header photo

Wednesday, December 8, 2010

வடுக்கள் சாவதில்லை..

கீறலாகவோ
கன்றலாகவோ
பிளவாகவோ
பொசுங்கியதாகவோ
பொங்கியதாகவோ
எவ்விதமாகவுமிருக்கலாமவை

மணிக்கட்டில்
கால்விரலிடுக்கில்
தாடை நுனியில்
கண்ணோரத்தில்
முதுகுப்புறத்தில்
எங்கானாலுமிருக்கலாமவை

அதிகார விறைப்பால் 
ஆதங்கத்தால்
இயலாமையால்
வெஞ்சினத்தால்
பொறாமைத்தீயால்
எதுக்கானாலுமிருக்கலாமவை

எல்லாக் காயங்களும்
உதிரம் உகுப்பதில்லையெனினும்
வடுக்களின் ஞாபகங்கள்
இறப்பதேயில்லை...
______________________

Wednesday, December 1, 2010

ஒய்யாரப் பின்னல்...

மூலை மழுங்கிப் 
பழுப்பேறிய புத்தக இடுக்குகளில்
குஞ்சு பொரித்துக் கொண்டிருந்தன
மயிலிறகுகள்

வெள்ளியன்று 
வெளிவந்த முட்டைக்குள்
வைரமாகிக் கொண்டிருந்தன 
பொன் கருக்கள்

உயிர்த்த ஞாயிறில்
மரித்த பறவைக் கோதில்
வானவில்லின் வர்ண ஜாலம்
என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியது

வர்ணப் பூச்சை - விட
சுண்ணாம்பின் 
வெண்ணிறமே விருப்பாயிருந்தது..  

ஆட்காட்டி விரலில் 
அமிலம் தொட்டுத் 
தடவ ஆரம்பித்தேன்

சிறு கிள்ளையொன்று
எட்டி நின்று முடியென்று 
எதையோ பிடித்திழுத்து  
வித்தை காட்டியது 

கையிலிருந்ததை நழுவ விட்டு
குட்டையில் கை நனைத்துதறித்
திரும்பிப் பார்த்தேன்

சிறுமியொருத்தி 
கற்றையாக எதையோ 
பின்னிக் கொண்டிருந்தாள்

ஊர்ந்து கொண்டிருந்த 
பேன்கள் எதையோ உறுதி செய்தன

பார்த்துக் கொண்டிருக்கும்போதே 
பேன் முட்டைகள் பெருகலாயின 

வைரக் கனவுகளுடனான 
கருவை விட 

முட்டையில் வளரும் 
முடிக்குத்தான் எத்தனை
வீரியம்...!

_______________________________

Tuesday, November 23, 2010

சமூக நீதி...

ஐயோ ..
காலனின் காதலி என்றவள் 

தலைவலி 
கண் என்றவள்.. 

கனவுக்கு
கரிக்கோமியக் கோடிட்டவள்..

நகம் கீறிய பழியை 
காளி மேற் போட்டவள்..

ஆந்தையை வீமனென்றவள்
நாயூளையைப் பேயென்றவள்.. 

கந்தகத் தீயைக்
கொள்ளிவால் என்றவள்.. 

நடைத்துயிலைக் 
கொண்டுலாத்தி என்றவள்.. 

மாதக் குருதியைத்
தீட்டென்றவள்..

என்.. 
காலடி பதித்த 
கோலத்தடியில் 
கோமியம் மெழுகியவள்..

குதிக்காலூன்றிப் 
பெருவிரல் சுற்றிய 
சக்கரம் பூமியென்றவள்.. 

என்னை 
வாழப் பிறப்பித்த அவள்..
சாவே சொர்க்கமென்றவள்.. 

Sunday, November 21, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ஆறு...

(பேக் டு த காஷுவல் மூட்... ம்ம்...)

நம்மாளுங்க புத்திசாலித்தனம் யாருக்கும் வராதுங்க... செண்டிமெண்ட சும்மா சக்கையாப் புழிஞ்சே காரியத்த சாதிப்பாங்க... 


ஒரு படம் காட்டணும்னாக்க... கரீக்ட்டா.. காலேஜ் டைம்ல ஆரம்பிச்சு... கல்யாண மேடைல மலர்கள் புடைசூழ ஏறி அமர்ந்து... தாலிய அப்டியே தூக்கி... டமடமடமன்னு மேளத்தக் கொட்டோ கொட்டுன்னு உச்சஸ்தாயில கொட்டி... சுபம் போட்டுடுவாங்க... 

மனுஷன் எப்டி எல்லாம் வாழணும்னுட்டு... எறும்புல இருந்து கழுதை வரைக்கும் ஏதோ ஒரு குணாதிசயத்த பச்சக்குன்னு புடிச்சு மேற்கோள் காட்டுவாங்க... சபைல கைதட்டல் காதைப் பொளக்கும்... 

கற்புநெறி பத்திப் பேசுறப்போ... மாடப்புறாவையும்... அன்றில் பறவையையும் உதாரணம் காட்டுவாங்க.... ஜோடிப் பறவை போயிட்டா... பச்சத் தண்ணி கூட முழுங்காம செத்துப் போகுமாம் அன்றில்... மாடப்புறா கல்லை முழுங்கிட்டுப் போய் மண்டையப் போடுமாம்.. (வழி காட்டல்... பண்பாடூஸ்..)

ஹூம்... நம்ம மக்களுக்கும் அப்டி உணர்வு வர்ற மாதிரி ஒரு ஜோடி... வாழ்க்கை அமைஞ்சு... அவங்க அப்டியே செத்துப் போயிட்டா... போர்க் கடவுள்கள் எல்லாம் பூமில பாரம் ஏறுதேப்பான்னு கவலைப்படாம... ராக்கெட்டயும்.. அணுகுண்டையும் கண்டுபுடிக்க வழியில்லாம செய்துட்டு ரிலாக்ஸா இருக்கலாம்...  புள்ள குட்டிய யாரு பார்க்கறதுன்னு எல்லாம் கவலைப்படாம... அம்மா போயிட்டா அப்பாவும்... அப்பா போயிட்டா அம்மாவும்ன்னு மாத்தி மாத்திக் கல்ல முழுங்கிக்கலாம்.. 

எந்தப் பறவையும்... குஞ்சு பொரிச்சு... நம்மாளுங்க மாதிரியே பொத்திப் பொத்தி சாப்பாடு ஊட்டி வளர்க்கும்... சிறகு முளைச்சதும் அந்தப் பறவைக்குஞ்சு அது பாட்டுக்குப் பறந்து போயிடும்... அம்மாப் பறவை... குஞ்சுப் பறவைய... சிறகோட சிறகு கோர்த்துக்கிட்டு... வானத்தில வலம் வந்து... இங்க பாரு காடு... இங்க பாரு கூட்டுக்கு குச்சி... அங்க பாரு நீ சாப்டறதுக்கு புழுன்னு எல்லாம் சொல்லிக் கொடுக்கறதில்ல... அத விட முக்கியமா... ஆத்தீ கூட்ட விட்டு வெளில போகாத... சிறகக் கட்டிக்கிட்டு உள்ளயே கெட.. பறந்தியோ சிறகப் பிச்சுப்புடுவேன் பிச்சுன்னு எல்லாம் சொல்றதில்ல... 

நம்மாளுங்க.. அடியாத மாடு படியாதுன்னு சொல்லிச் சொல்லி... குழந்தைங்கள மாடாக்கி அடி அடின்னு அடிப்பாங்க... அங்க ஆரம்பிக்கும் குழந்தைக்கு பயம்... அங்க ஆரம்பிக்கும் அடக்குமுறை... அங்க குழந்தையும் கத்துக்கும்... முடியலைன்னா அடிக்கணும்யான்னு... இயலாமை வர்றப்போல்லாம் யாரயாவது அடிக்கணும்.. 

குழந்தைங்க ஆரம்பத்ல.. பசிக்குதுன்னு சிக்னல் கொடுக்க அழ ஆரம்பிச்சு... அப்புறம்.. அதுக்கு ஏதாவது தேவைன்னா அழ ஆரம்பிக்கும்...  உடனயே தூக்கி வச்சுக்கிட்டு ஓஓஓன்னு சீராட்டுவாங்க... அட விடுங்கம்மான்னா கொஞ்ச நேரம் அழட்டும்னா.. மூச்சடைச்சு செத்துப் போயிடும்பாங்க... அழுறப்போ எல்லாம் எதயாவது கைல திணிப்பாங்க... இது வேணுமாடா ராஜா... இங்க பாரு.. கீ... அச்சச்சோ... அது வேணாமா... இங்க பாரு.. இங்க பாருன்னு.. கைல கிடைக்கறத எல்லாம் எடுத்து நீட்டுவாங்க... 

எம் புள்ளைக்கு கீரைன்னா கண்ல காட்டப்டாது... நம்ம வீட்ல கீரையே சமைக்கறதில்லைம்பாங்க... அது என்ன வேணும்னு சொல்லுதோ அத செய்து கொடுப்பாங்க.. 

அவங்க வளர்ற வரைக்கும்.. புள்ளதான் ராஜா... அப்புறம் புள்ளய அடிமையாக்கிட்டு.. அப்பவும் ராஜான்னு கொஞ்சிக்கிட்டிருப்பாங்க.. புள்ளை சட்டை.. செருப்பு எல்லாம் தானாவே மாட்டச் சொல்லித் தர்றதில்ல.. அவங்களாவே மாட்டி விடுவாங்க... அப்போதானே அப்பாலிக்க செண்டிமெண்ட் டயலாக் விடலாம்... உன்னை நான் எப்ப்ப்ப்ப்பிடியெல்லாம் வளர்த்தேன்னு.. 

கலாச்சாரம் சீரழிஞ்சு... கால்வாயில வழிஞ்சு வழிஞ்சு கரைய உடைச்சுக்கிட்டு.. சந்து பொந்தெல்லாம் ஓடுதுப்பான்னு நம்மாளுங்க மூக்கப் பொத்திக்கிற நாட்டில.. குழந்தைங்கள எப்டின்னு வளர்க்கிறாங்கன்னு நானும் மூக்கில கைய வச்சுக்கிட்டுதான் பார்த்தேன்... ஆனா நாத்தம் தாங்காம இல்ல... ஆச்சரியமா...

அவங்க குழந்தைய குழந்தையா வளர்ப்பாங்க... நாம உன்னைப் பெத்தவங்க.. உனக்கு இப்போ நாமதான் ராஜா அண்ட் ராணி... அப்டின்னு வளர்த்து... அந்தப் புள்ள வளர்ந்ததும்... ஓக்கே... இனிமே நீ பார்த்துக்கோ ராஜான்னு விட்டுடுவாங்க.. .

அட என்னங்க... ஒரு புள்ள அழுறதுக்கு அதுக்கு உரிமை இல்லையா... அழ விடுவாங்க... விழுந்து கெடந்து அடம் புடிச்சா... கண்டுக்கவே மாட்டாங்க... புள்ள ஆட்டோமேட்டிக்கா பாடம் கத்துக்கும்... 

சாப்பாடு வீட்டில கொடுக்கிற சாப்பாடுதான்... விருப்பம்னா சாப்டலாம்... இல்லைன்னா விடலாம்.. இஷ்டமில்லைன்னா புள்ள ரெண்டு நாள் சாப்டாம இருக்கும்... இருக்கலாம்.. ஒண்ணும் ஆயிடாது.. மூணாவது நாள் வேற வழியில்லாம சாப்டும்.. நம்மாளுங்க அதையும் திணிப்பாங்க... செல்லம்ல... புஜ்ஜில்லன்னு... அது வாந்தி எடுக்க எடுக்கத் திணிப்பாங்க... இல்லைனா அடிச்சுத் திணிப்பாங்க.. (அத மட்டுமா..ஹூம்..)

அவங்க அழுதா கண்டதயும் எடுத்து நீட்டறதில்ல... கண்ணு... நீ அழுது உனக்கு ஒண்ணும் கிடைக்கப்போறதில்ல... என்ன ப்ரச்சனைன்னு பேசு.. என்ன வேணும்னு கேள்... முடிஞ்சா பார்க்கலாம்.. முடியலன்னா ஏன் முடியலன்னு உக்காந்து பேசலாம்... அதுவும் வேணும்.. இதுவும் வேணுமா... நோ.. அப்டி முடியாது.. அதுவா... இதுவான்னு முடிவு பண்ணு... (பிற்காலத்தில உதவுமில்ல..) இதெல்லாம் புள்ளைக்கு மூணு வயசிலயே கத்துக் கொடுத்துடுவாங்க... 

மத்தப் பசங்க கூடப் ப்ரச்சனைன்னா... அம்மா வா.. அப்பா வா... மாமா வா... மச்சான் வான்னு ஊரைக் கூட்டக் கத்துக் கொடுக்கறதில்ல... ப்ரச்சனைன்னா அந்தப் புள்ளையே பார்த்துக்கணும்... அடிச்சா அடிக்கறதில்ல... ஆனா ஸ்டாப் இட்... அப்டின்னு உறுதியா சொல்லக் கத்துக் கொடுப்பாங்க... யார்ட்டயும் பிரச்சனையே பண்ணக் கூடாதுப்பா... உலகம் அன்பு மயமானது.. அன்பால் எதயும் வெல்லலாம்... அடிச்சா கேன மாதிரி மத்தக் கன்னத்தையும் காண்பின்னு சொல்லிக் கொடுக்கறதில்ல... பிரச்சன வரத்தான் செய்யும்.. அத எப்படி சமாளிக்கிறதுன்னு கத்துக் கொடுப்பாங்க.. 

