header photo

Tuesday, June 29, 2010

சுஹ.. ஐஸ்வர்ய.. விக்ரமாயணம்.. ராவணவதாரம் ... ஹூரே ராவணா...

டைட்டில்ல A MANI RATNAM FILM அப்டின்னு விதம் விதமான ஃபாண்ட் சைஸ்ல பளிச்சுன்னு போட்டுக் காண்பிச்சாலும்... நெசம்மாவா? மணி ஃபில்ம்மா?.. அந்தப் ஃபாண்ட் பார்த்தே பாழாப்போன டவுட்டு வந்து தொலைக்குது... ஹ்ம்ம்.. எல்லாம் பழக்கதோஷம்.. (ஆமா.. நான் ஆன்லைன்ல பார்த்ததால அப்டித் தெரியுதா..? இல்ல க்ராஃபிக் டிஸைனரோட ஆர்வக் கோளாறா..? மணிக்கு அது புடிச்சிருந்திச்சா..?!)

ச்ச்செரி.. அது கெடக்கு... ஆனா எனக்குப் படம் புடிச்சுதுங்க... ஏன் அப்டின்னு அசட்டுப்பிசட்டுன்னு கேக்கப்டாது.. நம்ம ஊர்ல பொங்கல் சாப்டறப்போ.. சில நேரத்தில திகட்டினாலும்.. அதில இருக்கிற முந்திரிப்பருப்பும்.. திராட்சை வத்தலும் பொறுக்கிச் சாப்டுறதுக்காகவே... மூணு வேளையும் பொங்கல்ப் பானையச் சுத்தி வர்ற சென்மமுங்க நானு.. 

ஹிஹி... நான் பெண்ணீயவியாதி இல்லைன்னாலும்... இங்க முதல்ல ஐஸுவ சொல்லியே ஆவணும்.. படம் ஆரம்பிக்கறப்போ.. சிறக விரிக்கிற அந்தக் கழுக பார்த்து மிரண்டுக்கிட்டே.. அதை க்யூட்டா பார்க்கறதில ஆரம்பிக்குது ஐஸுவோட அழகான கலக்கல்... 

"ஆம்பள கூடப் போராட வக்கில்ல".. என்று பயத்தை மறைத்துச் சீறும் போதும்..  "ஜயமுண்டு பயமில்லை மனமே.. ".. என்று பாரதியார் பாடலை அழுத்தி உச்சரிக்கும் போதும்.. கறுப்புத் துணியால்க் கட்டப்பட்ட கண்களை மீறி.. உதடுகளும்.. கன்னங்களும் வெளிப்படுத்தும் நடிப்பு... பப்பப்பப்பா... 

துப்பாக்கியைப் பார்த்து அசையும் நயனங்களின் துல்லியமான உணர்ச்சி வெளிப்பாடு.. "என்னைக் கொல்றதுக்கு நீ யாரு?"-லிருக்கும் ஆதங்கம்..  கடைசியாக.. விழுந்து கொண்டிருந்த விக்ரமை நோக்கி நீளும் கைவிரல்களின் பிடிவாதம்.. இயலாமை.. கைவிரல்கள்.. கண்ணிமை முடிகள்... எல்லாமே நடிக்கின்றன... காட்டுச்சிறுக்கி... மிகப் பொருத்தம்.. 

பக்பக்பக்.... டண்டண்டண்டண்... டண்டனக்கா.. டண்டனக்கா.. சுடுசுடுசுடு... விடுவிடுவிடு... போன்ற மேனரிஸம்.. மிகையாகத் தோன்றுவதற்கு... சுஹாசினியைப் பொறுப்பாக்கினால்... விக்ரம் கனகச்சிதம்... "ய்யேய்.. முட்டாப்பய மவளே" என்று பதைத்துப் போவதும்... "பதிவுற்ற குலசக்தி சரணுண்டு"  என்று நிறுத்திப் "பகையில்லை" என்று தொடர்வதிலிருக்கும் உச்சரிப்பிலிருக்கும் அழகும்.. "நீங்க கண்ணைத் திறந்த உடன என் உசிரு என் கிட்டத் திரும்பி வந்திருக்கக் கூடாது" என்று அந்த முரட்டு உருவத்தினூடு மென்மையாக அங்கலாய்ப்பதும்.. "பொறாமையா இருக்கு சாமி.. அப்டியே அடி வயிறு எரியுது..." என்று குரல் தழைத்து உருகுவதும்.. "இந்தப் பொறாமை இப்போ உள்ள புகுந்து உங்க எல்லாரையும் விட என்னை உசரமாக்கிடிச்சு".. என்று குரலிலேயே அந்த உசரத்தைக் காண்பிப்பதும்.. "குருவம்மோய்.. குருவம்மோய்".. என்று சீண்டுவதும்.. ஃபன்டாஸ்ட்டிக்... 

ப்ருத்வி... பேபி ஃபேஸ் வச்சுக்கிட்டே.. இப்டி ஒரு குரூரம் வெளிப்படுத்த முடியுமென்று காண்பித்ததுக்கு சபாஷ்.. கை வெட்டுப்பட்டு வலியில் துடித்துக் கொண்டிருந்தவன் கையை நிமிண்டியபடி பேசும் ஒரு காட்சி போதும்.. யப்பா... ஆனா... இங்கயும் வசனமா.. இயக்கமா... என்ன கோளாறோ... கட்டிவைத்திருக்கும் ஒருவன் தொண்டை வறண்டு போக விளக்கம் சொல்லுவானாம்.. இவரு மெதுவா கேட்டுக்கிட்டே அடி அடியா எடுத்து வச்சு வருவாராம்.. அப்புறம் திடீருன்னு ஆயிரம் கிலோமீட்டர் ஓடி வந்த மாதிரி இளைச்சுக்கிட்டே.. "அவங்கள பாத்தீங்களா? எப்டி இருந்தாங்க?" என்று பதைபதைப்பாராம்.. டூ மச்.. செயற்கைத்தனம்... 

