போனேன்.


_______________________________________________________________________________________________




முப்பது வருஷமாக நெட்பால் ஆடும் ஒரு டீமில் கத்துக்குட்டியாக join பண்ணி அவர்களின் வேகத்திற்கும், பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது, அமெரிக்கன்  ஃபூட்பால் டீமுக்கிடையில் சாரி சுற்றிக் கொண்டு ஸ்லோ மோஷனில் ஓடி அனிமேஷன் புறாவைக் கையில் பிடித்து, அதே ஸ்லோ மோஷனில் பறக்க விடுவது போல் நான் பந்தைப் பாவித்தது எனக்கே கொடுமையா தெரிஞ்சாலும், அவங்க பெருந்தன்மையா bravo என்று தட்டிக் கொடுத்தது இதமாக இருந்தது. எதுக்கும் இருக்கட்டுமென்று நியூ இயர் வரை தள்ளிப் போட்டு விட்டேன். நியூ இயர் resolution - இற்கு மேட்டர் தேட வேண்டாம் பாருங்க.
_______________________________________________________________________________________________



வீட்டுத் தோட்டத்திலிருந்த ரப்பர் பூட்ஸ் பாதியைக் காணவில்லை. மீதி பிய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. என்ன கொடுமை சரவணி என்று பக்கத்து வீட்டு அம்மணியிடம் கேட்டேன். சற்றுத் தள்ளிக் காடு இருப்பதால் நரி நடமாட்டம் இருக்கிறது என்று சொன்னாள். அப்புறம் தோட்டப் பக்கம் பார்க்கவே ப்ப்ப்பயமாக இருக்கிறது. ஆனாலும் அந்த ரெண்டு பூட்ஸ்ஸிலிருந்தும் பிய்த்தெடுத்ததை ஒட்டி ஷூ செய்து நைந்து போயிருக்குமா அந்த நரி என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

_______________________________________________________________________________________________
சமீபத்தில் எந்தப் படமும் பார்க்கவில்லை, எந்தப் பாட்டும் கேட்கவில்லை. ப்ளாக் மட்டும் அவ்வப்பொழுது (!) பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யாரோ மேலிருந்து வெண்பஞ்சுகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். சாளரம் திறந்து எட்டிப் பார்த்தால் குளிர்ந்தது. மேல் விழுந்த பஞ்சு கையில் கரைந்து நீராக ஓடியது. அட ஸ்னோ. வின்டர் ஆரம்பித்து விட்டது. குளிர் முதுகுத் தண்டில் சில்லிடுகிறது. இப்போ இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கப் போகிறேன். குட் நைட்..




_______________________________________________________________________________________________

Monday, December 7, 2009

நுனிக்கரும்பு...

_________________________________
நகல் 

பார்க்கத் தவறியே
மறந்து விடுகிறது
மற்றவர் குத்துவதற்கு
தனக்குமொரு
முதுகிருப்பது..!
_________________________________
அசல் 

பாதங்கள் வருடிய நாவின்
கோரப்பற்துவார வழி
வியர்க்குமாலம் நாசி வருடி
மூளையின் நுண்ணிய திசு தடவி
உயிரணுக்கள் முகம் சுழித்து
வாயாலெடுத்துமிழும் பித்தநீர்க்கசப்பு
நாடி-நாளங்களில் வழிந்தோடியபடி...!
_________________________________

Tuesday, December 1, 2009

சிரிக்கலாம்... திட்டலாம்.. குட்டலாம்...

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்
பொல்லாச் சிறகைவிரித்தாடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி"

(இது ஔவையிடமிருந்து முதல் காப்பி.. எனக்கு எனக்கு.. எனக்கே எனக்கு அறிவுரையாக..)

யார் யாரோ... எப்டி எல்லாமோ காப்பி அடிக்கிறாங்க.. நானும்.. ஒரு காப்பி இடுகை... அல்லது இடுகை மொழியில் சொன்னால் மொக்கை..! மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சில்ல... (யாரது... அங்க.. ம்க்கும் எல்லாம் அதுதான்னு நொடிக்கிறது... இருடி ஆட்டோ அனுப்பறேன்..)

தம்பி வசந்து... நீ கேட்டுக் கொண்டதுக்கிணங்க...பு(ப)டிச்சவிக மாஆஆதிரி... எழுதுறேன்..! பார்த்துக்க..! அப்புறம் உன்னை யாரும் கண்டுக்கலை.. காதுக்கலைன்னு எல்லாம் சொல்லப்டாது..!

படிக்கிறப்போ யாருக்காவது கொலைவெறி வந்திச்சின்னா பலியாடா வசந்த்த புடிச்சிட்டுப் போங்க..! நாம சாமாதானமா போய்டலாம்..!
_____________________________________________________________
வசந்து கவிதை:

அரை அடி கூட இல்லை..
நமக்கிடையில் இடைவெளி..
இடையில் ஒரு இதயம்..
எங்கோ துடிக்கிறது..
ஓருடலில் தங்கி..
ஒன்றாய் சுவாசித்து..
ஆனாலும் கைக்கெட்டிய நீ..
வாய்க்கெட்டவில்லை பார்..
இதுதான் வாழ்க்கை...!

டிஸ்கி: சும்மா கற்பனைய பறக்க விட வேண்டாம்... இது ஒரு சுவாசப்பை மத்த சுவாசப்பைய பாத்து சொல்லுறது.. நேத்து போட்டது கிட்னி பத்தி.. அதுக்கு போட்ட பின்னூட்டம் எல்லாம் ரொம்ப ஓவர்.. அவ்வ்வ்வ்.... (நான் மாசி மாசம் சாம்பார் சாப்ட போறேன்.. என்னைப் போய்..)

பின்னூட்டம்

ப்ரியா: //இடையில் ஒரு இதயம்.. // போட்டேன்னா... இதயம் இடையிலயாடா துடிக்குது..? முதல்ல டாக்டர் கிட்ட போ நீயி..!


____________________________________________________________
வானம்பாடிகள்:

நறுக்: 345.2 v.56

"ஜெனரல் சரத் பொன்சேகாவின் கிரக நிலை சிறப்பாக அமைந்துள்ளது: அனோமா பொன்சேகா"

அவனே ஒரு கிரகம்.. அவனே வீடு வாடகைக்கு கிடைக்காம அலையுறான்... இதில நிலை வேறயா... பன்னாரிப் பொன்சேகா.. பரதேசி சரத்.. பேரப் பாரு அவிஞ்சு போன மாங்காய்க்கு.. ஆரஞ்சுத் தோல் போத்தின மாதிரி!

பின்னூட்டம்

ப்ரியா: ஜெனரல் பதவி போனாலும் பாரியார் அம்மணி சோதிடம் சொல்லி குடும்பத்த காப்பாத்திடும்பா..!

வானம்பாடி கவிதை:

மழைமுகில்கள் விலக்கி
எட்டிப் பார்த்துக் கண்ணடித்த
பிறைநிலவைப்
புறக்கணித்துச் சிரித்தேன்
என்னவள் புருவத்தின்
ஒரு முடிக்கு ஈடாகுமா
உன்னழகு..!

பின்னூட்டம்

ப்ரியா: tweezer புண்ணியமா..? நல்லா இருக்கு சார் கவிதை..!


____________________________________________________________
அது சரி:

கிடைக்கோடுகள்... நெடுங்கோடுகள்...
பாலஸ்தீனியம்.. இஸ்ரேல்.. ஒபாமா..
எக்ஸ் ஈகுவல் டு மைனஸ் டூ
ப்ளஸ் ஸ்குவாயர்ட் பிராக்கெட்
மைனஸ் வை மைனஸ் த்ரீ
பிராக்கெட் க்ளோஸ்ட்
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
பதில் கிடைக்காது போகலாம்..
கிடைத்த பதில் இரண்டாக இருக்கலாம்
இதில் எது சரி அது சரி என்று
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
என்றும் மனம் தளராத..
விக்ரமாதித்தன் போல்..!

பின்னூட்டம்:

ப்ரியா: விக்ரமாதித்தன் பதில்தானே சொல்லணும்?

அது சரி: பதிலே கேள்வியாகவும் இருக்கலாம்..! கேள்வியே பதிலாகவும் இருக்கலாம்..! (ஸ்ஸப்பா எப்டி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..)


____________________________________________________________
கதிர்:

கை வளையலின் கல்யாணி ராகமும்
பாதக் கொலுசின் பைரவி ராகமும்
பரவசப்படுத்துகிறது பரபரவெனப் பெருக்கும்
பரிமளம் விளக்குமாற்றுடன் நிமிரும் வரை..!

பின்னூட்டம்

ப்ரியா: பிய்ச்சு உதறிட்டீங்க கதிர்..!


____________________________________________________________
(அண்ணா) பிரபாகர்:

சரளா கிட்ட வடிவேலு அடி வாங்கிப் பார்த்திருப்பீங்க.. அண்ணன் அண்ணிகிட்ட அடி வாங்கிப் பார்த்ததில்லையே..

ஒரு நாள் எங்க வீட்டு வாசல்ல நின்னு தபூ சங்கர் கவிதை படிச்சுக்கிட்டிருந்தேன்.. பக்கத்தில பக்கத்து வீட்டு ரங்கமணி, எங்க வீட்டு தோட்டக்காரன் மாரியப்பனோட மகன் கிட்டா கிட்ட வெத்தல வாங்க வந்திருந்தான். எதிர் வீட்டுக் கிணத்தடில ஒரு பாட்டி குளிச்சுக்கிட்டு இருந்திருக்கு.. எனக்கு சத்தியமா அதப் பத்தி ஒண்ணும் தெரியாது...

கவிதை ரொம்ப இண்டரஸ்டிங்கா போச்சு "கர்ப்பக் கிரகம் தன்னைத் தானே அபிஷேகம் செய்து கொள்ளுமா என்ன?" என்று உரத்துப் படித்துவிட்டு மீண்டும் மௌனமாகத் தொடர்ந்தேன்.

முதுகில் ஏதோ விழுந்ததில் உயிர் பறந்து போய் எதிர் வீட்டு ஓட்டில் அமர்ந்து கொண்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரங்கமணி தெறித்து ஓடினான். அப்புறம்தான் தெரிந்தது முதுகில் விழுந்தது பூரிக் கட்டையென்று . என்ன சொன்னீங்க என்று கேட்டபடி என் மனைவி நின்று கொண்டிருந்தாங்க. ஒன்றும் புரியாம கேட்டதுக்கு பதில் சொல்லணும்னு "கோபித்துக் கொண்டு என்னைக் கைவிட்டு விடாதே என்றேன்" அதுவும் கவிதைதான்.

மீண்டும் கண் மூடித் திறப்பதற்குள் இருபது முப்பது அடிகள் விழுந்தன. அப்புறம் ஒன்றும் பேசாமல் போயி அடுப்பங்கரைல உக்காந்துட்டாங்க. அப்புறம் நாலு நாள் கழித்து ரங்கமணி சொன்னப்போதான் விஷயம் தெரிஞ்சது. உடனேயே ஒரு கவிதை கிறுக்கிக் கொண்டு போய் என் மனைவியிடம் நீட்டினேன்.

"இந்தா என் இதயம்
அதை நீ விளையாடும் வரை
விளையாடி விட்டு
தூக்கிப் போட்டு விடு

அதற்குத்தான் இது
படைக்கப்பட்டது"

அதுவும் தபூ சங்கர் கவிதைதான். அப்புறம் சமாதானமாயிட்டாங்க. பாவம் ரங்கமணி அவன் சொந்த செலவில வெத்தல வாங்கினதா சொல்லி ரொம்ப வருத்தப்பட்டான்.

பிடிச்சிருந்தா சொல்லுங்க.. இல்லைனா முடிவு மாத்தி எழுதிடலாம்.

பின்னூட்டம்

ப்ரியா: அண்ணி அடி பின்னிட்டாங்க..! (ஏற்கனவே பாசமலர், டி ஆர் ன்னு நக்கல் ஜாஸ்தி ஆய்டுத்து..! இதுக்கு என்ன சொல்லுவாய்ங்களோ...)