ஏய் மொக்கைன்னு யாராவது கூப்ட்டா... யெஸ் ஐயாம் த க்ரேட்டஸ்ட் மொக்கைன்னு நக்கலா சொல்லிட்டு நகரக் கத்துக் கொடுப்பாங்க... இல்லாம சீண்டினா... ஸ்டாப் இட்... அங்கேயே நில்... அதுக்கு மேல வராத... தேர் இஸ் அ லிமிட்..  என்னை எனக்குத் தெரியும்... என்னைப் பத்தி நீ சொல்றதுக்கு எந்த அருகதையும் இல்லைன்னு சொல்லக் கத்துக் கொடுப்பாங்க.. (:o))... 

குழந்தைங்களுக்கு என்ன என்ன உரிமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... அதே மாதிரி குழந்தைங்களுக்கு என்ன என்ன கடமை இருக்குன்னு கத்துக் கொடுப்பாங்க... ஸோ... அந்தக் குழந்தை ஆரம்ப பள்ளிக்குப் போறப்பவே வாழ்க்கையோட அடிப்படையக் கத்துக்கும்... அங்க போயும் கத்துக்கும்.. க்யூல நிக்கிறத கத்துக்கும்.. க்யூல நிக்கறப்போ ஒரு நாள் நான் முன்னாடி நிக்கலாம்... மறு நாள் நான் பின்னாடி நின்னு மத்தவன முன்னாடி போக வழி செய்யலாம்.. அதயும் கத்துக்கும்.. 

ஒரு புள்ளைக்கு இன்னொரு புள்ள ஹெல்ப் பண்ணக் கத்துக் கொடுப்பாங்க.. ஆனா ரொம்ப அவசியம்னாதான்.. கைல கத்தரிக்கோல வச்சுக்கிட்டு பேப்பர நேரா எப்டி வெட்டறதுன்னு தெரியலைன்னா... மத்தவங்க ஹெல்ப் பண்ணக் கூடாது... அந்தக் குழந்தைய கத்துக்க விடனும்... சுயமா.......

படி படி படி.... எனக்கு நீ எஞ்ஜின்-ஈயர் ஆகனும்.. டாக்டர் ஆகணும்... எல்லாத்திலயும் நூறு மார்க் வாங்கணும்னு குரல்வளையைப் புடிச்சுத் திருகறதில்லை... என்னடா எந்த நேரமும் விளையாட்டு.. ஃப்ரண்ட்ஸு... அதுவும் கண்டகண்ட ஃப்ரண்ட்ஸுன்னு தலைல அடிச்சுக்கிட்டு அலர்றதில்லை.. 

படிம்மா.. படிப்பா.. உன்னால முடியும்.. உன்னால எவ்ளோ முடியுதோ.. மாக்ஸிமம் ட்ரை பண்ணு.. போதும்.. அதுக்கு மேல வேணாம்... வா காத்தாட வெளில நடந்து போய்ட்டு வரலாம்.. காட்டுக்குப் போகலாம்.. இத எல்லாம் விட அங்க கத்துக்க நிறைய இருக்கு... வாழ்க்கைக்குத் தேவையானது..! விளையாட்டு ஒன்ன தேர்ந்து எடுத்துக்கோ... அது முக்கியம்... ஃப்ரண்ட்ஸ் யார் யாரெல்லாம் இருக்காங்க.. என்னது இல்லையா... ஏன் இல்ல... என்ன ப்ரச்சனன்னு உக்காந்து ஃப்ரண்ட்ஸ் கிடைக்க எந்த ஸ்போர்ட்ஸ் க்ளப்புக்கு அனுப்பலாம்னு யோசிப்பாங்க... 

குழந்தை ஒரு தப்பு செய்துட்டா... போச்சு... போச்சு... நான் செத்துப் போறேன்... உன்னைக் கொன்னு புதைச்சிடுவேன்... அடிச்சே சாவடிச்சிடுவேன்... குடும்பத்தோட செத்துடுவோம்னு சொல்லிச் சொல்லி.. தன் மார்ல தாம் தீம்னு குத்தி... குழந்தைய குற்ற உணர்வு பிடுங்கித் திங்கச் செய்யறதில்லை... குற்றவாளிக் கூண்டில நிக்க வச்சுக் கடிச்சுக் குதர்றதில்லை... (அது வயசுக்கு வந்து தன்னோட வாழ்க்கையத் தேடிக்கிறப்பவும் செய்யறதில்ல..).. 

நீ உன்னோட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால்... நான் தூக்கில் தொங்குவேன் என்று சொல்வது எத்தகைய கீழ்த்தரமான செயல்... எத்தனை குரூரம் நிறைந்தது... இது ஒரு கலாச்சாரம்.... இதுக்குப் பேரு மேலான பண்பாடு.. 

பரீட்சைல ஃபெயில் ஆயிட்டோம்ன்னு தற்கொலை பண்ணிக்கிற ரேஞ்சுக்கு ஒரு பையனோ... பொண்ணோ போறாங்கன்னா.. அது நம்ம கலாச்சாரத்திலதாங்க நடக்கும்... அதே குற்ற உணர்வுதான்... அய்யயோ... செய்யக் கூடாத தப்பு பண்ணிட்டோமே... இனிமே அம்மா அப்பா மூஞ்சில எப்டி முழிப்போம்... நம்ம நாசமாப் போன வீதில எப்டி மூஞ்சியக் காட்டுவோம்னு... 

இப்டி ஒரு மனநிலைல ஒரு புள்ளைய வளர்த்துட்டு... இப்டி ஒரு மனோபாவத்துக்கு அந்தப் புள்ளையத் தள்ளிட்டு... நம்ம கலாச்சாரத்துக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க... நம்ம புள்ளைங்க புனிதமானவங்க (சில பேரு.. corrupted mind ... மாசு மடிஞ்ச மனசுள்ளவங்களுக்கு இதெல்லாம் சரிப்படாதுங்க..)ன்னும் பெருமையா சொல்லிக்கிறாங்க... 

ஸோ... அந்தப் புள்ள காதலிச்சா என்னாகும்... வேற வழியில்ல ஆள விடுங்கப்பான்னு ஓடச் செய்யும்.. இல்லைன்னா.. அம்மா அப்பா சவத்துக்கு மேல எப்டி வாழ்றதுன்னு... உரோமபுரி அடிமைகளாயிடுவாங்க.. அதாவது உயிர்.. உணர்வு எல்லாம் இருக்கிற மனுஷங்களா இருக்காம... ஒரு பொருளா... கழுத்தில இவள் இவனின் அடிமை... அப்டின்னு தகடு மாட்ட விட்டு வலம் வர வைப்பாங்க... அது அந்தப் புள்ள நாண்டுக்கிட்டுச் செத்துப்போனா... மானம் காப்பாத்தியாச்சுன்னு பெருமூச்சு விட்டுக்கிட்டே திரும்ப மார்ல அடிச்சுக்கிட்டு அழுது தீர்ப்பாங்க... சமூகம்... பாவம் அவங்க தலையெழுத்துன்னு ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரித் தலைல அடிச்சுக்கிட்டு போகும்... 

அதே மாதிரி... அது பையன்னா... பொண்ணைக் காதலிச்சிட்டோம்... கர்ப்பமாயிட்டா... மத்தவங்க மூஞ்சில முழிக்க முடியாதுன்னு ஓடத்தான் முடியும்.. வேற வழி... சொல்லிப் புரிய வைக்கற மாதிரியாய்யா வளர்ந்திருக்கோம்.. கலாச்சாரத்த இம்பூட்டு மொத்தக் கயிறாப் போட்டு இறுக்கக் கட்டியில்ல காப்பாத்துறோம்... மொன்னையாவே இருக்கட்டும்ன்னு... 
கலாச்சாரத்த அவுத்து விட்டிருக்கிறதா நம்மாளுங்க சொல்லிக்கிட்டிருக்கிற ஊர்ல... ஒருத்தன் ஒருத்தியோட சேர்ந்துட்டு.. புள்ள கிடைச்சதும் விட்டுட்டு கம்பிய நீட்ட முடியாது... 

அதே மாதிரி கல்யாணம் கட்டிட்டு... அப்புறம் சரியா வரலைன்னா பிரிஞ்சுட்டு... கட்டினவன் கிட்ட இருந்து ஒண்ணும் வேணாம்ன்னு ரோஷமா வேணா இருந்துக்கிடலாம்... ஆனா எம்புள்ளைக்கும் எதுவும் வேணாம்.. புள்ள மூஞ்சில முழிக்கப்டாதுன்னு எல்லாம்... வீட்டுக்கார அய்யாக்கு தண்டனைய கொடுக்கிற மாதிரிப் புள்ளைங்கள தண்டிச்சிட முடியாது...   Sole legal custody... Sole physical custody... இத்யாதி இத்யாதி இருக்கு... அப்டி ரெண்டு பேருக்கும் கஷ்டமா guardianship.. அப்டின்னு ஒன்னு இருக்கு... (உடன எல்லாரும் புள்ளைய பெத்து அவங்க காலடில கொண்டு போய்ப் போட்டு முக்காடு போட்டுக்கிட்டுப் போற மாதிரிக் கற்பனை பண்ணிக்க வேணாம்..).. 

அவங்க அவங்களுக்கு... அவங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி... ஆலோசனை கொடுக்கிறதுக்கு ஆயிரத்தெட்டு மையம் இருக்கு... சட்டமும் சரி... மையமும் சரி..  தனி ஒரு மனிதனை... அவனோட அபிலாஷைகளை... அவமதிச்சிடக் கூடாது... அப்டின்னு ரொம்ப மரியாதை கொடுத்து.. அவனுக்கு எப்டி எப்டி எல்லாம் வழி காட்டலாம்ன்னு உருவாக்கி வச்சதுதான்...  

நம்மாளுங்க தூக்கில தொங்குவோம்ன்னு மிரட்றாப்ல... போடி போடி... மூஞ்சிலயே முழிக்காத... என்னளவில நீ செத்துப் போயிட்டா... தனியா நின்னு சாவுடின்னு... பண்பாட்டோடயும்.. நல்ல பண்போடயும் வாழ்த்தி வழியனுப்புவாங்க... அந்தப் பொண்ணும் ஏதாவதுன்னா... எங்க போறதுன்னு தெரியாம நட்ட நடு வீதில நின்னு... திக்குத் தெரியாத காட்டில்ன்னு செண்டியா பாட்டுப் பாட வேண்டியதுதான்... அப்புறம் என்ன... நான் சொன்னேன்ல... கேட்டியா.. கேட்டியா... இப்போ பார்த்தியா பார்த்தியா.. (வின் பண்ணிட்டாய்ங்களாம்..) அப்டின்னு குதிப்பாங்க... 

இங்க... சட்டப்படி கல்யாணமான... "ஆகாத"... அம்மா.. அப்பா.. யாரும் அப்டி தொரத்தி விட மாட்டாங்க.. (புள்ளைங்கள துரத்தி தண்ணி தெளிச்சு விடுறதெல்லாம் ஒரு கலாச்சாரமான்னு யாரோ கேட்ட ஞாபகம்..).. ஒரு வேளை பெத்தவங்க உதவ முடியலன்னா... நல்ல பண்போட... ஒரு சமூகம் இருக்கு... சமுதாயம் இருக்கு... 

நம்மாளுங்க இங்க வந்து.. ஒரு புள்ளய... அது கூடாது.. இது கூடாது... சாவோம்.. குடும்பத்தோட கொளுத்திட்டு நானும் சாவேன்.. இத்யாதி இத்யாதின்னு எல்லாம் மிரட்டி வச்சும்... அந்தப் புள்ள மூச்சடக்கி சாவற கட்டத்தில வெளில வந்திச்சின்னா... அதைக் கை நீட்டி அழைச்சு வழி காட்ட ஆள் இருக்காங்க... அதுக்கும் சொல்லிக்குவாங்க நம்மாளுங்க பெருமையா... என்ன ........ரு... என் புள்ளய நான் அடிக்கறேன்... என் புள்ளைய நான் கொல்றேன்.. (ராஜபக்சே ஃபார்முலா... நம் நாட்டு மக்களை நான் கொல்றேன் உனக்கென்னடா போச்சுன்னு..).. நீ யாருய்யா காப்பாத்த... நம்மூர்ல இப்டி எல்லாம் வழி காட்ட எந்த நா(தி)யும் இருக்காது... வேற வழி இல்ல புள்ள நம்ம கிட்டதான் வந்தாவணும்... இங்க இப்டிக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கிறீங்களேடான்னு.... பெர்ர்ர்ர்ர்ருமையா பீத்திக்குவாங்க... 

(மீதி அப்பாலிக்கா..)

Friday, November 19, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் அஞ்சு...

பூச்செடி ஒன்றின் தண்டின் வளர்ச்சியில் ஆங்காங்கே தோன்றும் முட்கள் போன்று..  எண்ண ஓட்டத்தில் முட்டி மோதும் சொற்களை என்னால் அலட்சியப்படுத்த முடியவில்லை... தண்டின் முள்ளைத் தோன்றத் தோன்றச் சிராய்த்துக் கொண்டிருந்தால்... அந்தச் செடியின் சுயம் என்னவாகும்..?!... பூவின் ஆதாரம் என்னவாகும்..?! 

தளுக்கும்.. பாசாங்கும் எனக்குக் கைகூடவுமில்லை...  அவசியப்படவுமில்லை... 