கார்த்திக்.. அடுத்த காமடி பீஸ்... வால் வைக்கல... சஞ்சீவி மலையைக் கைல கொடுத்து.. தூக்கச் சொல்லலை... மத்தபடி நாந்தேன் அனுமாரு அப்டின்னு காண்பிக்கறதுக்காக அவரு பறந்து பறந்து கிடைச்சதில எல்லாம் தொங்குவதும்.. கிரிகிரிகிரி உட்டாலங்கடி கிரிகிரிம்பதும்... எரிச்சல்..

"ஆட்ட வெட்டிச் சூப்பு வைக்கச் சொல்லுதீய.. நெஞ்செலும்பு சூப்பு வைக்கேன்".. "சோக்கடிச்சா சிரிக்கறதில்ல.. துப்பாக்கி காட்டினா பயப்டறதில்ல... என்ன வாழ்க்கைடா சாமி.." பிரபு க்யூட்... 

பிரியாமணி தைரியமா வந்து.. "மய்யிரு.. மாட்டிட்டேன்... ஏன் பேசப்டாதோ" .. என்று எகிறி.. "எல்லாம் போச்சு.." .. பரிதாபமா செத்துப் போறா... ரஞ்சிதா பரிதாபமா இருக்கா... ம்ம்.. 

அழகான லொகேஷன்.. அருமையான காட்சி அமைப்பு... ஒளிப்பதிவு.. அந்தச் சிலை.. மலை... அருவி... பள்ளத்தாக்கு... பாலம்.. காடு.. கழுகு... ஐஸ்வர்யா.. ஸ்க்ரீன் முழுக்க வியாபித்திருக்கும் விக்ரமின் பராக்கிரம முதுகு... எல்லாம் இருந்தும்... ஏதோ நெருடல்... திருப்தியாக இல்லை... என்னவோ மிஸ்ஸிங்.. .

என்னது? அப்டின்னு யோசிச்சா..ம்ம்... சுஹாசினி மேடம்ம்.. அவ்வ்வ்... படத்தைத் தூக்கி படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் நின்ற இடத்தில் நிறுத்த வேண்டிய கதை வசனம்... மொத்தத்தையும் அறுந்த பாலத்துடன் விழுந்த ப்ருத்வி நிலமைக்கு ஆளாக்கி விடுகிறது... "என் முடிவு உன் கைல இல்லை.." என்று சொல்லிவிட்டு ஆற்றில் விழுந்திருந்தா நச்-ன்னு இருந்திருக்குமா இல்லையா.. கூடவே... "நான் சாகமாட்டேன்..".. அப்டின்னும் எதுக்கு சொல்லணும்கிறேன்.. பாலத்தில தொங்குறப்போ... விக்ரம் ஐஸ் பத்தி நறுக்குன்னு ஒரு வார்த்தை நல்லதா சொன்னா போதாதா... வேற என்ன... "தங்கம்.."... வேற என்ன.. "வைரம்..".. அலுப்பா இருக்கு.. விக்ரம் சிரிக்க சிரிக்கப் பேசுவாரு அப்டிங்கிறாங்க.. அது எப்டின்னு அவரு நம்பியார் மாதிரி மிமிக்ரி செஞ்சு காண்பிக்கிறாரு... என்னாத்தச் சொல்ல.. 

ம்ம்... எப்டியோ.. ஆரம்பத்திலயே சொன்ன மாதிரி எனக்குப் படம் புடிச்சதுங்க.. ஆனா மணிரத்னம் சார்.. இவ்ளோ துணிச்சலா ஒரு கதைய சொல்றீங்க... ராவணன் பக்கத்தில இருந்து சொல்றீங்க... ரயில்ல சங்கிலிய புடிச்சு இழுத்து நிறுத்துற மாதிரி... நச்-ன்னு... முடிச்சிருக்கலாமின்னு எனக்கு ஒரே ஆதங்கமாத்தேன் இருக்கு... 

ஆனாலும்... ஹூரே ராவணா...~

__________________________________________________________________

Saturday, June 26, 2010

உயிர்மனக்குரல்..

சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் விகசித்து
அடங்கியமர்ந்து வேடிக்கை காட்டும் தருணம்.. 
உடலின் விளிம்புவரையெட்டியெட்டித் தொட்டுத்
தட்டியலையும் கண்ணாமூச்சியாட்டம் தாண்டும்
சொல்லாத எல்லை "செல்லாது"  வாவெனக் கூறி
மெல்லச் செல்லமாய்க் காதுபிடித்திழுத்திழுத்தமர்த்தும்
கருவிருப்பின் உயிரீர்ப்பு விசையின் திசைகாட்டும்
அருவுருவப் பலகையின் மேலொலிக்கும் அசரீரி
சுகமெவ்வகை சகி சகித்துச் சுகி சாகார சமயத்தில் 
சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி... 

________________________________________________________________

திருநடமிடும் வாத்தியக் குயில்கள் மாதிரி ஒன்று வேணும் ப்ரியா, உரிமையுடன் கேட்கும் கயலுக்காக.. முயற்சி செய்தது.. 

________________________________________________________________

சில வருடங்களுக்கு முன் எனக்குத் தெரிந்த ஒரு ஆசானுக்கு எதிர்பாராத விதமாக cerebral haemorrhage ஏற்பட்டுச் சில வாரங்கள் கோமா நிலையிலிருந்து, முழுவதுமாக மீண்டு வந்து, சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். வாழ்க்கை என்பது தூங்கி விழிப்பது போன்றது, நீங்கள் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் "வாழுங்கள்" என்று சொன்ன அந்தக் குரலும்,, அதன் தொனியும் மறக்கக் கூடியதன்று.. 

||சாகார சமயத்தில் சாகரித்திருக்கும் வினாடி வாழ்வெனும் நொடி..|| சாகாரம் - துயிலெழுதல் , சாகரம் - விழித்திருத்தல்.. 