____________________________________________________________
நேசமித்ரன்:

ஆண்ட்ரோஜன் அடுக்குகளின் இடுக்கில்
மோனலிசாக்களின் மோனப்புன்னகையில்
சைட்டோ டாக்சிக் ஏறிய செல்களுடன்
பிகாசஸ் வரையும் பிக்காசோ பாப்லோக்கள்

பின்னூட்டம்:

ப்ரியா: ஐயோ நான் இல்லீங்க..!


____________________________________________________________


மக்கா... இங்க திட்டுறது சரி... நோ ப்ரோப்ளம்... அது திட்டின கையோட.. இன்னைக்கு போட்ட இன்னொரு இடுகை (கவிதைன்னு பேரு வச்சிருக்கேன் அதுக்கு..) அங்கன கிடக்கு.. அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு போங்க.. சொல்லிப்புட்டேன்..! (இன்னும் மூணு நாளைக்கு ஆபீஸ்ல வெட்டி முறிக்கணும்... அதான் ஒரு நாள்ல ரெண்டு இடுகை... ஹிஹி..) நோ பாட் வோர்ட்ஸ் ப்ளீஸ்..! (இன்னும் கொஞ்ச பேரு லிஸ்ட்ல இருந்து தப்பிச்சிட்டாங்க.. அப்புறம் பார்த்துக்கறேன்..)
____________________________________________________________

Friday, November 27, 2009

கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா..?!

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8
Part 9
Part 10
Part 11
Part 12


இரைப்பையில் இன்னமும் இருந்து கொண்டிருந்த ஐஸ் கிரீம்... இடைச்சிறுகுடல் தாண்டிக் கொண்டிருந்த இடியப்பம் ஆகியவற்றை தொண்டையை நோக்கி இழுத்து... வாய் வழியாக வெளியேற்ற வழி செய்து கொண்டிருந்த மெதனோல் நெடியுடன்... இன்ன பிற இரசாயன நெடிகள்...

கையில் கைக்குட்டை வைத்து மூக்கை அழுத்தியபடி நான்... யாழ் பல்கலைக்கழக... மருத்துவபீடத்தின்... பரிசோதனைக்கூடத்தில்.. கண்ணாடிக் குவளைகளில்... சுருண்டிருந்த... பலவிதப் பாம்புகள்... பல்லிகள்.. தவளைகள்... ஓட்டை விழுந்த... மற்றும் விழாத இதயங்கள்... புகையைச் சுவாசித்து... கார்பனால் நிறைந்து கறுத்திருந்த நுரையீரல்கள்... நல்ல காற்றைச் சுவாசித்த நுரையீரல்கள்.. வேலை நிறுத்தம் செய்து.. டயாலிசிஸ் டெக்னாலஜி கண்டு பிடிக்க உதவிய சிறுநீரகங்கள்... சாதாரண சிறுநீரகங்கள்... ஆல்கஹோல் ஈரல்... முழு ஈரல்.. மண்ணீரல்... மண்புழு... இவற்றுடன்...

ஒரு மாதமான மனிதக் கரு.... தொப்புட்கொடியுடன் சுருண்டிருந்த... குறை மாதத்தில் இறந்து பிறந்த குழந்தை...! அவற்றுக்கெல்லாம் நடுவில்... சரணாலயத்தில்... அழகாக அமைக்கப்பட்ட நீர்த்தாரை போன்று... கண்ணாடிப் பெட்டியில்... எனக்குப் பதினெட்டு வயதாக முன்னரே நான் பார்த்த ஒரு முழு ஆணின் நிர்வாண உடல்...! மூக்கைப் பொத்தியபடி திரும்ப... "திலீபன்" என்ற சொல் காதில் அறைந்து... மீண்டும் பெட்டியை நோக்கித் திரும்ப வைத்தது...!

தோல் ரோஸ் நிறத்தில் வெளிறியிருக்க... போஸ்டர்களில் பார்த்த அதே அமைதியுடன்... பார்த்தீபன் என்று அழைக்கப்பட்ட... முன்னாள் மருத்துவபீட மாணவன்... உடலையும்... உயிரையும்... தமிழுக்கு அர்ப்பணித்த... தியாகம்... திலீபன்... அஹிம்சை... அமிலத்தில் மிதந்து கொண்டிருந்தது...! இல்லை..! அகிம்சையைக் கொன்று அமிலத்தில் மிதக்க விட்டிருந்தார்கள்..!

எது ஹிம்சை..? எது அஹிம்சை..? ஒருவனைக் கொல்வது ஹிம்சை..? 'உன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்' என்று... தன்னைக் கொல்லவரும்.. கொடும்பாவியை எரித்தல் ஹிம்சையா..?

உன் வீடு புகுந்து.. உன் தாயின் சேலையுருவும் ஒரு புல்லுருவியை வேடிக்கை பார்ப்பது அஹிம்சையா..? அதே சேலையில் அவளைத் தூக்கிலிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அஹிம்சையா..? அவள் சேலையில் கண் படமுன்... கண்ணை நோண்டுதல் ஹிம்சையா..? இதுதான் தீவிரமான வாதமா..? பக்கவாதத்தில் படுத்திருப்பவன்போல்.... கையாலாகாதிருப்பதுதான் அஹிம்சையா..?

திலீபன்... ஒரு பானைச் சோற்றுப் பதம்..! அஹிம்சாவழி போற்றப்பட்டிருப்பின்... தீவிரவாதம் வழியல்ல என்று தவளையாகக் கத்திக் கொண்டிருப்பவர்களின் கூற்று மெய்ப்பட்டிருக்க வேண்டுமெனில்... திலீபன் அமிலத்தில் மிதந்து கொண்டிருப்பதற்குப் பதில்... அமிலத்தைக் கையில் வைத்து... பல காயங்களைத் துடைத்துக் கொண்டிருந்திருப்பான்.. இருந்திருக்க வேண்டும்! கல்லறைக் குழிகளில் கனவு கண்டுகொண்டிருப்பவர்களின் கனவு மெய்ப்பட்டிருக்கும்... அவர்கள் கனவுகளில் மட்டுமன்றி... நனவுகளிலும் உலவிக் கொண்டிருந்திருப்பர்...!

உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவாரடி கிளியே
செய்வதறியாரடி...

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி..!

(இறந்த திதியில் மட்டும் தாயினை நினைப்பவள் நானல்ல..! கண்ணினை நனைக்கும்... பல ஞாபகத் துளிகளில்... இதுவும் ஒரு...°)


(தொடரும்..)

Tuesday, November 24, 2009

சமுதாய விளக்குமாறுகள்...

பல்லுக் குத்தக் கூட உதவாத கலாச்சாரங்களைக் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் சிலரால் எதிர்மறையான கோணத்தில் விமர்சிக்கப்படும் பல 'அதி நவீன' சிந்தனைகளைக் கொண்டிருப்பதால், நான் 'பிறந்து வளர்ந்த' பின்னணியிலிருந்து வந்த 'நம்மவர்'களிடம் நிமிட நேரம் பேசுவது கூட எனக்கு மிகச் சிரமமாக இருக்கிறது.

நம்மில் பலருக்கு 'மாடர்ன்' என்ற சொல்லில் நமீதாதான் தெரிகிறார்கள். செயற்கைத்தனமான, நடை, உடை, பாவனைகளுக்கு மட்டும் 'மாடர்ன்' என்ற வார்த்தையைப் பொருத்துகிறார்கள். இங்கு நான் அணியும் மிகச் சாதாரண ஜீன்ஸ், ஷர்ட்டுக்கும், மாடர்ன் என்ற வார்த்தைக்கும் எனக்கு எந்த சம்மந்தமும் தெரியவில்லை.

ஆண், பெண் வித்தியாசம் பாராது பரஸ்பரம் கை குலுக்கிக் கொள்வதையே இன்னும் எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் (பன்றிக் காய்ச்சல் காரணமல்ல). வேலை நிமித்தம் சந்திக்கும் தமிழ் உள்ளங்களிடம் நீட்டிய கையைப் பற்றிக் குலுக்குவதும், ரொம்பக் கூச்ச சுபாவத்துடன் நெளிபவர்களுக்கு ஒரு தலையசைப்புடன் வணக்கம் சொல்வதும், மற்ற எந்த நாட்டவர் எனிலும் கை குலுக்குவதும் என்னுடைய வழக்கம்.

எப்போதாவது வீதியில் எதிர்ப்படும்போது, தொலைவிலிருந்தபடியே கையை நீட்டிக் கொண்டு வந்து கட்டிக் கொள்ளும் ஜேர்மன் ஆசானும், கல்லூரியை முடித்துக் கொண்ட கடைசி நாளில் 'give me your cheek' என்று கன்னத்துடன் கன்னம் வைத்து விடைபெற்றுக் கொண்ட ஆங்கில ஆசானும் விதிவிலக்கு. விகல்பத்திற்கு வழியேதுமில்லை.

சொல்ல வந்த விடயம் விட்டு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேன். 'நம்மவர்' பின்னணியுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஒரு பெண்மணி, 'யாரென்றாலும் வாஞ்சையுடன் அணைத்து முத்தமிட்டுக் கொ(ல்லு)ள்ளும் ஒரு அம்மையார், அலுவலக நேரத்தில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். ஹல்லோ சொல்ல முதல் வந்த வார்த்தை "do you knw, what has that BIT** done?"

ஒரு நிமிடம் ஒன்றும் புரியாது.. திகைத்து ஏன் இந்த வார்த்தை... யார்? என்ன?

ஒரு பதினெட்டு வயது இளம்பெண்ணின் பெயர் சொல்லி... அவள் 'வெள்ளைக்காரனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள்... இவளுக்கு காதலிப்பதற்கு நம்ம ஊர் ஆள் கிடைக்கவில்லையா? என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்.

எனக்கு தலையை அலுவலக மேஜையில் 'ணங் ணங்' என்று இடித்துக் கொள்ள வேண்டும் போலவும், சட்டையைக் கிழித்துக் கொண்டு சிரிக்க வேண்டும் போலவும், தலையைப் பிய்த்துக் கொண்டு ஆ என்று உச்ச கதியில் கத்த வேண்டும் போலவும், தொலைபேசியை சுவற்றில் அடித்து அந்தம்மணி தலையில் காயம் ஏற்படுத்த வேண்டும் போலவும் உணர்ச்சிகள் சுற்றிச் சுழன்றன.

அவள் அப்படியே ஊர்க்கருமத்தைக் காதலிச்சிருந்தால்.. நம்ம ஜாதியில் கிடைக்கவில்லையா என்று கேட்பார்கள். டிவியில் மூன்று ஆண்களை திரைக்குப் பின்னால் உட்கார வைத்து, மூன்று கேள்வி கேட்டு ஒருவனைத் தெரிவு செய்து, ஒரு மாதம் ஹனி மூன் செல்லும் ஜோடிக்கும், நம்மவர்களின் பெயர், வயது, ஜாதி சொல்லித் தேடிக் கொள்ளும் ஜோடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

ஒரு மாதம் ஹனிமூன் சென்ற ஜோடி, சரி வரவில்லை என்று டாட்டா காண்பித்து சுமுகமாகப் பிரிந்து சென்று விடலாம். ஆனால் சமுதாய விளக்குமாற்றில் அகப்பட்ட உயிர்கள்..? 'ஆயிரம் காலத்துப் ..........பயிர்' (நல்லா கண்டு பிடிக்கிறாங்கடா) என்று பெயர் சொல்லி... பூச்சிகொல்லி மருந்தாக நஞ்சை மட்டுமே ஊட்டிக் கொண்டிருப்பவர்களுக்குப் பெயர் "நலன் விரும்பிகள்".

(இந்த இடுகைக்கு எத்தன பேரு என் மூஞ்சில துப்புவாங்களோ ..., துப்புவார் துப்பட்டும்..=)))


________________________________________________________________

எடுத்தியம்பியமைக்கு நன்றி நேசமித்ரன்...
எனது சப்பைக்கட்டு விளக்கமாக இத யூஸ் பண்ணிக்கறேன்... =))

கலகலப்ரியா said...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்கு ஆனா ஒரு முழுமை இல்லாத மாதிரி ஒரு உணர்வுஙக

என்னமோ தோணுச்சு

சொல்லிட்டேன்

:)//


நன்றி நேசமித்ரன்... ரொம்ப வாஸ்தவம்... எனக்கே அப்டித்தான் இருந்தது... இருக்கு... புத்தகமாகவோ... தொடர் இடுகையாகவோ போட வேண்டியது... எங்கயோ ஆரம்பித்து... சட்டுன்னு எங்கயோ முடிக்கிறப்போ... இந்த உணர்வு தவிர்க்க முடியாதது... பூச்சுக்களற்ற விமர்சனங்கள் என்னால் நேசிக்கப்படுகின்றன.. ரொம்ப நன்றி..!