என் மொழியை அப்படியே ஏற்றுக் கொண்டவர்களுக்கு வந்தனம்.... 

___________________________

நான் இங்கு பேசிக் கொண்டிருப்பது குறிப்பிட்ட ஒரு விடயம் மட்டுமல்ல... பொதுவான மனித உணர்வுகள் சம்மந்தப் பட்டது.... சுற்றிச் சுற்றி வரும் விடயங்களைப் பார்த்துத் துணுக்குறாது... கொஞ்சம் உங்களுக்குள்ளேயே சிந்தித்துப் பார்க்க முடிந்தால்... அதுதான் மனித இனத்துக்குக் கிடைக்கும் அங்கீகாரம்.. 

பேச ஆரம்பித்த பின்... இதைப் பேசலாமா... இதை விடலாமா என்று யோசிக்க முடியாது... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.... 

சில விஷயங்கள் பேசினால்... திருமணம்... சேர்ந்து வாழ்தல் எல்லாம் மிக மிக அற்பமாக... மிக மிகச் சாதாராணமான விடயமாகத் தோன்றலாம்... 

இல்லை... இல்லை... இது தப்பு... இது தப்பு... இது தப்பு...  நாங்கள் யோசிக்கவே மாட்டோம்.. கண்ணைத் திறக்க மாட்டோம்... காதைத் திறக்க மாட்டோம்... இப்படி ஒரு சொல்லை உச்சரிப்பதே பாவம்... வைகுண்டம் தூரம்.. கைலாசம் நாசம்..  என்று ஜெபம் செய்து கொண்டிருப்பவர்கள்... தயவு செய்து போய்... உங்கள் வலைமனையிலோ... அல்லது சுற்றாடலிலோ... உங்கள் சேவையைத் தொடரவும்... 

ஆமாம்... இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம்தான்னு தோன்றினா... ஆரோக்கியமா பேச முடியும்னா... அவங்க இங்க பேசுங்க...  
_____________________

சிலபல மனிதர்களின் மனப்போக்கை நினைத்தால்... கஞ்சி தண்ணியை வாயில் வைக்க முடியவில்லை... நம் கலாச்சாரம்.. நம் பண்பாடு... நல்ல குடும்பத்தில பிறந்தேன்... நல்ல அம்மா அப்பாவிடம் வளர்ந்தேன் என்றெல்லாம் ஏன் பீற்றிக் கொள்கிறார்களென்று தெரியவில்லை... அப்படிச் சொல்லிக் கொண்டே... அவர்களின் மனம் வெளிப்படுத்தும் வக்கிரம்... வார்த்தைகளில் வடிக்கத் தகுந்ததன்று... இதொன்றும் யாருக்கும் பெருமையான விடயமென்று எனக்குத் தோன்றவில்லை... 

தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் போகும்.. என்ற ஒரு விடயத்தைக் கூறிச் சவர்க்காரம் விற்பதற்கு..  சொறி... சிரங்கு... அரிப்பு... எல்லாவற்றிற்கும்... குரங்குமார்க் சோப் பாவியுங்கள்... தேகம் பளபளப்படையும்... ஆயுள் நீடிக்கும்... ஐஸ்வர்யம் கூடுமென்றெல்லாம் போலியாகக் கூவிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது..?! .. எப்படியாவது அதை விற்றாக வேண்டுமென்ற மகா கவலைதான் இல்லையா..?! 

விலை மாதருக்கு ஆதரவெனில்... நீ வேசி... அல்லது அவளிடம் படுத்து எழும்புபவன்... ஆண் ஆணுடனும்.. பெண் பெண்ணுடனும் சேர்ந்து வாழ்வதை ஆதரித்தால்... அந்தந்தப் பாலுக்கு ஏற்றவாறு நீயும் அவ்வாறே... திருநங்கைகளுக்கு ஆதரவெனில் நீயும் திருநங்கை... புலிக்கு ஆதரவெனில் நீ புலி... (உபயம் மஹிந்தாவம்ஸாய நமஹ..)

பதின்ம வயதில் நான் படித்த சமுத்திரம் அவர்களின் வாடாமல்லி (கற்பனைக் கதையொன்றுமல்ல..) ஏற்படுத்திய வெட்டுக்காயம்... மிக ஆழமாக.. இன்னும் ரணமாக அப்படியே இருக்கிறது... சுயம்புவின் சுயம் வெளிப்பட முடியாது... சுற்றிச் சுற்றியிறுக்கும் சமூகம்... கட்டுப்பாடு..  சுயம்புவை உணர்ந்தும்.. ஊர் உலகத்திற்கு மறைத்து... விழுங்கி விழுங்கி... சுயம்புவான "அவளை"... சுயம்புவிலுள்ள கொஞ்சமே கொஞ்சமான "அவனுக்குள்" உயிருடன் சமாதி கட்டிப் புதைக்கும் பெற்றவள்... பொறுத்துப் பொறுத்து... முடியாது... முடியாதென்று அலறியபடி சுயத்தைத் தேடி... ஓடி... திருநங்கைகளின் கூட்டத்தில் சேர்ந்து... தானாகி... மேகலாவாகிப் பயணிக்க ஆரம்பிக்கும் காலம் வரை... அதன் பின்னர் கூட எத்தனை எத்தனையோ சித்திரவதைகள் காத்திருப்பினும்... அதற்கு முன்னர் அவள்... அந்தத் திருநங்கை அனுபவிக்கும் வேதனையை... கலாச்சாரத்தைக் கட்டிக் காக்கும் புண்ணியவான்கள் ஒரு பாதி நாள் அனுபவிக்க முடியுமா... உமக்கு மற்றவரின் உணர்வைப் புரிந்து கொள்ளும் அருகதை இருக்கிறதா..?! 

காதல் என்றால்... கண்ணே மணியே... கண்ணாளனே... என்னை விட்டுப் போய் விட்டாய்... இருக்க முடியவில்லை... படுக்க முடியவில்லையென்று அலறுவதல்ல... அந்த அலறலில் எங்கோ ஒரு இடுக்கில் சிறு துளி காதல் இருக்கலாம்... 

அன்பே சிவம் என்று நாத்திகமும்.. சிவமே அன்பு என்று ஆத்திகமும் பேசிக்... காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...  மற்றவருக்காக கோயில் முன் கண்ணை இறுக மூடி... பக்கத்திலிருப்பவன் என்ன ஜாதியென்று யோசித்திக் கொண்டிருப்பதல்ல.... காதல்.. 

தத்வம் அஸி... மற்றவர்கள் கஷ்டம் புரிந்து கொண்டால்.. என்னைப் போல் ஒருத்தி... என்னைப் போல் ஒருவன்... எனக்கு உன்னைப் புரிகிறது... என்று அந்த உயிரை... உன்னுள் உணர்ந்து புரிந்து கொள்வதுதான் என்பது.. என்னோட தாழ்மையான... அல்லது மிக மிக மேன்மையான கருத்து... 

Annie Proulx இன் Brokeback Mountain.. (இதுவும் கற்பனையல்ல..) படித்தால்.. இரு ஆண்களுக்கிடையில் தோன்றும் காதலும்... சமூகத்தில் அதை வெளிப்படுத்த முடியாத அவலமும்... அவர்களின் முடிவும்... அய்யோ என்று அலறச் செய்யும்... அவர்களின் இயலாமை எம்மையும் தொற்றிக் கொண்டு... உருகி உருகி அழ வைக்கும்... 

நல்ல புள்ளைகளுக்கு அது மிக மிக அருவெறுப்பாகத் தோன்றலாம்... அதே நல்ல புள்ளைகள்... ஏதோ ஒரு படத்தில்.. யாராவது முன்னணித் தமிழ்க் கதாநாயகன்.. நாயகியிடம் உன்னிலுள்ள ஆணைக் கொஞ்சம்... என்னிலுள்ள பெண்ணைக் கொஞ்சம்.. என்று பாடினால்... அதைப் பற்றி எந்த ஆராய்ச்சியும் இல்லாது... விசில் அடித்தபடி... கலாச்சாரக் காவலர்களுக்குப் பயந்து தலையைக் கழுத்தில் புதைத்தபடி செல்லும் பெண்ணைச் சுற்றி வரலாம்... 

அசோகர் மரம் நட்டார் அறிந்தோம்... கண்ணப்பநாயனார் மாமிசம் படைத்தார் அறிகிறோம்... புத்தர் ஞானம் பெற்றார் அறிவோம்..  X குரோமோசோம்... Y குரோமோசோம்... ஹரி ஓம்..  என்று எல்லாவற்றையும் கலந்து மனப்பாடம் செய்வார்கள்... ஆனால் ஒரு பெண்ணிடம் இருக்கும் ஆண்மைத் தன்மையையோ... ஆணிலிருக்கும் பெண்மைத் தன்மையையோ புரிந்து கொள்ளத் தெரியாது... அவர்கள் மனங்களின் கஷ்டம் தெரியாது... அதற்கு அவர்கள் அந்த நிலையில் இருந்தால்த்தான் புரிந்து கொள்வார்களாம்... 

(இதற்கும் யாராவது விழுந்தடிச்சு ஓடி வரலாம்... அப்போ இது சரிங்கிறியா... அப்போ இது தப்புங்கிறியா... ஒரு ஹோமோ... இன்னொரு பையனை ரேப் செய்தான்... அவன் தூக்கு மாட்டிச் செத்தான்... தெரியுமா உனக்கு... அப்டிம்பாங்க...)

அய்யா... அம்மா.. நீங்க புத்திசாலிதான்...  நீங்க சொல்றது சரிதான்..  ஒரு அல்சேஷன் அல்சேஷனைக் கடித்தாலும்... அல்சேஷன்... பொமரேனியனைக் கடித்தாலும்... பொமரேனியன் பூனையைக் கடித்தாலும்... அது வன்முறைதான்... நிர்ப்பந்தமாகப் பெண்ணுக்கு ஆணால் நடந்தாலும்... ஆணுக்கு ஆணால் நடந்தாலும்.. பெண்ணுக்குப் பெண்ணால் நடந்தாலும்... அது வன்புணர்வுதான்... வன்முறைதான்... அது உலகத்தில் எங்க நடந்தாலும் கஷ்டம்தான்... 

ஏன்...???? ஏனென்றால்.. சம்மந்தப் பட்ட பெண்ணுக்கோ... ஆணுக்கோ விருப்பமில்லாது... நடக்கும் காரணத்தால்.. அது வன்முறை... 

ஆனால்.. அவங்களுக்கு அப்படி வாழத்தான் விருப்பம்... மேற் கூறிய ஏதோ ஒரு முறையில்.. அவரவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழப் பிடித்திருக்கிறதென்று.. பரஸ்பரம் யாரோ ஒரு துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்... அல்லது தனியே இருக்கிறார்கள்... 

அங்கே நம் பண்பாடு.... சமூகம்... கலாச்சாரம்... எல்லாம்.. இரை கண்ட அக்டோபஸ்ஸின் கண்கள் போன்று படக் படக்கென்று விழித்துக் கொள்ளும்.... இல்லை... விட மாட்டோமென்று அவர்கள் கையைப் பிடித்திழுத்து... நாம் சொல்வதைச் செய்.. என்று கட்டாயப் படுத்துவதற்குப் பெயர் என்ன..?!... அதுக்கு என்ன பெயர்..?! ... 

தெரியவில்லையென்றால்.. நானே சொல்கிறேனே... அதுவும்... வன்முறைதான்... வன்புணர்வுக்காகக் கையையும் காலையும் கட்டிப் போடும் மூர்க்கத்தனம்தான்.... உயிருடன் தொங்க விட்டு... சுற்றவரத் தீயிட்டுக் கூடிக் கும்மாளமிட்டுப்.. பறை முழங்கி... மனித மாமிசம் உண்ணும்... காட்டு மிறாண்டித்தனம்தான்..... 

இதை உண்மையில்லையென்று சொல்பவன்... அதே மனித மாமிசத் தசையை ஏதோ ஒரு விதத்தில் பதப்படுத்தி உண்ணும்.. மிக மிக நாகரீகமானவன்தான்.. 

வளர்ப்பு முறை சரியில்லையென்று அலறும் புண்ணியாத்மாக்களுக்கு... வளர்ப்பு என்பது... முடிகிறதோ இல்லையோ... இவளைப் புணர்... இவனைச் சேர்... அழுகிச் சோர்.. செத்துப் போ... என்று சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல... 

(இதைச் சொல்லும்போது... நான் இங்கு பாடம் நடத்துவதாகச் சில அறிவுஜீவிகள் கெக்கலித்தது கவனம் வருகிறது... எனக்குத் தோன்றுபவற்றைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்... அதே எண்ண ஓட்டத்தில் சிந்திக்க முடிபவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன்... மற்றவருக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பது என் வேலையல்ல..) 

அவளை... அவனை... அவர்களை.. எல்லாரையும் அவரவர்களாகவே புரிந்து கொள்ளப் பழக்குவது அத்தனை கடினமா..?!... அதை நீங்கள் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுக்க முடியாது... அப்படியென்றால் எப்படிப் பழக்குவது..?! அது... நீங்கள் முன்னுதாரணமாக இருந்து காட்ட முடியும்... (ஜாதி உட்பட... நீங்கள் சொல்லிக் கொடுக்காத ஒன்றை... எங்கோ யாரிடமோ பேசாத ஒன்றை... உங்கள் குழந்தை கற்றுக் கொள்கிறதா..?! இல்லைதானே..?!)