அன்று வீட்டிற்கு வந்த போது வாகனம் தவிர்த்து நடந்து வந்து கொண்டிருந்தேன்.. 

||சுகமெவ்வகை சகி சுரக்கும் சிரிப்பினிடையனுப்பும் 
செய்தி சொடுக்கும் நொடியில் பிடியிந்தா நலமெனப்
புன்னகைத்தனுப்பும் மின்னல்விரைவஞ்சல் தாங்கிய
ஆனந்தக்கனம் தாங்காது விசும்பும் மனம் || 

நமக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கும்.. குசல விசாரிப்புகள்.. சில சமயங்களில் அப்பட்டமாகக் கவனிக்கலாம்... அல்லது :o) ஏதோ கோளாறு காரணமாக... எனக்கு அது நிகழ்ந்து கொண்டிருக்கலாம்.. அதை வைத்து உங்களை இவ்வாறு இம்சை செய்யலாம்.. ம்ம்.. 
________________________________________________________________

Thursday, June 24, 2010

காதல்

சைக்கிளை முன்னிறுத்தி

கதை கதைத்தான்
கடலை வறுத்தான்

வாக்குக் கொடுத்தான்
சைக்கிளை விற்றான்

சுண்டல் வாங்கினான்
பல்லுக்குத்தி அழுக்கெடுத்தான்

ஜோஸ்யம் பார்த்தான்
ஜாதி சரியில்லை என்றான்

கடன்காரனுக்கு சாபம் கொடுத்தான்
அப்பனை மிரட்டினான்

வாளி வாளியாய்க் குடித்தான்
வாந்தி வாந்தியாய் எடுத்தான்

ஹாண்டா வேணும் என்றான்
ரொக்கம் வாங்கிக் குவித்தான்

கடைசியாக..
அடுப்பங்கரை இடுக்கில்
கம்பியூட்டர் வைத்து
கவிதை எழுதிக் கொண்டிருந்தான்
காதலுக்குக் கண்ணில்லையென்று..
 ___________________________________________
கதிர் காத்திருப்பது இங்கே..
___________________________________________

Tuesday, June 22, 2010

தொட்டாச்சிணுங்கி..

சிணுங்குமெனத் தெரிந்திராத 
சீண்டலிலில்லை நஞ்சம்
மலருமெனத் தொடரும் 
மழலைத் தீண்டலுக்கும்
தெரிவதில்லை மூலம் 

நிலத்திற் புரளும் சிறு
நாலுமணிப் பூவிடம்
தலை சாய்த்து 
நலம் கேட்கும்
நந்தியாவட்டையின் 
நிட்களங்கம் 
அறிவீரா..  

ஏறி நின்று
கீறி விடுதலல்ல 
செறி நட்பு
சிணுங்கியது 
மலரும்வரை 
புலனடக்கிப் 
புலர்ந்திருப்பது
நட்பூ... 

_______________________________

Monday, June 21, 2010

கம்(னாட்)டியும்... கிழிஞ்ச சீலயும்...

"அறுக்க மாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாளாம்..".. வீட்ல உக்காந்தமா... வேளா வேளைக்கு சோத்த தின்னமா.. பப்பரப்பேன்னு கால வீசிப்போட்டு வீட்டில நாட்டாம பாத்தமான்னு இருக்கிறத விட்டு... சட்டைய போட்டுக்கிட்டு கிளம்பி வந்துடறது "ஸாக்கர்" மேட்ச்ல விலாங்கு புடிக்க போறேன்னு... எதுக்கு காம்டி உனக்கு இந்த வேலை.. செம காமெடி பண்ணிட்ட போ... 

பயங்கர அரிப்புன்னு பார்த்த உடனே தெரிஞ்சது... ஆனா அரிப்புக்கு சொறியறப்போ எல்லாம் மஞ்சள் கார்டு... சோப்பு கார்டுன்னு எடுத்து நீட்டினா பாரு... உன்னைய சொறிஞ்சே கொல்லணும்...



"யானை நலிஞ்சா எறும்பு ஏறி மிதிக்குமாம்"... சுவிஸ் ஆளுங்களுக்கு வேற யாராவது கடாஃபி... ஹனிபல் மாதிரி வந்து அடிச்சாலும்.. இவங்களே மன்னிப்பு கேட்டுக்குவாங்க... சமாதானம் விரும்பிங்கன்னு கொஞ்சம் மிதப்பாத்தான் போச்சு... மவனே உனக்கு ஆப்பு வைக்க மாட்டுவாங்க யாராவது.. இப்போ சாப்ட்ட உப்புக்கு அப்போ தண்ணி குடிச்சுக்க... 

மேட்ச்ல காதில விழுந்த வார்த்தைல இதுதான் ஜாஸ்தி..."ஓ மை... மை... த மேன் இன் யெல்லோ... ஓ மை... மை... த ஒன்லி ப்ராப்ளம் இஸ் த மேன் இன்  யெல்லோ..." யெஸ் ஹி வாஸ் த ஒன்லி ப்ராப்ளம்....

10 Schweizer verlieren gegen 12 «Chilenen»

Die Schweizer Nati verliert ihr zweites Gruppenspiel gegen Chile mit 0:1, wobei Schiedsrichter Al Ghamdi aus Saudiarabien eine Hauptrolle spielte.


அதாவது... பத்து சுவிஸ் காரங்களுக்கு எதிரா பன்னண்டு சீலேக்காரங்க விளையாடி ஒரு (ஆஃப் சைட் - இது நான் சொல்றது) கோல் அடிச்சு ஜெயிச்சுப்புட்டாய்ங்களாம்.. அதில மெயின் ரோல் ப்ளே பண்ணது... சவுதி நாட்டு நடுவர் கம்னாட்டியாம் ... நடுவர் என்ற சொல்லுக்கு வேற ஏதாவது அர்த்தம் இருக்குதான்னு பார்க்கணும்... அந்தாளு "அகராதி"ல...