Sunday, November 22, 2009

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன..?



இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்

புல்லரிக்குதுங்க...! அந்தக் காலத்திலேயே இடுகை பத்தி எவ்ளோ அழகழகா சொல்லி இருக்காங்க பாருங்க..! (வேணாம் சமாதானமா போய்டலாம் என்னாச்சு இப்போ..?!)

பை த வே நான் சொல்ல வந்தது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்... ஆனா பாருங்க சீரியஸா இருக்க வேண்டிய நேரத்தில எல்லாம் காமெடி பண்றதே நம்ம பொழைப்பா போச்சு.

சுப்புடு அப்டின்னு ஒரு லொள்ளு... சாரி கொள்ளுத் தாத்தா இருந்தாருங்க.. ஐயோ அவர நான் கண்ணால கூட பார்த்ததில்லீங்க... (இது யாருப்பா கண்டு புடிச்சது... கண்ணைத் தவிர வேற எத வச்சு பார்க்கறாங்களாம்.. ஹ்ம்ம்... எல்லாம் நேரம்..)... ஆனா புகைப்படங்கள்ல பார்த்து ரசிச்சிருக்கேன். அந்தாளோட 'நச்' விமர்சனங்கள் அட்டகாசம். ஜேசுதாஸ் போல பெரிய பெரிய பாடகர்கள் எல்லாம் அவரு கச்சேரிக்கு வர்றாருன்னா வயித்தப் புடிச்சுக்கிட்டு ஓடுவாங்களாம். சுதா ரகுநாதன் சங்கீதத்த கன்னாபின்னான்னு விமர்சனம் பண்ணுவாராம். ரொம்ப தில்லான ஆளு...!

இப்போல்லாம் சுதா ரகுநாதன் பேட்டி கொடுக்கிறப்போ "சுப்புடு மாமா...".. "சுப்புடு மாமா"... என்னோட குறைகளைச் சுட்டிக் காட்டி எனக்கு வழிகாட்டினது அவங்கதான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுறாங்க. சுப்புடுவும் படிப்படியா சுதா ரகுநாதனோட ரசிகராகி ஆஹா... ஓஹோன்னு புகழ்ந்துட்டுதான் போனாரு.

இவரோட விமர்சனம் படிக்கிறவங்க வாய சப்புக்கொட்டிக்கிட்டே படிக்கலாம்... என்னா கிண்டலு... என்னா நக்கலு... ஆனா விமர்சனத்துக்கு ஆளானவங்க பாடு மகா திண்டாட்டம். ஆனாலும் பாருங்கோ ஆரோக்யமான விமர்சனம் மிகவும் அவசியம். விமர்சனம் ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லையெனில்... ஒன்றும் செய்யாதிருங்கள்... ஒன்றும் சொல்லாதிருங்கள்... ஒன்றுமில்லாததாகி இருங்கள்... அப்டின்னு ஒரு பெரியவரு சொல்லி இருக்காரு...( ஐயோ அது நானில்லீங்கோ..)

நம்ம ஆளுங்கதான் எதிர்மறையான விமர்சனம்னா பூச்சிமருந்து சாப்ட்ட மாதிரி வாந்தி வாந்தியா எடுக்கிறாங்க. ஒரு ஆபீஸ்ல பாஸ் வந்து.. இங்க பாரு இதில ஒரு தப்பு நடந்து போச்சுன்னா... 'ஓ ஐ ஆம் வெரி சாரி... ஐ ஷால் பி மோர் கேர்ஃபுல்' அப்டின்னு ஈஸியா எடுத்துக்கிட்டு கவனமா இருக்கிறவங்க எத்தன பேரு..? (ஐரோப்பா போன்ற மேலைத்தேய நாடுகளில் இது சர்வ சாதாரணம்..) ஆனா நாம வானம் வசப்படுவதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை... உணர்ச்சிவசப்படுவதில் பிரியப்படுகிறோம். ஆரோக்யமான விவாதங்கள் கூட வைப்பதில்லை. என்னய்யா பண்ணிட்டான்னு கேட்டா போதும்.. 'நீ மட்டும் கொம்பா...'... 'நீ பண்ணாத தப்பா..' .. 'உன் தாத்தா பண்ண தப்பு தெரியுமா' என்று பத்தாவது தலைமுறை தாண்டி இழுத்து, தப்புக் கண்டு பிடிப்பார்கள்.

இதனால் யாருக்கும் எதுவும் ஆகப் போறதில்லை. தற்பாதுகாப்பு இதற்கு அவஸ்யமில்லை. ஆரோக்யமான விமர்சனங்கள் பாராட்டப்பட வேண்டியவை. ஆரோக்யமாக விவாதிக்கப்பட வேண்டியவை. வன்மத்தில் விளைந்த விமர்சனங்கள் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துவிடும். அதற்கு வேலை மெனக்கெட்டு பக்கம் பக்கமாக விரிவுரையாற்ற வேண்டியதில்லை... அலட்சியப்படுத்தி விடலாம்... அல்லது ஒரு புன்னகையைப் பதிலாக்கலாம்.. (ரொம்பத்தான் ஓவரா போய்க்கிட்டிருக்கேனோ...)

'ஆரா மீனுக்கும் அயிர மீனுக்கும்
நடு ஏரில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட '

நான் எங்கயும் மூக்க நுழைக்கலன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... எதுக்கும் நம்மளுக்கு ஆரோக்யமா நாலு விமர்சனம் போட்டு போங்க... எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னா... நெசம்மாவே அப்டித்தானா அப்டின்னு எனக்கு ரொம்ப மண்டைக் குடைச்சலுங்க....! அதான் மாடரேஷன் போட்டிருக்கேன்ல... ரொம்ப ஓவர்னா சைலண்டா விம் போட்டு கழுவிடலாம்...

இவ்ளோ பேசுறியே சொல்ல வந்தத நேர்ல சொல்லேன்னு கேக்குறவங்களுக்கு... ஐயோ மன்னிச்சிடுங்க... நம்மளுக்கு அவ்ளோ தில் எல்லாம் கிடையாதுங்க..! அப்போ உத்தரவு வாங்கிக்கிறேனுங்க...!


தலைப்புக்கு விடை: சத்தியமா நான் இல்லை...

_____

Sunday, November 15, 2009

நட்புக் காலத்தில் நானும்...




ஆச்சு முக்கால் வருஷம்... அட வேற ஒண்ணுமில்லீங்க.. இடுகை எழுத வந்து முக்கால் வருஷம் ஆச்சு.. ஹிஹி..

நம்ம இடுகைய.. நம்ம பர்மிஷன் இல்லாம விகடனுக்கு அனுப்பற வானம்பாடிய வச்சுதான்.. வடிவேலு படத்துக்கு... இம்சை அரசன்னு பேரு வச்சிருப்பாங்கன்னு தோணுது... அவங்கள வச்சுதான் என்னோட இந்த இடுகை... ம்ம்.. நூறாவது இடுகை...

யூத்ஃபுல் விகடன்ல உன்னோட இடுகை வந்திருக்கு... இடுகைல போடு...

'ம்ம்.. ஓகே... '

ரெண்டு நாள் கழித்து... திரும்ப வந்திருக்கு.. இடுகைல போடு...

'பார்க்கலாம்...'

மூணு நாள் கழித்து... விகடன் முகப்பில வந்திருக்கு... இடுகைல போடு...

'ஆ..! ஆள விடுங்க சார்... என்னால முடியாது..!'

'ஏன் உனக்கு இதில என்ன கஷ்டம்?'.. எப்பொழுதெல்லாம் விகடனில் வெளியிடப்படுகிறதோ... அப்பொழுதெல்லாம்.. கன அக்கறையா வந்து... பின்னூட்டத்ல 'வாழ்த்துக்கள் ப்ரியா... விகடன் முகப்பில உன்னோட கவிதை..' ... ஸ்ஸ்ஸப்பா முடியல... (ராகவன் சார் கோச்சுக்குவார்... எவ்ளோ அக்கறையா பண்ணா இப்டியான்னு... =))..

சார்... விகடன்ல இருந்து கவிதை கேட்டு எழுதி இருக்காங்க.. மின்னிதழ் வெளியிட போறாங்களாம்...

வாவ்.. வெரி குட்... எழுது எழுது..

பார்க்கலாம்...

எழுதினியா... எழுதினியா... எழுதினியா... எழுதினியா...

இல்ல.. இல்ல.. இல்ல.. இல்ல... இல்ல....

நாளைக்குள்ள அனுப்பணுமே... இன்னிக்கு எழுது... ப்ளீஸ்.. ப்ளீஸ்...ப்ளீஸ்..

பார்க்கலாம்...

எழுதி அனுப்பிச்சதும்... எங்க மின்னிதழ் காணோம்... எப்போ வருது.. எங்க காணோம்... எப்போ வருது... எப்போ வருது...

தெரியாது சார்... தெரியாது.... தெரியாஆஆது....!

அன்று காலையில்... விகடன் எனக்கு மெயில் அனுப்ப முன்னாடி... மின்னிதழ் வந்துடுத்து... உன்னோட கவிதை வந்திருக்கு... அழகா இருக்கு... காங்கிராட்ஸ்...

சரி பார்க்கறேன்.. தாங்க்ஸ் சார்...

இன்னைக்கு... ஒரு இடுகை போடு.. நூறாவது இடுகை...

'சார்... இதுக்காக எல்லாம் இடுகை போட முடியாது.. ஏதாவது தோணிச்சுன்னா பார்க்கலாம்..'..

ஏன்... இதுக்கு என்ன கஷ்டம்... ஒரு இடுகை போடு...

ஒண்ணும் பேசாம.. சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு... சஞ்சயின் போன வருஷ மார்கழி மகோற்சவம் கச்சேரி பார்த்தேன்...

ரெண்டு மணி நேரம் கழித்து.. 'என்ன இடுகை போடுறியா..?'...

ஐயோ இல்ல சார்...

அப்போ என்ன பண்ணுறா..

ஒண்ணுமில்ல சார்...

ஸ்டார்ட்டிங் ட்ரபிள்... ஆரம்பிச்சான்னா எழுதிடுவா... ஒரு இடுகை போடு...

ம்ம்.. பார்க்கலாம் சார்...

மூணு மணி நேரம் கழிச்சு... நான் நூறு இடுகைக்கும்.. நூத்தி இருபத்தைஞ்சு ஃபலோவர்ஸ்க்கும் சேர்த்து விஷ் பண்ணலாம்னு நினைச்சேன்... இப்போ பாரு.. நூத்தி இருபத்தியாறு பேரு ஆய்ட்டாங்க... அவ்வ்வ்வ்வ்வ்வ்... இடுகை போடு...

இது பப்ளிஷ் பண்ண ரெண்டு நிமிஷம் முன்னாடி.. 'இடுகை போட்டுட்டியா..?'

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க... அதான் நானும் இத அப்டியே இடுகையா போட்டுட்டேன்...

_________________________________

இன்று போல் நாளை இருப்பதில்லை...
உன் பேரப்பிள்ளைகளுடன் நீயும்..
என் பிள்ளைகளுடன் நானும்...
இப் பிரபஞ்சத்தின்...
இரு வேறு திசைகளில்...
தொலைந்து போய் விடலாம்...
அதனால் என்ன...
இப்பொழுதும் திசைகள் வேறுதான்..
ஆனால் நட்புக்கு எல்லைகள்..
வயதில் வகுக்கப்படாதது போல்...
திசையிலும் வரையப்படவில்லை...
பெயர் தெரியாத யுகத்தில்...
தொலைந்த நட்பு...
கணினி யுகத்தில் சந்தித்திருக்கிறது..
இந்த யுகத்தில் தொலைந்தால்...
இன்னொரு புதிய யுகம்...
தோன்றாமலா போய்விடும்...?!