அவர்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ முடியாது... வாழ்க்கையை அவர்களாகவே கற்க விடுங்கள்... அவரவர்க்கு என்ன வேண்டுமென்பதை அவரவரே தீர்மானிக்க விடுங்கள்... எந்த வழியென்று அவரவர் தீர்மானிக்கட்டும்... இந்த வழிக்கு எப்படிப் போக வேண்டுமென்று உங்கள் முன் வந்து நின்றால்... நீங்கள் முடிந்தால் வழிகாட்டியாக மட்டும் இருங்கள்... இல்லையெனில் ஒரு வழிகாட்டி இருக்கும் கதவைச் சுட்டிக் காட்டுங்கள்... 

அது அலி... இது விதவை... இவள் மலடி... விவஸ்த கெட்ட ஜென்மம்.. எல்லாம் சொல்லிச் சொல்லியே... மற்றவர்களெல்லாம் உயிருடன் இருக்கவே தகாதவர்களென்று சொல்லிக் கொடுக்க அவசியம் என்ன வந்தது.. 

தான் திருடி பிறரை நம்பாள்... என்பது போல்... எதைப் பார்த்தாலும் பயம்.. யாரைப் பார்த்தாலும் பயம்...  (அட நான் பாம்பு... பல்லி பத்திச் சொல்லலைங்க...).. நம் வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்... பக்கத்து வீட்டில் சமைத்து வந்தால் அதில் செய்வினை இருக்கும் என்பது போன்ற பயம்... நான் இதை ஆதரித்தால்.. என்னுடைய மகனும்... அதயே செய்வான்... என்னுடைய மகளும் அதயே செய்வாள்... என்பது போன்ற... தேவையே இல்லாத பயம்... 

ஏன் என்றால்... மற்றவர்களைப் பார்த்துப் பார்த்துத்தான்.. எம்முடைய தேவையை நாம் முடிவு செய்கிறோம்.. அப்படிப் பழகி வைத்திருக்கிறோம்... பழக்கி வைத்திருக்கிறோம்... தன்னைத் தானே பார்த்து... எனக்கு இது தேவையா... ஏற்புடையதா... இது நானா என்று வயித்துக்கும் இதயத்துக்கும் இடையில் சிக்கிச் சின்னாபின்னப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு பொருளைக் கேட்பதேயில்லை... அதன் அலறலை அலட்சியம் செய்து... செய்து... ஏதோ ஒரு சாத்தானுடைய சொல்லுக்கே கட்டுப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.. 

மாத்ஸ்ல... பூஜ்யம் எடுத்தாலும்.. எஞ்சினீயரிங்தான் என்று அழுத்திப் படிக்க வைக்கப்படும் ஒரு பிள்ளையால்... யாருக்கு என்ன லாபம்... அந்த சமூகம் என்ன சாதித்து விட முடியும்... உனக்கு என்ன முடிகிறது என்று பார்... நீ எதைச் செய்தால் அது பூரணமாக மிளிரும் என்று பார் என்று யாரும் கற்றுக் கொடுப்பதாகக் காணோம்... 

எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கிறோம்... அவரவர் வாழ்க்கை உட்பட... வாழ்க்கை என்பது வாழப்படாமலே புதைக்கப்படுகிறது... அப்படி என்கிற உண்மையையும் புதைத்துக்கொண்டு... போலியாகப் பெருமைப் பட்டுக் கொள்வதில்த்தான் எத்தனை எத்தனை (தற்)பெருமைகள்.... 

(இதுக்கு மேலயும் சொல்லுவேன்...)

Wednesday, November 17, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் நாலு...

நீரற்றுப் பாளம் பாளமாக வெடித்திருக்கும் நிலப் பரப்பின் மேற்குப் பகுதியில் சிற்றாறொன்று ஓடுகிறது, சுற்றி ஈரப்பசையிருக்கிறது என்றபடி கையில் சிறு மண்வெட்டியுடனும், வெண் தாமரைச் செடியுடனும் நகர்ந்து கொண்டிருக்கும் என்னிடம், எங்கோ புதைந்திருக்கும் சேறு பற்றியும், ஆங்காங்கே அருகில் தேங்கியிருக்கும் குட்டை நீர் பற்றியும், அதில் நெளியும் புழுக்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், அவர்களை நிராகரித்து மேற்குப் பகுதி நோக்கி முன்னேறுவது தவிர்க்க முடியாதது. என் கையில் மண்வெட்டி தூக்குவதற்குண்டான பலமிருக்கும் மணித்துளிகளும், நீரற்றுத் துவண்டிருக்கும் தாமரையின் உயிராதாரமுமே பிரதானம். மற்றவை வீண்... அந்த நிராகரிப்பு இங்கு அவசியம்... அதைத் தாங்கவியலாதவர்.. தூற்றும் மண்... அடுத்த சூறாவளிக்கு அவர் கண்களிலேயே விழும் என்பது... இயற்கையின் விதி.. மற்றும்.. நியதி!

நிற்க.


மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாது... அவர்களை நிராகரிப்பது மட்டுமல்லாது நிந்திக்கவும் செய்பவர்களை... என் காற்தூசிக்கும் மதியேன்...!!!! ... அது ஒட்டு மொத்த உலகமாக இருந்தால்... எனக்கு இந்த உலகமே தூசி..!!!!!! யாதும் ஊரே... யாவரும் கேளீர்..!!!!

________________________________________________________________

நல்ல பிள்ளைங்களுக்கு... என்னென்ன வரைவிலக்கணங்கள் கொடுத்து வைத்திருக்கிறார்களோ.. மெச்சுவதற்கு எத்தனை வார்த்தைகள் உருவாக்கி வைத்திருக்கிறார்களோ, அதே போல் கெட்ட பிள்ளைகளுக்கும் வைத்திருக்கிறார்கள்.

நான் பெண்ணீயவாதியல்ல... பாலைப் பொதுவில் வைக்கலாம்.... ஆனால் விபச்சாரி என்ற பதத்திலிருந்து... பற்பல சொற்கள் பெண்களைக் குறி வைத்தே பிறந்திருப்பதனால்...

அடங்காப்பிடாரி, தேவடியா, வேசி, திமிர் பிடிச்சவ, மானங்கெட்டவ, கூறு கெட்டவ, விவஸ்த கெட்டவ, ஓடுகாலி, அறுதலி, வாழாவெட்டி (இதுவும் கேவலமான வார்த்தைதான்)... இத்யாதி... இத்யாதி...

பசங்கள நிமிர்ந்தே பார்க்காத பொண்ணு... பசங்களுக்கு திமிர் புடிச்சவ... வீட்ல உள்ளவங்களுக்கு... தங்கம்... & VICE VERSA. மனதுக்குப் பிடித்தவனோடு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது (அதுக்கு ஜாதி, ஜாதகம், குலம், கோத்திரம், புண்ணாக்கு, புடலங்கா ... எது வேணா காரணமா இருக்கலாம்..) மனதுக்குப் பிடிக்காத ஒரு திருமண பந்தத்தில், கட்டிலில் கல்லாகச் சமையச் செய்து, கூடி எழுபவன் உத்தம புத்திரன்... அந்த அடிமைப் பெண் உத்தமி... உத்தமம் என்பதற்கு நாம் சொல்லி வைத்திருக்கும் விளக்கம் இதுதான்.

அதே பெண் பிடித்தவனுடன் சென்று விட்டால் ஓடுகாலி. அவனுடன் சென்று விட்டு அவன் நண்பனிடம் சிரித்துப் பேசினால் தேவடியா... சிரித்துப் பேசவில்லையெனில் திமிர் பிடிச்சவ... நீங்கள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம்.. மற்றவன் சொல்வதற்குத் தலை வணங்கி... அதன்படி நடக்காவிட்டால்.. உங்களுக்கு இதில் ஏதோ ஒரு பட்டம் கண்டிப்பாக உண்டு. ஆமாம்... ஆமாம்... சரி... சரி... என்று கூறிக் கொண்டிருப்பதே... கூறுகெட்ட... இல்ல கூறுகெடாத தனம். உடன்பாடில்லையெனில்... வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும்... வாயைத் திறக்கப்டாது.



வீட்டில் கட்டிய மனைவியை விட்டு ஒரு ஆண் வேறொரு பெண்ணை நாடுவானானால், அவன் வீட்டிலிருக்கும் பெண்ணை விட்டுப் போன பாவம் ஏழேழு ஜென்மத்துக்கும் சுத்துமென்று... கட்டியவளையும் விட முடியாது.. இரண்டு பேரையும் வைத்திருப்பான். இதில் இரண்டாவதாக இருப்பவள்... வைப்பாட்டி... அடடா.. என்ன ஒரு வார்த்தைப் பிரயோகம்.... அந்தப் பெண்ணின் வாழ்க்கை நரகம். முதல் மனைவிக்கு இவந்தான்... வேற வழியே இல்லையென்று ஆக்கி விடுவார்கள்... அந்தப் பெண்ணுக்கும் நரகம்... நடுவில் மாட்டிக் கொண்டிருப்பவனுக்கும் நரகம்.

ஒரு வேளை அந்தப் பெண்ணை விட்டு இவன் போனால்... அந்தப் பெண் நடுத்தெருவில்... அந்தோ பரிதாபம்.. ச்சு ச்சு... அவ தலையெழுத்து அப்டி... என்று உச்சு கொட்டிக் கொள்வார்கள்.. நம் இரக்க சுபாவம் நிறைந்த மாந்தர். பாவம் அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்..?! ... ஏனம்மா... உனக்கு கையும் காலும் இருக்கு... சொந்தக் கால்ல நின்னு பொழைக்க கைல வலு இருக்கு... உன்னோட வாழ்க்கைய தேர்ந்தெடுக்கிற உரிமை உனக்கு இருக்கு.... அப்டின்னு சொல்ல யாராவது இருக்காங்களா..?! இல்ல... அந்தப் பெண்ணை அவளுக்காகவே விரும்பிச் சேர்ந்து வாழ யாராவது வருவாங்களா.... வந்தாலும் விட்டுடுவோமா...?! ஊஹூம்..

தமிழ் சினிமாவில் வர்ற மாதிரி... (கமலின் மகாநதியும்... இன்னும் ஒன்றிரண்டும் விதிவிலக்கு..).. அந்தப் பெண்ணின் கணவன்... முதலிரவு நடக்க ஒரு வினாடி இருக்கும் பொழுதே... பாம்பு கடித்தோ... ரெயில் ஆக்சிடெண்டிலயோ.. (ஹூம்... ரிதம்... என்ன ஒரு அருமையான கருத்த சொல்றாங்க... ஆனா..).. இல்ல ஹார்ட் அட்டாக் வந்தோ மண்டையைப் போட்டிருக்க வேண்டும்... பெண் மாசு படியாதவளா(?) இருந்தா... போனாப் போகுது... கட்டிக்கலாம்ன்னு விட்டுக் கொடுப்பாங்க... இல்லைன்னா... அதுக்கும் ஒரு சொல்லு வச்சிருக்காங்களே... எச்ச இல.... இதுதான் நம் பண்பாடு... 

இதை மாறாது போற்றிக் காக்கப் புறப்பட்டிருக்கும் நம் இளைய தலைமுறையை வாழ்த்தியனுப்புவதற்கு... கடப்பாறையை விழுங்கும் பாங்கினை நான் கற்றுக் கொள்ள வேண்டும்...

(இன்னும்... நகர்ந்து கொண்டே இருப்பேன்...)

Monday, November 15, 2010

இதுதாண்டா கலாச்சாரம்... பகுதி நம்பர் ரெண்டு...

இருங்க... நம்ம சித்தாந்தம் ஒரு பக்கம் கெடக்கு... அது எங்க போகுது கழுத.. இப்போ கௌசல்யா அவங்களோட போஸ்ட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமா பின்னூட்டிடுறேன்.... 

||அதிலும் முக்கியமாக நமது திருமண முறை, பல ஜாதி, மதத்தினர் இருந்தாலும்||

இந்த பல ஜாதிக் கொடுமைய வச்சுக்கிட்டு, சக மனுஷன மனுஷனா நினைக்காம தூக்கி எறிஞ்சு பேசிக்கிட்டும் நாம நம்ம கலாச்சாரம் சிறந்ததுன்னு பேசுவோம்.. அது வாங்கொடுமைங்க... நம்ம கலாச்சாரம் பார்த்து பொறாமைப்படற(?) அதே வெளிநாட்டுக்காரன் என்ன கொடுமை இதுன்னு என் கிட்ட கேப்பானுவ... ஐய்யோ நான் இல்ல.. நான் இல்லன்னு அலறணும் போல வரும்.. 

என்னமோ... வெள்ளைக்காரன் கருப்பரயும் மாநிறக்காரனயும் புடிச்சுத் திங்கற மாதிரிப் பேசிட்டிருக்கியளே, இனத் துவேஷம்ன்னு பேரு வேற... நீங்க என்ன புடுங்கிட்டிருக்கீங்க அப்டின்னு கேப்பானுவ... 