த்த்த்த்...

+"*%&(/)=)(/%ç*"*%ç&/)=)(&/%ç*ç%&/()=?=)/&ç*ç&/)=?ப%ç*%&()=/%ç"*ç%&/()=?=)(/&%ç*ç%&/&%ç%&%ç%/())=*ç%&/()&%ç%&/&%&................................................................................................................................................................................................................................................

http://news.bbc.co.uk/sport2/hi/football/world_cup_2010/matches/match_31/default.stm

Friday, June 18, 2010

இலக்கண மீறல்கள்...

இறந்தகாலப் பெயரடை

கருமை நிறமும்
கூரிய அறிவும்
காக்கையின் அடையாளம்

இறந்தகால வினை முற்று

கற்பித்தது...
ஒற்றுமையின் இலக்கணம்


செய்வினை | செயற்பாட்டு வினை

எடுப்பார் கைப்பிள்ளை
எதிரிக்கும் ஒற்றராகும்
ஏதிலியாகிக் குற்றுயிராகும்

நிகழ்கால வினையெச்சம்

காக்கையின் தொட்டிலில்
கூவிக் கொண்டிருக்கின்றன
குயிலின் குழந்தைகள்

கூடுகள் தேடிக் கானகமெல்லாம்..
கரைந்து கரைந்தே
கரைந்து கொண்டிருக்கின்றன
கருவிழந்த காக்கைகள்

எதிர்கால ஏவல்வினை

கட்டுங்கள் வெட்டப்படும்
கரையுங்கள் கரைக்கப்படும்
கூவுங்கள் கொடுக்கப்படும்
___________________________________

Wednesday, June 16, 2010

OLE OLE-OLE OLE SCHWIITZER NATI-SCHWIITZER NATI SCHWIITZER OLE!!!!!




soccer fever...

Tuesday, June 15, 2010

எளவாப் போச்சு...

ஏண்டீ சூடாமணி..
நாம்பாட்டுக்கு பொலம்பினா
கண்ணாத்தா
நல்லாத்தா ஒப்பாரி வைக்கற நீ
எளவு வீட்டில பாடுறதுக்கு
ஆளு எடுக்குறாகளாம்
கும்பல்ல கோயிந்தான்னு
கூடிக்கூடி மாரடிக்கிறாவ
நீயும் ஒரு பாட்டம் குரலெடுத்து அளு
தாயீ போ புண்ணியமா போவும்னாக..
என்னடா இது எளவாப் போச்சேன்னு
நானும் போய்ப் புலம்பித் தள்ளிப்புட்டேன்..
எளவாத்தான் போச்சு போ
கொட்டின வார்த்தைய அள்ள முடியுமா
ஏண்டீ சூடாமணி.. மாரியாத்தா.. மகமாயீ..
உன்னைய சும்மா விட மாட்டேண்டீ...

Monday, June 14, 2010

விளம்பர இடைவேளையைத் தொடர்ந்து... தலைப்புச் செய்திகள்..

சமாதானம் 

வேலைப்பளு அதிகம்... வார இறுதியிலும் ஏதேதோ நிகழ்வுகள். நான் அவ்வப்போது படிக்கும் சில இடுகைகளைக் கூடப் படிக்க முடியவில்லை. நண்பர்கள் புரிந்து கொள்வார்களென்று எனக்குத் தெரியும், ஆனாலும் மன்னிக்க வேண்டுகிறேன். (செயல் முக்கியம் அமைச்சரே)

விளம்பரம் / அறிக்கை 

நேற்று இஸ்லாமியக் காங்கிரஸ் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். காலையிலிருந்து மாலை வரை நேரம் போனதே தெரியவில்லை. மிகவும் சுவாரஸ்யமான அனுபவம். அதிற் கலந்து கொண்ட இஸ்லாமிய நண்பர்கள் "இஸ்லாம்" என்ற மார்க்கத்தில் பிரச்சனை இல்லை. பெரும்பாலும், நாடு மற்றும் அவரவர் சமுதாயம் சார்ந்தே பிரச்சனைகள் தோன்றுகின்றன. எங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறோம். சிலபல உவப்பில்லாத விடயங்களையும், மனிதர்களையும் வைத்து அனைத்து இஸ்லாமியர்களையும் எடை போடாதீர்கள். எதுவானாலும், கேளுங்கள், பேசுங்கள், விவாதியுங்கள், திறந்த மனதுடன் பங்களிக்கத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை, தீர்வின் பகுதியாக இருக்கவே விரும்புகிறோம் என்று சொன்னது மனதைத் தொட்டது. 


சுவிற்சர்லாந்தில் மசூதிக் கோபுரங்கள் கட்டுவதற்கு எதிராக ஒரு வாக்கெடுப்பு நடாத்தி, கோபுரங்கள் எழுப்புவதற்குத் தடை விதித்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து அவ்வப்போது இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் மதம் துறந்த மற்றவர்களின் மனிதத்தையும் மெச்சுவதற்கு வார்த்தைகளில்லை. இவ்வாறான ஒன்று கூடல்களில் பங்கேற்பவர்கள், பாதிரியார்களாகவும், கிறிஸ்தவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தாலும், எம்மதமும் சம்மதமே, மனிதமே முக்கியமென்ற கொள்கையுடையவர்களாக இருப்பது குறிப்பிடத் தக்கது. 