_________________________________

இந்த இடுகையில் என்னுடன் எப்பவும் ஒட்டிக் கொண்டே இருக்கும்... என் ஆத்ம ஸ்நேகம்.. என்னுடைய டெடியையும் அறிமுகப்படுத்தலாம்... டெடி வச்சிருக்கா... குழந்தையா... இல்ல லூஸா (அது எல்லாரும்தானே.. ஹிஹி) என்றெல்லாம் கற்பனையைப் பறக்க விட வேணாம்... =))


_________________________________


எனது ஒவ்வொரு இடுகையையும் பொறுமையாகப் படித்து... ஊக்குவிக்கும்... அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் அன்பினைக் காணிக்கையாக்குகிறேன்.. பதிவுலகத்தில் கிடைத்த சொந்தங்கள் மற்றும் நட்புகள் பற்றி... இன்னொரு நாள் விரிவாக எழுத வேண்டும்.. எழுதுவேன்..



___/\___

Saturday, November 14, 2009

தர்மம் பண்ணு தோழா...


அன்றொரு நாள்... அலுவலகத்தின் முன்... துண்டு விரித்து.. Didgeridoo என்னும் இசைக் கருவியை ஒருவன் ஊதிக் கொண்டிருந்தான்... அது வாசிப்பவர்கள் கஷ்டம் ஒரு பக்கம்... கேட்பவர்கள் கஷ்டம் மறு பக்கம்... நன்றாகத்தான் இருந்தது... அருமையான இசையும் கூட.. ஆனாலும்.. அந்த ஒரு மணி நேர மதிய இடைவேளையில்.. அலுவலகத்தில் தொலைபேசி ஊதல்களிலிருந்து விடுபட்டு... அமைதியை நாடிய மனத்தினால் அதை ரசிக்க முடியவில்லை... அதன் அதிர்வலைகள் எரிச்சலையே மிகைப்படுத்தின...





விரிக்கப் பட்டிருந்த துண்டின் முன்.. சில்லறைகள் சிலவற்றுடன் சிறு திருவோடு ஒன்று உட்கார்ந்திருந்தது... துண்டின் ஓரத்தில்.. ஓநாய் சைஸில் ஒரு நாய்.. முன்னங்கால்களை முன்னால் நீட்டி... அதில் தன்னுடைய தாடையைப் புதைத்து... அப்துல் கலாம் கர்நாடக இசைக்கச்சேரியை ரசித்துக் கேட்கும் பாவனையில்... மிகவும் சாந்தமாக முகத்தை வைத்துக் கொண்டு.. சர்வ சாதாரணமாகப் படுத்திருந்தது...

அதன் முகத்தையும்.. கண்களையும் உற்றுப் பார்த்தால்... மிகவும் பிரயத்தனப்பட்டு... சகித்துக் கொண்டிருந்தாற்போல் தோன்றியது... அதன் எஜமான் அதைக் கண்டு கொள்ளக் கூடாது என்று முகத்தை நன்றாக நீட்டி... அந்த வாத்யக் கருவி பக்கத்தில் மறைத்தாற்போல் வைத்துக் கொண்டிருந்தது... பக்கத்தில் வந்த நண்பியிடம்... பாவம் அந்த நாய் என்றேன்...

அந்த அருமையான ஆத்மாவுக்கு...

தோழா...
அதிர்வலைகள்
சகித்துச்
சுகித்தது போலிருந்தாய்
பண்பாடு பேணுவதாகச்
சொல்லிக் கொண்டிருக்கும்
என்னைப் போல் மாந்தருக்கு
உன் பண்பாட்டுக் கடலிலிருந்து
ஒரு துளி...
தர்மம் போடுமையா...!


இதையும் பாருங்க... நான் கதிருக்கு போட்டிருக்கும் பின்னூட்டத்தையும் பாருங்க... அவ்வ்வ்வ்வ்வ்... என்னிய போயீ.. =)
(எனக்கு கலாமும் புடிக்கும்... கர்நாடக சங்கீதமும் புடிக்கும்... ராமவர்மாவும் புடிக்கும்... பாலமுரளிகிருஷ்ணாவும் புடிக்கும்...)



___/\___

Thursday, November 12, 2009

அன்புடன்... விகடன்...

விகடனின்.. முதல் மின்னிதழில்... எனக்கும் ஒரு இடம்... நேற்றைய தினம்... நெகிழ்வாக விடிந்தது... பிரபாகர் அண்ணாவின் இடுகையும்... விகடனின் பக்கமும்... வானம்பாடியின் வழக்கமான பாராட்டும்... மற்றைய அனைத்து.. அன்புள்ளங்களின் அன்பும்...

என்னுடைய தொடர் பார்த்து... ஐயோ பாவம் என்று பரிதாபப் படுபவர்கள் நிறைய... ஆனால் அனுதாபத்தை நான் எப்பொழுதும் வரவேற்றதில்லை... அன்பைப் புறக்கணித்ததும் இல்லை... என்னுடைய உலகம் எப்பொழுதும் அழகானது... நேற்று... உலகம் அன்பு மயமாகத் தோன்றியது... அழகு சற்று மிகைப்பட்டது போலத் தோன்றியது...

நன்றி என்பது வார்த்தை மட்டுமே... இந்த உணர்வை இந்த மூன்று எழுத்துகளில் அடக்க நான் தயாராக இல்லை... 'அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்'..


























நவீன யுகத்தின்
நவ நாகரிகங்களுக்கு
ஈடு கொடுக்க முயன்று
இயந்திரப் பறவையாகி
புயங்கள் கொண்டு
பறக்க எத்தனித்து
குப்புற விழுந்து
காலொடித்துக் கொண்ட நான்..

நொண்டி நொண்டி
நகரங்கள் தாண்டி
நீண்ட பயணத்தின் பின்
மண்வாசனை இன்னும்
கொஞ்சம் மிஞ்சியிருந்த
இரவல் திண்ணையொன்றில்
இளைப்பாறினேன்

துவண்டு விடாதே
தேசம் தொலைத்த
தேவனின் கதியும்
நின்னைப்போல்
நிர்க்கதிதான்
கலைந்து கிடந்த
கேசத்தை வருடிக் கொடுத்த
தென்றல் காதுக்குத் தேனாகி
தேவ கீதம் பாடி...... விட்டுச் சென்றது!

___/\___

Tuesday, November 10, 2009

இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்.. அற்ப மாயையே...

Part 1
Part 2
Part 3
Part 4

Part 5
Part 6
Part 7

Part 8

பள்ளி விடுமுறையில்.. ஒரு நாள்... மழை விட்டு ஓய்ந்திருக்க... கிடைத்த சிறு வெள்ளத்தில்... காகிதக் கப்பல் விட்டுக் கவுத்துக் கொண்டிருந்தேன்.. கேட் அருகில்... குட்டி போட்ட பூனையாகப் பாட்டி... நொடியில் நெருங்கி... என்ன பாட்டி..? "உஷ் சத்தம் போடாத... அந்த மனுஷன் கண்ணில பட்டுட போறது"... என்ன பாட்டி..?.. "அங்க பாரு".. ஆ... அணில்... இல்லை... அணில் சைஸில் பூனைக் குட்டியேதான்... பாட்டி நிஜமாவே குட்டி போட்டுட்டுதான் சுத்துறாங்களா...?!.. 'எப்படிப் பாட்டி..?!'.. "யாரோ ராவோட ராவா... கொண்டு வந்து விட்டுட்டு போய்ட்டாங்க.." (இப்படிக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டால் எப்படி இருக்கும் என்று... அவர்களுக்கு இத்தனை நாளில்... பல முறை தெரிந்திருக்கும்... உயிருடன் இருக்கும் பட்சத்தில்..)...

'பாட்டி இத நாம எடுத்துக்கலாமா..?'... "ம்ம்... அந்தப் பக்கம் அந்த மனுஷன் இருக்கார்... இந்தப் பக்கமா... தட்டுமுட்டு சாமான் போட்டு வைக்கிற ரூம்ல கொண்டு போய்டு.. இல்லைனா நாயிங்க கடிச்சுக் குதறிடும்".. 'ஸ்ஸ்ஸ்ஸரி பாட்டி'.. ரகசியமா.. தாத்தா கண்ணில் படாது... பூனைக்குட்டி அங்கு குடியேற்றப்பட்டு... மூன்று வேளை தவறாது பால் ஊற்றப்பட்டு.. கிட்டத் தட்ட... ஐந்து நாட்களுக்கு மேல்... தாத்தாவின் பார்வை படாமல் வளர்க்கப்பட்டது... தெரிய வந்த போது... தாத்தா வாளாவிருந்தது.... ஆச்சரியமாக இருந்தது... (அடுப்பங்கரையில்... எலிப்பொறி வச்சு... பாட்டி உண்ணாவிரதம் இருக்கிறத விட... இவளே பொறி வளர்க்கிறாளே... பேஷ் பேஷ்..என்ற நினைப்போ.. சுப்பு மைன்ட்.. சொல்ல முடியாது..)...

ஆபரேஷன்... லிபரேஷன்... பெயர்வுகள்... வீட்டை விட்டு அசையாத... சுப்பு... லக்ஷ்மி... விட்டு... நன்றியுள்ள நாய்கள் விட்டு... பூனைக்குட்டியும் விட்டு... பூந்தோட்டமும் விட்டு... அம்மா கையில் மூட்டை முடிச்சு... அப்பா கையில் பெட்டி... படுக்கை... ஒன்றா... இரண்டா... எத்தனை மைல்கள்.. நடந்து.. நடந்து... நடந்து.. 'Rabbit proof fence' பார்த்த போது... வலி உணர முடிந்தது... 'அம்மா கால் வலிக்குதும்மா... தூக்குங்க..'... 'அம்மா கைல மூட்ட முடிச்சு... எப்டிம்மா...' .. 'அப்பா தூக்குங்க..'.. 'வாடா...'.. தோள்களில் நானும்... கைகளில்.. பெட்டிகளும்... அப்பாவும்... 'அப்பா பாவம்டா... கொஞ்சம் இறங்கி நடம்மா செல்லம்.. இப்போ வந்துடும்...'... சிணுங்கியபடி... நடந்து... நடந்து... 'எங்கம்மா போறோம்..?.. இன்னும் எவ்ளோ தூரம்..?'..

அடிப்படை வசதிகள் அற்ற... ஆனால்... மிக மிக அழகிய கிராமம்... தாமரைத் தடாகங்கள்... வானுயர்ந்த தென்னந் தோப்புகள்... காடுகள்... தாமரையையும்... குரங்கையும்... நாவல் மரத்தில் பழத்தையும்... நேரில்ப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நாட்கள்... ஆனால்... அந்த அழகை ரசிக்க முடியாது... தினம் தினம்... நொடிக்கு நொடி... பாட்டி.... தாத்தா... ஜிம்மி... 'டைகர்'..(நாய்க்கு பாட்டி வைத்த பெயர்..).. போலீஸ்...(இதுவும்தான்..).. பூனைக்குட்டி... நினைத்து நினைத்து... அழுது கழிந்த நாட்கள்...

இரு வாரத்தில்... மீண்டும் எச்சரிக்கை... ஒல்லிக் குச்சி அம்மா... எப்படிச் சாதித்தார்கள்... எப்படிப் போனார்கள்... எப்படி வந்தார்கள்... தெரியாது...! திரும்பி வரும்போது... பாட்டியும்... தாத்தாவும்... டைகரும்... சேர்ந்து... "பாட்டி.... தாத்தா..!".. "கடவுளே.. ஜிம்மி பாதி தூரம் வரைக்கும் ஓடி வந்திச்சுடா... டிராக்டர்ல வந்தோம்... முடியாம திரும்பிடுத்து... போலீஸுக்கு வயசாச்சில்ல... அதால முடியல.." ... "பாட்டி... பூனைக்குட்டி..?!"... "அது வீட்டுக்குள்ளதாண்டா..."... கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டார்கள்...

இரு மாதங்களோ... அதற்கு மேலோ... ஆச்சு... போகலாம் என்று செய்தி வந்து... கிளம்பி வந்த போது... கறைகள்.. ஊரெல்லாம் கறைகள்... இரத்தக் கறைகள்...