அட இவ்ளோ ஏனுங்க... உங்க மாநிறம் எவ்ளோ அழகு... அதுக்காக இங்க இருக்கிற வெள்ளக்காரிங்க எல்லாம்... தேசம் விட்டு தேசம் போய்... வெயில்ல கெடந்து புரண்டு... அய்யோ... ப்ரவுன் ஆவுதில்ல... எல்லாம் ரெட் ஆகி அவிஞ்சு போகுதுன்னு அழாக்குறையா வந்து... சொலாரியத்தில போய்ப் படுத்துக்கிறாங்க.. பக்கத்து வீட்டில இருக்கிற உங்கூரு அம்ணி... வெயிலடிச்சா வெளில போகுதில்ல... புள்ள குட்டியையும் அனுப்புதில்ல... ஏன்னா கருத்துடுவாங்களாம்... ஏன்.. அது உங்களோட அடையாளம் இல்லையா?! என்ன கொடுமை இது..  விண்டருக்கும் வெளில போறதில்ல.. சறுக்கிடுவாங்களாம்... விழுந்துடுவாங்களாம்.. மத்த பசங்க கூடச் சேர்ந்தா.. கெட்டுடுவாங்களாம்... அந்தப் பசங்க வீட்டுக்குள்ளயே கெடந்து பைத்தியம் புடிச்சு சாவப் போறானுங்கன்னு ஏகத்துக்குக் கவலைப் படுவாங்க... 

எனக்கு என்னோட மூஞ்சிய எங்க கொண்டு போய் வைக்கிறதுன்னு தெரியாம... ஸ்ஸ்ஸபா.. அப்டின்னு என்னோட கவலையையும் தெரிவிச்சுக்குவேன்... 

ஆனா நம்மாளுங்களுக்கு அதில இருக்கிற பெருமை இருக்கே... ய்ய்யப்பா... என்னாங்கிறீங்க.. ச்சே ச்சே... எம்புள்ள வெளில எங்கயுமே போறதில்ல... அங்கன பக்கத்தில இருக்கிறவைங்க "வேற ஆளுங்க".. அப்டின்னு பெர்ர்ர்ருமையா சொல்லிக்குவாங்க... கிரகம்.. இந்தக் கண்றாவிய நான் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டி வரும்.. அப்போ நான் வெளிநாட்டுக் காரங்க கிட்ட வழியற வழிசல் இருக்கே... போதும்டா சாமீ... 

||அவர்களுக்கு தகுந்த மாதிரியான சம்பிராதயங்கள்,  கட்டுபாடுகள், கலாச்சாரங்கள் என்று மிகவும்  நல்ல முறையில் அமைந்திருந்தது.'புனிதம்' என்று இன்று வரை நினைத்து மதித்து கொண்டிருந்த ஒரு பண்பாடு இப்போது வேறு விதமாக போய் கொண்டிருக்கிறது....!!?||

சம்பிரதாயங்கள்... கட்டுப்பாடுகள்... புனிதம்... ம்ம்.. ஆமா... மாப்ள தங்கக்கம்பி... நாப்பது ஏக்கர் நஞ்சை புஞ்சை... எஞ்சீனியருங்க... படிச்சதுன்னு பெருமை கிஞ்சித்தும் கிடையாது... ஜெமினி கணேஷனாட்டம் கிராப்பு... வேற என்ன வேணும்.. நம்ம சுமதிக்கு இத விட நல்ல மாப்ள அமெரிக்கா போனாலும் கிடைக்குமா.. எதுக்கும் சுமதிய ஒரே ஒரு வார்த்த கேட்டுடுவோம்... இன்னாம்மா சொல்றன்னா... பாவம் அந்தப் பொண்ணு... கிராப்பு நல்லாதான் இருக்குன்னு... இளிச்சு வைக்கும்.. ரெண்டுங்கெட்டான் வயசில... அப்புறம் என்ன... கொட்டிடுவாங்க.. மேளத்த... 

அப்புறம் தலையை நிமித்தப்டாது.. அகலிகை நிமிர்ந்து பார்த்துதான் கல்லானா... ஆனா இவங்க கல்லாவே ஆயிடுவாங்க அப்புறம்... சாபவிமோச்சனம் கொடுக்கறதுக்கு எந்த ராமரும் வர மாட்டாரு.. கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கில்ல மக்கா... 

விதவை ஆனா அப்டியே பொட்டு எல்லாம் அழிச்சுட்டு... மூஞ்சூறு மாதிரி சுத்தி வரணும்... அங்கன யாராவது சோக்கு கீக்கு சொன்னாச் சிரிச்சிடப்டாது... அப்புறம் அவங்களோட மூணு தலைமுறைப் பெண்டுகளுக்கு கல்யாணமே மறந்துடணும்... துப்புக்கெட்ட குடும்பம்ல.. 

என்னோட அம்மா இருந்தாங்க... அவங்க வாழ்ந்த வாழ்க்கைய என்னால ஒரு வாரம் கூட வாழ்ந்திருக்க முடியாது... ஆனா அவங்க வாழ்ந்தாங்க... அறுபத்தைஞ்சு மைனஸ் பதினெட்டு = நாப்பத்தியேழு வருஷம்.. நான் அப்பவே சொல்லிட்டேன்.. என்ன எழவு.. இப்டி வாழ்ந்து என்னத்த கிழிக்கப் போறீங்க... வாங்க தனிக்குடித்தனம் போயிடலாம்ன்னு... கேக்கலயே..  அடி உதைன்னு கிடைக்காத நாள் இருந்தா அன்னிக்குதான் அவங்க கொஞ்சம் மூச்சு விடுவாங்க... அவங்க புருஷன் ரொம்ப நல்லவருங்க... ஆனா அந்த பாழாப்போன குடிதான்... என்ன பண்ண... கட்டியாச்சு... 

அந்தாளு போனதும்... கழுத்தில ஒரு செயினுக்கு மேல இருந்தா.. அய்யய்யோ அக்கம் பக்கம் என்ன சொல்லும்ன்னு கழத்தி வச்சிடும்.. ஏன்மா... உங்க ஆசைக்கு நீங்க போட்டுக்கிறீங்க... மத்தவங்களப் பத்தி ஏன் கவலைப்படறீங்க..?! நாளைக்கு நீங்க மேல போறப்போ இவங்க எல்லாம் துணைக்கா வரப்போறாங்க?! அப்டின்னு கேட்டா... என் செல்லம்.. அப்டின்னு கொஞ்சும்.. ஆனா தன் விருப்பத்துக்கு எதுவும் பண்ண முடியல... அதுதான் கட்டுப்பாடு... கலாச்சாரம்... எல்லாம் இருக்கே... அதுவும் நல்ல்ல்ல்ல முறைல.. இப்போ போயிட்டாங்க... வேற எந்தச் சிறுக்கியும் அவ கூட சேர்ந்து போகலை... தனியாத்தான் போயிருக்கா..

யாரோ ஒருத்தரு சொல்லி இருந்தாரு... வளர்ப்பு சரியில்லாதவங்கதான் இப்டி தாலி கட்டாம சேர்ந்து வாழறது பத்தியெல்லாம் நினைப்பாங்க.. இருப்பாங்கன்னு... அப்டின்னா இப்டி ஒரு அம்மா வளர்த்த நான் எப்டி இருக்கணும்... என்னோட வளர்ப்பு சரியில்லன்னு சொன்னா... உங்க வழக்கப்படி உங்க குலசாமியே உங்க கண்ணைக் குத்தாதோ..?! 

(இருங்க... சாப்பாட்டுக்கு உழைக்கணும்ல... மீதிய அப்புறமா வச்சுக்கறேன்.. ஒரு பத்து பார்ட் தேறும் போலருக்கே..)

Tuesday, October 26, 2010

புன்னகை எதற்கு...

ஏழு வருடங்கள் முன் என் தலை மேல் கன்னம் பதித்து விம்மிய என் தாத்தன் இன்றில்லை. தேங்காய்ப்பூவுடன் மசித்த கீரைக்கு நான் ஏங்கிக் கொண்டிருந்த போது "அம்மன் கேரட்டும் லீக்ஸும் கூட்டு செய்தேன், உனக்கு இங்க உள்ள மரக்கறி எல்லாம் சரிப்பட்டு வருமோ தெரியாது" என்றபடி சோறு பிசைந்து ஊட்டிய என் அன்னையும் இல்லை. இவற்றில் எவற்றுக்கும் வழியற்று அவசரமாக நீங்கி விட்ட அப்பாவும், பாட்டியும் இல்லை. 


கதிர் இலங்கை செல்கிறேன் என்றபோது எனக்குப் பேச்சு வரவில்லை. அங்கே யார் இருக்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்கக் கூடப் பிடிக்காது மனம் அழுத்தியது. நேற்று கதிரின் இடுகையைப் படித்தபோது, ஏழு வருடங்கள் முன் யாழ்ப்பாணத்தின் விமானதளத்தை அடையும் வரை, உட்கார்ந்திருந்த வாகனம் பின்னோக்கி விரட்டிக் கொண்டிருந்த தென்னை மரங்களும், பூவரசும், ஏரிகளும், நாரைகளும், உப்புக் காற்றும் சேர்ந்து கண்ணுக்குள் இடை விடாது கரித்துக் கொண்டேயிருந்தது. 

பார்த்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு சிரிப்பானை விட்டு வந்தேன். ஏழு பக்கங்கள் எழுதியிருக்கிறேன், டெம்ப்ளேட் கூட இல்லை, ஒரு சிரிப்பான் மட்டுமா என்ற கேள்வியுடன் கதிர் வந்த போது, மீண்டும் கரித்தது. 

படித்து முடிக்க முடியவில்லை, பிறகு சொல்கிறேன் என்று விட்டுப் பேசாதிருந்தேன். "நானெல்லாம் அங்கே சென்று என்ன கிழித்து விட்டேன், இப்படி ஒரு இடுகை, அதற்கு நாலு பின்னூட்டம்.. ஒரு சக மனிதனா என்ன செய்ய முடிந்தது..".. என்று அங்கலாய்த்தார். "உணர்விருக்கே... அது போதும்" என்றேன். 

இன்று புதுவை சிவா என்ற பதிவர் என்னுடைய சிரிப்பானைக் குறிப்பிட்டு, அலட்சியப் புன்னகையென்று அடிக்கோடிட்டிருந்தார். 

உணர்வுகளைப் புரிந்து கொண்டிருப்பவர்களை அலட்சியப்படுத்துவதற்கு அவசியம் ஏதுமில்லை. அரசியல், ஆராய்ச்சி எல்லாம் தாண்டி சீமான், தாமரை போன்றவர்களின் உணர்வு பூர்வமான வார்த்தைகள் அளித்த ஆறுதலை யாரும் எப்பவும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.   

வேறு நாட்டிற்குச் செல்லும் சந்தர்ப்பம் இருந்தும், அடிபட்ட புறாக்களாகத் துடித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களைப் பார்த்து விட வேண்டுமென்று ஓடிச் சென்ற அந்த உணர்வுக்கு வந்தனம். 
_______________________________________

Thursday, October 21, 2010

அசி..

விடாதழைத்த 
வாசல் மணியை நிராகரித்தேன்.. 
சற்றுத் தாமதித்து 
சாளரம் தட்டியது 
செவி மடித்து
தலையணை அடைத்தேன் 
தட்டாது கதவுடைத்து 
உட்புகுந்தது.. 
அசைத்துப் பார்த்தது 
அச்சத்தில் அலறினேன்
யாரது..  
காற்றில் கை நீட்டித் துழாவினேன்
கொக்கின் நிறமேனும்  
சொப்பனத்தில் காணா நீ..  
என்னைத் தொடுவாயோ
எள்ளியதை எட்டி 
எளிதாகக் கிள்ளினேன் 
நகைப்பெதற்கு.. 
உனக்கும்தான் கண்ணில்லை..
குருடு குருடறியாதோ... 
தத் த்வம் அசி.. 

_____________________________

Sunday, October 10, 2010

ஜெயமோகன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரில்லையே... ஸோ...

மிகவும் தற்செயலாக ஜெயமோகன் அவர்களின் அயன் ராண்ட் பற்றிய கருத்துகளைப் படிக்க நேர்ந்தது. யாரோ, எதுவோ சொல்கிறார்கள் என்று தூக்கிப் போட முடியவில்லை. ஜெயமோகனின் மத்தகமும் (http://kalakalapriya.blogspot.com/2010/02/blog-post.html), பாலாவின் நான் கடவுளில் அவரின் ஏழாம் உலகமும் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வலைகள் இன்னமும் அதே அளவில் இருந்து கொண்டிருக்கையில், அயன் ராண்ட் பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துகள் அதற்கெதிரான சில அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. 

நான் படித்த அளவில் ஜெயமோகனிடம் அவரின் ஒரு வாசகர் அயன் ராண்டின் Fountain Head மற்றும் Atlas Shrugged பற்றிப் பேசச் சொல்கிறார். ஜெயமோகன் அவர்களும் உடனே பேச ஆரம்பிக்கிறார். http://www.jeyamohan.in/?p=3405 (இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் மட்டும் படித்தாராம்...)

அவர் அங்கே குறிப்பிட்ட இந்திய ஆட்சிப் பணி, வேளாண் பட்டதாரிகளின் திமிர் இது பற்றியெல்லாம் நான் எதுவும் சொல்ல முடியாது. எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. புரிந்த அளவில் சிலவற்றை ஒத்துக் கொள்ளலாம். பலவற்றை ஒத்துக் கொள்ள முடியவில்லை. 

அயன் ராண்டின் தத்துவங்களை நேசிப்பவர்களை அயன் ராண்டை வழிபடுபவர்கள் என்று எள்ளலுடன் குறிப்பிடுகிறார். நான் ஜெயமோகனையும் படிக்க ஆரம்பித்திருப்பதால் இவரையும் வழிபடுகிறேன் என்று இன்னும் யாராவது சொல்லிக் கொள்ளலாம். 