பேராசிரியர் Dr. Andreas Kley பேசும்போது, சுவிற்சர்லாந்தில் மசூதி கட்டுவது பற்றிய சர்ச்சையில், "சவுதி அரேபியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு தேவாலயத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? போன்ற கேள்விகள் முன் வைக்கப் படுவதாகவும், அது அவரவர் நாட்டின் எண்ணக் கருத்துகள், பார்வைகளில் சார்ந்திருக்கிறதென்றும், நம்மைப் பொறுத்த வரையில் நம் நாட்டிலிருக்கும் சிறுபான்மை இஸ்லாமியர்களை ஆதரிப்பதும், பாதுகாப்பதும் நம் கடமை" என்றும் விளம்பியதில் மனிதம் பிரகாசித்தது.



பங்கேற்றவர்கள் அனைவரும் அவரவர் தனித்தன்மையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல, எனினும், என்னை மிக மிகக் கவர்ந்தவர்களில் கிறிஸ்தவப் பெண் துறவி Ingrid Grave மிக முக்கியமானவர். கிறிஸ்தவப் பெண் துறவியாக இருந்த போதிலும், கிறிஸ்தவ மதத்திலுள்ள குறைபாடுகளை அவர் எடுத்துக்காட்டிய விதமும், சில உடைகளின் தோற்றத்திற்கான காரணங்களும், அது இப்பொழுது எவ்வாறு நடைமுறைச் சாத்தியமற்றிருக்கின்றதெனவும் கூறியது "வாவ்" சொல்ல வைத்தது. பெண் துறவிக்கான அந்த உடையில் சாதாரண மனிதர்களுடன் இயல்பாக நெருங்கிப் பேசுவது சிரமமாக இருக்கிறதென்றும், அதற்காக அவசியமில்லாத வேளைகளில் சாதாரண உடையுடனே வலம்வருகிறேன் எனவும், பல மனிதர்களின் மனத்தை நெருங்கியிருக்கிறேன் எனவும் அவர் சொன்ன போது அவரை இறுகக் கட்டிக் கொள்ள வேண்டும் போலெழுந்த உணர்ச்சியைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நல்ல வேளையாக நாங்கள் பங்கெடுத்த வொர்க்‌ஷாப்பில் அவர்களும் இருந்ததாலும், திரும்பி வரும்போது ரயில் பயணத்தில் பேச வாய்ப்புக் கிடைத்ததாலும் முடிந்த அளவு கையைப் பற்றிக் கொண்டு சிலாகிக்க முடிந்தது. 


இன்னும் நிறைய எழுத வேண்டுமென்ற ஆசைதான், ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அபாயங்கள் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளி. 


சூனியம் 

கவுஜையிலிருந்து தப்பித்தோமென்று சொல்லிச் சீண்டிச் சீண்டிச் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் நண்பர்களுக்காக... எப்பவோ கிறுக்கிய கவிதையின் ஒரு பகுதியை... இங்கே சமர்ப்பிக்கிறேன்.. 

இதயக்குகையின் 
உள்வெளிச்சுவர் தெறித்து 
விழுந்த இடர்ப்பந்து 
அழுந்திய தொண்டைக்குழி 
விழுங்க விழுங்க 
உருண்டெழுந்து 
கருவிழி பின் சென்று 
மீளும் கோளம்
இடறியிடறி 
அடிவயிறு வரை 
சென்று மீண்டும் 
இதய அண்மையில் 
வெடித்துப் பரவும் 
வலி...

கண்டனம்

ராஜசேகர் ரேஞ்சுக்கு "நீங்க திருந்தவே மாட்டீங்கடா".. "நாசமாப் போங்கடா".. "நீ லூசு, உங்கப்பன் லூசு, உன் தாத்தன் லூசு" என்ற தொனியில் எங்களைக் கண்டபடி திட்டி, இப்போதைக்கு எழுதுவதை நிறுத்தியிருப்பதாக அறிவித்த (அல்லது சஞ்சய் அங்கிள் பாணியில் லீவு லெட்டர் கொடுத்த) அதுசரிக்கு என் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். 

அஞ்சலி

திவாகர் அண்ணாவுக்கு ஆத்மார்த்தமான அஞ்சலிகள். பிரபா அண்ணாவுக்கு - நாமல்லாம் இருக்கோம்ணா. 

____________________________________________________________________________________
வாசித்தது - லக்கலக்கலக்க... 

Wednesday, June 9, 2010

எது நடந்ததோ... அது...

வினவு விடுத்த அறிக்கை.. அதனைத் தொடர்ந்து நான் அவர்களுக்கு அனுப்பிய மடல்.. கீழே.. ________________________________________________________________________________________
||Author: வினவு
Comment:
அறிவிப்பு:

'சர்ச்சைக்குரிய' பெயர்களையும், அது தொடர்பான பின்னூட்டங்களையும் கட்டுரையிலிருந்து நீக்குகிறோம். இது தொடர்பாக மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் கருத்து தெரிவித்த நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி!||

வணக்கம்..! காலம் கடந்ததெனினும்.. ஏதோ ஒரு காரணத்தால் இந்த நிலைப்பாட்டிற்கு வந்துள்ளீர்கள். நன்றி என்று சொல்ல எனக்கு இன்னும் சங்கடமாகவே இருக்கின்றது. இதை அழித்து விட்டதாலேயே... எல்லாம் சரியாகி விடுவதில்லை. ஆனாலும்.. போகட்டும்.. அந்த இடுகையில் என் பெயர் சொல்லி இட்ட பின்னூட்டங்கள் அனைத்தையும்... (மனமிருந்தால் சம்மந்தமில்லாது குறிப்பிடப்பட்ட மற்ற நபர்களின் பெயர்களையும் கூட.. ) நீக்கி விடும்படி கோருகிறேன் (என்னுடைய பின்னூட்டம் உட்பட).

மேலும், ஏழரை என்னும் நபருக்கு ஏதோ ஒரு விதத்தில் என் நன்றியைப் பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன். உள்ளுணர்வியம்புவதிது.