வீட்டுத் தண்ணீர்த் தொட்டியில்... தொட்டி விளிம்பில்... பாட்டி ஆசை ஆசையா தேங்காய்த் துருவலும்... சோறும் கலந்து... அணிலுக்கும்.. காக்கா குருவிகளுக்கும் போடும்... மாமரத்தின் கீழிருக்கும்.. மேடையில்... இரத்தக் கறைகள்... கோழியோ... ஆடோ... மாடோ... எதையோ.. .இங்கே வைத்து வெட்டி இருக்கிறார்கள் என்று சொன்னார்கள்... அவற்றை மட்டுமா...?..

தாத்தா பாட்டி போல்... வீட்டிலிருந்த... எல்லாப் பாட்டிகளும்... அனைத்துத் தாத்தாக்களும்.. ஆர்மி வந்தால்... வீட்டுக்குள் ஒளிந்து கொள்ளல் ஆகாதென்று... வாசலில் உட்கார்ந்திருந்து... போதை மருந்தின் உச்சவெறியில் உலவிய... ஆர்மியின்... துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பலியாகி... சொந்த வீட்டு வாசலில்... அநாதைப் பிணங்களாக... கொள்ளி வைக்க ஆள் அற்று... துர்நாற்றம் தாங்காது... எங்கயோ கோயில் கும்பிட்டுக் கொண்டிருந்த... ஒரு தமிழனைப் பிடித்து... அவரவர் வீட்டின்... கொல்லைப் புறங்களை... அவரவர் வீட்டின் தோட்டங்களை... இடுகாடாக்கி... குப்பைகள் போல்... குவித்து... கொள்ளி வைக்கப்பட்டனர்...

மாதக் கணக்கில்... வருடக் கணக்கில்... டேய்... அங்கதான் எங்க அப்பாச்சி... அப்பப்பா... எல்லாரையும் எரிச்சாங்க... ஜாக்கிரதை என்று... பாட்டிகளையும்... பாட்டன்களையும் சொந்த வீட்டில்.. இரவல்க் கொள்ளிக்குக் கொடுத்த... பேரன்.. பேர்த்திகள்... பயமுறுத்திக் கொண்டிருந்ததும்... பயந்து கொண்டிருந்ததும்... நடந்தது...

அந்தச் சில நூறு பேர்களில்... பிணங்களுடன்... பிணங்களாகக் கிடந்து.. தப்பியவர்கள்... ஒன்றோ.. இரண்டோ... பாட்டிகளின்... காதில்... கழுத்தில்... கையில் இருந்த நகைகளை... அங்கங்களைத் துண்டித்து... அறுத்துச் சென்ற கணத்தில்... உயிருடன்... அக்குவியலினுட் கிடந்த பாட்டி ஒருவரின் காதும் அறுபட்டதற்கு... இன்னும் நடமாடிக் கொண்டிருக்கும்... அவரும்... அவரின் காதும் சாட்சி...

(வீட்டிற்குள் என்னவோ.. ஏதோ... என்று... பயந்தபடியே... கதவைத் திறந்த போது... புஷ்டியாக வளர்ந்து... நன்றியுடன்... முழு வேகத்துடன்.. (பூனைக்கு நன்றியில்லை என்று யார் சொன்னது..?).. மியாவ் என்று பாய்ந்து வந்து தொற்றிக் கொண்ட பூனையும்... இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருந்த.... போலீஸ்... மற்றும்... ஜிம்மியும்... ஒரு சின்ன ஆறுதல்...)


தொடரும்...

Sunday, November 8, 2009

சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்...

Part 1
Part 2
Part 3
Part 4
Part 5
Part 6

இந்து சமுத்திரத்தின் நித்திலம்... தலையாக யாழ்ப்பாணம்... மூளையாக வடமராட்சி.. (இது என்னுடைய வர்ணனை அல்ல.. அனைவரும் அறிந்ததொன்று..).. மூளைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால் என்ன ஆகும் என்று செத்துச் செத்து.. கட் அவுட் மார்க்ஸ் ஏற்றி ஏற்றி.. சிகரத்தில் வைக்கப்பட்டிருக்கும் யாழ்ப்பாணம்...

இடிபாடுகள்... வெடிகள்... குண்டுகள்.. பொருளாதாரத் தடைகள்... மின்சாரத் தடை.. ஆப்பிரகாம் லிங்கன் தெரு விளக்கொளியில் படித்தார்... கால் மடித்து.. கர்ப்பாசன நிலையில் அமர்ந்து... மெழுகுவர்த்திச் சுவாலைக்கும்.. தலை முடிக்கும்.. சென்டிமீட்டர் அளவு இடைப்பட்ட தூரத்தில்.. குனிந்து.. புத்தகத்திற்குள் முகத்தைப் புதைத்துப் படித்து... ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாது போய்... கட் அவுட் மார்க்ஸ் மட்டும் மில்லிமீட்டர் கூட இறங்காது... ஏணியில் கால் வைத்தபடியே...

பள்ளி விடுமுறை தவிர... வருடம் தவறாது மூன்று திங்கள் பிரசவ விடுப்பில் போய்க்கொண்டிருந்து... வகுப்பிற்கு சமூகமளிக்கும் தருணங்களில்... புத்தகத்தில் இருப்பதை ஜெட் வேகத்தில் வாசித்து... பாதியிலேயே தூங்கும் தமிழாசிரியை.. போன்ற புண்ணியவதிகளுக்கும்... மற்றும் மாணவ மணிகளுக்கும்... டியூஷன் வரப்பிரசாதம்.. பள்ளியை விட அது ஒரு படி மேலேயே....

டியூஷனில் கூட... கடைசி வரிசை வாங்கில்கள் உண்டு... பேனாவையும்.. குறிப்பேட்டையும்... வெறுமையாக வைத்திருந்து... காது கிழிபடுபவர்கள் உண்டு... "ஒவ்வொரு வினைக்கும்... அதற்கு எதிர்த் திசையிலிருந்து அதற்கு நிகரான எதிர் வினை நிகழும்".... 'எழுந்திருடா... நான் இப்போ சொன்ன நியூட்டனின் கோட்பாடு என்ன..?'.. '..!!!...'... 'போடா வெளில... இனிமே இந்தப் பக்கம் வந்தே... தொலைச்சிடுவேன்'... புத்தகம் தூக்கி எறிந்து விரட்டப் பட்டவர்கள் உண்டு... பள்ளியை விட.. பன்மடங்கு மேலாக ஒழுங்கு முறை கடைப்பிடித்தல் உண்டு... டியூஷன் மந்திரமோ... தந்திரமோ அன்று... அதுவும் ஒரு பாடசாலை.. இதை ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன்...?....

வீட்டில் தினசரி... வத்தக் குழம்பையும்... சோற்றையும் வைத்துக் கொண்டு... மாதா மாதம் டியூஷன் ஃபீஸ் கட்டி.. கட் அவுட் மார்க்ஸிடம்... மல்லுக் கட்டிக் கொண்டிருந்த.. பெரியவர்கள்... குழந்தைகள்... இது பற்றி எல்லாம் சற்றும் கவலையற்று... யாழ்ப்பாணர்... பணத்தில் புரண்டு.. படித்துக் கொண்டிருப்பவர்கள் போல்... காழ்ப்புணர்ச்சியுடன் கறுவி.. (கடைசியில் நாசமாய் போன..).. தமிழர் பலரும்... தமிழரல்லாத சிலரும்... (தமிழர் கவனிக்க..)...

இதே வடமராட்சியில்... "விடுதலையைக் கூறு போட்டு"... எரித்தார்கள்...! ஆம்... "ஆபரேஷன் லிபரேஷன்"... என்றால்... 'விடுதலைக்கான போர் நடவடிக்கை' என்று மேதைகள் மொழிபெயர்க்கலாம்... அது அப்படியா என்று.. என்னுடைய குழந்தைப் பருவத்தில்... நம் ஊரில் அரங்கேற்றப்பட்ட... வெறியாட்டத்தை... அடுத்த பாகத்தில் படித்து முடித்தபின்.. நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்...

கட் அவுட் அல்லது கட் ஆஃப் மார்க்ஸ்.. பல்கலைக் கழகத்திற்குள் நுழைவதற்குத் தகுதியான புள்ளிகள்...! மூன்று பாடத்திற்கு... 300 புள்ளிகள்...!

உதாரணமாக வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 270, 260 புள்ளிகள் பெற்று மருத்துவம் படிக்க இயலும்... யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்... 290 அல்லது.. அதற்கு மேல் எடுத்திருந்தால் மருத்துவம் படிக்க முடியும்... (புள்ளிகள் சரியான தரவுகள் அல்ல... ஆனால் இவ்வளவு வேறுபாடு இருக்கும்)
அதனால் அவர்கள் உயிரைக் கொடுத்துப் படிக்க வேண்டி இருக்கும்... படித்து 289.5 புள்ளிகள் எடுத்து... மருத்துவம் கிடைக்காது பிஎஸ்ஸி படித்துக் கொண்டிருப்பான்... கொழும்பிலுள்ள ஒரு சிங்கள மாணவன் 260 புள்ளிகள் எடுத்து மருத்துவர் ஆகிக் கொண்டிருப்பான்..


(தொடரும்...)

Tuesday, November 3, 2009

இது ஒரு தொடர் கதை...



எங்கேடி ப்ரியா? ஏய் வா... நேத்து இடைல விட்ட கதைய சொல்லி முடி... பள்ளி மைதானத்தில்... ஓரமாக இருக்கும் மரநிழலில் இடம் பிடித்து... லஞ்ச் பாக்ஸ் திறந்து வைத்துக் கொண்டு.. வட்டமாக உட்கார்ந்து.. பேசும் கதைகள்... பாடும் பாட்டுக்கள்... (ஓ..! இது வேற ஒரு பதிவில் சொல்லலாம்..=))..)..

மனிதர்களில் எங்கு சென்றாலும்.. தொற்றிக்கொண்டே செல்லும் வியாதி... பொறாமை... உட்குத்து.. வெளிக்குத்து... இருப்பதையோ... இல்லாததையோ... காதுக்கு காது ஊதிப் பெருசாக்கும்.. மிக மிகச் சில... சக்திகள்... அதையே தூசியை ஊதுவது போல்... ஊதித் தள்ளிவிட்டு... பக்கத்திலேயே இருக்கும்.. அருமைத் தோழிகள்... பால்ய தோழிகள்... பள்ளித் தோழிகள்...

விதியோ.. சதியோ... எழுத்து... தலையிலோ... கை ரேகையிலோ.. அவர்கள் அனைவரையும் துறந்து.. முற்றிலும் தெரியாத ஒரு நாட்டில்... சூழலில்... சற்றும் அறிந்திராத மொழியில்.. கல்லூரியைத் தொடர்ந்த போது.. அவர்கள் இரவிலும்.. பகலிலும்.. கனவுகளில்... அதே வெள்ளை யூனிஃபார்மில்... அதே டையில்... பக்கத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள்... இப்பவும்.. எப்பவும்.. நினைவுகளிலிருந்து இவர்களை நீக்குவதென்பது இயலாத விடயம்...

இந்த இடுகை என்பது... அதே மாதிரியான இன்னொரு அனுபவம்... இதுவும் எனக்கு நிரந்தரமல்ல... இன்றோ நாளையோ.. வேலைப்பளு காரணமாகவோ... இன்ன பிற காரணங்களாலோ... நீண்ட இடைவெளி நேரலாம்... தொடர்பு விட்டும் போகலாம்.. (தோடா சந்தோஷத்தப் பாரு.. அவ்ளோ சீக்கிரம் எல்லாம் போக மாட்டேன் =))..)

இங்கு.. நான் மெச்சி வியந்து பாராட்டி நிமிர்ந்து பார்த்தவர்கள் அதிகம்.... அவசியமில்லாமலேயே... அழகான இசைத்தட்டில்.. கீறல் விழுந்தது போல்... உள்ளொன்று வைத்து.. சிலேடை மொழியில்... சிறுமடல் வரைந்து தொலைவில் சென்று விட்ட சிலரும்.. மற்றும்... மிக மிகச் சில.. 'மிக'ப் பெரியவர்களையும் தவிர... நான் கண்டு கொண்டிருப்பது மிகவும்.. எளிமையான... இனிமையான... மனதுக்கு இதமான.. அன்பு சூழ்ந்த உலகம்...