அங்கே பாரு சாமி, அங்கே பாரு ஆராதனை, அங்கே பாரு தூபம் என்று காட்டி வழிபட வைப்பது வேறு. சுயமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்போது, அது அயன் ராண்டோ, பாலகுமாரனோ, ஜெயமோகனோ அல்லது தெருவில் நடந்து போகும் ஒரு குப்புசாமியோ போகிற போக்கில் அதே கருத்துகளை அனாயாசமாகச் சொல்லிக் கடக்கும்போது, "அட" என்று தேங்குதலும், "ஆமாம்" என்று சிந்தனையுடன் நீங்குதலும் இயல்புதான்.


||நாட்டுப்பற்று பண்பாட்டுப்பற்று ஆகியவற்றில் இருந்து ஒருவன் மேலே செல்லக்கூடாதா? தன்னில் தான் நிறையும் ஒருவனாக ஆகக்கூடாதா? கண்டிப்பாக. அதன்பெயர்தான் முக்திநிலை என்பது. ஆனால் அது உலகியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் சென்று அடையவேண்டிய நிலை. உலகியலில் அதிகாரத்தையும் செல்வத்தையும் போகங்க¨ளையும் அடையும்பொருட்டு இவற்றைத் துறப்பதற்குப் பெயர் விடுதலை அல்ல. அது தன் அடையாளங்களையெல்லாம் இழந்து தன் இச்சைகளுக்கு மட்டுமே தன்னை ஒப்புக்கொடுக்கும் அடிமைச்செயல் மட்டுமே.||

இப்படி ஜெயமோகன் குறிப்பிடுவது மிக மிக ஆச்சரியத்தை வரவழைக்கிறது. முக்தி நிலை என்பது விடுதலை, போகங்களையும் அதிகாரத்தையும் அடையும் பொருட்டு நாட்டுப்பற்றையும், பண்பாட்டுப் பற்றையும் துறப்பது அடிமைச்செயல்?! இதை அயன் ராண்ட் படித்தால், அயன் ராண்டைச் சரிவரப் புரிந்து கொண்டவர்கள் படித்தால் தலையில் அடித்துக் கொள்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.  செத்துப்போவது விடுதலை, உயிருடன் இருக்க ஆசைப்படுவது அடிமைச் செயல் என்பது போலிருக்கிறது. 

அவர் சொன்ன முக்திநிலை பற்றிய விடயம் மிக நல்ல விடயம்தான். ஆனால் அதை எதற்கு அயன் ராண்ட் பற்றிய விவாதத்தில் வைக்கிறாரென்று புரியவில்லை. அயன் ராண்டைப் புரிந்து கொண்ட இலட்சணம் இவ்வளவுதானா?! அயன் ராண்ட் இவ்வளவுதானா?! தனி மனித சுதந்திரம்... தனிமனித முக்கியத்துவம்.. அதன் உன்னதம் பற்றி மிகத் தெளிவாக, மிடுக்காகச் சொன்ன ஒரு விடயத்தை ... அதிகாரம், போகம் என்பதில் அடக்குவது எந்த விதத்தில் நியாயமென்று தெரியவில்லை. 

||இந்த தத்துவ சிந்தனையுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு நிபந்தனைதான் உள்ளது– இப்படி நம்புபவராக நாம் மட்டுமே இந்த உலகில் இருக்க வேண்டும். இதை பிற அனைவருமே ஒப்புக்கொள்ளவும் வேண்டும்.  அது உலகத்தை ஆள நினைத்த ஹிட்லருக்கே சாத்தியப்படவில்லை. ஆகவே இந்த தத்துவ சிந்தனை மெல்லமெல்ல நம்மை சக மனிதர்களை ஒவ்வொரு கணமும் வென்றடக்க நினைப்பவராக ஆக்கும். அது முடியாதெனக் காணும்போது சக மனிதர்களை வெறுப்பவர்களாக ஆக்கும். ||

அயன் ராண்டின் தத்துவ சிந்தனை சக மனிதர்களை வென்றடக்க நினைக்கத் தூண்டும் என்கிறார். நல்ல வேளை இதைக் கேட்பதற்கு அயன் ராண்ட் உயிருடன் இல்லை.  அயன் ராண்டின் தத்துவ சிந்தனை தன்னைத் தானே உணரச் செய்யும், அதன் மூலம் சக மனிதனை உணரச் செய்யும், புரியச் செய்யும், சுய தெளிவை உண்டாக்கும். 

அவரின் எழுத்தில் சித்தரிக்கப்படும் நாயகன் மற்றும் நாயகி பிடிவாத குணமுள்ளவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேசும் மொழி மிக மிக மிடுக்குடையதாக இருக்கும். போலித்தனம் சற்றுமிருக்காது. இது இப்படித்தான், நான் இப்படித்தான், யாருக்காகவும், எதற்காகவும் என்னை மாற்றிக் கொள்ள முடியாது, என்பதாக இருக்கும். உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாது மிகவும் நிர்வாணமாக, அவர்களின் கருத்தை ஆணித்தரமாகச் சொல்பவர்களாக இருப்பார்கள்.  சாதாரணமாக நம் சமூகத்தினர் பார்வையில் திமிர் பிடித்தவர்கள் போன்ற தோற்றத்தை உருவாக்கும். 

ஜெயமோகனுக்கே இந்த மிடுக்கு இருப்பதாக நான் நினைத்ததுண்டு. மற்றவர்கள் முகம் சுழிக்கக் கூடிய ஒன்றை, என்னால் ரசிக்க முடியும். ஆனால்.... ம்ம்.. 

||தனிமனித விடுதலை சார்ந்த ஒரு முதிரா தத்துவத்தை முன்வைக்கும் நூல்கள் இவை. இவை நின்றுகொண்டிருக்கும் தளம் போலியானது, அல்லது மிகைப்படுத்தப்பட்டது. ·பௌண்டன்ஹெட் அந்த தளத்தைச் சேர்ந்த நாவலே.||

இதை இவர் எப்படிப் போலியானது என்று குறிப்பிடுகிறாரென்று தெரியவில்லை. உண்மையில் இவை சற்றும் போலியற்றவை. ”ஃபௌண்டெய்ன் ஹெட்” படிக்காதவர்கள் பாலச்சந்தரின் ”வறுமையின் நிறம் சிகப்பு” பார்த்திருந்தால், அதில் கமலஹாசன் எவ்வாறு அவரின் சுயத்திற்காகத் தன்னை விட்டுக் கொடுக்காது அவ்வளவு துன்பத்தையும் ஏற்றுக் கொண்டிருப்பாரோ, கிட்டத் தட்ட அதே மாதிரியான பாத்திரம் இந்தப் புத்தகத்தில் வரும் ரோர்க்கினுடைய பாத்திரம். 

||அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அயன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.
சுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர்  மீண்டும்  மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.||

இதில் என்ன சொல்ல வருகிறார், சுந்தரராமசாமி அயன் ராண்டின் புறவயவாதத்தைத் தவிர்த்து அறிவுஜீவிமையை ஏற்றுக் கொண்டது சரி அல்லது தவறு என்று சொல்கிறாரா? இல்லையென்றால் சுந்தரராமசாமியை வைத்துக் கொண்டு அயன் ராண்டை எடை போட முயற்சிக்கிறாரா?! எனக்குச் சற்றும் புரியவில்லை.. 

||அயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு  உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.
·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.  எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O'Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான  நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden]  என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து  முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது||

||அயன் ரான்ட் கடைசியில் மனநோய் நிலையத்தில் இருந்து இறந்தார். நாமும் நமக்குரிய சொந்த மனநோய்களை உருவாக்கிக் கொண்டிருப்போம். விசித்திரமான மூடஉலகில் வாழ்ந்துகொண்டிருப்போம்.||

ஜெயமோகன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்ட இடத்தில் முக்கியமான இடம் இது! தனக்குள் இருக்கும் அவரின் அடையாளத்தை இது உரக்கவே பறைசாற்றுவதாகவே நான் நினைக்கிறேன். 

இதைப் பார்த்தாலே தெரியும்! ஒரு சுய சிந்தனை கொண்ட "உத்தமமான" மனுஷி இவ்வளவு சிரமங்களுக்கப்பாலும், தன்னை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த மனுஷி. போலியாக எதையும் அணிந்து கொள்ளாது, செம்மறி ஆடுகள் போன்று வாழாது தானாகவே வாழ்ந்த ஒரு மனுஷி, இப்படிப்பட்ட ஒரு சமூகத்தில், ஜெயமோகன் அவர்கள் போன்று ஆழமாகச் சிந்திப்பது போல மிக மிக மேலோட்டமாகப் புரிந்து கொண்டு மட்டம் தட்டக் கூடிய உலகத்தில் தனித்து, தான் தானாகவே இருப்பதற்கு அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும். எத்தனை மன உறுதி இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு உலகத்தில், இப்படி ஒரு மனுஷிக்கு மன அழுத்தம் வராதிருந்தால்த்தான் ஆச்சரியம். 

உலகத்தில் புகழ்பெற்ற என்று பெயரிடப்பட்ட படிகளில் நின்று கொண்டிருப்பவர்களில் நிறையப் பேருக்கு மன அழுத்தம் வந்திருக்கிறது. ”நீட்சே”யை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். 

ஒரு வேளை ஜெயமோகன் அவர்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அவதிப்பட நேர்ந்தால், அவரின் வாசகர்கள் அவரை உதாசீனப் படுத்தாதிருக்கட்டும். (நான் உட்பட..)

நிற்க... 

அயன் ராண்டை விமர்சிப்பதற்கு, வேண்டுமென்றே கள்ள உறவு என்பது போன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதன் மூலம் இவர் சாதிக்க நினைப்பதென்ன?! அவரின் வாழ்க்கையை இவர் கொஞ்சம் வாழ்ந்து பார்க்கத்தான் முடியுமா?! கண் முன்னே சாட்சியாகிப் போன, டயானாவைக் கூட இவரால் இப்படி விமர்சிக்க முடியுமா?! 

இன்னொரு வாசகர் மிக நேர்மையாக ஜெயமோகனின் கூற்றை விமர்சிக்கிறார். அதை ஜெயமோகன் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஜீரணிக்க முடியவில்லை. அந்த வாசகர் ஆங்கிலத்தில் எழுதியதும், ஜெயமோகனுக்கு ஆங்கில அறிவு போதவில்லை, அயன் ராண்ட் என்ன சொல்கிறார் என்று சரிவரப் புரிந்து கொள்ளவில்லையென்று அந்த நபர் சொன்னது ஜெயமோகனுக்கு வசதியாகப் போயிற்று. ஆங்கிலம் என்பது ஒரு அறிவில்லை, இதைப் பற்றிக் கொண்டு எத்தனை காலத்துக்குத் தொங்கப் போகிறார்கள் என்று சீற்றத்துடன் கேட்டிருந்தார். ஆமாம் அவர் சொல்வதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஆங்கிலம் தெரிந்து கொண்டால் எல்லாம் தெரிந்து விடுமென்பதில்லை. ஆனால் அதைச் சொல்லி இந்த வாதத்தை, வெட்டி விவாதமென்று ஒதுக்கி அதிலிருந்து தப்பிப்பது விவேகமாகாது!!! 

||எழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ்.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது. ||

அதாவது இத்தனைக்கும் அவர் ஃபௌண்டெய்ன் ஹெட் நாவலை மட்டுமே படித்திருக்கிறாராம். அதற்கு மேல் அயன் ராண்ட் குப்பை என்பதுதான் இதன் சாரம். அதாவது நான் இப்போ ஜெயமோகனின் மத்தகத்தைப் படிக்காது, ஏழாம் உலகத்தைப் படிக்காது, இவரின் இப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்தால் மிகவும் எளிதாக, ஜெயமோகனைப் புரிந்து கொண்டேன், இவர் இவ்வளவுதான் என்று முத்திரை குத்தி ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்லிக் கொள்ளலாம். 

என்னைப் பொறுத்த வரைக்கும் இவர் ஃபௌண்டெய்ன் ஹெட்டையும், அயன் ராண்டையும் புரிந்து கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால்.. அயன் ராண்டைப் பின்பற்றினால் நாடு சுயநல நாடாகிவிடுமென்று இவர் பேசிக் கொண்டிருக்க மாட்டாரென்றே தோன்றுகிறது. 

யாரோ அயன் ராண்டைப் படித்த மாணவர்கள் சட்டம் அவர்களின் கைகளிலென்பது போல் சிகரட் பிடித்துக் கொண்டு போவதைக் கூட எதற்காகவோ குறிப்பிடுகிறார். மிகவும் நகைப்புக்குரிய சுட்டுதல் இது. தமிழ் சினிமா பார்த்து ஜனங்கள் கெட்டுப் போகிறார்கள் என்பதற்கு ஒப்பாக இதைச் சொல்கிறார். அயன் ராண்டைப் படித்துப் புரிந்து கொண்டவர்கள், கவனிக்க, புரிந்து கொண்டவர்கள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார்கள். 

அயன் ராண்ட் சுயநலம் பற்றிப் பேசுவது, தன்னார்வம் பற்றியது, சுய மரியாதை பற்றியது, சுயம் பற்றியது! முடிந்தால் படிக்கலாம்! இல்லையென்றால், படிக்கவில்லை எனக்குத் தெரியாது என்று சொல்லலாம். அது சொல்ல முடியவில்லை?! அதையெல்லாம் விட இப்பொழுது எல்லாரும் புதிதாக ஒரு விஷயம் சொல்கிறார்கள், நான் குறிப்பிட்ட ஒரு நாவலாசிரியரைப் படித்தால், அவர் கடந்து செல்ல வேண்டியவர் என்கிறார்கள், ஜெயமோகனின் வாசகரொருவரும் அயன் ராண்ட் பற்றி அப்படிச் சொல்கிறார்! ஏனென்று புரியவில்லை..! 