மறைகிறேன்.. வினவுவில் இனித் தோன்றமாட்டேனென்ற நம்பிக்கையுடன்...!

____________________________________________________________________________
இந்தக் கோரிக்கையை ஏற்றுப் பின்னூட்டங்களையும் நீக்கி இருக்கிறார்கள். நல்ல விஷயம். 
இனிமேல் இப்படியான அனர்த்தங்கள் நிகழாதிருக்கட்டும்! 
____________________________________________________________________________
தோள் கொடுத்த நட்புகளுக்கு நன்றி சொல்லி அந்நியப்படுத்த இஷ்டமில்லை... அது பற்றிச் சண்டை போடனும்னா எனக்கு மடலனுப்பவும்... 
____________________________________________________________________________
அனைத்துப் பின்னூட்டங்களுக்கும் பதிலளிக்கச் சற்றுக் கால அவகாசம் தேவை... பொறுத்தருள்வீராக.. 
_____________________________________________________________________________
இது தவிர்ந்த... ஏனைய விளக்கங்கள் எதுவும் தேவைப்படின்.. கொடுக்க முயற்சிக்கிறேன்.. 
______________________________________________________________________________

Monday, June 7, 2010

தினவெடுத்த வினவும்.. வஞ்சினமும்.. அதுகள் தோழர்'காள்' செஞ்சினமும்..



பொல்லுக் கொடுத்துப் பல்லை உடைப்பித்து அதிற் கசியும் உதிரத்தின் ருசி கண்ட பேய்கள்.. மற்றவரைச் சுரண்டிச் சுரண்டி அவரின் திசுக்களின் இரத்தத்தை யாருமறியாது நக்கும் நாககரிகம் கற்ற தோழர்காளிவர்.. இரத்தச் சோகை கண்டு அந்த உயிர் மடிந்தால்.. மெதுவாக உதறி விட்டு.. வேறு திசு தேடிச்செல்லும் தினவு... அதுவே இறந்து மடியும் தருணத்தில்.. என் உதிரம் உறிஞ்சிய ஊளைநரி நீயெனக் கத்த எத்தனித்தால் போதும்... பாய்ந்து கழுத்தில் பல் பொருத்தி உறிஞ்சி எடுத்து விடும்..  எஞ்சிய உதிரத்துடன் அதன் உயிரையும்.. 


அதன் பிற்பாடு அவை எழுப்பும் ஊளைகளில் அந்தக் கொலைகள் மறைக்கப்பட்டுப்... புதுத் திசுக்கள் சுரண்டப்படும்.. 

இந்துப் பெண்பதிவர் என்ற ஊளையில் ஆரம்பித்த இரத்தக் கறை படிந்த அந்த அகோர நகங்கள் என்னை நோக்கி நீண்ட போது.. சற்றல்ல.. காத தூரம் விலகிப் போனேன்.. 

பார்ப்பனிய ஆதிக்கம் என்று தொடரும் ஊளையில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது சுரண்டல்.. அதன் அகோரக் கரங்கள் பரவியிருக்கும் திசைகள் தெரியாது... ஐயோ என்றதானதொரு பரிதாபத்தைக் என் குருதிச் சிந்தலின் வழியே கசிய விட்டிருக்கிறேன்.. 

விலகிப் போ என்கின்றன சில ஆதரவுக் கரங்கள்... இரும்பாகு என்கின்றன சில... கண்ணை மூடிக்கொண்டு உறங்கி விடு அல்லது உறங்குவது போன்றிரு என்கின்றன சில... 

யோசித்தேன்.. அடக்குமுறை.. அடக்குமுறை.. அடக்குமுறை.. இதன் மடியிலேயே பிறந்து.. இதன் மடியிலேயே புரண்டு அனுபவித்தது கொஞ்சம் நஞ்சமா.. வீதிகளில் பிச்சைக் காரர்கள் போன்று... காப்பாற்று... காப்பாற்று... என் இரத்த சொந்தங்களைக் காப்பாற்று.. என்று ஓலமிட்டு ஓய்ந்த போது.. அங்கு சிந்தி விட்டிருந்த இரத்தத்தை வைத்து ஐந்தாறு கிரகங்களைக் கழுவி விடலாம். 

இனியும் என்ன இருக்கிறது இழப்பதற்கு? என் உயிர் தங்கப் போகும் காலங்களின் சராசரி அளவு எனக்குத் தெரியும். அது வரைக்கும் இந்த ஊளைகளுக்குப் பயந்து.. பயந்தே சாவதுதான் விதியா? 

"இந்துப்பெண்" என்றதும்... "மரணமொக்கை" என்றதும்.. "வேசி" என்ற சொல்லுக்கு ஈடாகுமா என்பது இந்த ஊளைகளின் வலுவான வாதம். 

ஆனால்.. அதன் தொடராக.. இந்த ஊளைகளைக் கேட்டுவிட்டு வந்து.. குருட்டுத்தனமாகக் குதறிச்சென்ற ஓநாய்களைக் கேட்பது யார்? அது வினவுவாகக் கூட இருக்கலாம். அல்லது தினவெடுத்து எழுதியனுப்பும் தோழர் குழாமாகவும் இருக்கலாம். ஊகங்கள் வினவின் தினவுக்கு மட்டுமே எழுதி வைக்கப்பட்ட சொத்தன்றே.  பாவம் அவர்களின் பின்னூட்டத்தின் பின் ஒளிந்திருக்கும் வேட்கை... அகோரத்தின் உச்சம். 

என்னை வக்கிரத்துடன் சொறிய வந்த ஒரு நரியின் ஊளையில்... சில திங்களுக்கு முன் இறந்த என் தாயாரும் அகப்பட்ட கொடுமையை என்னால் சகிக்க முடியவில்லை. தொண்டைக்கும், கண்களுக்குமிடையில் சில இழுபறிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்... எனக்குத் தெரியும்.. என் அன்னை அந்த நரியை மன்னித்து விட்டிருப்பார்... 