இந்த நினைவலைகளில்... அங்கொன்றும் இங்கொன்றுமாக... மறக்க முடியாத பின்னூட்டங்கள் மூலமான ஊக்குவிப்பு.. அல்லது.. விருது என்ற பெயரில் 'ஹலோ... உங்க இடுகை எனக்குப் புடிச்சிருக்கு'.. என்று மறைமுகமாக அன்பை வெளிப்படுத்தும்.. சில ஊக்கங்கள்...

ஒரு ஐம்பது ஆண்டுகள் கழித்து.. கூன் விழுந்து.. சுருக்கங்கள் விழுந்து... தடித்த கண்ணாடி ஃப்ரேம் வழியே... எதிர்காலச் சந்ததியினரின்.. இடுகைகளைப் படிக்கும் பொழுது... இந்த ஞாபகங்கள்... பற்கள் தொலைத்த வாயின்.. உதடு வழியே.. புன்னகைக் கீற்றாகத் தோன்றி... முகச் சுருக்கத்தை.. சில நொடிகள் நீக்கி விடலாம்..

இம்பூட்டு பில்ட் அப்... எதுக்குன்னு பார்க்கிறியளா? ஜோதி... வானம்பாடி வரிசையில்.. முரளி பகிர்ந்துக்கிட்ட இந்த அன்பையும்.. சந்தோஷத்தையும் (Scrumptious Blog Award) இன்னொரு வாட்டி பகிர்ந்துக்கலாம்னுதான்...

வானம்பாடிகள், அது சரி, சூர்யா கண்ணன் , துபாய் ராஜா, கயல், கதிர், பிரபாகர், மகேஸ், நைஜீரியா ராகவன், சஞ்சய், அருணா, ஜோதி, வசந்த், ஈ ரா, கோபி, சத்ரியன், நேசமித்ரன், பாலாசி, வேல்ஜி, ஹேமா, ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், பின்னோக்கி, லவ்டேல்மேடி, ஆரூர், பித்தனின் வாக்கு, தங்கமணி, தியா, ஜீவன், ஜெஸ்வந்தி, ஜோதிஜி...(லிஸ்ட் போய்க்கிட்டே இருக்கே... ம்ம்...).. முரளி..

(நான் தொடரும் இடுகைகளில் முகவரிகளை நீந்திப் பிடித்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்... =)).. )

இப்பொழுது இவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.. இன்னொரு சுற்று வரும்போது... மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்... என்ன..? நானே எல்லாருக்கும் கொடுத்துட்டா... நீங்க எப்டியா..? இப்டியே மாத்தி மாத்திக் கொடுத்துக்க வேண்டியதுதான்...!

இது என்ன சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு என்று முகம் சுழிக்கும் பெரியவர்கள் இருப்பின்... மன்னிக்கவும்.. எனக்கும் இந்தப் பெரிய மனுஷித் தன்மை இருக்கத்தான் செய்கிறது... ஆனாலும்... எளிய குழந்தை மனசையே.. பெரும்பாலும் ... மனது மிகவும் விரும்புகிறது...

மன்னிக்கவும்... மணி பத்தாகப் போகிறது.. தூக்கம் கண்களைத் தழுவுகிறது... அலுவலகம் இப்பவே கண் முன்னால் வந்து மிரட்டுகிறது... குட் நைட்...!


(யார்அது. .? அப்பாடி தொலைஞ்சான்னு பெருமூச்சு விடுறது.. வருவோம்ல... இருங்கடி..)

___/\___



Tuesday, October 27, 2009

அவ்வ்வ்வ்வ்வ்... மக்களே கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.. இன்னைக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப வருஷங்களுக்கப்புறம்.. :P

Monday, October 26, 2009

ஞானும்.. பின்னே ஞானும்.. நடுவே ஞானமும்..

அமெரிக்க நாட்டவன்..
அந்தமான்..
எகிப்து..
ஐரோப்பா..
அறிமுகங்களிடையே..

யார் நீ..
இதயத்தின்..
ஆழத்திலிருந்து..
அடையாளப் படுத்திச் சொல்..
என்றார்கள்..

சற்றும் யோசிக்காமல்..
தமிழச்சி..
என்றேன்..

நீ காயப் பட்டிருக்கிறாய்..
நாட்டைத் தவிர்க்கிறாய்..

இல்லை...
என்ன இல்லை எனக்கு..
ஐரோப்பாவின் அழகு தேசம்..
எனை அங்கீகரித்திருக்கிறது..

பிரஜா உரிமை..
அடையாள அட்டை..
கடவுச் சீட்டு..
இங்கே பிறந்தாயா..
மற்றவர் தடுமாறும்..
மொழித் திறன்...

ஆனாலும்..
அட்டையொன்று..
என் அடையாளமன்று..
இம்மொழி என்..
செம்மொழியன்று..
இந்நாடு..
என் நாடன்று..

என்...
தந்தையும் தாயும்..
மகிழ்ந்து குலவிய..
மண்..
நான் பிறந்த மண்..
தவழ்ந்த மண்..
தழும்பேறி..
அடையாளம்..
அற்றிருக்கையில்..

என்..
உடன் பிறப்பின்..
எஞ்சிய எலும்புகள்..
சிதைந்து..
சுண்ணாம்புப்..
பாறையாகி...
அதுவும்..
உதிர்க்கப்பட்டு..
அதை வைத்தே..
துருப்பிடித்திருக்கும்..
தூண்களுக்கு...
வெள்ளை பூசி...

ஓ.. !
மறந்து விட்டேன்..
சில...
நேரங்களில் நீவிரும்..
நியாயம் பேசுகிறீர்..
ஆம்.. நான்..
காயப் பட்டிருக்கிறேன்..
தயவு செய்து..
மன்னிக்கவும்..

வெண் சுண்ணாம்பு..
நானென்று..
என்னை நான்..
அடையாளம் காட்ட..
என்னால் இயலாது..
சுட்ட மண்..
ஒட்டாது...

என்..
தோற்றம்..
நிகழ்ந்து விட்டது..
வசிப்பிடம்..
பதிவு செய்யப்பட்டது..
மறைவு..
நிச்சயிக்கப்பட்டது..
நீறாக்கும் இடம் கூட..
ஆனால் அஃதை..
அறிந்து கொள்ளும்..
ஆற்றல் எனக்கில்லை..

நிச்சயமானது..
நீக்கமற..
நிறைந்திருக்கும்..
நிலையான..
தமிழ் என்..
தாய் மொழி...

அதுவே..
என்..
அழியாத..
அடையாளம்..

___/\___

Saturday, October 24, 2009

போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே...


Part 1
Part 2
Part 3



தடையற்ற பேச்சு.. தடையற்ற எழுத்து.. தடையற்ற சிரிப்பு.. ஓடி விளையாடு பாப்பா.. என்று ஓய்ந்திருக்காத காலம்.. எங்கும் எதிலும்.. சுதந்திரக் காற்று.. தமிழனைத் தமிழன் ஆண்ட காலம்.. பொற்காலம்.. பருவ வயதில்.. பாட்டி சேலை போர்த்த வேண்டிய தேவை இல்லாதிருந்த காலம்.. பட்டாம் பூச்சிகளாய் பறந்து கொண்டிருந்த காலம்.. அந்தக் கால கட்டத்தில் என் பருவகாலமும் அகப்பட்டது.. வசந்த காலம்.. நம் மூதாதையர் முற்றிலும் பாவம் செய்து விடவில்லை.. அவ்வப்போது புண்ணியமும் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்த காலம்.. ஆனால்... ஒரே... ஒரு தடை மட்டும்.. அது..

பொருளாதாரத் தடை.. ஷாம்பூவிற்குப் பதில்.. சிகைக்காய்.. அதுவும் போய் மாங்காய்... சீசன் இல்லையெனில்.. சோறு ஆக்கி வடிக்கும் கஞ்சி.. சில பல வீடுகளில்.. அதுவே பிரதான உணவு.. ஆடுகளும்.. மாடுகளும்.. மனிதர்களைப் போட்டியாகப் பார்த்த காலம்.. உப்புக்கு பேர் போனது நம் ஊர்.. சவர்க்காரம் செய்ய வக்கில்லையா நமக்கு.. ஆசிரியர்களும்.. துணை வேந்தர்களும்.. மேடை மேடையாக முழங்கிய காலம்.. ஏன் முடியாது.. ரோஷத்துடன்.. அடுத்த நாளே.. நாற்றமா.. துர்நாற்றமா.. பிரித்தறிய முடியாத வாசனையில்.. லிக்விட் சோப்..

மின்சாரம் போய்.. மின்குமிழ்களில் சிலந்திவலை படர்ந்து.. பெட்ரோமாக்ஸ் போய்.. மண்ணெண்ணெயும் அற்றுப் போய்.. மட்டுப் படுத்தப்பட்ட.. தேங்காய் எண்ணெயில்.. கொஞ்சம் சமைக்க.. கொஞ்சம் தலையில்.. மீதி .. பழைய ஜாம் போத்தலில்.. பாதி வரை தண்ணீர் விட்டு.. உப்புப் போட்டு.. எண்ணெய் மேலே விட்டு.. திரிக்கு ஸ்டாண்ட் வைத்து.. பழைய வேஷ்டி கிழித்து.. திரி செய்து.. இரு துளி எண்ணெயில் விடிய விடிய விளக்கெரித்த காலம்.. தாத்தாவின் ரால்லி சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு.. டைனமோவில் இணைப்புக் கொடுத்து.. பெடல் மிதித்து ஆனந்தமாய்.. பாட்டுக் கேட்ட காலம்... இன்னும் எத்தனை எத்தனை.. புதுப் புதுக் கண்டு பிடிப்புகள்..

தமிழறியாத் தரைப்படை.. இல்லாதிருந்த காலம்.. கையாலாகாத்தனமாய் விமானப்படையனுப்பி.. படை படையாகக் குண்டு பொழியப்பட்ட காலம்.. கடற்படையினரால்.. கண்மூடித்தனமாய்.. எறிகணைகள் எறியப்பட்ட காலம்.. தரைப்படையால் எரிகுண்டு வீசப்பட்ட காலம்..





ஸ்போர்ட்ஸ்
மீட்டிங்.. எல்லாரும் கலந்துக்கணும்.. வேட்டையாடும்.. அக்காஸ்... டிமிக்கி கொடுத்து.. ஓடி ஒளிய உதவும்.. மாடிப் படிகள்.. தேவாரம்.. திருவாசகம்.. திருப்புகழ்... "வான்முகில் வழாது பெய்க... மலிவளஞ் சுரக்க மன்னன்.. கோன்முறையரசு செய்க.. குறைவிலா துயிர்கள் வாழ்க" (ஹஹா..) பாடிய.. ஆஸெம்ப்ளி மேடை.. பாண்டிய மன்னன் நீதி தவறிவிட்டேன் என்று.. இதயத்தில் கை வைத்து.. மண்டையைப் போட்ட அதே மேடை..

மோட்டார்கள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்து.. உள்ளங்கை சிவக்க.. கயிறு பிடித்து.. கிணற்றில் தண்ணீர் இறைத்து.. குளித்து.. லிக்விட் சோப்பு போட்டுத் தோய்த்த வெண்ணிற யூனிஃபார்ம் அணிந்து.. டை கட்டி.. இரு ஜடை போட்டு.. கருஞ்சாந்தணிந்து.. பள்ளிப்பையுடன்.. லஞ்ச் பாக்ஸ் எடுத்து.. வீதி வரை வந்து அம்மா கொடுக்கும் வாட்டர் கேன் சகிதம்..

மாடிக் கட்டிடங்களுடன்.. நிழல்பரப்பிய மரங்களுடன்.. கான்டீனுடன்.. அதே .. ஆஸெம்ப்ளி மேடையும் சேர்ந்து.. சிதைக்கப்பட்டு.. தரை மட்டமாகி.. கற்குவியல்களாகி.. இடுகாடாகி.. இரு வாரம் ஆகவில்லை.. அதையும் தாண்டி.. அதையும் கடந்து.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.. காலியாகிக் கிடந்த வீடுகளில்.. வகுப்பறை அமைத்து.. படித்து.. படித்து.. ஓடி.. ஆடி.. விளையாடி..