தேடுதல் இருப்பவர்கள் எங்கும் தேங்கிவிட மாட்டார்கள்...! முக்கியமாக அயன் ராண்ட்டைப் புரிந்தவர்கள், தங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் தேங்க மாட்டார்கள்..! 
_________________________________________________________

தொடர்புடைய சுட்டிகள்: 

(இவரின் சுஜாதா சம்மந்தமான கட்டுரைகள் பற்றிய சர்ச்சைகள் எழுந்த போது படிக்கலாமென்று போய்ப் படிக்க ஆரம்பித்து ஒரு விதமான அயர்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். இப்பொழுது அயன் ராண்ட் பற்றி இவரின் வாசகர்கள் கேட்ட அனைத்தையும் நான் படிக்கவில்லை, இவரின் அனைத்துப் பதில்களையும் கூடப் படிக்கவில்லை. சிலவற்றில் என்னுடைய கருத்தைப் பதியலாமென்று தோன்றியதால் எழுதிவிட்டேன். 

இதனாலேயே ஜெயமோகன் குப்பையென்று என்னால் ஒதுக்கி விட முடியாது. 

ம்ம்... அப்புறம் அந்தக் கட்டுரைல எல்லாம் சம்மந்தம் இருக்கோ இல்லையோ, நான் மெல்பேர்ன் போயிருந்தேன், நியூயார்க்கில் இருக்கிறேன், பாஸ்டன் கிளம்புகிறேன், ஹார்வார்ட் போயிருந்தேன்... என்றெல்லாம் வருகிறதே... என்னாச்சு ஜெ.?! எப்பவுமே இப்டித்தானா...?! 

சரி... இதைப் படிக்கிறவங்க உங்க கருத்தை எல்லாம் சொல்லுங்க, நான் வெனிஸ் போயிட்டு மூன்று நாட்கள் கழித்து வருகிறேன், அப்புறம் இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஸ்பெயினில் இருந்தேன்... அதுக்கு முன்னாடி... ஆ... அயன் ராண்ட் படித்து மாணவர்கள் கெட்டுப் போன மாதிரி.... ஜெயமோகன் படித்து நானும் இப்படி ஆகி விட்டேனே!!!!!!)

__________________________________________________________


Thursday, October 7, 2010

கொடுமை கொடுமைன்னு தியேட்டருக்கு போனா...

மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு மக்கா... புரட்சி செஞ்சு ரொம்ப ரொம்ப நாளாச்சு.... சரி இன்னைக்கு ஒண்ணுல ரெண்டு பார்த்துடுவோம்...

முதல்ல நிவிஸ் படிங்க மக்கா....  (நிவிஸ் அனுப்பிச்ச பாலா சாருக்கு நன்றி..)



போராட்டத்தில... எங்கள மிஞ்ச யாருமில்லடியோ...


நாம எப்டி எல்லாம் போராடுவோம்னு சாம்பிள் பாருங்க....
________________________

கையப் பரபரன்னு தேய்ச்சுக்கிட்டு யார் முடியப் பிடிக்கலாம்னு பார்த்தா மாட்டிக்கிச்சுய்யா ராம நாராயணன் சாரோட பிடரிப் பக்கம் இருக்கிற ஒரு கொத்து முடி.

அவரு “ஆடி வெள்ளி”ன்னு ஒரு படம் எடுத்தாராமே... அதில ஒரு நாகப்பாம்பு நடிச்சுதே... அதுக்குப் பல்லே இல்லையாம்... அது எப்டி பல்லே இல்லாத பாம்பை நடிக்க வைக்கலாம்..?! பாம்புக்கான தகுதியே அந்தப் பல்லிலதானேய்யா இருக்கு...  அந்தப் பாம்புக்கு என்ன பேருன்னு எனக்குத் தெரியல.. (எங்கைய்யா நான் படம் பார்த்தாதானே.. இந்த எளவெல்லாம் தெரியறதுக்கு... போராடவே நேரம் பத்தல..) பேரு.. நாகராணியா இருக்கலாம்..  ஒரு வாட்டி ஏதோ நடந்தது நடந்து போச்சு... அப்போ நாம மிளகுப் பொங்கல் கொஞ்சம் அதிகமா சாப்ட்டு அசந்து தூங்கிட்டோம்..  ஸோ போனாப் போறதுன்னு விட்டுடலாம்... ஆனா இனிமே “போடி கள்ளி”ன்னு ஏதாவது படம் கிடம் எடுக்கிறப்போ... நாகராணி அம்மாவ நடிகையாப் போட்டா உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்...  நல்லா கோல்கேட் அட்-ல வர்ற மாதிரி.. பளிச்சுன்னு பல்லுள்ள பாம்பா பார்த்துப் போடனும்.... சும்மா பொட்டுன்னு ஒரு போடு போட்டா பொட்டுன்னு போற மாதிரி இருக்கனும்... ம்க்கும்.. எங்க இருக்கிறது... சாவனும்யா... பாம்புன்னா படம் எடுத்தா மட்டும் போதுமாய்யா..... நீங்களும்தான் எடுக்கறீங்க படம்... அதுக்காக நீங்க பாம்பா நடிச்சிட முடியுமா.... படமாய்யா எடுக்கிறீங்க படம்...

__________________________
அப்புறம்... சங்கர் சார ஒரு புடி புடிக்கலாம்...

என்னையா டைரக்டரு நீரு... சப்பான் நாட்ல தடுக்கி விழுந்தா ரோபோன்னு இருக்கிறப்போ.... வேலை மெனக்கெட்டு போயும் போயும் ஒரு மனுஷனுக்கு மேக்-அப் போட்டு ரோபோன்னு சொல்லி இருக்கீரே... யாரை அய்யா ஏமாத்துறீங்க.... நம்ம மூஞ்சில கேனன்னு எழுதி ஒட்டி இருக்கா என்ன... அட வீணாப் போனவைங்களே.... ஒரு ரோபோ வாங்க ரசினிக்குக் கொடுத்த சம்பளத்தில பாதி கூட வேணாம்யா... அறிவு வேணாம்... புடிங்கைய்யா கொடிய... தூக்குங்கைய்யா ரசினிய...

___________________________
நெக்ஸ்ட் யாருப்பா...

யோவ் மணி... எங்க ஒளியறீரு... முன்னாடி வாரும்யா.... அறிவிருக்காய்யா உமக்கு... இல்ல தெரியாம கேக்கறேன் அறிவிருக்காய்யா.... ஐசுவர்யா ராய் யாருய்யா..?! அபிசேக்கு பொஞ்சாதிதானே.... என்னா தெனாவெட்டுய்யா உமக்கு... தமிழ்ப் படத்தில அந்தம்மாவ எவனோ பிருத்வியோ... பருத்துவியோ அவனுக்கு பொண்டாட்டின்னு நடிக்க வச்சீரு...  அத விட மோசமா.... ஹிந்திப் படத்தில... அபிசேக்க ராவணனாக்கி... விக்ரம ஐசுவரியாக்கு ஆம்படையான் ஆக்கினீரே... மன்னிக்கவே முடியாதுய்யா.... விக்ரம தூக்கறமோ இல்லயோ... உம்மைத் தூக்கறோம்...

___________________________
அப்புறம்.... ஆ... எல்லாரும் வரிசை கட்டி வர்றாய்ங்களே.... என்னங்கையா இது... எங்க பார்த்தாலும் இதே எழவாப் போச்சு... யோ... எல்லாரும் நல்லாக் கேட்டுக்கிடுங்க... இனிமே... ஒரு படத்தில ஒருத்தன் நடிச்சா வேற படத்தில நடிக்கவே ப்டாது.... அந்தப் படத்தில அவன் அவனாவேதான் நடிக்கனும்... அவனுக்கு பொண்டாட்டி இருந்தா... அவதான் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கனும்... அவன் சொந்தக் கதையதான் கதையாவே போடனும்...

சுமங்கலிய விதவையா... விதவைய சுமங்கலியா.... நல்லவன கெட்டவனா.. கெட்டவன நல்லவனா... பொறுக்கிய புறம்போக்கா... புறம்போக்க பொறுக்கியா... பல்லிய ஆமையா... ஆமைய பல்லியா... எல்லாம் நடிக்க வச்சீங்க கையக் கால உடைச்சி அடுப்பில வச்சிடுவோம்....

அப்புறம் மனுசப்பசங்க எல்லாம் சாமி வேடம் போட்டா கொன்னே போட்ருவோம்... ராமரு வேஷம் ராமர்தான் போடனும்.... லெட்சுமணன் வேடம் லெட்சுமணந்தேன் போடனும்... யேசு யேசுவாதான் இருக்கனும்...

நாம எல்லாம் இளிச்சவாயிங்களா என்ன.... கொக்கமக்கா... இருங்கடி வந்து பேசிக்கறேன்...
___________________________

Sunday, October 3, 2010

இந்த மரத்திலென்பார்... அந்தக் குளத்திலென்பார்...



புலம்பிட்டே வந்து... இடைல நிறுத்திட்டேன்... என்ன எழுதுவது என்று எனக்கே தெரியவில்லை... எழுத ஆரம்பித்தாலே தொண்டை அடைத்துக் கொள்கிறது... எங்கேயோ தொலைந்துவிட்டது போன்ற உணர்வில் திகைப்பு மட்டுமே தோன்றுகிறது.... 

ஆனால்.... மக்கள் புலம்பாதிருக்க விட மாட்டேன் என்கிறார்கள்... 

__________________________________________________________________

ஆக்கபூர்வமா ஒன்னும் செய்ய மாட்டேங்கிறாங்க... புதிய பாதை போடக் கடப்பாறையும்.... கல்லும் மண்ணும்... உருக்கி வச்ச தாரும்...  கோடு போட லெட்சுமணனும் கூட ரெடி.... நிலத்தைத்தான் காணோம்... இப்போ பாதைய காத்தில போடுறதா...ஆகாசத்தில போடுறதான்னு புரியல... நீரில கூடப் போடலாம்... ம்ம்... நிலம்னா ஈஸி...

சரி என்ன பண்ணலாம்... நிலத்தைக் கண்டு புடிப்போம்... எப்டி.... எப்டின்னா... சிலோன சைனால இருந்து கொண்டு வந்து வச்சாங்களா... இந்தியாவில இருந்து துண்டு போட்டு வெட்டி விட்டாங்களா... சைனால இருந்து வந்தா அதில தமிழர்கள் இருந்தாங்களா.... சிங்களவர்கள் இருந்தாங்களா... இம்போர்ட்டட் ஃப்ரம் சைனான்னு எங்கயாவது கல்வெட்டுப் பொறிச்சு வச்சிருக்காங்களா... இங்க இருந்து ஆரம்பிக்கணும்... 

அப்புறம்... நிலம் எப்டி காணாமப் போச்சு.... எங்க போச்சு... திரும்ப சைனாக்கே எடுத்துக் கொண்டு போனாங்களா... இல்ல அமெரிக்காக்கு எக்ஸ்போர்ட் பண்ணிட்டாங்களா.... எப்டிக் கண்டுபுடிக்கிறது... ஈழமக்கள் எல்லாரும் தூங்குறாங்க... அவங்கள எழுப்ப முடியாது... நாமதான் தேடனும்... 

அந்த மண்ணில பிரபாகரன் அப்டின்னு ஒரு ஆள் இருந்தாரு... அவரு எங்க... இருக்காரா இல்லையா... அது கிடக்கட்டு... அப்போ.. அவர் யார் கிட்ட எங்க உக்காந்து காப்பி சாப்பிட்டாரு... என்ன பேசினாருன்னு பார்ப்போம்... எதனால கருணாவுக்கும்... கட்டையில போறவனுக்கும்... கருமாந்திரம் புடிச்சது... ஏன்னா அதும் பிரபாகரன் தப்புதான்... பிரபாகரன் கருணா கழுத்தில நாய்ச்சங்கிலி கட்டி வச்சிருந்திருக்கோணும்.... பண்ணலை... அதனாலதான் இப்டி ஆச்சு... 

ராஜபக்ஸேயைப் பார்ப்போம்... அவன் எங்க இருந்து வந்தான்... நேரா சனிக்கிரகத்தில இருந்து குதிச்சானா... இல்ல ஒரிசாவில இருந்து வந்த சிங்கத்தோட வாரிசா... இல்ல டைனோசர் காலத்திலயே உருவாகிட்டாங்களா... 

இப்டியே பேசிக்கிட்டே இருப்போம்...  குழப்ப வேணாம்... 

அம்மா செத்து ஒரு வருஷமாச்சு.... ஒரு பாட்டம் உக்காந்து புலம்புவோம்னு புலம்பினா.... ஜனங்க உலக அளவுக்குக் குழம்பிப் போறாங்க.... நாளைக்கு பிரபா பிறந்த நாளுக்கு இன்னொரு மூச்செடுத்து அழுதா... கோர்ட் கேஸுன்னு போனாலும் போவாங்க... அதெல்லாம் பண்ணப்டாது.... பிரபாகரன எங்க ஒளிச்சு வச்சிருக்காங்கன்னு தேட டார்ச் லைட் எடுத்துக்கிட்டு கிளம்பலாம்லன்னு தாலி அறுப்பாங்க... அவரின் ஒன்று விட்ட அக்கா... தங்க மகனே என்று புலம்பினால்.... பிரபாவைத் தங்க மகன் என்று சொல்வதன் மூலம்... மறைமுகமாக அவரைத் தாக்குவதாக அவருக்கே காது குத்தலாம்... 