எந்த ஒரு காரணமுமன்றி என் பெயரை இழுத்ததன் பின்னால்... எனக்கு வந்த ஓரிரு பின்னூட்டங்களின் வக்கிரங்களுக்கு... அதன் பின்னால் விளைந்த வெட்டித் தம்பட்டங்களின் எதிர்வினைகளுக்கு... யார் பொறுப்பு..? என் பெயரை எழுதி வைத்து விட்டு... அதன்பால் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிக்காது... பார்ப்பனத் திமிர் என்றெழுதும்... தினவெடுத்த திமிருக்கு என்ன பெயர்? சகோதரம்... மாமன்.. மச்சான்... உறவுகளின் பெயரில் கண்டனமெழுப்புவோர்... மிக மிகக் கவனமாக என் பெயர் தவிர்த்து விட்டு... மற்றவை தவிர்க்கலாமென்று சொல்வதன் பின்னணியிலிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் நியாயமான காரணம் என்ன? 

அனுதாபம் தேடிக் கொள்வதாகவும்.. கள்ள மௌனம் சாதிப்பதாகவும்.. சந்திக்குச் சந்தி சாதித்தவர்களின் ஃப்ளெக்ஸிப்ளிட்டி.. இப்பொழுது எந்த நிலையில் உள்ளது? 

இந்துவாகப் பிறந்தது தவிர.. நான் ஜாதியற்றவள்... ஜாதி.. மதங்களுக்கு அப்பாற்பட்டவள்... என்பதைப் புரிந்து கொண்டால்.. இவ்வளவு நாள் எழுதினவையெல்லாம் சப்பையென்றாகி விடுமே... அதைத் தினவுக்கூட்டம் செய்ய முடியுமா... ஒருக்காலும் முடியாது... யாருடைய இரத்தத்தையோ உறிஞ்சிச் சாப்பிட்டு வயிறு வளர்க்கும் இவை சுரண்டுவதற்கு ஏதுவாக... நான் அதன் அழுக்கேறிய கோர நகங்களைச் சீவி விடுகிறேனென்று அறிந்தே இதை எழுதுகிறேன்... 

ஏனென்றால்.. என்னிடம் எஞ்சியிருப்பது என் உயிர் மட்டுமே... சதைப் பிண்டங்களாகக் குவிக்கப்பட்ட என் இரத்த சொந்தங்கள் போன்று.. எனது இரத்தச் சோகையின் கடைசிக் கட்டத்தில் நான் வாய் திறக்கச் சந்தர்ப்பம் இல்லாமலே போகலாம்... அதனால் இப்பொழுதே எழுதி வைத்து விடுகிறேன்..  

இன்னும் எத்தனை விளம்பரங்கள் வேண்டுமானாலும் வரலாம்.. எத்தனை கோர நகங்கள் வேண்டுமானாலும் நீளலாம்... கீழே உள்ள பட்டியல் தவிர்ந்த இன்னும் நூறாயிரம் இணைப்புகள் உருவாகலாம்.. என் பணி அல்லது கடமை நிமித்தம் இங்கு இது வரைக்கும் உள்ளது போன்ற தேக்கங்கள் வரலாம்... ஆனால்... புறமுதுகிட மாட்டேன். 

சில (அ)சிங்கங்கள் தங்கள் முகங்களை மறைப்பதற்கென்றே... என்னைப் போன்றவர்களின் குருதியை வாரி அவற்றின் முகங்களில் பூசிக் கொள்வதால் ஆங்காங்கு வடியும் அவற்றின் சீழ்களை மூடி விடலாமென்ற சின்னத்தனம்... அந்தச் சீழ்களின் துர்நாற்றத்தில் தெரிந்துவிடாதா? 

கேளும் தோழர்காள்... அதற்கு இதுவல்ல வழி..! சீழ்வடியுமிடங்களை வெண்பஞ்சு வைத்துத் துடைத்து.. மருந்திட... மேலும் பல வழிகளிருக்கின்றன... அதை நானும் கூடச் செய்ய முடியும்.. என் திசுக்களில் இரத்தம் உறிஞ்சப்படும் பொழுதும் கூட..! 






இன்னும் எத்தனை எத்தனை விளம்பரங்களோ... அறிந்தவர் தெரிந்தவர்... அவற்றையும் கொடுத்து உதவுங்கள்.. 

Tuesday, June 1, 2010

என் கையாலாகாத்தனமும்... ஜாதியற்ற நிலமையும்..

//என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே... ஏன் தெரியுமா... உங்களால அவ்ளோதான்யா சிந்திக்க முடியும்... மேல முடியாது...//

இதுக்கப்புறமும்... ஏதேதோ ஜாதி பெயர் சொல்லி ஏதோ ஒரு காரணத்தால் என்னை வன்மம் தீர்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு... நான் பதில் சொல்ல வேண்டுமா? என்னுடைய ஜாதி என்னவென்று தெரிய வேண்டுமா..? அதுக்காகவா..? பார்ப்பனர் என்றால்... பார்ப்பனத் திமிர் எனலாம். பார்ப்பனர் அல்லாதவரெனில்... பார்ப்பனருக்குக் குடை பிடிப்பவள் எனலாம்... இரண்டும் வசதிதானே. 

சரி... என்னுடைய அம்மம்மா ஒரு ஜாதி... என்னுடைய அம்மப்பா வேறு ஒரு ஜாதி... ஆதலால் என்னுடைய அம்மாவின் ஜாதி என்னவென்று எனக்குத் தெரியாது... என்னுடைய அப்பாவின் ஜாதி வேறு... ஆதலால் எனக்கு நான் என்ன ஜாதி என்று தெரியாது...! 