யாரை நம்பி நாம் பிறந்தோம்.. போங்கடா போங்க.. என்று நெஞ்சு நிமிர்த்தி.. தமிழனின் விதிமுறைகளை அடி பிசகாது பின்பற்றி.. சைக்கிளில் சமாந்திரமாக வந்து.. தமிழச்சிப் போலீஸிடம் மாட்டி.. பத்து ரூபா அபராதம் கட்டி.. படு பாவிங்க என்று திட்டி.. சிரித்துக் கடந்து.. புயலுடன் கூடிய.. இடி மழை.. அடிக்கடி இருப்பினும்... அது சொர்க்க பூமி..

(தொடரும்.. )


Thursday, October 22, 2009

கூட்டுக் களியினிலே..

பிள்ளையார் கோயில்.. நிழல் பரப்பும் அரசமரம்.. திராட்சைத் தோப்புகள்.. வயல்வெளிகள்.. தோட்டங்கள்.. பசுமையினூடே கரு நாகமாய்.. தார் வீதிகள்.. வீதியுடன் முட்டி.. முச்சந்தி.. அடையாளமாய் ஆலமரம்.. எதிரே ஒரு பென்ச் போட்ட உணவகம்.. பக்கத்தில் போஸ்ட் ஆஃபீஸ்.. ஃபார்மஸி.. மளிகைக் கடை.. சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை.. அதற்கும் ஒரு எதிர்க் கடை.. அதையொட்டி நெருப்புத் துண்டுகள் அடங்கிய ஒரே ஒரு இஸ்திரிப் பெட்டியை மட்டுமே நம்பிய சலவைக் கடை.. கொள்ளி அருகிலேயே உண்டென்று படபடத்து காற்றிலாடும் கிடுகினாலான சுவர்கள்..

வடக்கே நீளும் பிரதான வீதி.. அங்கே பாரதி கேட்ட.. காணி நிலம்.. தூணில் அழகியதாய் நல்மாடம்.. மாளிகை.. கேணி.. தென்னைமரம்.. கீற்று.. இளநீர்.. முத்துச் சுடர் போல நிலவொளி.. குயிலோசை.. தென்றல்... தவிர.. வாழை... மா.. பலா.. மல்லிகை.. செம்பருத்தி.. வெண்டை.. கத்தரி.. அரைக்கீரை.. முளைக்கீரை.. அருகம்புல்லுடன்.. கோரைப்புல்லும்.. குரோட்டன்ஸ்.. மற்றும் சில புதர்களும்.. நல்ல பாம்புடன்.. சாரைப் பாம்பும்.. கீரியும்.. பூனையும்.. நன்றி நவில நாய்கள் பலவும்.. கூடிக் கரைய காகங்களும்.. காகம் கரைதலில்.. கடிதம் வருமென மல்லிகையாய் மலரும் அம்மாவின் அழகிய வதனமும்.. ஞாயிறும்.. சூரிய நமஸ்காரமும்.. முழி விசேஷமும்.. பஞ்சாங்கமும்..

வாத்தியார்.. வைத்தியர்.. வக்கீல்.. வெட்டி ஆஃபீஸர்.. வேறுபாடின்றி.. காலைக் கருக்கலில்.. மாலை மயக்கத்தில்.. தோட்டத்தில் பணி புரிவோர்.. வீக்கென்ட்.. ஸ்ட்ரெஸ்.. பிரஷர்.. டிப்ரெஷன்.. டென்ஷன்.. சைக்கியாட்ரிஸ்ட்.. சைக்காலாஜிஸ்ட்.. சைக்கோ.. போன்ற சொற்கள் அறியாத அழகிய உலகம்..

அதிகாலை ஐந்து மணி டியூஷன்.. எட்டிலிருந்து இரண்டு வரை பாடசாலை.. மூன்றிலிருந்து ஆறரை வரை டியூஷன்.. ஹோம் வொர்க் பண்ணும் பொழுதோ, கை கால் கழுவும் பொழுதோ.. காலையில் வாரிய முடியை சரி செய்யும் பொழுதோ.. தூங்கி விழும் பொழுதோ.. தூங்கும் பொழுதோ.. அரை வயிறேனும் என்று அரற்றியபடி அம்மாவின் கையால் ஊட்டப்படும் பால் மற்றும் சாதம்..

தென்னை மட்டையில்.. கிரிக்கெட் பேட்.. காம்பவுண்ட் சுவர் வரை நாலு.. சுவர் தாண்டி வீதியில் செல்லும் சொட்டையில் அடித்தால் சிக்ஸர்... மாமரக் கிளையில் அணிலுக்கும்.. கிளிகளுக்கும் போட்டியாக.. உப்பும்.. மிளகாய்ப் பொடியும்.. நானும்..

தீபாவளிக்கோ... தைப் பொங்கலுக்கோ.. சிவராத்திரிக்கோ உறங்கியபடியே பார்க்கும் பாதித் திரைப்படம்.. சாப்பிட்டபடியோ.. சாப்பிட மறந்தோ.. படிக்கும்.. சுஜாதா.. கல்கி.. பாலகுமாரன்.. நிற்க.. கணக்கில் நூறு.. வகுப்பில் முதல்.. மூஞ்சி பளிச்.. எதுவும் வேண்டாம்.. முடி ஒரு இன்ச் வளர்ந்து விட்டது.. வாரா வாரம் காரணம் சொல்லி.. திருஷ்டி கழிக்கும் அம்மா..

எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்.. ஏன் என்று நினைத்த நாள் ஒன்று....

தாத்தா வீட்டின் கேட் அருகே.. அழகாய்ப் படர்ந்த முல்லைக் கொடி.. வீதியில் நடப்பவை என் கண்ணுக்குத் தெரியும்.. என்னை வீதிக்குத் தெரியாத ஒரு ஒன் வே செட் அப்..

யானை வரும் பின்னே.. மணி ஓசையாய்.. குரல்கள்.. கோஷங்கள்.. சாரை சாரையாய்.. பெண்கள்.. ஆண்கள்.. குமரிகள்.. கிழவிகள்.. கத்தியபடியே.. மடியிலிருந்த சில்லறை வாரி தெருவில் இறைத்த பெண்மணி.. அதை மிதித்தும்.. தாண்டியும் சென்ற ஏழை.. பாழை.. நடுத்தர வர்க்கம்.. ஏன்..?

பள்ளித் தலத்தில்.. படத்தில் கண்டவை.. மனதில் பதியாது.. மணியைப் பார்த்து.. பாய்ந்து ஓடி.. படித்து.. படித்து.. படித்து.... பள்ளித் தோழிகளிருவர் காணாது போய்.. படையில் சேர்ந்ததும்.. வாத்தியார் மகன் அந்தர்த்யானம் ஆகித் தமிழ் ஆர்மியில் சேர்ந்ததும்... பாரியாருடன் வாத்தியார் படையெடுத்தும் பலனின்றிப் போனதும்.. ஏன்..?

(தொடரும்..)

Tuesday, October 20, 2009

கடல் யோகி...

சாதாரண விட்டத்தில்..
பாதியே கொண்ட..
மூக்குத் துவாரம் வழியே..
உட்கொண்ட பிராணவாயு..
நுரையீரலில்..
சொற்ப அளவிலேயே..
சேமிக்கப் பட்டிருக்க..

சமுத்திரத்தின்..
ஆழம் அறியாது..
கால் விட்டு..
முன்னேற்பாடு ஏதுமற்று..
சுழி ஓட ஆரம்பித்து..

முத்துக் குளிப்பதோ..
முரல்கள் பிடிப்பதோ..
குறிக்கோள் ஏதுமின்றி..
நீரின் மூல தாதில்..
மூச்சுக் காற்றை..
மட்டும் பிரித்து உறிஞ்சி..
மேலும் கீழும்..
அளைந்து துழாவி..

பாசிகள் படர்ந்த..
பாறையின் மீது..
கூழாய்க் கிடந்த..
கடற் சிலந்தி கண்களில்..
கருணையே உருவான..
யோகியைக் கண்டு..
கடற்பாசி விலக்கி..
நீந்தி நெருங்கி...
நிமிர்ந்து பார்க்க..

அசைந்த கூழில்..
ஆயிரம் கைகள்..
நீண்டு நெளிந்து..
சுருண்டு வளைந்து..
விரிந்து சுருங்கி..
விழுங்க விரைய..

நனவா கனவா..
நம்ப முடியாது..
கீழே பார்க்க..
கடலினடியில்..
இராட்சத பிம்பம்..

தன்னிச்சையாய்..
உதறி விலகி..
பாறை தொற்றி..
பாசி போர்த்தி..
அருகே நோக்க..
சிலந்தி கையில்..
சர்ப்பமொன்று..
சக்கையாகி..
மாயமானது..

ஆழ் கடலின்..
மணல் மேட்டில்..
இராட்சத நிழற்குடை..
அங்கும் இங்கும்..
கடற் தாவரம்...
சிண்டு நண்டு..
சிப்பி முத்துடன்..
பவளப் பாறைகளும்..

நாளத்தின் குருதி..
நாடியை நாட..
இதயம் தவித்து..
இறைஞ்சி நிற்க..
சுவாசப் பை..
கையை விரித்தது..

படர்ந்திருந்த..
பாசியுடன்..
அச்சம் விலக்கி..
அடி வரை சென்று..
சிப்பியுடன் சிப்பியாக..
முத்தொன்று..
மேலெழுந்து..
சிலந்தி விழியில்..
விழுந்து தெறித்து..
மேலே மேலே..
மேலே சென்றது..

::::::::::...
:::::::::::::::::....
::::::::::::::::::::.....

Sunday, October 18, 2009

வடிவேலு vs. வெடிவாலு..

காலங்கார்த்தால காப்பியை அலட்சியம் செய்து கம்பியூட்டர் சுண்டெலியை இம்சை பண்ண ஆரம்பித்து விட்டாள் கலகலப்ரியா. அந்த எலிக்கு மட்டும் கடிக்க முடிந்தால்.. ஆ.. வேண்டாம்.. விபரீத கற்பனை..!

ப்ளாக் பக்கம் பாய்ந்து, பாவம் பார்த்து பின்னூட்டம் போட்டுச் சென்ற அன்புள்ளங்களுக்கு நன்றியைச் சொல்லி.. ஜிமெயில் பக்கம் பார்வையைத் திருப்பினாள். வடிவேலு ஆன்லைனில் இருந்து கொண்டு.. 'அடியே வெடிவாலு' என்று மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.

ஆ..! வந்த உடனேயே இன்விசிபிள் போடாம, ப்ளாக் பக்கம் பாய்ந்தது எவ்வளவு தவறு. காலம் கடந்து உதித்த ஞானோதயம்.. இதை வச்சு சூப் கூட பண்ண முடியாது.. சமாளிப்போம்.

வெடிவாலு: அய்.. வாங்கண்ணே.. என்ன இந்தப் பக்கம்.. இன்னிக்கு ஷூட்டிங் எதுவும் இல்லியாண்ணே..?

வடிவேலு: அத ஏன் கேக்குறா.. வெளில கால் எடுத்து வைக்க முடியல.. பட்டாசுக்கு பொறந்த பயலுவ.. வெடிய கொளுத்தி வேஷ்டிலயே போடுறானுவ அவ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹிஹி..

வடிவேலு: ஆங்.. சிரிக்கிறியா நீயி..? ஏண்டி.. நீ பட்டாசுச் சத்தம் கேட்டா பங்கர் உள்ள போயி உக்காந்து.. வெடவெடன்னு நடுங்கிச் சாவுற ஆளாச்சே... இப்போ எப்டி இவ்ளோ தைரியமா உக்காந்து சிரிக்கிறா? காதில பஞ்சு கிஞ்சு வச்சிருக்கியா..?

வெடிவாலு: வெடியாவது.. கடியாவது.. அதெல்லாம் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: ஏண்டியம்மா.. காது கேக்"காது" போயிடிச்சா.. ஏன்.. ஏன் கேக்காதுங்கிறா நீயி..