என்ன எழவு.... எல்லாரும் எல்லாம் புடுங்கலாம்.... அங்க பாரு... இந்தோனேசியால ஒரு செம்மறி ஆடு அதோட குட்டிய சிங்கமா வளர்த்திருக்கு.... பிறந்த உடனயே ஆட்டுக் குட்டியத் தூக்கிக் குரங்குக் கூட்டத்தில கொடுத்துட்டுது... அதனால அது சிங்கமா வளர்ந்திருக்கு.... மத்தவங்க எல்லாம் ஆடாட்டம் ஆட்டை வளர்த்தா இந்த நாடு உருப்படுமா... அப்டின்னு புரட்சி செய்யலாம்... 

உன் கிட்ட ஒரு குட்டி இருக்கே... அத குரங்குக் கூட்டத்தில ஒப்படைக்கலயேன்னு கேட்டா.... அது என் கங்காருக்குட்டின்னு மடிக்குள்ள இடுக்கிக்கலாம்....

நிதர்சனம்... அப்டின்னு ஒரு எளவு இருக்கா இல்லையா.....

ஈழத்தில பிறந்தவங்க எல்லாருக்கும் பிரம்மை புடிச்சிருக்குன்னு சொன்னா... யாராவது இல்லைன்னு சொல்லப்போறியளா.... நான் சொல்றேன்... நான் இன்னும் அந்தப் பயங்கரக் கனவில இருந்து மீளலை.... எப்போல்லாம் பிரபாகரன நினைக்கறேனோ.... கதவைத் தாழ்ப்பா போட்டு விசும்பி விசும்பி அழுவேன்... எப்போ ஒரு குழந்தை தட்டை ஏந்திக்கிட்டு சோத்துக்கு வரிசைல நிக்கிற காட்சி வருதோ.... அப்பவும் அழுவேன்... தாய் மடில குழந்தையும்... குழந்தை மடில தாயும் மாறி மாறிச் செத்துக் கிடக்கிற காட்சி வர்றப்போ அழுவேன்.... 

ஆமாம்... நானும் தினமும் கஞ்சி குடிக்கிறேன்... உடுக்கிற உடுப்பு தோய்ச்சு, உலர்த்தி, அயர்ன் பண்ணித்தான் போட்டுக்கிறேன்... ராவணன் படம் பார்த்து விமர்சனம் எழுதுறேன்... வேற எதுவும் பிடுங்கலைதான்... 

இப்போதான் இடி விழுந்து எல்லாம் பிரம்மை பிடிச்சு இருக்காங்க... அவங்கள எல்லாம் அடி அடின்னு அடிச்சு... ஓடிப்போய் இடி எப்டி வந்திச்சுன்னு பாரு... ஆகாசத்தில இருந்து வந்திச்சா... நிலத்தில இருந்து வந்திச்சா... இனிமே இடி விழாம இருக்கணும்னா என்ன செய்யணும்னு பாரு.... ஆகாசத்த புரட்டிப் போடலாமான்னு பாரு.... நிலத்த ஆகாசத்தில வைக்கலாமான்னு பாரு.... 

என்ன பேசிக்கிட்டிருக்காங்க மக்கள்...

அயலூரானுக்கு ஆத்தோரம் பயம்... உள்ளூரானுக்கு மரத்தடில பயம்... 

___________________________________

அம்மா... என்னம்மா சொல்றாங்க... என்னம்மா நடக்குது அங்க...?! தெரியலடாம்மா.... இங்க ரூபவாஹினில காட்டிக்கொண்டே இருக்கிறாங்கள்... அந்தப் பிள்ளைய சாக்கொண்டு போட்டாங்களாம்.... படம் படமா போட்டுக் காட்டுறாங்கள்... இங்க எல்லாம் வெடிச்சுக் கொண்டாடுறாங்கள்.... எங்களயும் கொண்டாடச் சொல்லி வற்புறுத்துறாங்கள்.... 

என்னம்மா கதை மாதிரிச் சொல்றீங்க... இங்கயும் அப்டித்தான் பேசிக்கிறாங்க... அது எப்டி அவ்ளோ ஈஸியா சொல்றீங்க... 

இல்லடாம்மா... இங்க இந்த ஒரு சானல்தான் வருது... அந்தப் பிள்ளை எங்களுக்காகப் பட்ட பாடு எவ்வளவு.... இங்க எல்லாருக்கும் கவலைதாண்டா.... ஆனா நாங்கள் என்னதான் செய்ய முடியும்... வாய் விட்டு அழக்கூட முடியாதுடா..  ஏதேதோ சொல்லுறாங்கள்... எதை நம்பறது எதை விடுறது ஒண்டும் விளங்கேல்ல.... நீங்கள் ஏதாவது சொன்னாத்தான் எங்களுக்கு நியூஸே தெரியுது... இல்லையெண்டா இவங்கள் சொல்லுறதக் கேட்டுக் கொண்டு... இங்க கிடந்து எமன் எப்ப வருவான் எண்டு பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்... வேற என்னத்தையடா சொல்றது.... ஃபோன்ல எதுவும் பேசவும் பயமா இருக்குடாம்மா.... வீட்டில ஒரு குமர்ப்பிள்ளை வேற இருக்குது... 

ஹூம்... சரி வேற சொல்லுங்கோ.... 

________________________________

ஹாய்... தேனு... ஹவ் ஆர் யு டூயிங்.... ஹவ் இஸ் நியூஸிலாண்ட்....?! 

ஓக்கேடி.... இட்ஸ் கோயிங்... 

ஜஃப்னா போயிருந்தால்ல... அங்க எப்டி இருக்குன்னு கேக்கதான் ஃபோன் பண்ணேன்... 

ம்ம்... சனங்கள் எல்லாம் நோர்மலா இருக்கினம்.. அதுகளுக்கு வெடிச்சத்தம் இல்லாம இருக்கிறதே பெரிய விஷயம் மாதிரி.... நிறைய கல்ச்சரல் சேஞ்ச் இருக்கு... 

வவுனியா காம்ப்புக்குப் பேயிருந்தோம்... நமக்கு பிரச்சனை டைம்ல அங்க இருந்து மெடிகல் ஹெல்ப் கூடப் பண்ண முடியலயேன்னு மனசுக்கு ரொம்பக் கஷ்டமாப் போச்சு.... காம்ப்பில இருக்கிறவங்க கிட்டக் கேட்டா... அவங்கள் இப்ப இருக்கிற நிலமைல... அமைதிதான் தேவை அவங்களுக்கு.... ஒண்டும் வேண்டாம்... நிம்மதியா இருக்க விட்டா போதுமெண்டு அழுகை.... வெளிநாட்டில தமிழ்ச் சனங்கள் குரல் கொடுத்தா அவங்களுக்குதான் அடி விழுது... நாங்கள் பேசாம இருந்தாலே அவங்களுக்குச் செய்யுற நன்மையா அமையும்ன்னு நினைக்கிறாங்க.... ரொம்பப் பாதிக்கப்பட்டு இருக்காங்க.. 

ம்ம்... புரியுது... பிரபா..?!... நீ என்ன நினைக்கிற... 

எனக்குத் தெரியேல்ல.... அந்தாள எல்லாரும் சேர்ந்து ஏமாத்திப் போட்டாங்கள்... அவர் சரியா ஏமாந்துட்டார் எண்டுதான் நினைக்கிறேன்... அந்தாளத் தனிமைப்படுத்தி தீவாக்கிட்டாங்க... அவருக்கு நிறைய விஷயம் தெரியாமலே போச்சு... எல்லாரயும் நம்பி ஏமாந்துட்டார்... 

தொண்டைகள் அடைத்துக் கொள்ள... மௌனம் மொழியாகிறது... 

______________________

வணக்கம் ப்ரியாக்கா எப்டி இருக்கீங்க... இண்டைக்கு மே 17...  யாழ்ப்பாணத்தில கூட்டுப் பிரார்த்தனைன்னு போயிருந்தோம்... ஆர்மிக்காரங்கள் குவிஞ்சு நிக்கிறாங்கள்... அட்வைஸ் வேற... அதாவது ஒழுங்கா இருங்கோ இல்லைன்னா சுட்டுத் தள்ளிப்போடுவம் எண்டு.... 

_____________________

என்னையா செய்யச் சொல்றீங்க...?!!!!!!!! யார் என்ன செய்ய முடியும்...??!!!!
_____________________



||ஐக்கியநாடுகள் சபையின் முன்றலில் கவனயீர்ப்பு: சுவிஸ் ஈழத் தமிழரவை

அழைப்பு

மரணத்தை வெல்வோம்.

என்றென்றும் தணியாத விடுதலைத் தாகத்துடன் வாழ்ந்துவரும் எமது பேரன்பிற்கும்
பெருமதிப்பிற்கும் உரிய சுவிஸ் வாழ் தமிழ்த் தேசிய இன உறவுகள் அனைவருக்கும்
சுவிஸ் ஈழத் தமிழரவையின் விடுதலை வணக்கங்கள்.

மிகப்பெரும் நெருப்பாற்றைக் கடந்து மானுடமே வெட்கித் தலைகுனியும் விதத்தில்
சிங்கள இனவெறி அரசு நடாத்திய இனஅழிப்பின் அழியாத வடுக்களுடன் எமது விடுதலைக்கான
பயணம் களத்திலும் புலத்திலும் நகர்கிறது. சிங்கள இனவெறி அரசு தமிழர்களுக்கு
யூலையை கறுப்பாகவும் மேயை சிவப்பாகவும் மாற்றியுள்ளது.

இத்தகைய மிகப்பெரும் தமிழின அழிப்பின் ஒர்பகுதியை நடாத்திவிட்டு தமிழர்களின்
அறுபது வருடங்களுக்கும் மேலான சுதந்திரத்திற்கான போராட்டத்தை பிழையென உலக
அரங்கில் சித்தரித்து அடக்கி ஒடுக்கி தமிழ் இனத்தை வேரறுப்பதற்கு பாடுபட்டு
வருகிறது.

இப்படி தமிழர்கள் சிங்கள இனவெறி அரசால் வெந்திருக்க இம்முறை நடாத்தப்படும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கான கூட்டத்தொடரில் சிறீலங்கா இனவெறி
அரசின் இன அழிப்பு  மற்றும் போர்க்குற்றம்  சார்ந்த எவ்வித விடயமும்
விவாதிக்கப் படாமல் திரு பான் கீ மூன் தலைமையிலான நிர்வாகம் வேண்டுமென்றே
மௌனித்து பக்கசார்பாக நடந்துகொள்வதுடன் உலகெங்கும் வாழும் தமிழினத்தை அவமானப்
படுத்தியுள்ளது.

இத் திட்டமிட்ட சதி நாடகத்தை உலகறியச் செய்வது தமிழர்களாகிய எமது வரலாற்றுக்
கடமை ஆகிறது.

எமது அன்பிற்கினிய மக்களே! சுவிஸ் ஈழத் தமிழரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர்
அமைப்பினர் இணைந்து எதிர்வரும் ஆம்... ஆம்... ஆம் திகதிகளில் ஜெனிவா ஐநா
முற்றத்தில் பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை கண்டன ஒன்றுகூடலும் கவன
ஈர்ப்புப் போராட்டமும் நடாத்தவுள்ளோம்.

அனைத்து தமிழ்மக்களையும் பொது அமைப்புக்களையும் உணர்வோடு கலந்து கொள்ளுமாறு
சுவிஸ் ஈழத் தமிழரவையினராகிய நாங்கள் உரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.\\\
_____________________________

இதைத்தான்... இருபது வருடங்களுக்கு மேலாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள்....  இதைத்தான் செய்ய முடியும்... 

அல்லது.... நாலஞ்சு பேரைக் கூப்பிட்டு... இலங்கையில் தமிழரின் இன்றைய நிலவரம் என்று சொல்லி உட்கார்ந்து... பாருடியாத்த.... இப்டி ஆகிப்போச்சு.... அங்க அவ இப்டி சொல்றா... இவன் அப்டி சொல்றான்... என்ன கொடுமை... நாம யாருக்கு என்ன செஞ்சோம்ன்னு ஒப்பாரி வைக்கலாம்... 

இப்படி எல்லாம் செய்யறத... சிலர் பதிவிட்டு.... புரட்சி பண்ணலாம்....ம்ம்ம்ம்.......!!!! லண்டனில் பேரணி... சுவிற்சர்லாந்தில் பேரணி...!!!! இப்டி பதிவு போட்டுட்டா... ரொம்பப் புரட்சி செய்து விட்டதாக அர்த்தம்....!!!!!! செய்யுங்க.... நாம பொத்திக்கிட்டு இருக்கோம்.... 

அதே மாதிரி... 

தமிழன கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து அழ விடுங்க....கொஞ்சம் ஓய்வா உட்கார்ந்து அழட்டும்.... 

பனையால விழுந்தவன மாடேறி மிதிச்சதாம்னு... உங்க எழவுக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா... ?!

(இப்டிச் சொன்னாலே.... நான் கருணா கம்பனில காரியதரிசி வேலை பார்க்க போயிட்டேன்னு அர்த்தம்ம்ம்ம்....)

_________________________________________________