பதிவுலகில்... இவன் என்ன ஜாதி... இவள் என்ன ஜாதி என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதன்பின் பின்னூட்டமிடும்... "ஜாதிவெறி".. மற்றும் ஜாதிவியாதி பீடித்த மரமண்டைகளுக்கு என்னால் சொல்ல முடிவது... என்னை ஜாதிவியாதி பீடிக்காதிருக்க மேற் சொன்னது மட்டும் காரணமன்று. நான் வாழும் நாடு, சூழல், இத்யாதி இத்யாதியுடன்... எனக்குள் இருக்கும் நானேயான நானும் ஒரு காரணம். 

ஜாதியை இழுத்து சந்தி சிரிக்க வைக்கும் பதிவுகளிலும்... பின்னூட்டங்களிலும்... ஜாதிகள் அடையாளம் காட்டப்படுகின்றன. அல்லது... நான் இந்த ஜாதி என்று பெருமையாகப் பீற்றிக்கொள்ளும் இடங்களிலும், நான் இந்த ஜாதி ஆனால் நான் என்னை விடக் குறைவான ஜாதியை மதிக்கிறேன் போன்ற மறைமுகமான பீற்றல்களிலும்... குமட்டல்தான் மிச்சம். 

____________________________________________________________________________

யாரென்றே தெரியாத... இங்கு கண்டேயிராத யார் யாரோ வந்து.. கண்டனமளிக்காத எனக்குக் கண்டனம் அளித்ததை விவரிக்க வார்த்தையன்று. 

இப்பவும்... மற்றவர்கள் இவ்வளவு தூரம் சொல்கிறார்கள் என்பதற்காகக் கண்டனம் அளிக்கலாம் என்றுதான் நினைத்தேன்... என் உள்மனதில் ஒரே சங்கடம்... என் மனதுக்கு உவப்பில்லாத எதையும் நான் செய்வதாக இல்லை. திட்டுவதானாலும் சரி.. பாராட்டுவதானாலும் சரி... எனக்குச் சரி என்று தோன்றுவதையே செய்கிறேன்.   வார்த்தைக்கும்... பூச்சுக்கும்... எனக்கும் ஒரு பின்னூட்டமும்... ஃபாலோயரும் கிடைப்பார் என்ற நம்பிக்கையிலும்... எங்கும் ஜால்ரா அடித்துப் பழக்கமில்லை. 

இதில்... எனக்குத் தெரியாத அந்தப் பெண்களுக்கோ... நர்சிம்முக்கோ சம்மந்தம் இல்லை. இது முழுக்க முழுக்க என் மனம் சம்மந்தப்பட்டது. 

________________________________________________________________________________
தன்னிலை விளக்கம்:

பாஸ்டர்ட் என்ற வார்த்தையின் முழு அர்த்தம் தெரிந்திருந்த போதிலும்... இந்த வார்த்தை சம்மந்தப்பட்ட அந்த ஆணை விட.. எதுவுமறியாத அவன் தாயை அதிகம் கேவலப்படுத்தும் என்ற ஒரே காரணத்தினாலேயே தவிர்த்து வந்திருக்கிறேன்... எனினும்... நிறைய இடங்களில் நான் இந்த வார்த்தையை மனதார உச்சரித்திருக்கிறேன். அது மட்டுமில்லை... என்னிடம் மிக மிக அன்பு செலுத்திய ஒரு உள்ளத்திடம்... பொரிந்து கொட்டியிருக்கிறேன். 

எதன் நிமித்தம் என்று கேட்டால்... ஆதங்கம்.. helplessness... மற்றும் கோபம்.. அது காரணம் எதுவாயிருப்பினும்... இந்த வார்த்தையை நான் பிரயோகித்ததற்கு.. எனக்கு நானே தண்டனை கொடுத்தாலும் கூட அது தீர்ந்து போய் விடாது. என்னுடைய மகனை யாராவது இந்த வார்த்தை கொண்டு திட்டும் பட்சத்தில்... அதில் ஒரு பகுதி தீர்ந்து போகலாம். அதற்கான நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. அதை விட இன்னும் அந்த வார்த்தையை எத்தனை தடவை பயன்படுத்தப் போகிறேனோ... அதுவும் எனக்குத் தெரியாது. 

தவறான ஒரு வார்த்தைப் பிரயோகம்... தவறான ஒரு ஏச்சு... தவறான ஒரு நடவடிக்கை... அது எங்கிருப்பினும்... அது தவறென்று எல்லாருக்கும் தெரியும்... அதைக் கலகலப்ரியாவாகிய நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. ஆனால்... அதைக் கண்டிக்கும் அருகதை எனக்கில்லை. நர்சிம் என்னுடைய மகனாக இருக்கும் பட்சத்தில் நான் அதைக் கண்டிக்கலாம். அதே நேரம் சந்தனமுல்லை என் மகளாக இருக்கும் பட்சத்தில் அந்தச் செய்கையையும் கண்டிக்கலாம். அல்லது என்னைத் தாக்குவதற்கென்று வரும் விஷ அம்புகளையும்... எய்தவர்களையும் எள்ளலாம். வேறு யாரையும் அல்ல. 

அப்போ அங்க... அது சொன்னா.. இங்க இது சொன்னா... அப்டின்னு கேட்பவர்களுக்கு... என்னுடைய இதற்கு முன்னரான இடுகையைச் சரியாகப் படிக்கவும்... 

அவ்ளோதான்... நான் கள்ள மௌனம் சாதிக்கும் கள்ளக் காரணத்திற்கு விளக்குப் பிடித்து வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்... 

உங்கள் அளவுக்கு நல்லவர்களாக நான் இல்லாமற் போனது என் குற்றமென்றால்... அதையும் ஏற்றுக் கொள்கிறேன்... மன்னிக்க...! 

நன்றி... 


... lack of sleep... migraine... and... hmm.. well... wotever it is... am obliged/obligated to post this... am DONE! 
______________________________________________________________________________