வெடிவாலு: ரொம்பத்தாண்ணே கிண்டலு.. உங்க வெடில இருந்து ஒரு பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவில உக்காந்துட்டிருக்கேன் நானு.. நீங்க ராஜபக்சேக்கு ராக்கெட்ல வெடி போட்டாலும் எனக்கு கேக்காதுண்ணே..

வடிவேலு: அட தீபாவளிக்கு நம்ம ஒபாமாவில இருந்து எல்லாரும் வாழ்த்து சொல்லுறாய்ங்க.. பட்டாசு வெடிக்க விட மாட்டாய்ங்களோ ...

வெடிவாலு: ரொம்பத்தான் அண்ணே லொள்ளு உங்களுக்கு.. ஆமாம் தீபாவளி எப்போ வருது..?

வடிவேலு: என்னாது..? நக்கல் பண்றியா நீயி..? எனக்கு லொள்ளுன்னு நீ சொல்லுறியா..

வெடிவாலு: அட மெய்யாலுமே தெரியாதுங்கண்ணே...

வடிவேலு: அப்போ நேத்து தீபாவளி பத்தி இடுகை எல்லாம் போட்டியே..

வெடிவாலு: அது ப்ளாக்ல எல்லாம் தீபாவளி பத்தி எழுதுறாங்கன்னு.. எப்போ தீபாவளின்னு தெரியாமலே குத்துமதிப்பா போட்டதுண்ணே..

வடிவேலு: அடப் பன்னாடையே.. எப்பவுமே இப்டித்தானா.. இல்ல இப்போதானா..?

வெடிவாலு: இல்லண்ணே.. ஊர்ல அம்மா பங்குக்கு ஒரு பாவாட சட்ட.. தாத்தா பங்குக்கு ஒரு பாவாட சட்ட வாங்கிக் கொடுப்பாய்ங்க.. மாத்தி மாத்தி போட்டுக்கிட்டு பிலிம் காட்டிக்கிட்டே கோயிலுக்கு போவோம்ல..

வடிவேலு: அப்போ பட்டாசு...?

வெடிவாலு: நாம கொடுத்து வச்சவைங்கண்ணே.. காசு கொடுத்தெல்லாம் பட்டாசு வாங்க வேணாம்.. நீங்க வெடிக்கிற வெங்காய வெடி, அந்த வெடி, இந்த வெடி எல்லாம் இல்லைங்கண்ணே.. பத்துப் பதினைஞ்சு ப்ளேன்.. ஹெலிகாப்டர்.. எல்லாம் வந்து விதம் விதமா வித்தை காட்டி வெடிப்பாய்ங்கண்ணே... நானு பாட்டி பண்ண பலகாரத் தட்ட மாமரம் கீழ வச்சிக்கிட்டு.. காத பொத்திக்கிட்டு வேடிக்கை பார்த்துட்டிருப்பேண்ணே...

வடிவேலு: அடி ஆத்தீ.. பெரிய ஆளுதாண்டியம்மா நீயி... நீ காதப் பொத்திக்கிட்டிருந்தா.. பலகாரத்த காக்கா கொத்திக்கிட்டு போய்டுமேடி.. நீ எப்போ பலகாரத்த சாப்டுவா..

வெடிவாலு: அடப் போங்கண்ணே.. அப்போ ஒரு ஈ காக்கா பறக்காதுண்ணே.. அப்புறம்.. என்னதான் வானத்தில பறந்து வெடிச்சாலும்.. பறந்து பறந்து வெடிக்க முடியாதுண்ணே.. காக்கா பாட்டி வடைய எடுக்கிற மாதிரி.. ப்ளேன் எல்லாம் குத்திக்கிட்டு ட்ரோய்ய்ய்ய்ங்-ன்னு வர்ற வரைக்கும் பலகாரம் சாப்ட்டுக்கிட்டிருப்பேண்ணே..

வடிவேலு: ஆஹா.. உன்னை நான் என்னமோன்னு நினைச்சேன்.. ரொம்ம்ம்ம்ம்ப.. டெக்நி(ந)க்கலாதான் பலகாரம் சாப்ட்டிருக்கா நீயீ... அவ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: ஹிஹி..

வடிவேலு: இப்போ அந்த பலகாரம் எல்லாம் மிஸ் பண்ணலியா நீயி..

வெடிவாலு: பலகாரம்.. பாட்டி.. அம்மி.. ஆட்டுக் குட்டி.. எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன்.. ஆனா பட்டாசுச் சத்தம் கேக்கலைன்னு ஒரு நிம்மதி அம்புட்டுதேன்..

வடிவேலு: அடிப்பாவி.. இப்டி கூலா சொல்லுறியே.. எனக்கு காமெடி மறந்து போய்டும் போல இருக்கேடி... ஆத்தீ மகமாயீ... இவ கிட்ட போயி வாயைக் கொடுத்து என் தொழிலுக்கு நானே சூனியம் வச்சிக்கிட்டேனே..

வெடிவாலு: அண்ணே.. என்னண்ணே ரொம்ப ஃபீல் பண்ற மாதிரி இருக்கு.. நம்ம இஸ்கூல்ல தீபாவளிக்கு கட்டுக் கட்டா தீபாவளிக் கார்டு வாங்கி.. விதம் விதமா வாழ்த்துச் சொல்லி.. நண்பிங்க பார்க்காத சமயம் பார்த்து புத்தகத்ல ஒளிச்சு வச்சிடுவோம்ண்ணே.. அதில எப்டி எப்டி எல்லாம் எழுதி இருக்கும்னு எடுத்து விடுறேன்.. கேட்டுக்கிட்டு இந்த பிஞ்சு போன பட்டாசுக்கெல்லாம் பயப்டாம ஷூட்டிங் போயீ.. பஞ்சு டயலாக் விட்டு அசத்துங்கண்ணே..

வடிவேலு: ஆங்.. ? அப்டிங்கிறா..? ச்செரி சொல்லு பார்க்கலாம்...:-?

வெடிவாலு: ஹிஹி.. அவள் அவளுக்கு என்ன புடிக்குமோ.. அத எல்லாம் கிண்டல் பண்ணி வாழ்த்து சொல்லுவோம்ண்ணே உதாரணமா.. எழுத்தாளர் பட்டுக் கோட்டை பிரபாகர் ரசிகைன்னா.. "பட்டுக் கோட்டை செத்தாலும் என் அன்பு சாகாது".. அப்டின்னு..

வடிவேலு: என்னாது.. அடிப் பாவிங்களா.. ஒரு ஈவு இரக்கம் இல்லாம இப்டி ஒரு வாழ்த்தா.. எத்தன பேரு வடிவேலு ரசிகையா இருக்காகளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

வெடிவாலு: இருங்கண்ணே உணர்ச்சிவசப் படாதீங்க.. அப்டி யாரும் இல்லீங்கண்ணே..

வடிவேலு: அடிப்பாவி இதுக்கு அதுவே மேல் ஆச்சே.. அவ்வ்வ்வ்.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: "விஜயகாந்த் செத்தாலும்... "

வடிவேலு: மேல சொல்லு.. மேல சொல்லு..

வெடிவாலு: ஆங்... வேணாம்.. வேற ஏதாவது பார்ப்போம்..

வடிவேலு: ஏண்டி.. ஏன்.. நல்லாதானே போய்க்கிட்டிருக்கு.. ஒரு மனுஷன் கொஞ்சம் சந்தோஷப்படக் கூடாதே.. மேல சொல்லு மேல சொல்லு..

வெடிவாலு: "மேல"..

வடிவேலு: ஆ...! எலிவாலுன்னு பேரு வச்சிருக்கனும்டி உனக்கு.. கடிக்காம மேல சொல்லு தாயீ.. அவ்வ்வ்வ்...

வெடிவாலு: ம்ம்.. ரஜினிகாந்த் செத்தாலும், அரவிந்த்சாமி செத்தாலும், அஜித் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து நிறுத்து நிறுத்து.. அது என்ன .. ஆம்பள நடிகருங்க பேராவே சொல்லிக்கிட்டு போறா..

வெடிவாலு: ஹிஹி.. பொண்ணுங்க ராஜ்யம் அண்ணே.. பொம்பளப் பசங்க படிக்கிற இஸ்கூலு.. சொல்லி முடிக்க விடுங்கண்ணே..

வடிவேலு: ஆஹா.. அப்டிப் போகுதா கத.. கொலைகாரக் கூட்டமால்ல இருக்கு.. நல்ல வேளை நான் மழைக்கு கூட இஸ்கூல் பக்கம் ஒதுங்கல.. யப்பா.. நீ சொல்லு.. நீ சொல்லு..

வெடிவாலு: ம்ம்.. மங்களா டீச்சர் செத்தாலும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் செத்தாலும்..

வடிவேலு: நிறுத்து.. நிறுத்து.. ஐன்ஸ்டீன் இன்னமும் உசிரோடவா இருக்காரு.. சொல்லவே இல்ல..

வெடிவாலு: அட ச்சே.. இதாண்ணே உங்க கூட.. வரலாற்றில ஐன்ஸ்டீன் வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காரு..

வடிவேலு: ஓஹோ.. அப்டி வர்றியா நீயி... எது கேட்டாலும் பதில் வச்சிருக்காளே இவளு.. ச்செரி சொல்லு..

வெடிவாலு: ச்சே விடுங்கண்ணே.. நிறுத்து.. நிறுத்துன்னு.. அபசகுனமா பேசிக்கிட்டு.. எனக்கு சொல்லுற மூடே போச்சு.. அப்போ இருந்தத விடுங்க.. இப்போ இருக்கிறதில ஒண்ணு ரெண்டு பிட்ட போட்டு நான் எஸ்கேப் ஆவுறேன்.. மக்கள் கொலை வெறியோட படிச்சுக்கிட்டு இருக்காங்க..

வடிவாலு: எனக்கே கொலைவெறி வருது... பாவம் பொம்பள புள்ளயாச்சேன்னு பொறுத்துக்கிட்டிருக்கேன்.. ம்ம்..

வெடிவாலு: அது சரி.. த்தோ முடிச்சிட்டோம்ல.. "பில் கேட் செத்தாலும்... மைக்ரோசாப்ட் செத்தாலும்.. விண்டோஸ் செத்தாலும்.. விஸ்டா செத்தாலும்.. எலி செத்தாலும்.. பூனை செத்தாலும்.. ப்ளாக் சாகாதுண்ணே.. ப்ளாக் மட்டும் சாகாது.."

வடிவேலு: ஆஆஆ... அடியே.. கலகலப்ரியா.. சந்திரமுகி.... இதே பொழைப்பா போச்சு உனக்கு.. இப்டி கொலையா கொல்லுறியே.. மவளே.. அடுத்த படத்துக்கு அந்தப் புள்ள த..த.. தமனா கூட டூயட் பாட உன் ஊருக்குத்தாண்டி வந்துக்கிட்டே இருக்கேன்.. அப்போ பார்த்துக்கலாம்டியே ஒரு கையி .. இந்த வேலா.. இல்ல வாலான்னு.. பட்டாசுக்கு பயந்து ஆட்டிலறில மாட்டின கதையா போச்சே என் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்.. நாட்டில நல்லவனா இருக்கிறது எவ்வளவு தப்பு..

வெடிவாலு: ஃபீல் பண்ணாதீங்கண்ணே.. நாளைக்கு....

வடிவேலு: என்னாது..? நாளைக்குமா..? ஐயோ.. யாருடா அங்க.. இந்த கம்பியூட்டர காயிலாங்கடைல போட்டு பேரீச்சம்பழம் வாங்கி கொடுங்கையா.. அத தின்னு கின்னு நான் பொழைச்சு போயிடுறேன்.... ஆத்தீ.. ஆள விடு தாயீ...

வெடிவாலு: அண்ணே..

ஜிமெயில் : We're experiencing technical difficulties that may prevent your chats from being sent...

வெடிவாலு: ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இப்பவே கண்ணைக் கட்டுதே..

பி.கு.: கோபி.. என்னோட தீபாவளிக் கொண்டாட்டக் கதை இதுதான்.. ஹிஹி..


______